பாறைகளில் பல்லுயிரியம் – அரிட்டாப்பட்டி பல்லுயிர் அருமரபுக் களம்
அது ஒரு ஜனவரி மாதக் காலை நேரம். அகலப்படுத்தப்படாத அந்த அருமையான கிராமத்து தார் சாலையின் வழியே வண்டி ஆடி அசைந்து அரிட்டாப்பட்டியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இருபுறமும் புதர்க்காடுகள், எதிரே ஒரு மலைத்தொடர். ஆனால், அந்த மலையில் மரங்கள் இல்லை. பாறைகள் மட்டுமே காணப்பட்டன. அங்கு என்னைப் போக வைத்தது ஒரு பறவை. லகுடு என்றழைக்கப்படும் Laggar Falcon (Falco jugger).

கிராமத்தை அடைந்தவுடன், அந்தப் பகுதியில் உள்ள பறவை ஆர்வலர் ரவிச்சந்திரனும், ஒரு வயதான பூசாரி வீரணனும் சேர்ந்துகொண்டனர். அந்த இடத்தைப் பற்றியும், அங்குள்ள பறவைகள் பற்றியும் விவரித்துக்கொண்டே வந்தனர். சூரச் செடியிலிருந்த சூரப்பழங்களைக் காட்டி, சூரமாரிகள் (Rosy Starling) இவற்றை விரும்பிச் சாப்பிடும் என்று குறிப்பிட்டனர். இதனால்தான் இப்பறவைகளுக்கு இந்தப் பெயர் வந்திருக்குமோ? என்று ஆச்சரியத்துடன் இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தாலும் எனது கேள்விகள் எல்லாம் நான் தேடிவந்த பறவையைப் பற்றி மட்டுமே இருந்தன. அந்தப் பறவையை எங்கே பார்க்கலாம்? எந்த நேரத்தில் எளிதில் பார்க்கலாம்? உங்கள் ஊரில் அதன் பெயர் என்ன? போன்ற கேள்விகளை அந்தப் பெரியவரிடம் கேட்டேன். லகுடு என்று சிலர் சொன்னாலும், இதை நாங்கள் வலசாரை என்றுதான் சொல்லுவோம் என்றார். பேசிக்கொண்டே வெட்டவெளியை அடைந்தோம். எங்களுக்கு எதிரே கம்பீரமாக உயர்ந்தோங்கி நின்றுகொண்டிருந்த மரங்களற்ற மலையை அவர்கள் கூர்ந்து நோக்கிவிட்டு, அதோ வலசாரை அங்க உக்காந்துகிட்டு இருக்கு என்றனர். என் கண்ணுக்கு எதுவும் புலப்படவில்லை. இருகண்நோக்கியை வைத்துத் துழாவியும் பயனில்லை. பிறகு அது அமர்ந்திருக்குந்த இடத்திற்கு அருகில் உள்ள கரிய திட்டுகளையும், வெள்ளையான எச்சத் திட்டுகளையும் சுட்டிக்காட்டி அடையாளம் காட்டிய பிறகுதான் அது இருக்குமிடம் எனக்குத் தெரிந்தது. எதோ ஒரு சிறு புள்ளியாக இருந்ததை இருகண்நோக்கியால் கண்டோம். கண்டும் என் மனம் நிறையவில்லை. சரி, பறக்கும்வரை அங்கேயே இருப்போம் என தரையில் அமர்ந்துவிட்டோம். பூசாரி வீரணன், அவர்கள் வயலில் நாற்று நடும்போது பாடும் ஒரு பாட்டை பாடிக் காண்பித்தார்.
“உள்ளான் உழுது வர,
ஊர்க்குருவி நாத்து அரிக்க,
நாரை பரம்படிக்க,
நட்டு வாம்மா குட்டப்புள்ள….”
அதாவது, ஓர் உழவன் உள்ளான் தனது அலகால் சேற்றைக் குத்துவதுபோல உழ வேண்டும், ஊர்க்குருவிபோல சுறுசுறுப்பாக நாற்றுகளைப் பிரித்து நட வேண்டும், நாரை பொறுமையாக நடப்பதுபோல பரம்பு அடிக்க வேண்டும் என்பதுதான் அதன் அர்த்தம் என்று விளக்கினார். அந்த அருமையான பாட்டையும், விளக்கத்தையும் கேட்டுக்கொண்டிருக்கும் போதே, வலசாரை பறக்குது என்றார் ரவி.

எங்களுக்குப் பின்னாலிருந்து வந்த காலை நேரச் சூரியக் கதிர்கள் அந்த மலையைப் பிரகாசமாக்கிக்கொண்டிருந்தது. இதற்கு முன் அந்தப் பறவை இருந்த இடத்தின் அருகில் பார்த்தபோது வலசாரை தெரியவில்லை. ஆனால், அந்தப் பறவையின் வில் போன்ற வடிவிலான நிழல் செந்நிறப் பாறையில் தெரிந்தது. அந்த நிழல் மெல்லப் பறந்து சென்றுகொண்டிருந்தது. Falcon வகைப் பறவைகளுக்கு வல்லூறு, ராஜாளி என்று சொன்னாலும் வில்லேந்திரம் என்றும் அவற்றை அழைப்பதுண்டு. இறக்கைகளை ஒரு கோணத்தில் மடக்கிப் பறக்கும்போது அவற்றின் வடிவம் வில்போலத் தோன்றும். அந்த வலசாரையின் நிழலைப் பார்த்தபோது எனக்கு அந்த வார்த்தைதான் நினைவுக்கு வந்தது. பறக்கும் திசையை மாற்றியவுடன் பாறையின் பின்னணியில் வலசாரையின் உடலில் உள்ள நிறங்களும், அடையாளங்களும் தெரிந்தன. பாறையின் மேலே மெல்ல வட்டமிட்டுப் பறந்து செல்லச்செல்ல நீல வானத்தின் பின்னணியில் வலசாரை அழகாகக் காட்சியளித்தது.



இது ஓர் இரைக்கொல்லிப் பறவை வகை (Raptor). பல்லி, ஓணான், வெட்டுக்கிளி, வண்டு போன்ற பெரிய பூச்சிகள், சிறு பறவைகள், புறாக்கள், எலிகள் முதலியவற்றை வேட்டையாடி உண்ணும். வறண்ட வெட்டவெளிப் பகுதிகளில் பொதுவாகத் தென்படும். விவசாய நிலங்கள், கிராமப்புறங்கள், சில வேளைகளில் நகர்ப்புறங்களில் மின் கம்பிகளின் உச்சியிலும், கட்டடங்களின் மேலும் கூடத் தென்படும். இவற்றின் வாழிடங்கள் குறைந்து போவதாலும், இரை உயிரினங்கள் இல்லாமல் போவதாலும், குறைந்து போவதாலும், இந்தப் பறவை அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களின் பட்டியலில் (Near Threatened) சேர்க்கப்பட்டுள்ளது.
இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள நாடுகளில் (இலங்கை நீங்கலாக), ஆப்கானிஸ்தான், மியன்மார் ஆகிய நாடுகளில் இவை தென்படுகிறது. இந்தியாவின் வட பகுதிகளில் (குறிப்பாக ராஜஸ்தான், குஜராத்) பல இடங்களில் பரவியும், தென்னிந்தியாவில் ஆங்காங்கே சிதறியும் தென்படுகின்றன. குறிப்பாக, தமிழ்நாட்டில் இதுவரை சுமார் ஐந்து இடங்களில் மட்டுமே இவை இருப்பதாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இவை ஆண்டு முழுவதும் தென்படுவது அரிட்டாப்பட்டி மலைப்பகுதியில்மட்டும்தான். ஆகவே, இந்தப் பகுதி முக்கியத்துவம் பெறுகிறது. இது மட்டுமல்ல கருங்கழுகு, வெள்ளைக்கண் வைரி, பெரிய ராஜாளி, வல்லூறு, சிவப்பு வல்லூறு, தேன் பருந்து, பெரிய புள்ளிக் கழுகு, இந்தியப் புள்ளிக் கழுகு, வெண் தோள் கழுகு, விராலடிப்பான், பாறைக் கழுகு, செந்தலை வல்லூறு, இரண்டு வகையான பூனைப் பருந்துகள், கருந்தோள் பருந்து, கரும்பருந்து, செம்பருந்து, பாம்புக் கழுகு, காட்டுப் பாம்புக் கழுகு, சிறிய புள்ளி ஆந்தை, பூமன் ஆந்தை என சுமார் இருபது வகையான இரைக்கொல்லிப் பறவைகள் இங்கு பதிவுசெய்யப்பட்டுள்ளன. இவற்றில் சில வலசை வருபவை, சில அப்பகுதியிலேயே கூடமைத்து ஆண்டு முழுவதும் தென்படுபவை.
எதிர்பார்ப்புடன் பார்க்க வந்த பறவையைப் பார்க்க முடிந்தால் ஏற்படும் ஒரு பரவசத்திற்கு ஈடு இணையே இல்லை. அந்த மகிழ்ச்சியான மனநிலையுடனேயே அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள பறவைகளையும் பார்த்துக்கொண்டிருந்தோம். அந்தப் பறவையைப் போலவே அது வாழுமிடத்தில் அமைந்துள்ள பாறைகளும் அழகாக இருந்தன. செங்குத்தாக உலக்கைப்போல இருக்கும் பாறை, கிண்ணம்போல வளைந்த பாறை, உருண்டையான பாறை, மனித முகம் போன்ற பாறை என விதவிதமான வடிவங்களில் பல பறைகளும், குன்றுகளும் இருந்தன. பல ஆண்டுகளுக்கு முன் ஆந்திராவில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் பயணம் செய்தபோது இது போன்ற பல அழகிய பாறைக் குன்றுகளைக் கண்டதுண்டு.
மேகங்களைப் போலவே, பாறைகளைப் பார்த்து, நம் கற்பனைக்கு ஏற்ப அவற்றின் உருவத்தை அனுமானிப்பது ஒரு அலாதியான பொழுதுபோக்கு. நம்மில் பலர் இதைச் செய்திருக்கலாம். மேகங்கள் கலைந்து போகும், ஆனால், பாறைகள் அப்படியல்ல. ஒரு பாறையை ஒரு கோணத்தில் பார்த்தால் ஒருவிதமாகவும், அதைச் சுற்றிவந்தால் அதே பாறை, வெவ்வேறு வடிவங்களில் வேறு உருவமாகவும் இருப்பதைக் காணலாம். காலையிலும், மாலையிலும் சூரிய ஒளியின் வீச்சு மாறுவதால் அவற்றின் மேலே படும் ஒளியின் விளைவால் ஒரு பாறை பலவித அழகிய தோற்றங்களைக் கொடுக்கும். இதுபோன்ற பாறைகள் சூழ்ந்த இடங்கள், பல உயிரினங்களுக்கு வாழிடமாகிறது, நம்மில் பலருக்கு இயற்கை அழகை அள்ளித்தரும் இடமாகத் தெரிகிறது. ஆனால், சிலருக்கோ இவை வெறும் தேவையற்ற கல்லாகவும், பணம் கொட்டும் கிரானைட் குவாரிக்கான இடமாகவுமே தெரிகிறது.




பாதுகாக்கப்படவேண்டிய இடங்கள் மரங்கள் அடர்ந்த காடுகள் மட்டுமே அல்ல. வெட்டவெளிகளும், புதர்க்காடுகளும், புல்வெளிகளும், பாறைகள் சூழ்ந்த பகுதிகளும்தான். இதுபோன்ற வாழிடங்களை மட்டுமே சார்ந்திருக்கும் உயிரினங்கள் பல இங்குள்ளன. பரந்த புல்வெளிகளில் மட்டுமே தென்பட்டவை கானமயில்கள் (Great Indian Bustard), ஆனால் தற்போது அவை, இது போன்ற வாழிடங்கள் இல்லாமல் போனதால் தமிழ் நாட்டில் முற்றிலுமாக அற்றுப்போய்விட்டன. ஆகவே, எஞ்சியிருக்கும் இதுபோன்ற கண்டுகொள்ளப்படாத வாழிடங்களைப் பாதுகாப்பது மிகவும் அவசியம். அதற்கு, அரிட்டாப்பட்டி பாறைசூழ் பகுதிகளும், அதனைச் சார்ந்த உயிரினங்களும் அவ்வூர் மக்களால் காப்பாற்றப்பட்டு, தமிழக அரசால் (உயிரியப் பன்முகச் சட்டம் 2002இன் கீழ்) தமிழகத்தின் முதல் பல்லுயிர் அருமரபுக் களமாக (Biodiversity Heritage Site) அறிவிக்கப்பட்டது ஒரு நல்ல முன்னுதாரணமாகும்.
அரிட்டாப்பட்டி எனும் பல்லுயிர்க் களம்! எனும் தலைப்பில் 2-12-2022 தி இந்து தமிழ் திசை நாளிதழில்
வெளியான கட்டுரையின் மறு பதிப்பு. (இங்கே காண்க)
இக்கட்டுரையை ஒலி வடிவில் கேக்க இங்கே கிழ்க்கண்ட உரலியை சொடுக்கவும்
https://open.spotify.com/embed/episode/2q1hA22bQgerMthTao7WZp?utm_source=generator
Leave a Reply