UYIRI

Nature writing in Tamil

கானுயிர் ஒளிப்படக்கலை – அழகும், அசிங்கமும்.

with one comment

கானுயிர் ஒளிப்படங்கள் எடுப்பதென்பது அண்மைக் காலங்களில் பெருகிவரும் ஒரு பொழுது போக்கு. வசதி படைத்தவர்கள், டிஜிடல் SLR காமிராக்கள் வாங்கி, அதில் முழம் நீளத்தில் பெரிய பெரிய லென்சுகளை இணைத்து படமெடுப்பதையும், ஓரளவிற்கு வசதையுள்ளவர்கள் சிறிய டிஜிடல் காமிராக்களிலும், வசதியில்லாதவர்கள் தங்களது கைபேசி காமிராக்களில் படமெடுப்பதை பொதுவாகக் காணலாம். பின்னர், தாங்கள் எடுத்த படங்களை முகநூலிலும், ட்விட்டரிலும், ஏனைய சமூக வலைத்தாளங்களிலும் ஏற்றி தங்களது நண்பர்களுக்கும், இந்த உலகிற்கும் காண்பிப்பார்கள். ஓரிரு தினங்களில் பல “லைக்குகளை” வாங்கிக் குவித்த பின், இந்த படங்கள் வலைப்பக்கங்களின் அடியின் ஆழத்தில் சென்று தேங்கிவிடும்.

Screen Shot 2014-11-26 at 3.47

தற்போதைய சூழலில் எந்த வகை காமிராயும் வைத்து கானுயிர்களை (கைபேசி காமிராக்களையும் சேர்த்துத் தான்) ஒளிப்படங்கள் எடுப்பவர் அனைவருமே கானுயிர் ஒளிப்படக் கலைஞர்களே (Wildlife Photographers). உயிரினங்களை மட்டுமே ஒளிப்படங்கள் எடுக்காமல் இயற்கையான வாழிடங்களையும், நிலப்பரப்புகளையும் படமெடுப்பதை இயற்கை ஒளிப்படக்கலை (Nature photography) எனலாம். எனினும் கானுயிர்களுக்கும், அவற்றின் வாழிடங்களுக்கும், சுற்றுப்புறச் சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புகளை ஒளிப்படங்கள் மூலம் பதிவு செய்வதை இயற்கை பாதுகாப்பு ஒளிப்படக்கலை எனலாம் (Conservation photography).

தமது செந்த விருப்பத்திற்காக இது போன்ற பொழுது போக்குகளை தொடர்வது நல்லதே என்றாலும், நாம் எடுக்கும் இயற்கை சார்ந்த, கானுயிர் ஒளிப்படங்கள் பலவகையில் இயற்கை பாதுகாப்பிற்கும் ஏதோ ஒரு வகையில் உதவும் வகையில் இருப்பின் நாம் செய்யும் இந்த வேலைக்கு ஒரு அர்த்தம் இருக்கும். எனினும், உதவி செய்யாவிடினும் நாம் விரும்பும் இயற்கைக்கும், கானுயிர்களுக்கும் நாம் எடுக்கும் படங்களால், எந்தவிதத்திலும் தொந்தரவு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம். எந்த வகை ஒளிப்படக்காரராக இருந்தாலும், நேர்மையுடன் இருப்பது மிகவும் அவசியம். நாம் விருப்பத்திற்கு ஏற்றவாறு படங்கள் அமைய வேண்டும் என்பதற்காக குறுக்கு வழியில் சென்று, அத்துமீறிய முறைகளைக் கையாண்டு, படங்கள் எடுப்பது சரியல்ல.

முறையற்ற வகையில் கானுயிர் ஒளிப்படங்கள் எடுக்கப்படுவதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். ஒரு குரங்கின் படத்தை எடுக்க முயலும் போது, அது நம் காமிராவின் பக்கம் திரும்பும் வரை காத்திருந்து பின் படமெடுப்பதே சரி. அப்படியில்லாமல் அந்தக் குரங்கைச் சீண்டி தம் பக்கம் பார்க்க வைத்தோ, அவற்றிற்கு உணவளித்து நம் பக்கம் வரவழைத்தோ படமெடுப்பது சரியல்ல.

Photo: Keerthana Balaji

Photo: Keerthana Balaji

ஒரு உயிரினத்தை அதன் கூட்டில் படமெடுத்தல் பல நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது. கூட்டினருகில் சென்று படமெடுக்கும் போது ஏற்படும் ஒலிமாசு, மற்றும் ஒளிப்படக்காரர்கள் பொறுப்பின்றி (படம் நன்றாக அமைய வேண்டும் என்பதற்காக) கூடு இருக்கும் இடத்தின் தன்மையை மாற்றியமைப்பதாலும் பல வேளைகளில் சில பறவை வகைகள் தங்களது அடைகாக்கப்படாத முட்டைகளையோ, உணவூட்டப்படவேண்டிய குஞ்சுகளையோ விட்டு விட்டு கூட்டை விட்டு அகன்று விடுகின்றன.

Cartoon by Rohan Chakravarty: Green Humour

Cartoon by Rohan Chakravarty: Green Humour

சிலர் இரவாடிகளைப் படமெடுக்கும் போது அதிநவீன செயற்கை ஒளிஉமிழிகளை (flash) அடிக்கடி பயன்படுத்துகின்றனர். இவற்றை குறைவாகவோ அல்லது தற்போது வரும் அதிநவீன காமிராக்களில் இருக்கும் High ISO உதவியை உபயோகித்தால் இரவாடிகளின் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பினை வெகுவாகக் குறைக்க முடியும். சிலர் தாம் படமெடுக்க வேண்டிய (தவளை, பல்லி, ஓணான் முதலிய) உயிரினங்களை ஓரிடத்திலிருந்து பிடித்து வந்து அவற்றிற்கு சிறிய அளவில் மயக்க மருந்து கொடுத்து விடுகின்றனர். தமது தேவைக்கேற்ற பின்னனியில் அவற்றை வைத்து படமெடுக்கவே இந்த வேலை. சிலர் அரிய மலர்களை அவை வளர்ந்திருக்கும் செடிகளில் இருந்து கொய்து தமது வீட்டிற்கோ, ஸ்டூடியோவிற்கோ எடுத்து வந்து படமெடுக்கின்றனர்.

சாதாரண டிஜிடல் காமிரா வைத்திருப்பவர்களில் சிலர் அதி நவீன காமிராக்களால் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களைப் பார்த்து விட்டு அதைப் போலவே அவர்களது படங்களும் இருக்க வேண்டும் என எண்ணி சில நேர்மையற்ற, பாதுகாப்பற்ற வழிகளில் படம் பிடிக்கின்றனர். உதாரணமாக அன்மையில் சிலர் தமது சிறிய டிஜிடல் காமிரா, கைபேசி காமிராவைக் கொண்டு அமைதியாக நின்றிருக்கும் யானைக்கூட்டத்தின் அருகில் சென்று படமெடுக்க முயன்றனர். இதனால் யானைகள் எரிச்சலடைந்து தாக்க எத்தனிக்கும் வாய்ப்புகள் அதிகம். அவற்றை சீண்டுவதும் இல்லாமல் அவை ஒரு வேளை தாக்க வந்தால் அல்லது தாக்கி அவர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் பழி சுமத்தப்படுவது என்னவோ யானைகள் தான்.

Photo: MacMohan

Photo: MacMohan

அதீத தன்விருப்பம் (self-obsessed) மிகுந்த இத்தலைமுறையினர் சிலர் செல்பிகளை (selfies) சில காட்டுயிர்களுடனும் எடுத்துக் கொள்ள விரும்புகிறார்கள். அண்மையில் ஒரு வரையாட்டின் கால்களை வலுக்கட்டாயமாகப் பிடித்து இழுத்து தன்னுடன் நிற்கச் செய்து செல்பி எடுக்க முயன்ற ஒரு சுற்றுலா பயணி அவ்வழியே சென்ற வனத்துறை அதிகாரியிடம் சரியாக வாங்கிக் கட்டிக் கொண்டார்.

Photo: Pramodhini Kalingarayar

Photo: Pramodhini Kalingarayar

Photos Courtesy: www.facebook.com

Photos Courtesy: http://www.facebook.com

காத்திருந்து படமெடுத்தல் கானுயிர் ஒளிப்படக்கலையின் ஒரு முக்கிய அங்கம். ஆனால் விதவிதமான காமிராக்களும், இயற்கை ஆர்வலர்களும் பெருகி வரும் இச்சூழலில் பலருக்கு இந்தப் பண்பு வெகுவாக மாறி வருவது கவலையளிக்கிறது. இது குறித்த விரிவான கட்டுரைகளை தியோடோர் பாஸ்கரன் உயிர்மை மாத இதழிலும், சு. பாரதிதாசன் பூவுலகு சுற்றுச் சூழல் இதழிலும் (“கானுயிர் புகைப்படக்கலையா? கொலையா?” இதழ் Mar-April 2014 எழுதியுள்ளனர்.

எனினும் அனைத்து ஒளிப்படக்காரர்களுமே இப்படியில்லை. மிகவும் பொறுப்பாக செயல்படும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். இயற்கை ஒளிப்படக்கலையில் பொறுப்பற்று செயல்படுவதில் மேற்சொன்னவை ஒரு வகை. படமெடுத்த பின் செய்யும் அத்துமீறல்களும், நேர்மையின்மையும் கூட உண்டு. ஆம், படமெடுத்து, கணிணியில் இட்டு, சில மென்பொருட்களால் படங்களை அழகுபடுத்துவது அனைவருக்கும் தெரிந்ததே. ஒளி குறைவாக இருப்பின் அதை சற்று அதிகப்படுத்தியும், சில வண்ணங்களை அதிகரிக்கவும், குறைக்கவும் செய்து படத்தை மெருகூட்டுவது ஒத்துக்கொள்ளப்பட்ட செயலே. எனினும், சிலர் சற்று அளவுக்கு மீறி சென்று விடுகின்றனர்.

Cartoon by Rohan Chakravarty: Green Humour

Cartoon by Rohan Chakravarty: Green Humour

உதாரணமாக ஒரு அழகான நிலவமைப்பை படமெடுக்கும் போது அதில் பல வேளைகளில் தந்திக்கம்பித் தொடரோ, மின் கோபுரமோ இருப்பது தற்போதைய சூழலில் இயல்பே. ஆனால் மென்பொருட்களைக் கொண்டு அவற்றை அப்படத்திலிருந்து நீக்கிவிடுகின்றனர். இது சரியா எனும் கேள்விக்கு மூன்று வகையில் பதிலலிக்கலாம். அந்தப் படத்தை பெரிது படுத்தி அச்சிட்டு நம் வீட்டில் நமக்காக மட்டுமே மாட்டி வைத்து அழகு பார்த்தால், அப்படிச் செய்வதில் தவறில்லை. ஆனால் இப்படத்தையே ஒரு ஒளிப்படப் போட்டியில் பங்கேற்க சேர்ப்பிக்கும் போது இவ்வகையான திருத்தங்களைச் செய்து அனுப்புவது முறையல்ல. ஒரு கட்டுரைக்காக அதே படத்தை அனுப்பும் போது ஆசிரியரிடம் முன்பே இது பற்றி கூறி, அச்சில் வரும் போது அப்படத்தின் கீழ் “படம் செயற்கை முறையில் மெருகேற்றப்பட்டுள்ளது” என அனைவருக்கும் தெரிவிப்பதும் வேண்டும். இது போன்ற பித்தலாட்டங்கள் இருப்பதாலேயே ஒளிப்படப் போட்டிகளில் இப்போது “RAW” வகை படங்களை கேட்கின்றனர்.

Art Wolfe எனும் புகழ்பெற்ற இயற்கை ஒளிப்படக்கலைஞர் 1994ல் கானுயிர், இயற்கையான வாழிடங்களின் அழகிய படங்களைக் கொண்ட “Migration” எனும் நூலை வெளியிட்டார். எனினும் இரண்டு ஆண்டுகள் கழிந்து அந்நூலில் பதிப்பித்த பல படங்கள் யாவும் டிஜிடல் முறையில் மாற்றப்பட்டிருந்தது தெரிய வந்ததும் பலரது விமர்சனங்களுக்கு ஆளானார். வரிக்குதிரைகளின் நெருக்கமாக அருகருகே நிற்பது போன்ற அட்டைப் படத்தைக் கொண்டது இந்நூல். உண்மையில் அவை நெருக்கமாக அமைந்திருக்கவில்லை. படத்தில் இருந்த வெற்றிடத்தை ஓரிரு வரிக்குதிரை படங்களை இட்டு அவர் நிறப்பியிருந்தார் (Image here). இதை அவர் டிஜிடல் வரைபடம் (Digital Illustration) என்கிறார். இது போன்ற morphing, digital image cloning செய்தால் அதை அப்படத்தின் கீழ் அறிவித்துவிட வேண்டும். அழகாகத் தெரியவேண்டும் என்பதற்காக இயற்கையில் இல்லாததை படங்களில் டிஜிடல் முறையில் மாற்றியமைத்து பார்வைக்கு வைப்பது முறையல்ல. இதனால் இயற்கையில் இப்படித்தான் இருக்கும் என பொதுமக்களும், வளரும் இயற்கை ஆர்வலர்களும் தவறாக நினைக்கும் வாய்ப்புகள் அதிகம்.

இன்னும் சிலர் அடைத்து வைக்கப்பட்ட இடங்களில் இருக்கும் உயிரினங்களை இயற்கையில் இருப்பது போல படமெடுத்து அனைவரிடமும் பகிர்ந்து கொள்கின்றனர். இது போன்ற படங்களை ஓரளவிற்கு அனுபவமுள்ளவர்கள் கண்டு பிடித்துவிடுவார்கள் என்றாலும், விவரம் அறியாத பலர் அவை உண்மையிலேயே இயற்கையான சூழலில் எடுக்கப்பட்டிருப்பதாக நினைக்கும் வாய்ப்பு உள்ளது.

இயற்கையான வாழிடங்களுக்குச் செல்லும் போது அங்கு நாம் பார்க்கும் அழகிய நிலப்பரப்புகளையும், வாழிடங்களையும், கானுயிர்களையும், அழகிய முறையில் படமெடுத்துக் காட்டுவது புறவுலகின் பால் பலருக்கு நாட்டம் ஏற்படச்செய்ய உதவும் என்பது உண்மையே. எனினும், நடப்பு உலகில், பல கானுயிர்களும் அவற்றின் வாழிடங்களும் அற்றுப்போகும் நிலையில் உள்ளன.

சுற்றுப்புறச்சூழல் நாளுக்கு நாள் சீர்கெட்டுக் கொண்டே வருகிறது. இவ்வேளையிலும், அழகிய படங்களை மட்டுமே எடுத்துக் கொண்டிருப்பது நல்லதா? இயற்கையைக் காப்பாற்ற நம்மால் செய்யக்கூடியதை செய்யாமல், பார்த்துப் படமெடுத்து ரசித்துக் கொண்டிருப்பது, அழகா? ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம் என்பதை நாம் அறிவோம். நாம் விரும்பும் இயற்கையைக் காப்பாற்ற எந்த வகை காமிராவையும் கொண்டு நேர்மையான முறையில் படமெடுத்து, யதார்த்தத்தையும் நம் படங்களில் பதிவு செய்து ஒரு நல்ல மாற்றத்திற்கு வித்திடலாம். இயற்கையைப் பாதுகாக்கும் ஒளிப்படக்கலையே இப்போதைய அவசியத் தேவை.

பெட்டிச் செய்தி

ScreenShot001_700

பஷீரின் குடுமிக் கழுகு எனும் கட்டுரையில் வந்த ஒரு குடுமிக்கழுகின் படத்தில் அதன் தலையில் காய்ந்த மரக்கிளை ஒன்று தொட்டுக்கொண்டு அக்கழுகின் குடுமி சரியாகத் தெரியாமல் இருந்ததது. இந்த கிளையை மென்பொருளின் உதவியால் நீக்கி அப்படத்தை அனுப்பியிருந்தேன். ஆசிரியரிடமும் இதைப்பற்றி முன்பே அறிவித்திருந்தேன். இதை உங்களுடன் இப்போது பகிர்ந்து கொள்கிறேன். இது பற்றிய கட்டுரையை எழுதும் எண்ணம் இருந்ததால் அப்படத்தில் செய்யப்பட்ட திருத்தம் பற்றி அக்கட்டுரையில் அறிவிக்கப்படவில்லை. ஒரு வேளை இதை நான் யாரிடமும் சொல்லாமல் மறைத்திருந்தால் அது நேர்மையற்ற செயலாகும் என நான் கருதுகிறேன்.

தி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 11th November 2014 அன்று வெளியான கட்டுரையின் முழுப் பதிப்பு. அக்கட்டுரையை இங்கே காணலாம். அதன் PDF  ஐ இங்கே பெறலாம்.

Written by P Jeganathan

November 12, 2014 at 6:59 pm

One Response

Subscribe to comments with RSS.

  1. […] For more on Conservation Photography, read Mr. P Jeganathan’s article written in Tamil – https://uyiri.wordpress.com/2014/11/12/irresponsible-wildlife-photography/ […]


Leave a comment