Archive for January 2020
தமிழ்நாட்டில் eBirdல் பறவைத் தகவல்கள் இல்லாத இடங்கள்
பறவைகளின் எங்கெங்கெல்லாம் பரவியியுள்ளன என்பது பற்றிய தகவல் அவற்றின் பாதுகாப்பிற்கும், அவற்றின் வாழிடங்களின் பாதுகாப்பிற்கும் உதவும். அண்மைக் காலங்களில் eBird மூலம் நம்மைச்சுற்றியுள்ள பறவைகளை பதிவு செய்து தகவல்களை சமர்ப்பிப்பதால் பறவைகள் குறித்த புரிதல் ஓரளவிற்கு தெரிந்துள்ளது. பறவை ஆர்வலர்கள் பெரும்பாலும் எங்கே பறவை வகைகள் அதிகமாகத் தென்படுகிறதோ அங்கேயே செல்வார்கள். இதனால் ஒரு சில பகுதிகளில் (உதாரணமாக கோடியக்கரை, முதுமலை சரணாலம்) உள்ள பறவைகளின் பரவல், எண்ணிக்கை போன்ற தகவல்கள் ஒப்பீட்டளவில் அதிகமாகவும், ஏனைய தமிழகப் பகுதிகளில் குறைந்த அல்லது முற்றிலும் தகவல்களே இல்லாத நிலையும் ஏற்படுகிறது.
இதை அறிந்து கொள்ள ஆராய்ச்சியாளரும், பறவை ஆர்வலருமான அஸ்வின் விஸ்வநாதன் ஒரு விரிவான, எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் நிலப்படத்தை தயாரித்திருக்கிறார். அதைப் பெற இங்கே சொடுக்கவும். (இதை தரவிறக்கம் செய்து, கைபேசியை விட கணினியில் பார்ப்பது நல்லது)
இதற்காக அவர் தமிழ்நாட்டின் மேல் 1௦ X 1௦ கி.மீ கட்டங்களை இட்டு அதற்குள் எத்தனை வகையான பறவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, எத்தனை பறவை பட்டியல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன, எத்தனை பறவை ஆர்வலர்கள் இதைச் செய்துள்ளனர் என்கிற தரவுகளை பொதித்து வைத்துள்ளார்.
வெளிர் நிறக் கட்டங்கள், தகவல்கள் முற்றிலும் இல்லை என்பதைக் குறிக்கும். திராட்சை நிறக் கட்டங்கள், மிகக் குறைந்த அல்லது முழுமையான பட்டியல்கள் (Complete Checklist) இல்லாத இடங்களைக் குறிக்கும். பச்சை, மஞ்சள் ஒப்பீட்டளவில் அதிகமான தரவுகளைக் கொண்ட இடங்கள்.
இதிலிருந்து முற்றிலும் அல்லது மிகக் குறைந்த தகவல்கள் இல்லாத இடங்களை மட்டும் எடுத்து அதை ஒரு கூகுள் நிலப்படத்தின் மேல் (சிவப்புச் சதுரங்கள்) வைக்கப்பட்டுள்ளது.
அதிகமான காலி இடங்கள் இருப்பது கரூர் மாவட்டம். அதனைத் தொடர்ந்து சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம் முதலிய மாவட்டங்கள். வட தமிழகத்திலும் பல இடங்கள் ஆங்காங்கே உள்ளன.
இப்போது பறவை ஆர்வலர்களான நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த சிவப்பு சதுரத்திற்குள் சென்று பறவைகளைப் பார்த்து, கணக்கிட்டு அந்த பட்டியலை eBirdல் சமர்ப்பிக்க வேண்டியதுதான். உங்கள் ஊருக்குப் பக்கத்தில் இந்த கட்டங்கள் இருந்தால் அவசியம் அங்கு சென்று பறவைகளை பட்டியலிடுங்கள்.
இந்த நிலப்படத்தை பெற இங்கே சொடுக்கவும். ஒரு வேளை இது உங்களது கைபேசியில் திறக்கவில்லையெனில் கணினியில் முயற்சிக்கவும்.
பறவை நோக்குதல் ஒரு உருப்படியான பொழுதுபோக்கு என்றாலும், அதைச் செய்யும் போது நம்மை மகிழ வைக்கும் பறவைகளுக்காகவும் நம்மாலனதைச் செய்வது நல்லது.
ஒரு வேடிக்கையான விளையாட்டைத் தொடங்கலாம். இந்த ஆண்டின் இறுதியில் எத்தனை கட்டங்களில் தகவல்கள் நிரம்புகின்றன என்றும், காலியிடங்களை நிரப்பும் பணியை யார் அதிகம் செய்கிறார்கள் என்றும் பார்க்கலாம்.