Archive for the ‘Photo Story’ Category
நெட்டைக்கால் ஈக்கள்
நெட்டைக்கால் ஈக்கள்: கானகத்தின் அதிகம் அறியப்படாத அழகுகளில் நெட்டைக்கால் ஈக்களும் (Long-legged flies)ஒன்று. டோலிகோபோடிடே (Dolichopodidae) எனும் குடும்பத்தைச் சேர்ந்தவை. சூரிய ஒளி இவற்றின் உடலின் மேல் படும்போது பல நிறங்களில் மின்னும். நிழலான பகுதியில் வளர்ந்திருக்கும் தாவரங்களின் இலைகளின் மேற்பரப்பில் துரித கதியில் வலம் வரும். அது பயணிக்கும் விதத்திலும் ஒரு ஒழுங்கு இருக்கும். இலையின் மேல் எல்லா இடத்தையும் சுற்றிவிட்டு அடுத்த இலைக்குப் பறந்து செல்லும். உருவில் சுமார் 1 செ.மீ அளவுதான் இருக்கும். தன்னைவிட உருவில் சிறிய பூச்சிகளை பிடித்துண்ணவே இலை மேல் இந்த நடை பயணம்.
பூஞ்சைகள்: அதிசயமான உயிரினங்கள்
பூஞ்சைகள்: மழைக்காலம் வந்தால் பல அழகான பூஞ்சைகளையும், குடைக்காளான்களையும் காணலாம். அவை அழகு மட்டுமல்ல. தாவரங்களையும், இறந்து போன உயிரினங்களையும் மட்கச் செய்து மண்ணோடு மண்ணாகக் கலக்கச் செய்கின்றன. இறந்ததை உண்டு வாழும் இவை, தாவரமும் இல்லை விலங்கும் இல்லை. அவை இரண்டின் குணங்களையும் ஒருங்கே கொண்ட ஒரு அதிசயமான உயிரி.
தொடர்புள்ள கட்டுரைகள்: பூஞ்சைக்கு வந்த மவுசே, ஒளிரும் காளான்கள்.
காவிரிக் கரையில் தலைப்பிரட்டைகள்
தலைப்பிரட்டைகள்: குடகுப் பகுதியில், காவிரி நதிக்கரையில் ஒரு காலை வேளையில் பறவைகளைப் பார்த்துக்கொண்டிருந்த போது ஆழம் குறைவான ஆற்றுக் கரையில் கூட்டமாக ஏதோ நீந்திவருவதைக் கண்டேன். மீனாக இருக்குமோ என சற்று அருகில் சென்று பார்த்தபோது அத்தனையும் தலைப்பிரட்டைகள்! எந்தத் தவளையின் இளம்பருவம் எனத் தெரியவில்லை. முட்டை வடிவில் கரும்பச்சை உடல் அவற்றின் மேல் இளஞ்சிவப்புக் கண்கள். நீண்ட கரும் புள்ளிகளைக் கொண்ட வால். அதை அசைத்து அசைத்து அவையனைத்தும் நீந்திச் சென்ற காட்சி இன்னும் நினைவில் இருக்கிறது.
கரையோர நண்டெல்லாம்…
கரையோர நண்டெல்லாம்: தரங்கம்பாடிக்குச் சென்றிருந்த போது அங்கிருந்த கோட்டையை விட என்னை அதிகம் கவர்ந்தது கடற்கரையோர நண்டுகள் தான். பக்கவாட்டில் நடந்து செல்லும். அருகில் செல்ல முயற்சித்தால் கண்ணிமைக்கும் நேரத்தில் அவை தோண்டி வைத்திருக்கும் குழிக்குள் புகுந்து கொண்டு மெல்ல அவற்றின் முல்லை அரும்பு போன்ற கண்களை வெளியே நீட்டி எட்டிப்பார்க்கும். இவற்றை பார்த்துக்கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.
தொடர்புள்ள கட்டுரை: கடற்கரைக் கோலங்கள்
சாலையோரக் காட்டுக்காசித்தும்பைகள்
சாலையோரச் சோலை: இளஞ்சிவப்பு நிற காட்டுக்காசித்தும்பைகள் (Impatiens sp.) மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மட்டுமே தென்படும் ஓர் அழகிய சிறு தாவரம். மலைப்பகுதியில் செல்லும் சாலையோரங்களில் இதுபோன்ற காட்டுக்காசித்தும்பைச் செடிகளும், தகரைகளும், பாசிகளும் வளர்ந்திருப்பதைக் காணலாம். இவை அவ்வழியே செல்வோரின் கண்களை குளிர்ச்சியடையச் செய்வது மட்டுமல்லாது, தமது வேரினால் மண்ணை இறுக்கப் பிடித்து மண்சரிவையும் தடுக்கின்றன.
தொடர்புள்ள கட்டுரை: இயற்கையை அழித்தா வளர்ச்சி?
ஒரு போட்டோ எடுங்களேன்…
“அங்கிள்.. நீங்க எங்க இருந்து வரீங்க?”
“அந்த மலை உச்சியில இருந்து…”
“இல்ல நீங்க எந்த ஊர்ல இருந்து வரீங்க?”
“சென்னையில இருந்து”
“சும்மா பொய் சொல்றீங்க…” (சிரிப்பு)
“இல்ல, வேணும்னா எனக்கு பின்னால வர்றவங்க கிட்ட கேளுங்க…”
“இங்க எதுக்கு வந்திருக்கீங்க?”
“பறவைங்கள பாக்கறத்துக்கு…”
“அது என்னது?”
“கேமரா”
“எங்களையும் ஒரு போட்டோ எடுங்களேன்…”(சிரிப்பு)
—–
எனது பறவைகள் ஆண்டு 2014
தி இந்து சித்திரை மலர் 2015 ல் “வானில் பறக்கும் புள்களைத் தேடி” எனும் தலைப்பில் வெளியான படக்கட்டுரையின் முழு வடிவம்.
—–
சில ஆண்டுகளுக்கு முன் The Big Year எனும் ஆங்கிலத் திரைப்படத்தைப் பார்த்தேன். அமெரிக்காவில் ஆண்டுதோறும் பறவை பார்ப்போரிடையே ஒரு போட்டி நடக்கும். ஓர் ஆண்டில் யார் அதிகமான பறவைகள் வகைகளைப் பார்த்து பதிவு செய்கிறார்கள் என்பதே அது. இந்தப் படமும் ஓர் ஆண்டில் அதிக பறவைகள் பார்க்க அமெரிக்காவின் பல மூலைகளுக்குச் செல்லும் மூவரைப் பற்றியது. இப்படிச் செய்யும் போது இவர்களுக்குள் நடக்கும் போட்டி, அவர்கள் தங்களது குடும்பத்தில், வேலை செய்யுமிடத்தில் சந்திக்கும் எதிர்கொள்ளும் இடையூறுகள் ஆகியவை பற்றி மிகவும் சுவாரசியமாக செல்லப்பட்ட படம் இது.
இப்படத்தைப் பார்க்கும் எந்த பறவை பார்ப்போருக்கும் இது போல நாமும் செய்ய வேண்டும் எனும் உந்துதல் ஏற்படும். எனினும் இதற்காக முன்பே பல வகையில் திட்டமிட வேண்டும். பயணித்திற்காக சேமிக்க வேண்டும், எங்கெங்கு சென்றால் எந்தெந்த வகைப் பறவைகளைக் காணலாம், எத்தனை வகைப் பறவைகளைக் காணலாம் என்பதையெல்லாம் ஒழுங்காகத் திட்டமிட வேண்டும். மிகுந்த பொருட்செலவும் ஆகும். இந்தியாவில் சுமார் 1300 வகையான பறவைகள் உள்ளன. இவற்றில் பாதியைக் காண வேண்டுமென்றால் கூட இந்தியாவின் பல மூலைகளுக்குச் செல்ல வேண்டி வரும். அதற்கெல்லாம் என்னிடம் நேரமும் இல்லை, பணமும் இல்லை. ஆகவே எத்தனை வகை பறவைகளைப் பார்ப்பது என்றில்லாமல் எவ்வளவு நேரம் பறவைகளுக்காக செலவழிக்கிறோம் எனப்பார்க்கலாம் என 2014 மார்ச் மாதம் முடிவு செய்தேன். தினமும் குறைந்தது 15 நிமிடங்கள், நான் எங்கே இருந்தாலும், பறவை பார்ப்பதென முடிவு செய்தேன். அப்படிப் பார்க்கப்பட்ட பறவைகளை eBird (www.ebird.org) எனும் இணையத்தில் உள்ளிட ஆரம்பித்தேன். மாதங்கள் சில கடந்தவுடன் இந்தியாவில் அதிக பறவைப் பட்டியல் உள்ளிட்டவர்களில் முதல் 10 இடத்தில் எனது பெயரைக் கண்டவுடன் இந்த ஆண்டு எப்படியாவது முதலிடத்திற்கு வர முயற்சிக்க வேண்டும் என எண்ணிக் கொண்டேன்.
பணி நிமித்தம் கேதர்நாத் கஸ்தூரி மான் சரணாலயத்திற்கு 2 வாரங்களுக்கு செல்ல மே மாதத்திலும், மத்திய இந்தியாவின் சில வனப்பகுதிகளுக்கும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு நான் பார்த்த பறவைகள் வகையின் எண்ணிக்கையும் சற்று உயர ஆரம்பித்தது. அப்போது தான் முடிவு செய்தேன். குறைந்தது 500 வகைப் பறவைகளையாவது இந்த ஆண்டு பார்த்து விட வேண்டு மென. ஆண்டு இறுதியில் இதற்கான பயணங்களுக்காக திட்டமிட ஆரம்பித்தேன்.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி, கிழக்குக் கடற்கரையோரம், இமயமலைக் காடுகள், மத்திய இந்தியக் காடுகள் ஆகிய பகுதிகளில் தென்படும் பறவைகளில் பலவற்றைப் பார்த்தாகி விட்டது. வட கிழக்கு இந்தியக் காடுகளும், தார் பாலைவனமும் தான் மிஞ்சி இருந்தது. அஸ்ஸாம், நாகாலாந்து, மேகாலா, ராஜஸ்தான், குஜராத் என டிசம்பர் மாதம் சுற்ற ஆரம்பித்தேன். படகிலும், பஸ்ஸிலும், இரயிலிலும், ஒட்டகத்திலும், நடந்து சென்றும், பல வகையான பறவைகளை கண்டு களித்தேன். ஆண்டு இறுதியில் நான் உள்ளிட்ட மொத்த பறவைப்பட்டியல்கள் 648 (eBird Checklists) பறவை வகைகளும் 500ம் மேல். இந்தியாவிலேயே 2014ம் ஆண்டு முதலிடத்தில் இருந்தேன்.
பறவைகளுக்கான எனது பயணத்தில் இதுவரையில் நான் பார்த்திராத, பல்வேறு வகையான, அழகிய, விசித்திரமான பறவைகளையும் கண்டுகளித்தேன். பார்த்த பல பறவைகளின் படங்களையும் அவ்வப்போது எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவற்றில் சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.
நாராய்..நாராய்..
குஜராத்தில், அஹமதாபத்திற்கு அருகில் உள்ள நல்சரோவர் பறவைகள் சரணாலயத்திற்கு பறவைகளைப் பார்க்கச் சென்று கொண்டிருந்தோம். போகும் வழியில் வானில் பறந்து சென்ற பறவைப் பார்க்க சட்டென வண்டியை நிறுத்தினோம். அது ஒரு செங்கால் நாரை (White Stork Ciconia ciconia). சத்திமுத்தப் புலவர் பாடிய சங்கப்பாடலில் வரும் அதே பறவைதான். ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வலசை வரும் இந்த அழகிய நாரை.
வட்டமிடும் புல்வெளிக் கழுகு
பறவை வகைகளிலேயே மிகவும் கம்பீரமான தோற்றத்துடன் இருப்பவை கழுகுகள். அவற்றின் கூரிய அலகும், கொக்கி போன்ற கால் நகங்களும், பறக்கும் நிலையில் நீண்டு அகன்ற இறக்கைகளும், அவற்றில் விரல்கள் போன்ற முதன்மைச் சிறகுகளும் அவை அமர்ந்திருந்தாலும், பறந்து கொண்டிருந்தாலும் மிடுக்கான தோற்றத்தைக் கொடுக்கும். ஐரோப்பிய, ரஷ்யா முதலான பகுதிகளிலிருந்து ஆண்டு தோறும் இந்தியாவின் வட பகுதிக்கு வலசை வரும் கழுகு இது. அங்கே Steppe எனும் பரந்து விரிந்த, மரங்கள் இல்லா புல்வெளிகளிலும், வெட்டவெளிகளிலும் வசிப்பதனாலேயே Steppe Eagle Aquila nipalensis எனப் பெயர் பெற்றது. பாறுகளைப் போலவே இவையும் Diclofenac எனும் கால்நடை வலிநீக்கி மருந்தினால் பாதிப்படைந்து எண்ணிக்கையில் குறைந்து வருகின்றன.
அந்தரத்தில் சாகசம்
இப்பூமிப்பந்தின் வடக்கில் இருக்கும் நாடுகளில் இருந்து கூட்டம் கூட்டமாக தென்னிந்தியாவிற்கும், குஜராத்திற்கும் வலசை வருபவை யூரெசிய பெருங்கொக்குகள் (Common Crane Grus grus). மதிய வேளையில் கூட்டமாக பறந்து வந்த இப்பெருங்கொக்குக் கூட்டம் தரயிறங்கும் முன் நீர்நிலைகளின் மேல் வட்டமடிக்கும். நீரில் இறங்கும் முன் தமது நீண்ட இறக்கையை பக்கவாட்டில் விரித்து, தலையை நிமிர்த்தி, கால்கள் இரண்டையும் நேராக வைத்துக் கொண்டு காற்றில் தவழ ஆரம்பிக்கும். அந்தரத்தில் அவை நிற்பது போலவே தோற்றமளிக்கும் இக்காட்சி பார்ப்போரை வியப்பிலாழ்த்தும்.
பெரிய அக்கா குயில்
இமயமலை அடிவாரக் காடுகளிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் தென்படும் இந்த பெரிய அக்கா குயில் (Large Hawk-Cuckoo Hierococcyx sparverioides). உத்தராஞ்சலில் ஓக் மரக்காடுகளில் திரிந்து கொண்டிருந்த போது இவற்றின் குரலை கேட்டுக் கொண்டே இருந்தேன். இதன் குரலை வைத்து அடையாளம் கண்டு கொள்ளலாம், ஆனால் பார்ப்பது கடினம். மரங்களினூடே அமர்ந்து ஓயாமல் கூவிக்கொண்டிருக்கும். எனினும் இப்பறவையை ஒரே ஒரு முறை சற்று அருகில் பார்க்கும் நல்வாய்ப்பு கிடைத்தது. இது வலசை வரும் குயிலினம். இந்தியாவின் வடபகுதியில் கடும் குளிர் காலங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இப்பறவைகளைக் காணலாம். எனினும் இவை வலசை வரும் பகுதிகளில் குரலெழுப்பாமல் அமைதியாகவே இருக்கும்.
காட்டுச் சிறுஆந்தை
இந்த அழகான சிறிய ஆந்தை முற்றிலுமாக அற்றுப்போய் விட்டது பல காலம் பறவை ஆர்வலர்கள் எண்ணிக்கொண்டிருந்தனர். எனினும் 1997ல் இது மறுபடியும் கண்டுபிடிக்கப்பட்டது. உலகின் அரிய ஆந்தை வகைகளில் ஒன்று. மத்திய இந்தியாப் பகுதியில் உள்ள மேல்காட் புலிகள் காப்பகம் (Melghat Tiger Reserve) இப்பறவையைக் காண சிறந்த இடம். இந்த காட்டுச் சிறு ஆந்தை (Forest Owlet Heteroglaux blewitti) பகலில் தான் இரைதேடும். இலையுதிர் காடுகளிலும், தேக்குமரக் காடுகளிலும் தென்படும். ஆந்தைகளை பகலில் வெட்ட வெளியில் அமர்ந்திருப்பதைக் கண்டால் மற்ற பறவைகளுக்குப் பொறுக்காது. அவற்றைச் சூழ்ந்து கொண்டு கத்திக் குரலெழுப்பி விரட்டியடிக்க முயற்சிக்கும். சில வேளைகளில் ஆந்தைகள் எங்காவது இலை மறைவில் சென்று அமர்ந்துவிடும். எனினும் சில நேரங்களில் ஆந்தைகள் அதையெல்லாம் சட்டையே செய்யாது. நான் கண்ட இந்த காட்டுச் சிறுஆந்தையின் அருகில் வந்த சிறிய வெள்ளைக் கண்ணி கத்திக் கொண்டிருந்ததையும், அதைக் கண்டுகொள்ளாமல் அந்த ஆந்தை அப்படியே அசையாமல் அமர்ந்திருந்ததையும் பார்க்க வேடிக்கையாக இருந்தது.

காட்டுச் சிறு ஆந்தையைப் (Forest Owlet Heteroglaux blewitti) பார்த்துக் கத்தும் வெள்ளைக்கண்ணி (Oriental white-eye Zosterops palpebrosus)
பாலை சிலம்பன்
பாலை சிலம்பன்களுக்கு (Common Babbler Turdoises caudata) கண்ணைப் பறிக்கும் வண்ணச் சிறகுகள் இல்லாது, மெலியநிறங்களில் தான் இருக்கும். பொதுவாக 6 முதல் 20 பறவைகள் வரை ஆங்காங்கே பிரிந்து கூட்டமாக இரைதேடும். இடம் விட்டு இடம் போது ஒன்றன் பின் ஒன்றாக பறந்து செல்வது பார்க்க அழகாக இருக்கும். இவை நம்மூரில் இருக்கும் தவிட்டுக் குருவிகள் வகையைச் சேர்ந்தவை. வறண்ட நில புதர்க்காடுகளிலும், வெட்டவெளிகளிலும், பாலை நிலங்களிலும் இவை வசிக்கும். இந்தியாவில் பரவலாகத் தென்பட்டாலும், மேலே குறிப்பிட்ட வாழிடங்களில் தான் பார்க்க முடியும். தென்னிந்தியாவை விட வடபகுதியில் பொதுவாகப் பார்க்கலாம்.
மண்கொத்தியின் நண்டு வேட்டை
கடற்கரையில் பறவைகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது தென்பட்டது இந்த மண்கொத்தி (Common Sandpiper Actitis hypoleucos). இவை பூமியின் வடபகுதியிலிருந்து இந்தியாவிற்கு வலசை வருபவை. குடுகுடுவென கடலோரமாக ஓடி மணலைக் குத்திக் கொண்டு அதிலுள்ள பூச்சிகளை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. சட்டென அமைதியாக சில நொடிகள் நின்றது. பிறகு ஒரே பாய்ச்சலில் அருகில் நின்று கொண்டிருந்த ஒரு நண்டை அலகால் கொத்தி எடுத்தது. தலையை அங்குமிங்கும் ஆட்டி அந்த நண்டை தரையில் அடித்துக் கொண்டிருந்தது. பிறகு எதிர்பாராத வகையில் வேகமாக அருகில் தேங்கியிருந்த தண்ணீரை நோக்கி ஓடி அதில் அந்த நண்டை முக்கியது. இது போன்ற கடற்கரையில் இருக்கும் நண்டுகளை அலகால் பிடித்துக் கொண்டிருக்கும் போது தவறுதலாக விட்டு விட்டால் அவை வேகமாக ஓடி குழிக்குள் சென்று ஒளிந்து கொள்ளும். ஆனால் நீரில் அவை தப்பிக்க முடியாது. எனவே தான் நீரில் முக்கி அந்த நண்டை கொத்திக் கொத்தி சாப்பிட ஆரம்பித்தது.
தரையிரங்கும் வெண்கால் பாறு
வெண்கால் பாறு (Slender-billed Vulture Gyps tenuirostris) உலகிலேயே மிகவும் அபாயத்திற்குள்ளான பாறுகளில் ஒன்று. இமயமலை அடிவாரப் பகுதிகளும், வடகிழக்கு இந்தியாவிலும், நேபாளத்திலும் சுமார் 1000 பறவைகள் மட்டுமே தெற்போது எஞ்சியுள்ளன. இவற்றைக் காண அஸ்ஸாமில் உள்ள தின்சுக்கியா எனுமிடத்திற்குச் சென்றேன். இறந்து போன கால்நடைகளை போட்டுவைக்கும் திடலில் கூட்டமாக சுமார் 50 பறவைகளைக் கண்டேன். சில மரங்களின் மேலும், சில திடலில் கிடந்த இறந்த மாட்டின் தசைகளை சாப்பிட்டுக் கொண்டிருந்தன. இவைகளைக் கண்டதும் வெகுதூரம் பயணம் செய்து களைப்பும் காணாமல் போனது. இந்த அரிய பறவைகளை வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். அவற்றைப் பார்த்ததில் மகிழ்ச்சி என்றாலும், அவற்றின் நிலையை எண்ணி பெருமூச்சுடன் அந்த இடத்திலிருந்து அகன்றேன்.
கிரெளஞ்சப் பறவை
சாரஸ் என வடமொழியில் அழைக்கப்படும் மிக அழகான பெருங்கொக்கு. வால்மீகி ராமாயணத்தில் வரும் கிரெளஞ்சப் பறவை தான் இந்த சாரஸ் பெருங்கொக்கு (Sarus Crane Grus antigone). ஏரி, குளங்களில், வயல்வெளிகளில் சோடியாக இருப்பதைக் காணலாம். மத்திய மற்றும் தென்னிந்தியாவில் பரவலாகத் தென்படுகிறது. ஆளுயரத்திற்கு இருக்கும் இப்பெருங்கொக்கு நடனத்திற்குப் பெயர் போனது. மத்தியப் பிரதேசம் கோண்டியா மாவட்டத்தில் சாரஸ் சோடி ஒன்று வயலின் ஓரமாக கூடு கட்டி வைத்திருந்தது. வெகுநேரமாக ஆண் ஒன்று அடைகாத்துக் கொண்டிருந்தது. சற்று நேரத்தில் எங்கிருந்தோ பறந்து வந்த அதன் பெண் துணையைக் கண்டவுடன் எழுந்து நின்று, சிறகடித்து மேலும் கீழும் குதித்தது. வந்திறங்கிய பெட்டையும் அதைப் போலவே துள்ளிக் குதித்தது. சாரஸின் நடனம் ஒரு கண்கொள்ளாக் காட்சி.
குப்பையில் நின்றாலும்..
சில பறவைகளை எளிதில் காண அவை அதிகமாகத் தென்படும் இடங்களுக்குச் சென்று பார்த்துவிட்டு நேரத்தையும், அலைச்சலையும் மிச்சப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அது எப்படிப்பட்ட இடமாக இருந்தாலும் போவதற்குத் தயாராக இருக்க வேண்டும். பெரிய போதா நாரையைக் (Greater Adjutant Stork Leptoptilos dubius) காண அஸ்ஸாமின் தலைநகரமான குவஹாத்தியில் உள்ள பரந்து விரிந்து கிடக்கும், துர்நாற்றம் வீசும் குப்பை மேட்டிற்குச் சென்றிருந்தேன். அங்கு லாரி லாரியாகக் கொண்டு வந்து கொட்டும் குப்பைக் கூளங்களில் உள்ள உணவுப் பொருட்களையும், மாமிசக் கழிவுகளையும் எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தன அந்த நாரைகள். சில அங்கு குப்பைகளைத் தரம் பிரிப்பவர்களுக்கு வெகு அருகிலேயே கூட நின்று கொண்டிருக்கும். இனப்பெருக்கக் காலங்களில் இவற்றின் சிறகுகள் இல்லத தலை, கழுத்து, அதில் தொங்கும் பை போன்ற அமைப்பு யாவும் சிவப்பும், மஞ்சளும் கலந்த நிறத்தில் இருக்கும். குப்பை மேட்டில் நின்றிருந்தாலும், அந்த மாலை வெயிலில் அழகாகத்தான் இருந்தது அந்த விசித்திரமான தோற்றம் கொண்ட பறவை.
பரத்பூரில் பறக்கும் ஆண்டிவாத்து
ராஜஸ்தானில், பரத்பூரில் உள்ள உலகப்புகழ் பெற்ற கியோலதோ தேசியபூங்கா (Keoladeo National Park) பறவைகளின் சொர்கபூமி. ஆகவே பறவை பார்ப்போருக்கும் தான். சுமார் 350 வகையான பறவைகள் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலும் வலசை வரும் பறவைகள். குறிப்பாக வாத்து, கொக்கு, நாரை முதலிய நீர்ப்பறவைகள். படத்தில் இருப்பது வலசை வரும் ஆண் ஆண்டிவாத்து (Northern Shoveler Anas clypeata).
பறவைகளில் அரசன்
ராஜஸ்தானில் உள்ள தார் பாலைவனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது சற்று தொலைவில் அமர்ந்திருந்தது இந்த அரசக் கழுகு (Eastern Imperial Eagle Aquila heliaca). வட இந்தியாவிற்கு வலசை வரும் கழுகினங்களில் ஒன்று இது. மொதுவாக முன்னேறி சற்று அருகில் சென்று அதைப் படமெடுத்தேன். இருநோக்கியில் கண்ட போதுதான் தெரிந்தது ஏன் இதற்கு இப்பெயர் வைத்தார்கள் என. அப்படி ஒரு மிடுக்கான தோற்றம் அதற்கு.
நண்டுதிண்ணி
குஜராத்திற்கு பறவைகள் பார்க்கச் செல்லும் முன், சில குறிப்பிட்ட பறவைகளைப் பார்க்க வேண்டும் என பட்டியல் தயார் செய்திருந்தேன். அதில் முக்கியமான ஒன்று இந்த நண்டுதிண்ணி (Crab Plover Dromas ardeola). பெயருக்கு ஏற்றாற்போல் நண்டுகளையே அதிகமாக உண்ணும் பறவை. இந்தியாவின் கடலோரப்பகுதிகளுக்கு வலசை வரும். பொதுவாக தனித்தனியே இரைதேடினாலும், கூட்டமாக வந்து ஓரிடத்தில் அடையும். அது ஒரு கண்கொள்ளாக் காட்சி.
சிறிய நீல மீன்கொத்தி
இந்தியா முழுவதும் பரவலாகத் தென்படும் இந்த சிறிய நீல மீன்கொத்தி (Common Kingfisher Alcedo atthis). பரத்பூர் பறவைகள் காப்பிடத்தில் பார்த்துப் படமெடுத்தது. என்னதான் பல இடங்களுக்குச் சென்று பல வித பறவைகளைக் கண்டுகளித்தாலும், நம் ஊரில் தினமும் பார்க்கும் பறவைகள் நம் மனதில் எப்பொழுதுமே குடிகொண்டிருக்கும். சின்ன மீன்கொத்தியும் அதில் அடக்கம்.
உணவூட்டும் தந்தை
சிட்டுக்குருவிகள் (House Sparrow Passer domesticus) அழிந்து வருகின்றன என எப்படியே, யாரோ ஒரு தவறான தகவலைப் பரப்பிவிட்டு விட்டனர். நாம் பார்க்கவில்லை என்பதற்காக அவை முற்றிலும் அழிந்து விட்டது என அர்த்தமில்லை. சிட்டுக்குருவிகள் எண்ணிக்கையில் குறையாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம் தான். எனினும், அழியும் விளிம்பில் இருக்கும் இன்னும் பல வகையான பறவைகளை பாதுகாப்பதும், அதற்காகப் பாடுபடுவதுமே முதன்மையாக இருக்க வேண்டும். நாம் அடிக்கடி பார்த்து ரசிக்கும் சிட்டுக்குருவி போன்ற பொதுப்பறவைகள் (Common birds) நமக்கு எல்லாப் பறவைகளின் மேலும் நாட்டமும், கரிசனமும் ஏற்படக் காரணமாக இருக்கும். திருச்சியில் வீட்டின் முன்னே ஆண் சிட்டுக்குருவி ஒன்று அதன் குஞ்சுக்கு உணவூட்டிக் கொண்டிருந்தது. பார்க்கவே மிக அழகாக இருந்தது.
உணவிடலாமா?
நம்மில் பலர் பல காட்டுயிரினங்களுக்கு உணவிடுவதைப் பார்த்திருக்கலாம். அது சரியான செயலா? இதற்கு நேரிடையாக பதிலலிப்பது கடினம். நாம் கொடுக்கும் உணவினால், எந்த ஒரு உயிரினத்திற்கும் அவற்றின் உடல்நலத்திற்கு கேடும், இயல்பான குணத்தித்தில் மாற்றமும் ஏற்படக் கூடாது. பலர் குரங்குகளுக்கு உணவிடுவார்கள். அது பல வேளைகளில் நமக்கே பாதகமாக முடியும். சில தனிப்பட்ட குரங்குகள் கொஞ்சம் மூர்க்கத்தனமாக மாறி நம்மிடமிருந்தே உணவினை பரித்துச் செல்ல ஆரம்பித்துவிடும். எனினும் பொதுவாக பறவைகளுக்கு உணவிடுவதனால் நமக்கு அப்படி ஒன்றும் பெரிதாக பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆயினும், இதனால் அவை எந்த வகையில் பாதிப்படையும் என்கிற புரிதலும் நம்மிடையே அவ்வளவாக இல்லை. ஆகவே, எதையும் அளவோடு செய்வதே நல்லது. ராஜஸ்தானில் பயணித்துக் கொண்டிருந்தபோது சாம்பல் மைனாக்களுக்கு (Bank Myna Acridotheres ginginianus) ஒருவர் மிக்சரை அள்ளி வீசுவதைக் கண்டேன். அவை பறந்து பறந்து உணவினைப் பிடித்தது பார்க்க வேடிக்கையாக இருந்தது.
2013 – நினைவில் நிற்கும் சில தருணங்கள்
மீன்பிடிக்கும் கூழைக்கடாக்கள்: சாம்பல் கூழைக்கடாக்கள் கூட்டமாக சேர்ந்து, ஒரு அரை வளைய அமைப்பை ஏற்படுத்தி, தமது இறக்கையை மடித்துத் தூக்கி, மெல்ல நீந்தி, நீரின் மேற்பரப்பில் இருக்கும் மீன்களை அணைத்து ஆழம் குறைந்த பகுதிக்கு தள்ளிச் செல்லும். தகுந்த இடம் பார்த்து, சுற்றி வளைத்து தடாலெனப் பாய்ந்து தமது பை போன்ற கீழ்அலகினால் மீன்களைப் பிடித்துண்ணும் காட்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தும்.
*****
நாட்டுக்குரங்கு தம்பதியினர்: நாட்டுக்குரங்கு (Bonnet macaque) சோடி ஒன்று கலவி மேற்கொள்ளும் காட்சி. இந்தக் காட்சியைப் படமெடுத்துக் கொண்டிருந்த போது ஆண் குரங்கு என்னைப் பார்த்து கோபப்படுவது போல் வாயைப் பிளந்து பல்லைக் காட்டியது. உடனே அந்த இடத்தை விட்டு அகன்று விட்டேன். பெண் நாட்டுக்குரங்கின் கருத்தரிக்கும் (estrous cycle) காலம் ஓரிரு நாட்களே. ஆகவே குறுகிய காலத்திற்குள் ஆண் துணையைத் தேடி இணைசேர வேண்டும். அக்காலகட்டத்தில் ஒரிரு முறைதான் கலவி கொள்ளும். ஆணும் ஒரே கலவியில் தனது விந்தணுவை அவளது உடலில் செலுத்தும் (Single mount Ejaculation). நாட்டுக்குரங்கின் சராசரி ஆயுட்காலம் 30. பெண்ணானது சுமார் 27 வயது வரை கருத்தரிக்கும். இந்தக் குரங்குகளுக்கு உணவு கொடுத்தல் தவறு. நாம் கொடுப்பதாலேயே, அவை மீண்டும் மீண்டும் நம்மிடம் உணவினை எதிர்பார்க்கின்றன. (Thanks Dr. Ananda kumar for inputs)
*****
பாறு: இந்திய பாறுக்கழுகு (Indian Vulture Gyps indicus) பிணந்திண்ணிக்கழுகு என அறியப்படுவவை. ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் பல இடங்களில் வானில் நூற்றுக்கணக்கில் பறந்து கொண்டிருந்தன. இறந்து போன கால்நடைகளை உண்டு வாழ்பவை. ஆனால் நாம் கால்நடைகளுக்குக் போடும் ஊசி மருந்தான டைக்லோபீனாக் (Diclofenac) இவற்றிற்கு நஞ்சாகியதால், இன்று அழிவின் விளிம்பில் தொற்றிக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் முதுமலை வனப்பகுதிகளில் மட்டும் இப்போது ஒரு சிறிய கூட்டம் எஞ்சியுள்ளது.
*****
வரையாடு: தமிழ்நாட்டின் மாநில விலங்கு. ஓரிடவாழ்வி, அதாவது உலகில் வேறெங்கும் இன்றி, இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மட்டுமே வாழும் ஒர் உயிரினம். உயரமான மலைப்பகுதிகளில் உள்ள புல்வெளிகளில் தென்படும். எண்ணிக்கையில் சுமார் 2000க்கும் குறைவாகவே இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அருகிவரும் வாழிடம், கள்ள வேட்டை, அவை வாழும் புல்வெளிப் பகுதிகளில் மனிதர்களால் கொண்டு செல்லப்பட்ட களைத்தாவரங்களின் பெருக்கம், சாலைகளாலும், ஏனைய நீர்த்தேக்கங்கள், அணைகள் போன்ற கட்டுமானங்களாலும் துண்டாக்கப்படும் வாழிடங்கள் முதலிய காரணங்களால் நாளுக்கு நாள் அருகி வருகின்றன.
*****
குவளைக்குள் சிலந்தி: அது ஒரு அதிகாலை நேரம், அடுப்படிக்குள் நுழைந்து காபி போடுவதற்கு தயாரான வேளையில், குவளையை எடுக்கச் சென்றபோது அதனுள் ஒரு சிலந்தி. உற்று நோக்கிய போது அது எதையோ மும்முரமாக சாப்பிட்டுக்கொண்டிருந்தது தெரிந்தது. அதற்கு அன்றைய காலை உணவு ஒர் கரப்பான்பூச்சி. பெரிய சிலந்திகளைப் பார்த்தால் சிலர் பயப்படுவார்கள், இன்னும் சிலர் அடித்தே கொன்று விடுவார்கள். ஆனால் சிலந்திகள் நமக்கு நன்மை செய்யும் உயிரினம். கரப்பான் போன்ற பூச்சிகளைத் தின்று அவற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துகின்றன. என் வீட்டில் எனக்குத் தெரிந்து இது போன்ற பெரிய 6 சிலந்திகள் என்னுடன் என் வீட்டில் வாழ்கின்றன!
*****
பழந்திண்ணி வவ்வால்: புளியமரத்தின் கிளையினை தன் கால்களால் பற்றி, தனது இறக்கையினால் உடலை போர்வை போல் போர்த்தி, தலைகீழாகத் தொங்கிக்கொண்டு ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் ஒரு பழந்திண்ணி வவ்வால். இவை பறவை இனத்தைச் சேர்ந்தவை அல்ல. நம்மைப் போல் குட்டி போட்டு பால் கொடுக்கும் பாலூட்டி இனம். இவற்றின் இறக்கை மாறுபாடடைந்த கை. விரல்களுக்கிடையில் உள்ள மெல்லிய தோல் தான் இறக்கையாகிறது. காற்றில் பறந்து செல்வதற்கேற்ப பரிணமித்துள்ள வவ்வால் இனம் இயற்கையின் அதிசயங்களில் ஒன்று.
*****
யானைகளும் செங்கல் சூளைகளும்: கோவையில் உள்ள ஆனைக்கட்டி பகுதியில் எடுக்கப்பட்ட படம். படத்திலுள்ள கோபுரங்கள் யாவும் ஒவ்வொரு செங்கல் சூளை என்பதை அறியவும். சரி இதற்கும் யானைகளுக்கும் என்ன சம்பந்தம்? செங்கல் சூளைகளில் தீ மூட்ட பனைமரங்கள் வேறு இடங்களிலிருந்து கொண்டு வரப்படுகின்றன. அப்பனைமரத்தின் உள்ளிருக்கும் மென்மையான மாவு போன்ற பகுதியைச் சுவைப்பதற்காக யானைகள் அப்பகுதிக்கு வருகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரக் காடுகளின் ஓரத்தில், அதுவும் யானைகளின் வழித்தடங்களில் கணக்கில்லாமல் செங்கல் சூளைகளை தொடங்கலாம். ஆனால் யானைகள் அங்கே வரக்கூடாது. வந்தால் விரட்டி அடிப்போம்.
*****
சாலையில் சிங்கவால் குரங்குகள்: சுற்றிலும் தேயிலை நடுவில் தீவு போல் ஒரு சிறிய காட்டுப்பகுதி. அதில் சுமார் 100 சிங்கவால் குரங்குகள் (சோலை மந்தி). இதுதான் வால்பாறையில் உள்ள புதுத்தோட்டம் பகுதி. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மட்டுமே வாழும் அரிய வகை குரங்கினம் இது. அடர்ந்த, சீரழிக்கப்படாத காட்டில் இவை மர விதானங்களில் மட்டுமே வசிக்கும். ஆனால் இந்த தீவுக் காட்டில் போதிய இடமும், தடையின்றி இடம்பெயர தொடர்ந்த மரவிதானமும் இல்லாத காரணத்தால் இவை தரைக்கு வந்து விட்டன. அந்தச் சிறிய காட்டின் குறுக்கே நாளுக்கு நாள் அகலப்படுத்தப்படும் சாலை. சீறி வரும் வாகனங்கள், பொறுப்பின்றி இக்குரங்குகளுக்கு உணவிடும் விவரமறியாத சுற்றுலாவினராலும் ஆண்டிற்கு ஓன்றிரண்டு சாலையில் அடிபட்டு இறக்கின்றன.
*****
பிளாஸ்டிக் குப்பைகள், கட்டிடங்கள், பறவைகள் – இதுதான் பள்ளிக்கரணை சதுப்பு நிலம். பல நாட்களாக தினசரிகளில் படித்தும், நண்பர்கள் வாயிலாகவும் அறிந்து இருந்தாலும் இந்த ஆண்டுதான் அங்கு சென்று பறவைகளை கண்டுகளிக்க வாய்ப்பு அமைந்தது. வலசை வரும் சாம்பல் தலை ஆள்காட்டிகளையும், நீல தாழை கோழிகளையும் (படத்தில் இருக்கும் பறவை)அதிக அளவில் பார்க்க முடிந்தது. இந்த இடம் நாளுக்கு நாள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. ஏரியின் மத்தியில் பிளாஸ்டிக் குப்பை மேடு வேறு. அசுத்தமான இடத்தில் இந்த பறவைகளைப் பார்க்க பாவமாக இருந்தது.
*****
மனிதன்-சிறுத்தை எதிர்கொள்ளல்: உத்தராஞ்சல் சென்றிருந்த போது அங்குள்ள ஒரு வனப்பாதையில் பார்த்தது. மனிதனின் கால்தடமும், சிறுத்தையின் கால்தடமும் எதிரெதிரே அமைந்திருந்தது. சிறுத்தைகள் வேண்டுமென்றே (சில சினிமாக்களிலும், பத்திரிக்கைகளிலும் சித்தரிப்பது போல) மனிதர்களைத் தாக்குவதில்லை. அவை நாம் இருக்கும் இடத்தின் அருகில் இருந்தாலே அவற்றிற்கும் நமக்கும் மோதல் எனக் கொள்ளலாகாது. அவை பெரும்பாலும் மனிதர்களை விட்டு விலகிச் செல்லவே விரும்புகின்றன. அதை நினைவுபடுத்தும் வண்ணம் இந்த படம் அமைந்ததில் மகிழ்ச்சி.
*****
சிவப்பு நத்தை: Indrella ampulla என அறிவியல் அறிஞர்களால் அழைக்கப்படும் இந்த அழகான சிவப்பு நத்தையை பார்க்க வேண்டுமென்பது எனது நெடுநாளைய ஆசை. இந்த ஆண்டுதான் அது நிறைவேறியது. இரவில் வண்டியில் சென்ற போது முன் சென்ற எங்களது ஒரு வண்டி சட்டென நின்றது. இறங்கிச் சென்று பார்த்த போது இந்த நத்தை சாலையைக் கடந்து மெல்ல ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. எதிரே வாகனம் வரும் அறிகுறி தெரிந்தவுடன் அதை எடுத்து சாலையின் (அது செல்லும் திசையில்) எதிர்புறம் கொண்டு விட்டோம். அப்படி என்ன சிறப்பு இந்த நத்தைக்கு? மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மட்டுமே தென்படும் அரிய வகை நத்தை இது. ஈரப்பதம் மிக்க காடுகளிலேயே பார்க்க முடியும்.
******
ஒரு வாரம் 200 பறவை வகைகள்: பறவைகளைக் காண அன்மையில் உத்தராஞ்சலில் (தற்போதைய உத்தரகண்ட்) இருக்கும் ஜிம் கார்பெட் புலிகள் காப்பகத்திற்கும் அதனை அடுத்த வனப்பகுதிகளுக்கும் சென்றிருந்தேன். ஒரு வார காலத்தில் சுமார் 200 வகையான பறவைகளை கண்டு களித்தோம். அதில் ஒன்று தான் இந்த கருந்தொண்டை பட்டாணிக்குருவி (Black-throated Tit). (Thanks Harsha and Ritesh for this memorable birding trip).