Archive for July 2016
தமிழ் நாட்டில் எங்கே, எப்போது பறவைகளைப் பார்க்க வேண்டும்?
தமிழ்நாட்டில் பறவை பார்த்தலும், அப்படி பார்ப்பதை eBirdல் உள்ளிடுவதும் அண்மைக் காலங்களில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகின்றது.
எனினும், தற்போது தமிழ்நாட்டில் பறவை பார்ப்போர் அதிகமாக இருக்கும் இடங்களில் இருந்தே (உதாரணமாக கோவை, சென்னை, காஞ்சிபுரம் முதலிய மாவட்டங்கள்) eBirdல் பறவைப் பட்டியல்கள் அதிகமாக வந்து குவிகின்றன. ஆனாலும் இந்த இடங்களில் கூட ஆண்டு முழுவதும் ஒரே சீராக (அதாவது மாதா மாதம் அல்லது வாரா வாரம்) பறவைகள் பார்க்கப்பட்டு பட்டியல்கள் eBirdல் வந்து சேர்கிறதா என்றால் இல்லை.
சில மாவட்டங்களில் ஒரு சில குறிப்பிட்ட பறவை ஆர்வலர்களாலும், குழுவினர்களாலும் (உதாரணமாக சென்னையில் The Nature Trust, கோவையில் Coimbatore Nature Society – CNS), அப்பகுதிகளில் பறவைகள் பார்ப்பதும் பட்டியலிடுவதும் ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. எனினும் மாவட்ட அளவில் பார்க்கும் போது இப்படிப்பட்ட நிகழ்வுகள் ஓரிரு குறிப்பிட்ட இடங்களில் மற்றும் காலங்களில் மட்டுமே தொடந்து நடைபெறும்.
சில மாவட்டங்களில் சில காலங்களில் மட்டும் அதிகமான பறவைப் பட்டியல்கள் சமர்ப்பிக்கப்படும். உதாரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கோடியக்கரைக்கு பல பறவை ஆர்வலர்கள் செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை வலசை வரும் பறவைகளைக் காணச் செல்வார்கள். ஆனால் இடைப்பட்ட மாதங்களில் (ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதங்களில்) அப்பகுதியில் உள்ள பறவைகளின் நிலை பற்றிய தகவல்கள் குறைவாகவே இருக்கும்.
பறவைகளின் பரவல், எண்ணிக்கை, அடர்வு போன்ற காரணிகள் அவற்றின் பாதுகாப்பிற்கும், அவற்றின் வாழிடங்களின் பாதுகாப்பிற்கும் உதவும். ஓரிடத்தில் இருந்து தொடர்ச்சியாக பறவைகளைப் பார்த்து பதிவு செய்து வந்தால் மட்டுமே அந்த இடத்தில் அவற்றின் சரியான, துல்லியமான, உண்மை நிலையை அறிய முடியும்.
அந்த ஓர் இடம் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியாகவும் அதாவது சரணாலயம், நீர்நிலை அல்லது பரந்த நிலப்பரப்பாகவும் அதாவது ஒரு ஊர், மாவட்டம், மாநிலம், நாடு என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
தமிழ் நாட்டில் தற்போது மொத்தம் 32 மாவட்டங்கள் உள்ளன. பாண்டிச்சேரியையும் காரைக்காலையும் சேர்த்தால் 34. இவற்றில் எந்த எந்த மாவட்டங்களில் எந்த எந்த மாதங்களில் பறவைகள் பார்க்கப்பட்டு eBirdல் உள்ளிடப்படுகின்றன என்று பார்த்த போது சில உபயோகமுள்ள தகவல்களை பட்டை வரைபடத்தின் மூலம் (Bar Chart) அறிய முடிந்தது. அதன் முடிவுகளில் சிலவற்றை இக்கட்டுரையில் காணலாம்.
அதற்கு முன் இந்த பட்டை வரைபடத்தினை (Bar Chart) எப்படி eBirdல் அடைவது என்பதையும் அதை புரிந்து கொள்வது எப்படி என்பதையும் அறிந்து கொள்வோம்.
1. eBird India இணையத்திற்கு செல்லவும்
2. Explore Data வை சொடுக்கவும்
3. Bar Charts ஐ சொடுக்கவும்
4. Choose a Locationல் Select a region:ல் Tamil Nadu ஐ தேர்ந்தெடுக்கவும்
5. Then select a subregion: ல் Counties in Tamil Nadu வை தேர்ந்தெடுக்கவும்
6. பின்னர் “Continue” வை சொடுக்கவும்
7. தமிழ் நாட்டில் உள்ள எல்லா மாவட்டங்களும் பட்டியலிடப் பட்டிருக்கும். அதில் நீங்கள் பார்க்க விரும்பும் மாவட்டத்தை தேர்ந்தெடுத்து “Continue” வை சொடுக்கினால் பட்டை வரைபடத்தை அடையலாம்.
இந்த பட்டை வரைபடத்தில் (eBirdல்) ஒரு மாதம் நான்கு வாரங்களாக பிரிக்கப்பட்டு இருக்கும். 1-7 முதல் வாரம், 8-14, இரண்டாவது வாரம், 15-21 முன்றாவது வாரம், 22 30 or 31 நான்காம் வாரம். அதாவது மாதத்தின் கடைசி வாரத்தில் நாட்கள் அதிகம்.
இப்போது உதாரணமாக அரியலூர் மாவட்டத்தை எடுத்துக் கொள்வோம். இந்த மாவட்டத்தில் Lesser Whistling Duck (Dendrocygna javanica) – சீழ்கைச் சிரவி – ஜனவரி முதல் வாரத்திலும் மூன்றாவது வாரத்திலும் பார்க்கப்பட்டதை பச்சை நிற பட்டையை வைத்து அறிந்து கொள்ளலாம். இரண்டாவது வாரத்தில் அந்த மாவட்டத்தில் பறவைகள் பார்க்கப்பட்டு பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டாலும் சீழ்கை சிரவி பதிவு செய்யப்படவில்லை. ஆகவேதான் அங்கே இளநீல வெற்றிடம் உள்ளது. ஆனால் மார்ச் நான்காம் வாரத்தை கவனியுங்கள். இளங்கருப்பு புள்ளிகளால் ஆனா பட்டையால் நிரப்பப்படிருக்கும். இது போதிய தரவுகள் இல்லை என்பதை அதாவது அந்த மாவட்டத்தில், அந்த வாரத்தில் பறவைகளைப் பார்த்து ஒரு பட்டியல்கூட உள்ளிடப்படவில்லை என்பதைக் குறிக்கிறது.
இந்த பட்டை வரைபடம் மிகக் குறைவான தரவுகளைக் (Data) கொண்டே தீட்டப்பட்டுள்ளது என்பதை மனதில் கொள்ள வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் ஜனவரி முதல் மார்ச் வரை ஓரளவிற்கு பறவைகளைப் பார்த்து பட்டியல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் அதன் பின் தொடர்ச்சியாக அப்படி ஒன்றும் பெரிய நிகழ்வுகள் ஏதும் இல்லை. இந்த பட்டை வரைபடம் 1900ம் ஆண்டு முதல் 2016 வரை உள்ளிடப்பட்ட தரவுகளைக் கொண்டது. எனினும் பெரும்பாலான பட்டியல்கள் 2014 க்குப் பிறகுதான் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன (மேலும் விவரங்களுக்கு இந்த உரலியை சொடுக்கவும்). அதுவும் பெரும்பாலும் கரைவெட்டி பறவைகள் சரணாலத்தில் இருந்து, ஓரிரு பறவை ஆர்வலர்களால் மட்டுமே பதிவு செய்யப்பட்டவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
நாம் உதாரணத்திற்கு எடுத்துக் கொண்ட அரியலூர் மாவட்டத்தைப் போல எல்லா 34 மாவட்டங்களின் நிலையை July 2016 முதல் வாரத்தில் எடுக்கப்பட்ட கீழ்க்கண்ட பட்டை வரைபடங்களின் மூலம் அறியலாம்.
இந்த வெற்றிடங்களை நிரப்ப என்ன செய்யலாம்?
- பறவை ஆர்வலர்கள் தங்கள் தங்கியிருக்கும் மாவட்டங்களின் பட்டை வரைபடைத்தை eBirdல் பார்த்து, எந்த எந்த வாரங்களில் அல்லது மாதங்களில் பறவைகளைப் பற்றிய விவரங்களில் வெற்றிடங்கள் இருக்கிறன என்பதைக் கண்டறிந்து அந்த குறிப்பிட்ட காலங்களில் பறவைகளைப் பார்த்து பட்டியலிடலாம்.
- ஒரிரு பறவை ஆர்வலர்களாலோ, குழுவினர்களாலோ ஒரு மாவட்டத்தில் உள்ள எல்லா இடங்களுக்கும் சென்று பறவைகளைப் பார்த்து பட்டியலிடுவது என்பது முடியாத காரியம். ஆகவே தங்களது மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும் ஆர்வமுள்ளவர்களுக்கு பறவைகள், பறவை பார்த்தல், அவற்றின் முக்கியத்துவம் முதலியவற்றை கருத்தரங்குகள், பட்டறைகள் மூலம் எடுத்துச் சொல்லலாம். அவர்களுக்கு சரியான தருணத்தில் eBird ஐ பற்றி எடுத்துச் சொல்லலாம்.
- பறவை ஆர்வலர்கள் இதற்கு முன் பல்வேறு மாவட்டங்களில் பார்த்து குறித்து வைத்திருந்தால் அல்லது பழைய நிழற்படங்களில் இருந்து பறவைகளைப் பற்றிய (இடம், எண்ணிக்கை நேரம் போன்ற) தகவல்களை அறிந்து Historical அல்லது Incidental முறையில் eBirdல் உள்ளிடலாம்.
- அதிகம் பயணம் செய்யும் பறவை ஆர்வலர்களாக இருந்தால் தாங்கள் இருக்கும் மாவட்டத்திற்கு அருகில் இருக்கும் மாவட்டங்களில் எந்த மாதங்களில் விவரங்கள் இல்லை என்பதை eBirdல் பார்த்து தங்களது பயணங்களை திட்டமிட்டு அங்கே சென்று பறவைகளைப் பார்த்து பட்டியலிடலாம்.
- இது கொஞ்சம் வினோதமான யோசனை. நீங்கள் கொஞ்சம் adventurous typeஆக இருந்தால், நேரமும், கொஞ்சம் பணமும் இருந்தால் தனியாகவோ அல்லது ஒரு குழுவாகவோ ஆகஸ்டு இரண்டாவது வாரத்தில் (8-14 தேதிகளில்) அதாவது இந்த ஆண்டின் 30ஆவது வாரத்தில் அரியலூர், கடலூர், தருமபுரி, கன்னியாகுமரி, கரூர், நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திருநெல்வேலி, திருவாரூர், திருவண்ணாமலை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள பறவைகளைப் பார்த்து பட்டியலிடவும். இப்படிச் செய்தால் ஒரே வாரத்தில் 16 மாவட்டங்களில் உள்ள வெற்றிடங்களை நிறப்ப முடியும். அவரவர் வசதி, விருப்பத்திற்கு ஏற்றவாறு பைக்கிலோ, பேருந்திலோ, இரயிலிலோ, தனியாக ஒரு வண்டியைப் பிடித்துக் கொண்டோ பயணம் செய்யலாம். இந்த வினோதமான பயணத்திற்கு ஆகஸ்டில் முடியவில்லை என்றால் செப்டம்பர் முதலிரண்டு வாரங்கள் உகந்தவை. அப்படியெல்லாம் செய்ய முடியவில்லையெனில் அடுத்த ஆண்டு (2017) மார்ச் 3ம் வாரம் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு சென்று பறவை பட்டியல்களை eBirdல் சமர்ப்பித்தால் அங்குள்ள ஒரே ஒரு வெற்றிடத்தை அடைத்த பெருமை உங்களுக்கு வரும்!
மேலே உள்ள 34 மாவட்டங்களின் பட்டை வரைபடங்களை அடிப்படையாக வைத்து ஒரு வரைபடம் தயாரித்துள்ளேன். இது எந்த எந்த மாவட்டங்களில் எத்தனை வாரங்கள் இது போன்ற இடைவெளிகள் உள்ளன, ஒரே வாரத்தில் அதிகபட்சமாக எத்தனை மாவட்டங்களில் இது போன்ற இடைவெளிகள் உள்ளன என்பதை அறிய உதவும். இந்தத் தரவுகளை இந்த Excel File ல் பார்க்கலாம்.

இளநீல பின்னணியில் புள்ளிகளைக் கொண்ட கட்டங்கள் eBird ல் அந்த மாவட்டத்தில் அந்த வாரத்தில்/மாதத்தில் பறவைப் பட்டியல்கள் எதுவுமே இல்லாததைக் குறிக்கிறது. July 2016 முதல் வாரத்தில் eBird ல் உள்ள பட்டை வரைபடத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது இந்த வரைபடம்.
இன்னும் பல ஆண்டுகள் இந்த 34 மாவட்டங்களின் பல பகுதிகளில் இருந்து பலரும் எல்லா மாதங்களில் இருந்தும் பறவைகளைப் பார்த்து eBirdல் பட்டியலிட்டால் அந்த மாவட்டத்தில் உள்ள பறவையினங்களையும், அவற்றின் பரவல், எண்ணிக்கை, தென்படும் காலம் முதலிய விவரங்களையும் ஓரளவிற்கு தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.
பறவைகளைப் பார்த்து eBirdல் பட்டியலிட்டு நாம் எத்தனை வகையான பறவைகளைப் பார்த்திருக்கிறோம், எத்தனை பட்டியல்களை சமர்ப்பித்திருக்கிறோம் என்று மட்டும் பார்ப்பது ஒரு நல்ல பறவை ஆர்வலர்களுக்கு அழகல்ல. அவரவர் வாழும் பகுதிகளில் எந்த எந்த இடங்களில்/ காலங்களில் இருந்து தரவுகள் குறைவாகவோ அல்லது முற்றிலும் இல்லாமலோ இருந்தால் அந்த வெற்றிடங்களையும் நிரப்புவது ஒரு பொறுப்பான பறவை ஆர்வலரின் கடமையாகும்.