Archive for the ‘Wetlands’ Category
என்ன வேண்டும் தமிழ்நாட்டுக்கு?
இந்து தமிழ் திசை நாளிதழில் 18/03/2021 அன்று வெளியான கட்டுரையின் முழு வடிவம். தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி கடல் சூழலியல்-வள அரசியல் குறித்து பேராசிரியர் வறீதையா கான்ஸ்தந்தின், பழங்குடியினர் நலன் குறித்து திரு. எஸ். சி. நடராஜ், பொது சுகாதாரம், மருத்துவம் குறித்து திரு. ஜி. ஆர். இரவீந்திரநாத், பொதுக்கல்வி குறித்து பேராசிரியர் வீ. அரசு என பல துறைசார் வல்லுனர்களின் கட்டுரைகள் இதே தலைப்பில் வெளியானது.
இயற்கை, காட்டுயிர் பாதுகாப்பு தொடர்பான சில கருத்துக்களை இந்தக் கட்டுரை மூலம் தெரிவிக்க வாய்ப்பு கிடைத்தது. இது ஒரு முழுப்பட்டியல் அல்ல.
பருவநிலை அவசரநிலை – முதலில் பருவநிலை மாற்றம் குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள், அதற்கான காரணங்கள் யாவற்றையும் பற்றி எல்லா அரசியல் கட்சிகளுக்கும் புரிதல் ஏற்பட வேண்டும். அதன் பிறகு வளர்ச்சி எனும் பெயரில் எடுக்கப்படும் எல்லா செயல் திட்டங்களிலும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகளையும், அவை எந்த வகையில் இயற்கைச் சீரழிவுக்கும், புவிவெப்பமயமாதலுக்கு காரணமாகிறது என்பதைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ப செயல்படவேண்டும். பருவநிலை அவசரநிலையை பிரகடனம் (Climate Emergency Declaration) செய்யவேண்டும். பொருளாதார வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல், இயற்கைக்கு இணக்கமான வளங்குன்றாத வளர்ச்சி முறைகளைப் பின்பற்ற வேண்டும். நிலையான, உறுதியான பொருளாதார வளர்ச்சிக்கு சீரழிக்கப்படாத சுற்றுச்சூழல் தான் முக்கிய முதலீடு என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
நில, நீர், காற்று மாசு – இயற்கை அன்னை இலவசமாக நம் அனைவருக்கும் தந்த பரிசு. நாம் வாழும் இந்த நிலம், பருகும் நீர், சுவாசிக்கும் காற்று. நிலத்தை பாழ் படுத்தும் எந்த வகையான செயல் திட்டங்களையும் ஊக்கப்படுத்தக் கூடாது. இயற்கை விவசாயத்திற்கு மானியங்களும், கடனுதவிகளும் தாராளமாகத் தந்துதவி ஊக்குவிக்க வேண்டும். திடப்பொருள் கழிவு மேலாண்மையை (குறிப்பாக மருத்துவ, பிளாஸ்டிக் கழிவு) சரிவரச் செய்ய வேண்டும். இரசாயன, தொழிற்சாலை, சாயக் கழிவுகளை ஆறு, குளங்கள், கடல் முதலான நீர்நிலைகளில் வெளியேற்றுவதை முற்றிலும் தடுக்க வேண்டும். காற்று மாசினை கட்டுப்படுத்தவும், குறைக்கவும் (குறிப்பாக நகரங்களிலும், தொழிற்சாலைகள் நிரம்பிய பகுதிகளிலும்) வழி வகை செய்ய வேண்டும். தூய்மையான நீரையும், காற்றையும் பொதுமக்கள் இலவசமாகப் பெற வழி செய்ய வேண்டும்.
நீர்வளங்கள் பாதுகாப்பும் மேலாண்மையும் – குளம், ஏரி, ஆறு, சதுப்பு நிலங்கள், கடல் பகுதி முதலான நீர்நிலைகளை மேன்மேலும் மாசுபடாமலும், ஆக்கிரமிக்கப்படாமலும், சீரழியாமலும் சரிவரப் பாதுகாக்க வேண்டும். குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க குழாய் மூலமாகவும், நதிகளை இணைப்பதன் மூலமாகவும் நிரத்தரத் தீர்வு காணமுடியாது என்பதையும், இது இயற்கையை மேன்மேலும் சீர்குலைக்கும் என்பதையும் அறிய வேண்டும். தூய்மை செய்கிறோம் எனும் பெயரில் ஆறுகளின், ஏரிகளின் கரைகளை சிமெண்டு (வைத்துப்) பூசி அவற்றை மூச்சடைக்க வைக்காமல் கழிவுகளை அகற்றி, மாசை நீரில் கலக்கும் தொழிற்சாலைகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவும் வேண்டும்.
இயற்கையான வாழிடங்களின் பாதுகாப்பு – இயற்கையான வாழிடங்கள் (காடு, வெட்டவெளிப் புல்வெளிகள், நீர் நிலைகள்) மேன்மேலும் ஆக்கிரமிக்கப்படாமலும், அயல் தாவரங்களால் பாதிப்படையாமலும் பாதுகாக்கப்பட வேண்டும். வெட்டவெளிகள் பாழ் நிலங்கள் (Waste lands) அல்ல அதுவும் ஒரு வகையான இயற்கையான வாழிடம் என்பதை அறிய வேண்டும். இந்த வாழிடங்களை பாதுகாப்பது எவ்வளவு முக்கியமோ, அதேபோல் அவ்வாழிடங்களில் சீரழிந்த பகுதிகளை அங்குள்ள தாவரங்களை மட்டும் வைத்து வளர்த்து அறிவியல் பூர்வமாக மீளமைத்தலும் (Ecological restoration) முக்கியம் என்பதை அறிய வேண்டும். அதற்காக திறந்த வெளி புதர் காடுகளிலும், வெட்டவெளிப் புல்வெளிகளிலும் யூக்கலிப்டஸ் முதலான அயல் தாவரங்களை நட்டு வைத்து வளர்ப்பது மீளமைத்தல் ஆகாது என்பதையும் அறிய வேண்டும். இது போல வளர்த்து வைத்த ஓரினத்தாவரங்கள், காடுகள் ஆகிவிடாது என்பதையும், இவற்றால் வனப்பரப்பு அதிகரித்து விட்டதாகச் சொல்வதையும் ஏற்க முடியாது.
வனத்துறை மேம்பாடு – வனத்துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். குறிப்பாக பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் (சரணாலயங்கள், புலிகள் காப்பகங்கள்) வேட்டைத் தடுப்புக் காவலர்களின் (Anti-poaching watchers) எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட பகுதிகள் அல்லாத வனத்துறையின் கீழ் உள்ள இடங்களிலும் இது போன்ற வேட்டைத் தடுப்புக் காவலர்களை பணியில் அமர்த்தி அவர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியத்தை அளிப்பதோடு, ஆயுள், விபத்து காப்பீடுகளையும் அளிக்க வேண்டும். வனத்துறை அதிகாரிகளுக்குத் தேவையான உபகரணங்களையும் (காமிரா, ஜி.பி.எஸ்), நவீன ஆயுதங்களையும் வழங்க வேண்டும். வனப் பாதுகாப்பு, காட்டுயிர் பாதுகாப்புச் சட்டங்களை தளர்த்தவோ, நீர்த்துப்போகவோ செய்யாமல் கடுமையாக்கவும், தேவையான இடங்களில் விரிவாக்கவும் வேண்டும். திருட்டு வேட்டையை தடுக்கவும், கண்காணிக்கவும் ஒவ்வொரு சரகத்திற்கும் பறக்கும் படையை அமைக்கவேண்டும். காட்டுயிர் ஆராய்ச்சியாளர்களையும் (Wildlife Biologist) காட்டுயிர் மருத்துவர்களையும் (Wildlife Veterinarians) எல்லா பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலும் நிரந்தரப் பணியில் அமர்த்தி அவர்களின் ஊதியத்தையும் சீரமைக்க வேண்டும்.
மனித-காட்டுயிர் எதிர்கொள்ளல் – மாறிவரும் பொருளாதாரச் சூழலை சமாளிக்க, இயற்கை வளங்களைக் குன்ற வைக்கும் பல வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும் காரணங்களால் (யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமிக்கும் கட்டமைப்புகள், விவசாயப் பெருக்கத்திற்காக வனப்பகுதிகளின் ஓரங்களை ஆக்கிரமித்தல், இயற்கையான வாழிடங்களின் ஊடே செல்லும் சாலை, இரயில் தடம், மின் கம்பிகள் முதலான நீள் கட்டமைப்புத் திட்டங்கள்) மனித-காட்டுயிர் எதிர்கொள்ளல் மேன்மேலும் அதிகரிக்கின்றது. இதனால் மனித உயிர் இழப்பும், காட்டுயிர் உயிர் இழப்பும், வாழிட இழப்பும் ஏற்படுகிறது. மனித-காட்டுயிர் எதிர்கொள்ளலை சமாளிக்க வனத்துறையுடன், வருவாய்த் துறை, காவல் துறை போன்ற துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்பட வைக்க வேண்டும். பாதுகாக்கப்பட்டப் பகுதிகளுக்கு (Protected areas) வெளியேயும் தென்படும் காட்டுயிர்களால் (குறிப்பாக மயில்) சேதம் அதிக அளவில் இருப்பின் அதை உறுதி செய்த பிறகு, அங்கும் அரசு இழப்பீடு அளிக்கும் திட்டத்தை ஏற்படுத்துதல் அவசியம். விவசாயிகளுக்கும் பயிர்களை காப்பீடு செய்யும் திட்டங்களை தொடங்குவதும் அவசியம். காட்டுயிர்களின் உயிருக்கு ஆபத்தில்லாத பயிர்களைப் பாதுகாக்கும் முறைகளை கண்டறிந்து அந்த முயற்சிகளை அதிகப்படுத்த வேண்டும்.
விலங்குவழி நோய்த்தொற்றுப் பரவல் கண்காணிப்பும் மேலாண்மையும் – எதிர்காலத்தில் விலங்குவழி பெருந்தொற்றின் தீமைகளைக் குறைக்க ஒரே நலவாழ்வு கோட்பாட்டை (One Health Concept) முதன்மைப்படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும். அதாவது, நல்வாழ்வு என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, அவர்களைச் சுற்றியிருக்கும் நிலவமைப்பு, சுற்றுச்சூழல், அதிலுள்ள காட்டுயிர்கள் ஆகிய எல்லாவற்றின் நலனையும் கருத்தில் கொண்டது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். விலங்குவழித் தொற்றுக்குக் காரணமான காட்டுயிர் கள்ளச் சந்தை, காட்டுயிர் வேட்டை போன்றவற்றை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். விலங்குவழி நோய்த்தொற்று பரவல், மேலாண்மை குறித்த ஆராய்ச்சிக் கூடங்களை உருவாக்க வேண்டும்.
இயற்கைக் கல்வி – இயற்கை பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறிந்த கருத்தாக்கங்கள் கொண்ட பாடத்திட்டத்தினை பள்ளிகள், கல்லூரிகள் என எல்லா தளத்திலும் ஏற்படுத்த வேண்டும். பொதுமக்களுக்கும் இந்த கருத்தாக்கங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக மனித காட்டுயிர் எதிர்கொள்ளல் அதிகமாக உள்ள பகுதியில் உள்ளவர்களுக்கு காட்டுயிர்களின் பால் இயல்பாகவே இருக்கும் நல்உணர்வுகளையும், உணர்வுபூர்மவான ஈர்ப்பையும், பிடிப்பையும் போற்றியும், அவை குன்றாமல் இருக்கவும் ஆவன செய்ய வேண்டும். விலங்குவழித் தொற்றுக்குக்கான காரணங்களையும், அவை பரவாவண்ணம், தனிமனிதராக செய்ய வேண்டிவற்றையும், பொது சுகாதாரத்தை வலியுறுத்தியும், இயற்கை சீரழிவுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ துணைபோகாமல் இருப்பதையும் பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டும்.
அழிவின் விளிம்பில் இருக்கும் வாழிடங்கள், காட்டுயிர்கள் பாதுகாப்பு – யானை, புலி முதலான பேருயிர்கள் மட்டுமல்லாது, அதிகம் அறியப்படாத உயிரினங்களின் (உதாரணமாக அலங்கு, வௌவால் வகைகள் போன்றவை) பாதுகாப்பையும் மேம்படுத்த வேண்டும். பாறு கழுகுகள் போன்ற அழிவில் விளிம்பில் இருக்கும் பறவைகளைப் பாதுகாக்க நெடுங்காலத் திட்டங்களை தொடங்க வேண்டும். வனத்துறையால் பாதுகாக்கப்படாத பகுதிகளில் உள்ள புதர்காடுகள், வெட்டவெளிப் புல்வெளிகள், கடலோரப் பகுதிகள் முதலான வெகுவாக அழிக்கப்பட்டுவரும் வாழிடங்களையும், அங்குள்ள உயிரினங்களையும் பாதுகாக்க வழிவகை செய்ய வேண்டும்.
நகரச் சூழல் மேம்பாடு – நகர்ப்புறங்களில் உள்ள உயிர்ப் பன்மையம் குறித்த விழிப்புணர்வையும், அவற்றின் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும். நகர்ப்புறங்களிலும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் உள்ள (பூங்கா, ஏரி, குளம் முதலான) இயற்கையான பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்யாமல், சாலை விரிவாக்கப் பணிகளுக்காக சாலையோர மரங்களை வெட்டாமல், மேன்மேலும் இயல் வகை தாவரங்களையும், மரங்களையும் நட்டு வளர்க்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மையில் பொதுமக்களின் பங்கை வலியுறுத்தி அவர்களையும் அதில் ஈடுபட வைக்க வேண்டும். கார்பனை அதிகமாக வெளியிடும் செயல்பாடுகளை வெகுவாகக் குறைக்க பொதுப் போக்குவரத்து வசதிகளை பெருக்க வேண்டும்.
——
உலக அளவில் தேர்தல் அறிக்கைகளில் பொதுவாக இயற்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த திட்டங்கள் மிகக் குறைவாகவே உள்ளது. இதனால் துறைசார் வல்லுனர்கள், ஆர்வலர்கள் அரசியல் கட்சிகள் இதற்காக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பல கட்டுரைகளையும், அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளனர். அவற்றில் சில கட்டுரைகளை இங்கே காணலாம்.
- சுற்றுச்சூழல் குறித்த விரிவான தேர்தல் அறிக்கையை “பூவுலகின் நண்பர்கள்” குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. காண்க செய்தி.
- Neha Sinha (2019). How Environment-friendly are election manifestos? Economic and Political Weekly. Vol. 54, Issue No. 20, 18 May, 2019.
- Guha, Asi & Joe, Elphin. (2019). ‘Environment’ in the election manifestos. Economic and Political Weekly. 54. 13-16.
- Mayank Aggarwal (2019). Environment gets voted into party manifestos. Mongabay India. 12th April 2019)
——
கருவயிற்று ஆலாவின் வாழ்க்கை
ஓய்வின்றி சதா சுற்றித் திரிந்து கொண்டு இருப்பவர்களையும், பறக்காவட்டிகளையும் குறிக்கும் விதமாக கிராமங்களில் அவர்களை ‘ஏண்டா இப்படி ஆலாப் பறக்குற?’ என்பார்கள். ஆலாக்கள் பொதுவாக அதிகம் உட்காராமல் நீர்நிலைகளின் மேல் பறந்து கொண்டே இருக்கும். ஒரு வேளை இந்தப் பறவையைப் பார்த்துத்தான் அந்த சொலவடை வந்திருக்குமோ என்னவோ.
ஆலாக்கள் மிகவும் அழகான பறவைகள். கடலோரங்களில் பல வகையான ஆலாக்களைக் காணலாம் இவை அனைத்தும் வலசை வருபவை. உள்நாட்டு நன்நீர்நிலைகளில் குறிப்பாக ஆறுகளிலும், பெரிய ஏரி, நீர்த்தேக்கங்கள் போன்ற இடங்களில் பொதுவாக ஆற்று ஆலாவையும் (River Tern), வலசை வரும் மீசை ஆலாவையும் – Whiskered tern – (ஜுன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் நீங்கலாக) காணலாம். மூன்றாவதான கருவயிற்று ஆலா (Black-bellied tern) சற்றே சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இவை பெரும்பாலும் ஆறுகளில் மட்டுமே தென்படுகின்றன.
கருவயிற்று ஆலாக்கள் இந்தியத் துணைக்கண்டத்திலும் (இலங்கையைத் தவிர), தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பரவியுள்ளன. எனினும் இந்தியாவைத் தவிர ஏனைய நாடுகளில் அவற்றின் நிலை மிகவும் மோசமாகவே உள்ளது. வியட்நாமிலும், கம்போடியாவிலும் இவை முற்றிலுமாக அழிந்துவிட்டதாகவே கருதப்படுகிறது. மியன்மாரிலும், தாய்லாந்திலும் அண்மைக் காலங்களில் பார்த்ததாக ஏதும் தகவல்கள் இல்லை. இந்தியாவில் கூட ஒரு சில பகுதிகளில் உள்ள பெரிய ஆறுகளில் மட்டுமே ஆங்காங்கே இவை தென்படுகின்றன. வட இந்தியாவில் ஒரு சில நதிகளின் சில பகுதிகளில் இவற்றை ஓரளவிற்கு அடிக்கடி பார்க்க முடியும். இந்தியாவில் ஆற்றுப் பகுதி காட்டுயிர்களுக்கென பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டது உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ‘தேசிய சம்பல் காட்டுயிர் சரணாலயம்’ மட்டுமே. அதுபோலவே காவிரி ஆறு கர்நாடகாவில் உள்ள காவிரி காட்டுயிர் சரணாலயம், அதன் தொடர்ச்சியான தமிழகத்தில் உள்ள காவேரி வடக்கு காட்டுயிர் சரணாலயம் வழியே பாய்வதால் அங்குள்ள இடங்களும் ஓரளவிற்கு பாதுகாக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு பகுதியிலும் இவ்வகை ஆலாக்களின் வாழிடம் ஓரளவிற்கு பாதுகாப்பாக இருக்கிறது. எனினும் இவற்றின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருவதால் பன்னாட்டு இயற்கை வள பாதுகாப்பு நிறுவனம் (International Union for Conservation of Nature – IUCN) இவற்றை சிவப்புப் பட்டியலில் (Red list) சேர்த்து, அதிக அபாயத்தில் (Endangered) உள்ள பறவை இனங்களின் பிரிவில் வைத்துள்ளது.
இவை ஆற்றின் இடையே உள்ள சிறு மணல் திட்டுகளிலும், ஆற்றுத் தீவுகளிலும் தரையில் கூடமைக்கின்றன. ஆற்றுப் படுகையில் விவசாயம் செய்தல், ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டுவதால் இவற்றின் வாழிடம் சிதைதல், அழிதல், இவை முட்டை வைக்கும் காலங்களில் தடுப்பனைகளில் இருந்து திடீரென தண்ணீரைத் திறந்து விடுவதால் எல்லாக் கூடுகளும் நீருக்குள் மூழ்கிப் போதல், ஆற்று மணல் சூறையாடல், ஆலைக் கழிவுகளும், பூச்சிகொல்லிகளும் ஆற்றில் கலந்து நீரை மாசடையச் செய்தல், இவற்றின் முட்டைகளை தெரு நாய்கள், பூனைகள், மனிதர்கள் தின்பதற்காக எடுத்துச் செல்லுதல் முதலிய பல காரணங்களால் எண்ணிக்கையில் வெகுவாகக் குறைந்தும், பல இடங்களில் இவை அற்றும் போய்விட்டன.
தமிழகத்தில் இந்தப் பறவையின் பரவல், பாதுகாப்பு நிலை குறித்த தரவுகளும், புரிதலும் மிகக் குறைவு. இச்சூழலில் அண்மையில் கொள்ளிடம் ஆற்றில், தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள வாழ்க்கை, திருமானூர், அணைக்கரை பகுதிகளில், இப்பறவை பதிவு செய்யப்பட்டது. ஒரு நாள் மாலை இப்பறவையைக் பார்க்க அங்கு சென்றேன். அகண்ட ஆற்றில், நூலிழை போல நீர் ஓடிக்கொண்டிருந்தது. சென்ற சிறிது நேரத்திலேயே கரு வாயிற்று ஆலாவைக் கண்டுவிட்டேன். அங்கு இருந்த ஒரு மணி நேரத்தில் 4 ஆலாக்களை தனித்தனியே கண்டேன். சிறிய ஓடையைப் போல ஓடிக்கொண்டும், அங்காங்கே தேங்கியும் கிடந்த நீரின் மேல் தாழப் பறந்துச் சென்றன அவை. மாலை ஆகஆக நூற்றுக்கணக்கான சின்ன தோல்குருவிகள் (Small Pratincole) பறந்து சென்றன. இவையும் ஆலாக்கள் போல மணலில் இலேசாக குழிதோண்டி அதில் ஓரிரு முட்டைகள் இடும். அந்தி சாயும் நேரம் வரை இருந்து சிவந்த வானத்தின் பின்னணியில் ஆலாக்களும், தோல்குருவிகளும் பறந்து சென்ற அழகான காட்சியைக் கண்டுவிட்டு அங்கிருந்து கிளம்பினேன். திரும்பி வரும்போது சில பகுதிகளில் ஆற்றின் நடுவே சிவப்புக் கொடிகள் நட்டுவைக்கப்பட்டிருப்பதைக் பார்த்தவுடன் ஆலாவைக் கண்ட மகிழ்ச்சியெல்லாம் போய் விட்டது. மணல் எடுக்கப் போவதற்கான அறிகுறி அது.
இதற்கு முன் திருமானூர் பகுதியில் மணல் எடுக்க கனரக வாகனங்களை எடுத்து வந்தபோது அருகில் உள்ள ஊர் மக்களே திரண்டு அதைத் தடுத்திருக்கிறார்கள். ஆற்றில் தண்ணீரும் சரியாக வருவதில்லை, ஆகவே ஆழ்குழாய் அமைத்து அந்த நீரையே பாசனத்திற்கு விடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருகிரார்கள் இப்பகுதி விவசாயிகள். ஒரு காலத்தில் 20-30 அடியில் கிடைத்த நீர், மணல் தோண்டுவதால் இப்போது 100 அடிக்கும் மேல் தோண்டிய பின்னர்தான் கிடைக்கிறது என்கிறார்கள் இப்பகுதி மக்கள். இதனாலேயே இங்கு மணல் தோண்டுவதை எதிர்க்கிறார்கள். அது மட்டுமல்ல, அருகில் உள்ள தஞ்சை, கும்பகோணம், திருச்சி போன்ற நகரங்களுக்கான குடிநீர் இந்த ஆற்றுக்குள் போடப்பட்டுள்ள ஆழ்குழாய்களில் இருந்துதான் எடுத்துச் செல்லப்படுகிறது.
ஆறு என்பது ஒரு இயற்கையான வாழிடம். ஒரு நுகர்வோரின் பார்வையிலேயே நாம் அதை அணுகுவதால் ஆற்றுக்கு நாம் இழைக்கும் அநீதிகள் நம் கண்களை மறைத்துவிடுகிறது. ஆற்று நீர், ஆற்றங்கரை, ஆற்றோரக்காடுகள், நாணல் புதர்கள், மணல் படுகை, மணல் திட்டுக்கள், பாறைகள், யாவும் ஆற்றின் அங்கம். அவை அனைத்தும் ஆற்றில் உயிர்வாழும் பல வகையான பூச்சிகள், மீன்கள், தவளைகள், முதலைகள், ஆமைகள், பறவைகள், நீர்நாய்கள் யாவற்றிற்கும் வாழிடமாகிறது. இந்த ஒட்டுமொத்த சூழலையும் பாதுகாக்க வேண்டியது நம் கடமை.

கரூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் மணல் அள்ளப்பட்டத்தை செவ்வக வடிவில்
இருக்கும் வடிவங்கள் மூலம் பார்க்கலாம். நிலவரைபடம்: கூகுள் (Image Courtesy: Google Earth)

கரூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் மணல் அள்ளப்பட்டத்தை செவ்வக வடிவில்
இருக்கும் வடிவங்கள் மூலம் பார்க்கலாம். நிலவரைபடம்: கூகுள் (Image Courtesy: Google Earth)
கரூர், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களின் வழியே ஓடும் காவிரி ஆற்றின் நில வரைபடத்தை GoogleEarth அல்லது Google Mapல் பார்த்தால் காவிரி ஆறு, மணலுக்காக எந்த அளவிற்கு சூரையாடப்பட்டிருகிறது என்பதைக் கண்கூடாகக் காணலாம். அழியும் அபாயத்தில் உள்ள கருவயிற்று ஆலாவின் வாழ்விற்கு மென்மேலும் துன்பங்கள் வந்தால் அந்தத் துன்பங்களை நாமும் விரைவில் அனுபவிக்க வேண்டி வரும். ஆற்று மணலுக்கு ஆசைப்பட்டு சிவப்புக் கொடியை நடுவதற்கு முன் இதையெல்லாம் நாம் யோசிக்க வேண்டும்.
கருவயிற்று ஆலாவின் வாழ்க்கை: சூறையாடப்படும் காவிரியின் பேசப்படாத வலி – இயற்கை அழிவும் பறவைகளும் https://tamil.thehindu.com/general/environment/article25971239.ece
எனும் தலைப்பில் தி இந்து உயிர்மூச்சு இணைப்பில் 12 ஜனவரி ஆண்டு வெளியான கட்டுரையின் முழு வடிவம்.
தமிழகத்திலுள்ள பாதுகாக்கப்பட்ட வாழிடங்கள்
தமிழகத்திலுள்ள பாதுகாக்கப்பட்ட வாழிடங்கள் (Protected areas of Tamil Nadu)
தமிழகத்தின் இயற்கைச் செல்வத்தின் முக்கியப் பரிமாணம் இங்குள்ள பல வகையான சூழல் தொகுப்புகள் தான். இதனாலேயே தமிழகம் பல வகையான வாழிடங்களையும், கானுயிர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
பண்டைய தமிழர் தமிழகத்தின் சூழல் தொகுப்பினை முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் மற்றும் பாலை என ஐந்து வகையாக பிரித்திருந்தனர். காடும் காடு சார்ந்த நிலப்பகுதி முல்லை எனவும், மலையும் மலையைச் சார்ந்த பகுதி குறிஞ்சி எனவும், வயலும் வயலைச் சார்ந்த பகுதி மருதம் எனவும், கடலும் கடலைச் சார்ந்த பகுதி நெய்தல் எனவும், முல்லையும், குறிஞ்சியும் பல காரணிகளால் சிதைவடைந்து அதன் இயல்பிழந்திருப்பின் அதனை பாலை எனவும் பிரித்திருந்தனர்.
புவியமைப்பினை பொறுத்து தமிழகத்தில் நான்கு வகை இயற்கையான சூழல் தொகுப்புகள் இருப்பதை அறியலாம். அவை முறையே:
1. மலைகள் (Mountanins)
2. மேட்டுநிலங்களும் சமவெளிகளும் (Plateau and plains)
3. நன்னீர்நிலைகள் (Freshwater region)
4. கடற்பகுதி (Coastal region)

தமிழ் நாட்டில் உள்ள சில இயற்கையான வாழிடங்கள்: மலைகள், நன்நீர்நிலைகள், கடற்பகுதிகள், மேட்டுநிலங்கள், சமவெளிகள் (Photos: Wikimedia Commons)
இது தவிர செயற்கையான அதாவது மனிதர்களால் உருவாக்கப்பட்ட வேளாண்நிலப்பகுதிகள் (Agricultural region) மற்றும் மனிதர்கள் வாழும் ஊர்ப்புறங்களும் நகர்ப்புறங்களும் (Human habitations) ஒரு வகையான சூழல் தொகுப்பே. ஒவ்வொரு சூழல் தொகுப்பிலும் பல வகையான வாழிடங்களைக் காணமுடியும்.
இந்த சூழல் தொகுதிகளில் இருக்கும் பல வகையான வாழிடங்களும், அதில் வாழும் உயிரினங்களும் காட்டுயிர்ச் சரணாலயம், தேசியப் பூங்கா, புலிகள் காப்பகம், உயிர்மண்டலக் காப்பகம், பல்லுயிர்ப் பாதுகாப்பகம் என பல வகைகளில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
காட்டுயிர்ச் சரணாலயங்கள் (Wildlife Sanctuaries)
சரணாலயங்கள் அமைக்கப்படுவது பொதுவாக ஒரு சில வகை உயிரினங்களுக்காகவே. உதாரணமாக களக்காடு காட்டுயிர்ச் சரணலயம் சோலைமந்திகளுக்காவே (சிங்கவால் குரங்கு) ஏற்படுத்தப் பட்டது. அதாவது ஒரிடத்தில் உள்ள அரிய அல்லது அபாயத்திற்குள்ளான உயிரினத்தை பாதுகாக்கும் பொருட்டு அது வாழும் இயற்கையான சூழல் சரணாலயமாக அங்கீகரிக்கப்படுகிறது. அந்த உயிரினம் ஒரு விலங்காக மட்டுமல்லாமல் தாவரமாகவோ அல்லது தாவரச் சமுதாயமாகக் (Plant community) கூட இருக்கலாம். இதனால் அந்த குறிப்பிட்ட உயிரினம் மட்டுமல்லாமல் அதன் வாழிடமும் சேர்ந்து பாதுகாக்கப்படுகிறது. தமிழகத்தில் இது வரை 11 இடங்கள் காட்டுயிர்ச் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
1. முதுமலை காட்டுயிர்ச் சரணாலயம்
2. கோடியக்கரை காட்டுயிர்ச் சரணாலயம்
3. களக்காடு காட்டுயிர்ச் சரணாலயம்
4. இந்திரா காந்தி காட்டுயிர்ச் சரணாலயம்
5. முண்டந்துறை காட்டுயிர்ச் சரணாலயம்
6. வல்லநாடு வெளிமான் சரணாலயம்
7. சிறீவில்லிப்புத்தூர் நரை அணில் சரணாலயம்
8. கன்னியாகுமரி காட்டுயிர்ச் சரணாலயம்
9. கொடைகானல் காட்டுயிர்ச் சரணாலயம்
10. கங்கைகொண்டான் புள்ளிமான் சரணாலயம்
11. காவேரி வடக்கு காட்டுயிர்ச் சரணாலயம்
தேசியப் பூங்காக்கள் (National Parks)

கிண்டி தேசியப் பூங்காவில் வெளிமான். Photo: A J T Johnsingh/wikicommons
இயற்கைச் சூழலில் வாழும் ஒரு குறிப்பிட்ட உயிரினத்தை மட்டும் முன்னிருத்தி சரணாலயங்கள் என பாதுகாக்காமல் அவற்றின் உயிர்ச் சூழலை பாதுகாக்கும் நோக்கத்தோடு ஏற்படுத்தப்படுபவை தேசியப் பூங்காக்கள். தமிழகத்தில் இது வரை 5 இடங்கள் தேசியப் பூங்காக்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. கொடைக்கானல் காட்டுயிர் சரணாலத்தினை ஒட்டிய சில பகுதிகளையும் சேர்த்து பழனி தேசியப் பூங்காவாக மேம்படுத்தும் திட்டம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
1. கிண்டி தேசியப் பூங்கா
2. மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரிகள் தேசியப் பூங்கா
3. இந்திராகாந்தி காட்டுயிர் சரணாலயம் & தேசியப் பூங்கா
4. முதுமலை காட்டுயிர் சரணாலயம் & தேசியப் பூங்கா
5. முக்குறுத்தி தேசியப் பூங்கா
புலிகள் காப்பகங்கள் (Tiger Reserves)

மேல் கோதையாறு, களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம். Photo: A J T Johnsingh/Wikimedia commons
அருகிவரும் வேங்கைப் புலிகளின் பாதுகாப்பிற்காக 1973ல் ஆரம்பிக்கப்பட்ட புலிகள் திட்டத்தின் (Project Tiger – http://projecttiger.nic.in/) கீழ் தமிழகத்தில் நான்கு புலிகள் காப்பகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. புலிகளை கள்ள வேட்டையாடுவதைத் தடுக்கவும், அவற்றின் வாழிடங்களைப் பாதுகாப்பதுவுமே இத்திட்டத்தின் தலையாய நோக்கம்.
1. களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம்
2. ஆனைமலை புலிகள் காப்பகம்
3. முதுமலை புலிகள் காப்பகம்
4. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்
யானைகள் காப்பகங்கள் (Elephant Reserves)
இந்திய வனங்களில் பரவியுள்ள யானைகளின் பாதுகாப்பிற்காக யானைகள் திட்டம் (Project Elephant) இந்திய அரசால் 1992ல் தொடங்கப்பட்டது. யானைகளின் வாழிடங்களையும், அவற்றின் வழித்தடங்களையும் பாதுகாத்தல், மனிதர்-யானை எதிர்கொள்ளலை மட்டுப்படுத்துதல், சமாளித்தல், கோயில்களிலும், வனத்துறையிலும் வளர்க்கப்படும் யானைகளின் நலன் காத்தல் ஆகியவையே இந்த திட்டத்தின் குறிக்கோள்கள் ஆகும்.
இதன் விளைவாக யானைகள் பரவியிருக்கும் பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகள் யானைகளுக்கான காப்பகங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவில் இதுவரை 32 யானைக் காப்பகங்கள் நிறுவப்பட்டுள்ளன. யானைகள் பல இடங்களுக்கு வெகுதுரம் சுற்றித்திரிவதாலும், வலசை போவதால் இவற்றின் காப்பகங்களும் அவை அடிக்கடி செல்லக்கூடிய பரந்த பலவகையான வாழிடங்களை உள்ளடக்கிய நிலவமைப்பில் அமைந்துள்ளது. சில காப்பகங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் பரந்து அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் 4 யானைக் காப்பகங்கள் உள்ளன.
1. நீலகிரி யானைக் காப்பகம் (நீலகிரி- கிழக்குத் தொடர்ச்சிமலை பகுதிகள் சேர்ந்தது)
2. நிலாம்பூர் யானைக் காப்பகம் (நிலாம்பூர்-அமைதிப்பள்ளத்தாக்கு-கோயம்பத்தூர் பகுதிகள் சேர்ந்தது)
3. ஸ்ரீவில்லிப்புத்தூர் யானைக் காப்பகம் (கேரளாவில் உள்ள பெரியார் யானைக் காப்பகத்துடன் சேர்ந்தது)
4. ஆனைமலை யானைக் காப்பகம் (ஆனைமலை – பரம்பிக்குளம் பகுதிகள் சேர்ந்தது)
உயிர்மண்டலக் காப்பகம் (Biosphere Reserves)

அகஸ்தியமலை உயிர்மண்டலக் காப்பகம். Photo: Seshadri. K.S / Wikimedia Commons
யுனெஸ்கோவின் (UNESCO) மனிதனும் உயிர்மண்டலமும் (Man and Biosphere-MAB) திட்டம் 1971ல் ஆரம்பிக்கப்பட்டு உலகம் முழுவதும் பல உயிர்மண்டலக் காப்பகங்கள் நிறுவப்பட்டன. பல்லுயிரியத்திற்கு பெயர்போன பகுதிகளின் இயற்கை எழில் மற்றும் வளம் குறையாமல் போற்றிப் பேனுதல், அவற்றின் சூழல் சீரழியாமலும், வளங்குன்றாமலும் பாதுகாத்தல், காடுசார் பொருட்களை முறையாகப் பயன்படுத்துவதிலும், பல்லுயிர் பாதுகாப்பிற்கும் உள்ளூர் சமூகத்தினரின் பங்களிப்பை ஊக்குவித்தல், இங்கு வாழும் பழங்குடியினரின் கலாசாரத்தை குலைக்காமல் அவர்களின் பாரம்பரியத்தைக் கட்டிக்காத்து அதனை ஒட்டிய முன்னேற்றம் காண்பது, காடுவிளை பொருட்கள் நீடித்து நிலைக்க அவற்றின் பயன்பாட்டை முறையான மேலாண்மையினால் ஒழுங்குபடுத்துதல், பல்லுயிர் பாதுகாப்பின் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வை இப்பகுதியில் வாழ்வோருக்கு ஏற்படுத்துதல், வாழிட மேம்பாட்டிற்கு உதவும் வகையில் அறிவியல் ஆராய்ச்சியையும், பாரம்பரிய அறிவையும் ஒருங்கினைத்தல் முதலியவையே இந்த மனிதனும் உயிர்கோளமும் திட்டத்தின் முக்கிய குறிக்கோள்களாகும்.
இந்தியாவில் 3 உயிர்மண்டலக் காப்பகங்கள் உள்ளன. அவற்றில் மூன்று தமிழகப் பகுதிகளில் உள்ளன. உயிர்மண்டலக் காப்பகங்களுக்கு மாநில வரம்புகள் கிடையாது.
1. நீலகிரி உயிர்மண்டலக் காப்பகம்
2. மன்னார் வளைகுடா உயிர்மண்டலக் காப்பகம்
3. அகஸ்தியமலை உயிர்மண்டலக் காப்பகம்
பறவைகள் சரணாலயங்கள் (Bird Sanctuaries)
பறவைகளுக்கு நாம் வகிக்கும் அரசியல் எல்லைகள் கிடையாது. ஆகவே அவை ஓரிடத்தில் மட்டும் வாழாமல் பல விதமான இடங்களில் பறந்து வாழும் இயல்புடையவை. குறிப்பாக நீர்ப்பறவைகளில் பல ஓரிடத்தில் கூட்டமாகக் கூடுகட்டி இனவிருத்தி செய்யும் இயல்புடையவை. உலகின் வடக்கு பகுதியிலிருந்து அங்கு கடும் குளிர் நிலவும் காலங்களில் தமது இனப்பெருக்கத்தை முடித்துக் கொண்டு தெற்கு நோக்கி இரைதேட வரும் வலசைப் பறவைகளுக்கு உள்நாட்டு நீர்நிலைகள் முக்கியமான வாழிடம். உள்நாட்டுப் பறவைகள் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்ய ஏதுவான வாழிடங்கள் உள்ள பகுதிகளையும், வலசை வரும் பறவைகளுக்காகவும் தமிழகத்தில் 13 பறவைகள் சரணாலயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளான.
1. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்
2. வேட்டங்குடி பறவைகள் சரணாலயம்
3. பழவேற்காடு ஏரி பறவைகள் சரணாலயம்
4. கரிக்கிளி பறவைகள் சரணாலயம்
5. சித்ரங்குடி பறவைகள் சரணாலயம்
6. கஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயம்
7. கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்
8. வடுவூர் பறவைகள் சரணாலயம்
9. வெள்ளோடு பறவைகள் சரணாலயம்
10. மேல்செல்வனூர்-கீழ்செல்வனூர் பறவைகள் சரணாலயம்
11. உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம்
12. கரைவெட்டி பறவைகள் சரணாலயம்
13. ஊசுடு ஏரி பறவைகள் சரணாலயம்
பல்லுயிர்ப் பாதுகாப்பகம் (Conservation Reserve)
பல்லுயிர்ப் பாதுகாப்பு என்பது அரசு துறைகளின் வேலை மட்டுமல்ல. அருகி வரும் வாழிடங்கள், கள்ளவேட்டை, சுற்றுச்சூழல் மாசு முதலிய பல காரணங்களால் ஆபத்துக்கு உள்ளாகியிருக்கும் பல உயிரினங்களையும் அவற்றின் வாழிடங்களையும் பாதுகாப்பது இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனின் கடமையாகும். இதை உணர்ந்த பல சமூகங்கள் எந்த ஒரு அறிவியல் ஆராய்ச்சியோ, அரசு துறைகளின் ஊக்குவிப்போ இல்லாமல் தாமாகவே பல்லுயிர் பாதுகாப்பிற்கு பங்களித்து வருகின்றன. அரசால் பாதுகாக்கப்பட்ட சரணாலயங்கள், தேசியப் பூங்காக்களில் மட்டுமே உயிரினங்கள் வாழ்வதில்லை. மனிதர்கள் வசிக்கும் பகுதிகளிலும் பல உயிரினங்களைக் காண முடியும். சரணாலங்களின் விதிமுறைகளுக்கும், சட்ட திட்டங்களுக்கு உட்படாத இது போன்ற இடங்களில் பொது மக்களால் வாழிடங்களோ, உயிரிங்களோ பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இது போன்ற வாழிடங்களை, பல்லுயிர்ப் பாதுகாப்பகமாக அறிவிக்க ஏதுவாக இந்திய காட்டுயிர் பாதுகாப்பு சட்டத்தில் (1972) 2003ல் சீர் செய்யப்பட்டது. தமிழ் நாட்டில் இரண்டு பல்லுயிர் பாதுகாப்பகங்கள் உள்ளன.
1. திருபுடைமருதூர் பல்லுயிர்ப் பாதுகாப்பகம்
2. சுசீந்திரம் – தேரூர் – மணக்குடி பல்லுயிர்ப் பாதுகாப்பகம்
பாதுகாக்கப்படாத வாழிடங்கள்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் மேயும் காட்டெருதுகள் (Gaur). Photo: By PJeganathan (Own work) [CC BY-SA 4.0 (https://creativecommons.org/licenses/by-sa/4.0)%5D, via Wikimedia Commons
இயற்கைச் செல்வம் என்பது தேசியப்பூங்காக்கள், சரணாலயங்கள் போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே தென்படுவது இல்லை. அரசால் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமல்லாமல் அவற்றின் குணத்தைப் பொறுத்து அவை பல இடங்களில் அல்லது எல்லா இடங்களிலும் பரவியுள்ளன. பொதுவாகத் தென்படும் உயிரினம் முதல் அரிய, அழிவின் விளிம்பில் இருக்கும் பல உயிரினங்கள் தமிழகத்தின் பாதுகாக்கப்படாத இடங்களிலும் தென்படுகின்றன. காரணம் அந்த உயிரினங்கள் வாழ ஏதுவான வாழிடங்கள் அரசியல் சட்டங்களால் பாதுகாக்கப்படாத இடங்களிலும் உள்ளன. உதாரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள தேயிலைத் தோட்டத்திலும் யானைகளும், சிறுத்தைகளும் திரிவதுண்டு. தேயிலை காபி முதலிய ஓரினப்பயிர்கள் பரந்து விரிந்திருக்கும் பகுதிகளில் மழைக்காட்டுத் துண்டுச் சோலைகள் தீவுகள் போல ஆங்காங்கே திட்டுத் திட்டாக அமைந்துள்ளன. இந்தச் துண்டுச் சோலையில் நீலகிரி கருமந்தி, சோலைமந்தி முதலிய அரிய ஓரிட வாழ்விகள் வாழ்கின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையில் இது போல் தனியாருக்குச் சொந்தமான பல இடங்கள் உள்ளன. நீலகிரி, வால்பாறை, பழனிமலை, மேகமலை முதலிய பகுதிகளில் உள்ள தனியாருக்குச் சொந்தமான பல ஓரினப்பயிர் நிலங்கள் மற்றும் அங்குள்ள காடுகளை உதாரணமாகச் சொல்லலாம்.
சமவெளிகள் மிகவும் ஆபத்துக்குள்ளான வாழிடமாகும். பெரும்பாலான அரசுப் பதிவுகளில் இது போன்ற இடங்கள் தரிசு அல்லது பயணில்லாத நிலமாக (waste land) குறிக்கப்படுகின்றது. மக்கள் தொகை பெருக்கம், நகரமயமாக்கள், வேளாண்மை விரிவாக்கம் முதலிய காரணங்களுக்காக சமவெளிகளில் உள்ள வாழிடங்கள் வெகுவாக அழிக்கவும், மாற்றத்திற்கும் உள்ளாகின்றன. கடற்கரையோரப் பகுதிகளுக்கும் இதே நிலைதான்.
பாதுகாக்கப்பட்ட நன்னீர்நிலைகளைத் தவிர எண்ணிலடங்கா குளங்களும், ஏரிகளும், கண்மாய்களும் சிறியதும் பெரியதுமாக தமிழகம் முழுதும் பரவியுள்ளது. எனினும் இவற்றில் பல சரியாகத் தூர்வாரத காரணத்தாலும், நகரமயமாக்கத்தாலும் தற்போது இருக்கும் இடம் தெரியாமல் போய் விட்டன. மணற்கொள்ளை ஆற்றுச்சூழலை பெரிதும் பாழ்படுத்தி அங்கு வாழும் உயிரினங்களையும் அந்த நிலவமைப்பையே மாற்றியும் வருகிறது. தொழிற்சாலை கழிவுகளினாலும், வேறு பல காரணிகளாலும் பல நீர்நிலைகள் மாசடைந்து போய்விட்டது.
இதுபோன்ற பகுதிகளில் வாழும் உயிரினங்களையும் அவற்றின் வாழிடங்களையும் பாதுகாக்க, அந்த மொத்த நிலவமைப்பையே பாதுகாக்க, சரியான முறையில் பராமரிக்க திட்டங்களும், மேலாண்மைக் கொள்கைகளும் ஏற்படுத்தப்பட வேண்டும். தாவரங்களும் விலங்குகளும் பாதுகாப்பட்ட பகுதிகளில் மட்டுமே தென்படவேண்டும், வாழவேண்டும் என்று அவசியம் இல்லை. எல்லைக்கோடு என்பது மனிதனுக்கு மட்டும்தான், மற்ற உயிரினங்களுக்குக் கிடையாது. ஆகவே இது போன்ற பகுதிகளையும் அங்கு வாழும் உயிரினங்களையும் போற்றிப் பாதுகாப்பது நம் அனைவரின் கடமை.
—
மனோரமா இயர்புக் 2015 ல் “தமிழகத்தின் பாதுகாக்கப்பட்ட வாழிடங்கள்” எனும் தலைப்பில் (பக்கங்கள் 178-195) வெளியான நெடுங்கட்டுரையின் ஒரு பகுதி.
செங்கால் நாரையும், மூங்கணத்தானும், பொன்னிறப் பல்லியும்
– விழுப்புரம் மாவட்ட பயணக் குறிப்புகள்
அண்மையில் விழுப்புரம் மாவட்டத்தில் சில இடங்களில் பணி நிமித்தம் பயணம் செய்ய வேண்டியிருந்தது. இந்த ஆண்டு (2016) நவம்பர் பின் பாதியில் சுமார் பத்து நாட்களில் விழுப்புரம், செஞ்சி, கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, கல்வராயன் மலைப்பகுதி என சுற்றியதில் பணியைத் தவிரவும் எதிர்பார்த்துக் காத்திருந்த சில ஆசைகள் நிறைவேறியது.
நாராய் நாராய் செங்கால் நாராய்
விழுப்புரத்தில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ள வீடுர் நீர்த்தேக்கத்திற்கு ஒரு நாள் மாலை நண்பர்கள் சுவாமி ரப்யா, சேகர், மகேஷ் ஆகியோருடன் சென்றிருந்தேன். பொழுது சாய இன்னும் கொஞ்சம் நேரம் தான் இருந்தது, ஆகவே வண்டியை விட்டு இறங்கியவுடன் சாலையில் இருந்து நீர்தேக்கத்தின் உயரமான கரையின் மேலே அவசர அவசரமாக ஏறினோம். எனது இருநோக்கியை கூட வந்திருந்த ஒரு நண்பரிடம் கொடுத்திருந்தேன். அவர் எனக்கு முன்னால் சற்று தூரத்தில் போய்க்கொண்டிருந்தார். நான் மேலே ஏறியதும் விசாலமான அந்த நீர்த்தேக்கத்தை இடமிருந்து வலமாக நோட்டம் விட்டேன். அணைக்கு சற்று முன்னே தூரத்தில் கொஞ்சமாக தண்ணீர் தேங்கி கிடந்தது. புற்கள் நிறைந்த தரையில் நின்று கொண்டிருந்த ஒரு பெரிய பறவையை பார்த்தமாத்திரத்திலேயே அடையாளம் கண்டுக்கொண்டேன். அது செங்கால் நாரை! வெள்ளை வெளேர் என உடல், அதன் பின் பகுதி அடர்ந்த கருப்பு. தூரத்தில் இருந்து பார்க்கும் போது இனப்பருக்கக் காலத்தில் இருக்கும் நத்தை குத்தி நாரையும் கிட்டத்தட்ட இது போலத்தான் தோன்றும். எனினும் நிற்கும் விதம், அலகின் நிறம், வடிவம் இவற்றை வைத்து இந்த இரு பறவைகளையும் பிரித்தறிய முடியும். நண்பரை அழைத்து இருநோக்கியை வைத்து பார்த்தேன். சிவந்த அலகைக் கொண்ட அழகான செங்கால் நாரை அது! சென்ற அனைவரும் இருநோக்கியை பகிர்ந்து வலசை வந்த அந்த அழகான பறவையை கண்டுகளித்தோம். செங்கால் நாரை இருந்த இடத்திற்கு சற்று தொலைவிலேயே ஏராளமான நத்தைகுத்தி நாரைகள் இருந்தன. ஆனால் அவற்றின் இறக்கைகள் சாம்பல் நிறத்தில் இருந்தது.
செங்கால் நாரைகள் மத்திய ஆசியப் பகுதியிலும், ஐரோப்பாவிலும் இனப்பெருக்கம் செய்கின்றன. இவை இந்தியப் பகுதிகளில் செப்டம்பர் மாதம் முதல் மே மாத இறுதி வரை இருப்பதாகத் தெரிகிறது. எனினும் தமிழ் நாட்டில் நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை பதிவு செய்யப்பட்டுள்ளது. செங்கால் நாரைகள் அவை இனப்பெருக்கம் செய்யும் இடங்களில் (ஐரோப்பிய நாடுகளில்) மரங்களின் மீதோ, வீட்டில் உள்ள புகைபோக்கிக்கு மேலோ, கட்டிடங்களின் மீதோ பெரிய கூடு கட்டி குஞ்சு பொரிக்கும். ஆண்டுதோறும் ஒரே கூட்டினை திருபத் திரும்ப உபயோகிக்கும். இப்பறவைகள் தங்கள் வீடுகளில் கூடமைப்பது நல்ல சகுனம் எனும் நம்பிக்கை அவ்வூர் மக்களிடம் இருகிறது. ஆகவே அவற்றின் கூடுகளை அவர்கள் தொந்தரவாக நினைப்பதில்லை.
இதற்கு முன் இந்தப் பறவையை குஜராத்தில் பாத்ததுண்டு. தமிழகத்தில் பார்ப்பது இது தான் முதல் முறை. பொழுது சாயும் வரை அங்கிருந்த பல பறவைகளையும் கண்டுகளித்துவிட்டு, கொஞ்சம் முன்பே வந்திருக்கலாம் என நொந்து கொண்டே அங்கிருந்து கிளம்பினோம்.
கல்வராயன் மலைப் பயணம்
கள்ளக்குறிச்சிக்கு சென்ற போது அருகில் இருக்கும் கல்வராயன் மலைப் பகுதிக்கும் சென்று வரலாம் என முடிவு செய்தேன். கூட வர யாரும் நண்பர்கள் இல்லை ஆகவே தனியே ஒரு வண்டியை வாடகைக்கு எடுத்துக் கொண்டு ஒரு நாள் அதிகாலை கிளம்பினேன். மிகவும் வேகமாகப் போகவேண்டாம், பாட்டு போடவேண்டாம், வண்டி ஓட்டிக்கொண்டே கைபேசியில் பேசவேண்டாம், போகும் வழியில் பல இடங்களில் பல முறை பறவைகளைப் பார்க்க வண்டியை நிறுத்த வேண்டி வரும், என்னிடம் ரொக்கமாக பணம் இல்லை எனவே ஆகும் செலவை உங்களது வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைப்பேன் என்றெல்லாம் முன்கூட்டியே ஓட்டுனரிடம் எனது நிபந்தனைகளைச் சொல்லியிருந்தேன்.

கல்வராயன் மலைக்குப் போகும் வழியில் சாலையின் இருபுறமும் உள்ள மரங்கள். Photo: P Jeganathan, via Wikimedia Commons.
கச்சிராப்பாளையத்தில் இருந்து பரிகம் வரை இருந்த சாலை இன்னும் “மேம்படுத்தப்படாமல்” இருபுறமும் மரங்களுடன் மிகவும் அழகாக இருந்தது. இரண்டு வண்டிகள் பக்கம் பக்கமாக பயணிக்க போதுமான இடமிருந்தது. எனினும் இதை இருவழிச் சாலையாக்க பலர் முயன்று கொண்டிருக்கக்கூடும். சாலையோர மரங்கள் சிலரின் கண்ணை உறுத்திக்கொண்டே தான் இருக்கும். வண்டியை நிறுத்தி மரங்கள் சூழ்ந்த அந்தச் சாலையை படமெடுத்துக் கொண்டேன். இன்னும் எத்தனை நாட்களுக்கு இவை இருக்கும் என நினைத்து பெருமூச்சுடன் பயணத்தைத் தொடர்ந்தேன். பரிகம் அருகில் நீரில்லாத கோமுகி ஆற்றையும் அதைத் தொடர்ந்து கோமுகி அணையையும் கண்டேன். சற்று தூரத்தில் மலைப்பாதை ஆரம்பமானது.
போகும் வழியில் பெரியார் நீர்வீழ்ச்சி என ஓரிடத்தில் எழுதியிருந்தது (வனத்துறைக்கு ஒரு வேண்டுகோள் – அது நீர்வீழ்ச்சி அல்ல அருவி என திருத்தி எழுதவும், மேலும் அங்கே ஒரு குப்பைத் தொட்டியை வைக்கவும், சுற்றுலாவினர் போட்டுச் செல்லும் பிளாஸ்டிக் குப்பைகள், மதுக்குப்பிகளை அவ்வப்போது அப்புறப்படுத்தவும்). சரி பறவைகளைப் பார்க்கலாம் என அங்கே இறங்கி அங்கிருந்த ஓடைக்கு அருகே சென்றேன். நீர் வரத்து இல்லாததால் ஆள் அரவம் இல்லை. அங்கும் இங்குமாக சில இடங்களில் தண்ணீர் தேங்கிக் கிடந்தது. சாம்பால் வாலாட்டி ஒன்று என்னைக் கண்டதும் வாலை ஆட்டிக்கொண்டே வீச் என கத்திக் கொண்டு பறந்து சென்றது. சின்ன மீன்கொத்தியையும், ஈப்பிடிப்பான்களையும் பார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாரா விதமாக துடுப்புவால் கரிச்சான் ஒன்று பறந்து வந்து அருகில் உள்ள மரக்கிளையில் அமர்ந்தது. சுமார் அரை மணி நேரம் அங்கிருந்த பறவைகளைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு கிளம்பினேன்.
முந்தைய நாள் இணையத்தில் கல்வராயன் மலைப்பகுதியில் பார்க்க வேண்டிய இடங்களை தேடிப்பார்த்தேன். மேகம் அருவியின் படங்கள் ஏராளமாக வந்து விழுந்தன. பறவைகளைப் பார்த்து பட்டியலிடும் வலைத்தளமான eBirdல் பார்த்த போது அங்குள்ள பறவைகளைப் பற்றிய தகவல்கள் ஏதும் இல்லை. ஆகவே அங்கே செல்லலாம் என முடிவு செய்து அதன் அருகில் இருக்கும் ஊரான வெள்ளிமலைக்கு வந்தடைந்தோம். அங்கே மேகம் அருவிக்கு எப்படிச் செல்வது என்று கேட்டபோது குறத்திக்குன்றம் எனும் ஊரில் இருந்து போகவேண்டும் என்றார்கள்.
குறத்திக்குன்றத்திற்கு நாங்கள் வந்தடைந்த போது மணி சுமார் ஒன்றரை இருக்கும். அவ்வூரில் மேகம் அருவிக்கு போக வழித்துணைக்கு யாராவது வரமுடியுமா என விசாரித்த போது சதீஷ் எனும் இளைஞர் தாம் அழைத்துச் செல்வதாகச் சொன்னார். நல்ல வெய்யிலில் கிளம்பினோம். நான் மதிய உணவு சாப்பிடவில்லை, இரண்டு வாழைப்பழமும் எனது அலுமினியப் புட்டியில் குடிக்கத் தண்ணீரும் எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தோம்.
சதீஷ் கல்வராயன் மலையின் பூர்விகக் குடியைச் சேர்ந்த இளைஞர். நடக்க ஆரம்பித்ததில் இருந்து என்னை முன்னே அனுப்பி விட்டு சற்று பின்னால் தள்ளியே கைபேசியில் யாருடனோ வளவளவென பேசிக்கொண்டே வந்தார். ஓரிடத்தில் பாதை இரண்டாகப் பிரிந்தது. அவரோ மிகவும் மும்முரமாக பேசிக்கொண்டே இருந்தார். உச்சி வெயில் மண்டையை பிளந்தது, எனக்கு சற்று கோபமும் வந்தது. காட்டிற்குள் பறவைகள் பார்க்கச் செல்லும்போது பேசக்கூடாது என்றும் சற்று பேச்சை நிறுத்தி விட்டு எனக்கு வழியை காண்பிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.
வட கிழக்கு பருவ மழை பொய்த்துப் போனதால் காடு வாடிப்போய் இருந்தது. மெதுவாக சதீஷிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தேன். அவர் ஒன்பதாவது வரை படித்ததாகவும், அவரது பெற்றோருக்கு விவசாயப் பணியில் உதவுவதாகவும் சொன்னார். அங்கிருந்த மரம் ஒன்றின் பெயரைக் கேட்டேன் தெரியாது என்றார். எனக்கு ஆச்சர்யமாகவும், சற்று கவலையாகவும் இருந்தது. காட்டுக்குள் எப்போதெல்லாம் வருவாய் எனக் கேட்டேன், எப்போதாவதுதான் என்றார். இந்தக் காட்டுக்குள் என்ன என்ன பெரிய உயிரினங்கள் இருக்கின்றன எனக் கேட்டேன். காட்டுக்குள்ளே அதிகம் பார்த்ததில்லை ஆனால் ஊரின் அருகில் உள்ள பயிர்களை மேய காட்டு மாடுகள் (காட்டெருது) வருவதுண்டு எனவும், மான்களைக் கண்டதில்லை என்றார். மேகம் அருவி எனும் பெயர் நிச்சயமாக அண்மையில் வைத்த பெயராகத்தான் இருக்கும். சுற்றுலா மேம்பாட்டுக்காக இது போன்ற அழகான, அதிகம் அறியப்படாத இடங்களை கண்டுபிடித்து புதிதாக ஏதாவது பெயரிட்டு, அந்த இடங்களைச் சீரழிப்பதுதான் நமக்கு வாடிக்கையாயிற்றே. பள்ளத்தாக்கில் அமைந்துள்ள மேகம் அருவிக்கு அவர்கள் ஊரில் வழங்கும் பெயர் என்னவென்று கேட்டேன். அப்படி ஏதும் இல்லை என்றார், ஒரு வேலை இருந்தால், அவரது பெற்றோர்களிடம் கேட்டால் தெரியும் என்றார். சுமார் முக்கால் மணி நேர நடைக்குப் பின் களைப்பாக இருந்ததால் ஒரு மர நிழலில் அமர்ந்தோம். சதீஷ் தனது கைபேசியை நோண்ட ஆரம்பித்தார்.
மதிய வேளையாதலால் பறவைகள் அதிகம் தென்படவில்லை. அவற்றின் குரலொலியும் கம்மியாகத்தான் இருந்தது. வரும் வழியில் ஓரிரு இடங்களில் சில மரங்கள் வெட்டப் பட்டதற்கான அறிகுறிகள் தெளிவாகத் தெரிந்தது. காட்டுப்பாதை இதற்கு முன் ஒத்தையடிப்பாதையாக இருந்ததாகவும், சுற்றுலா வளர்ச்சிக்காக அதை அகலப்படுத்தப் பட்டதாகவும் சதீஷ் சொன்னார். எனினும் இதைச் செய்து சில ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். மழை வந்து பாதையை அரித்துச் சென்றிருந்தது. நாங்கள் அமர்ந்திருத்த போதே சற்று தொலைவில் துப்பாக்கி வேட்டுச் சத்தம் கேட்டது. நான் சதீஷை பாத்தேன், அவரும் என்னைப் பார்த்து விட்டு கைபேசியில் முகத்தை நுழைத்துக் கொண்டார்.
வெகுவாக கள்ள வேட்டையாடப்பட்ட வனப்பகுதிகளில் பெரிய உயிரினங்கள் (மான்கள், குரங்குகள், உருவில் பெரிய பறவைகள்) எதுவும் இருக்காது. ஆனால் காட்டைப் பார்த்தால் ஓரளவிற்கு சீரழியாமல் தென்படும். ஆங்கிலத்தில் இதை Empty forest syndrome என்பர். இந்த இடத்தைப் பார்க்கும் போது எனக்கு அந்த காலியான காட்டின் அறிகுறி தான் நினைவுக்கு வந்தது.
களைப்பு சற்று தீர்ந்தவுடன் எழுந்து நடக்க ஆரம்பித்தோம். கீழ் நோக்கிச் சென்ற பாதையின் முன்னே சில காட்டுச் சிலம்பன்கள் கத்திக் கொண்டிருந்தன. இருநோக்கியை வைத்துப் பார்த்துக் கொண்டிருந்த போது அதே மரத்தில் அணில் போன்ற ஒரு சிறு உயிரினம் ஓடி வந்தது. அது அணில் இல்லை. மூங்கில்கள் சூழ்ந்த அந்த காட்டுப்பகுதியில் நான் கண்ட அந்த அழகான உயிரினம் ஒரு மூங்கணத்தான்! Madras Treeshrew என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த மூங்கணத்தான் அருகில் இருக்கும் சேர்வராயன் மலைப்பகுதிகளில் இருப்பதற்கான குறிப்புகள் உள்ளன. ஆகவே இந்த இடத்திலும் இருப்பது ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எனினும் எதிர்பாராவிதமாகக் கண்டதில் எனக்கு மகிழ்ச்சி.
இது ஒரு பூச்சியுண்ணி. எனினும் இதை பாலூட்டி வகையில் எந்த வரிசையில் (order) வைப்பது என்பதில் வகைப்பாட்டியலாளர்களுக்கு இன்று வரை பல சந்தேகங்கள் உள்ளன. ஆரம்பத்தில் இது குரங்குகள் வகைக்குக் கீழ் வரிசைப்ப்படுத்தப்பட்டிருந்தது. எனினும் சிலர் முயல் (rabbit), பறக்கும் லெமூர் (flying lemur), யானை மூஞ்சூறு (elephant shrew) முதலிய வகை உயிரினங்களின் வரிசையில் கொண்டு வந்தனர். எனினும் அண்மைய காலங்களில் செய்த ஆராய்ச்சிகளின் விளைவால் இந்த வகை பாலுட்டிகளை தனி வரிசையில் வைக்க வேண்டும் என வகைப்பாட்டியலளர்கள் ஒத்துக்கொண்டுள்ளனர். இந்தியாவில் மட்டுமே தென்படக்கூடிய உயிரினம் இது. மத்திய இந்தியா, மேற்குத்தொடர்ச்சி மலையில் சில பகுதிகள், கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதி என ஆங்காங்கே தொடர்பற்று பரவிக் காணப்படுகின்றன. மூங்கில் அதிகமாக இருக்க்கக்கூடிய இடங்களில் போதுவாக தரையில் இரைதேடிக் கொண்டிருக்கும்.
அரிய உயிரினங்களையும், நிறைய ஓரிடவாழ்விகளையும், கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளுக்கு கிடைப்பதில்லை. இதற்கு பல காரணங்கள் உண்டு. முக்கயமாக இப்பகுதிகளின் பாதுகாப்பிற்கு ஒதுக்கப்படும் நிதியுதவியும் கம்மி. நிதி கிடைப்பதும் கடினம், ஏனெனில் புலி போன்ற அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் கவர்ச்சிகரமான, பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த உயிரினங்கள் இங்கே தென்படாதது தான். ஒரு காலத்தில் இது போன்ற உயிரினங்கள் இங்கே இருந்திருக்கும் ஆனால் அவை முற்றிலுமாக அற்றுப்போகச் செய்திருப்போம். ஆகவே பல்லுயிர் பாதுகாப்பிற்கான முன்னுரிமை இது போன்ற இடங்களுக்குக் கிடைப்பதில்லை.
கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள காட்டுயிர்கள் பற்றிய ஆராய்ச்சிகள் கூட மிகவும் அரிதே. கல்வராயன் மலைப்பகுதியைப் பற்றி இணையத்தில் தேடிய போது சில தாவரங்கள் அதுவும் மூலிகைத் தாவரங்கள் பற்றிய ஆராய்ச்சிகளின் ஆய்வுக் கட்டுரைகளைத் தவிர வேறு ஏதும் கிடைக்கவில்லை. இது போன்ற இடங்களில் தாவரங்கள் மற்றும் காட்டுயிர்கள் பற்றிய ஆய்வுப் பயணங்கள் (explorations) கூட ஆங்கிலேயர் காலத்தில் நடத்தப்பட்டவை. நம் நாட்டில் காட்டுயிர் ஆராய்ச்சிக்கென ஒதுக்கப்படும் நிதியும் குறைவு, இந்தத் துறையை தேர்ந்தேடுப்பவர்களும், இதை தொழிலாகச் செய்பவர்களும் குறைவு. உயிர்ப்பன்மயமும், ஓரிடவழ்விகளும் மிகுந்த, இடங்களை Biodiversity hotspots என்பர். பெரும்பாலான ஆராய்ச்சியாளர்களும், ஆராய்ச்சி நிறுவனங்களும் இது போன்ற இடங்களிலும், அங்குள்ள உயிரினங்களைப் பற்றியும்தான் ஆராய்வர். நிதியுதவி சற்று எளிதாகவும், தொடந்தும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம், ஏனெனில் உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இது போன்ற பகுதிகளை காப்பாற்ற வேண்டியது மிகவும் அவசியம் என்பது புரிந்து கொள்ளக்கூடியதே. அதேவேளையில் மூங்கணத்தான் போன்ற அதிகம் அறியப்படாத உயிரினங்கள் பற்றி அதுவும் கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெரிதாக யாரும் ஆராய்ச்சி மேற்கொள்ளாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணமாகிறது.
பாதுகாப்பு நிலையிலும், முன்னுரிமை அளிப்பதிலும் இருக்கும் இது போன்ற ஏற்றத்தாழ்வுகளினால் ஏற்படும் ஒரு முக்கியமான பாதிப்பு கல்வராயன் மலைப்பகுதி போன்ற இடங்களில் எங்கெங்கே என்ன வகையான உயிரினங்கள் உள்ளன, அவற்றின் நிலை என்ன என்பது பற்றிய புரிதல் நமக்குக் கிடைக்கும் முன்பே அவை அந்தப் பகுதிகளில் இருந்து (கள்ள வேட்டை முதலிய காரணங்களால்) முற்றுலுமாக அற்றுப் போவதற்கான வாய்ப்புகள் அதிகம். இரண்டாவதாக இங்குள்ள நிலங்களின் பாதுகாப்பு நிலையும் (காட்டுயிர் சரணாலயம் போன்று) அவ்வளவு உறுதியானதாக இருப்பதில்லை. ஆகவே இது போன்ற இயற்கையான வாழிடங்கள் காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கப்பட்டு (எ.கா விவசாய விரிவாக்கத்திற்காகவும், ஓரினப் பயிர்த் தோட்டங்களுக்காகவும்) சீரழிந்தோ அல்லது ஒட்டு மொத்தமாக பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்காக கையகப்படுத்தப்பட்டு (எ. கா. அணை கட்டுமானத்திற்கோ, சுரங்கம் தோண்டவோ) முற்றிலுமாக அழிக்கப்பட்டு விடும் அபாயமும் உண்டு.
மேகம் அருவிக்கு சென்றபோது மாலை மூன்று மணி இருக்கும். நீர் வரத்து இல்லாத பாறையின் மேல் அமர்ந்து பறவைகளைப் பாத்துக் கொண்டிருந்தோம். எங்களைத் தவிர வேறு யாரும் இல்லாதது நிம்மதியாக இருந்தது. காட்டின் அமைதியை பறவைகள் குரலுடன் சேர்த்து ரசித்தவாறு சற்று நேரம் இளைப்பாறி விட்டு கிளம்பினோம். பள்ளத்தாக்கில் இருந்ததால் கிழிறங்கி வந்தது அவ்வளவு சிரமமாக இல்லை. ஆனால் திரும்பப் போகும் பொது மேலே ஏறிச் செல்வது அவ்வளவு எளிதாக இல்லை. நல்ல வேலையாக சூரியன் சற்று தாழ்ந்து இருந்ததால் பறவைகளின் குரலொலியும், பறந்து திரிவதும் மதிய வேளையை விட அதிகமாகவே இருந்தது. அவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டே பொழுது சாயும் முன் ஊருக்குள் வந்தடைந்தோம்.
கல்வராயன் மலைப்பகுதியில் சாலை வழியே பயணித்த போது பல இடங்களில் காடுகள் திருத்தப்பட்டு மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டிருந்தது. வீடு திரும்பிய பின் கூகுள் எர்த்தில் (Google Earth) அந்த பகுதியின் தற்போதைய செயற்கைக்கோள் நில வரைபடத்தைப் (satellite imagery) பார்த்த போது கலக்கமாக இருந்தது. மனிதன் கோமுகி ஆற்றின் தாய் மடியை எந்த அளவிற்கு தனது வசிதிக்கு ஏற்ப திருத்தி அமைத்திருக்கிறான் என்பது கண்கூடாகத் தெரிந்தது.
செஞ்சிக் கோட்டை
விழுப்புரத்தில் இருந்து செஞ்சிக்குப் போகும் வழியில் அப்பம்பட்டு எனும் ஊரில் முட்டை மிட்டாய் என்ற பெயர்ப் பலகை எங்கள் கவனத்தை ஈர்த்தது. அவசரமாக போய்க்கொண்டிருந்ததால் நிறுத்தி வாங்க முடியவில்லை. ஆனால் செஞ்சிக் கோட்டைக்குப் போகும் போது இறங்கி மிருதுவான கேக் போன்ற சுவையான முட்டை மிட்டாயை சுவைத்து விட்டுத் தான் சென்றேன். செஞ்சி பேருந்து நிலையத்திற்கு அருகிலும் இவர்களது கிளை இருக்கிறது. இனிப்புப் பிரியர்கள் இங்கு சென்றால் சையத் இனிப்பகத்தில் மட்டுமே கிடைக்கும் முட்டை மிட்டாயை தவற விட வேண்டாம்.
செஞ்சிக் கோட்டைக்குப் போக விரும்பியதன் முக்கிய காரணம் இந்தியாவில் மட்டுமே காணப்படும் இரண்டு உயிரினங்கள் அப்பகுதில் தென்படுகின்றன, அவற்றைப் பார்க்கத்தான். திருவண்ணாமலையில் இருந்து வந்திருந்த நண்பர்கள் கலைமணி, சல்மான் மற்றும் சிவகுமார் அனைவரும் காலையிலேயே செஞ்சிக் கோட்டையின் வாயிலை அடைந்தோம். முகப்பிலேயே பெரிய ஆல், அரச மரங்கள் வீற்றிருந்தன. மலையடிவாரத்தில் கோட்டைக்குச் செல்லும் படிகளின் முன்னே குரங்குகள் ஜாக்கிரதை என்ற பலகை இருந்தது. அதன் அருகிலேயே பிளாஸ்டிக் குப்பைகளும், பிளாஸ்டிக் தண்ணீர் குப்பிகளும், பிளாஸ்டிக் தட்டுகளும் சிதறிக்கிடந்தது. குப்பைபோடும் மனிதர்கள் ஜாக்கிரதை என எழுதி வைக்கவேண்டும் எனத் தோன்றியது. சில நாட்டுக் குரங்குகள் மனிதர்கள் வீசி எறிந்த மிச்ச மீதி உணவுக் குப்பைகளையும், சில அங்கிருந்த அரச மரத்தின் பழங்களையும் சுவைத்துக் கொண்டிருந்தன.
கூட வந்திருந்த நண்பர் கலைமணி ஒரு காட்டுயிர் ஆராய்ச்சியாளர். இந்தியாவில் மட்டுமே தென்படும் பொன்னிறப் பல்லியைப் (Indian Golden Gecko) பற்றி ஆராய்ச்சி செய்தவர். தற்போது தனது முனைவர் பட்டத்திற்காக மஞ்சள் தொண்டை சின்னானைப் (Yellow-throated Bulbul) பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறார். இதுவும் இந்தியாவில் மட்டுமே தென்படும் பறவை. இந்த இரண்டையுமே செஞ்சிக் கோட்டைப் பகுதிகளில் காணலாம். சிலர் யானை, புலி முதலிய பெரிய உயிரினங்களின் பால் மட்டுமே நாட்டம் கொண்டு ஆராய்ச்சி மற்றும் அவற்றின் பாதுகாப்பிற்காக பாடுபடுவர். ஆனால் இந்த செஞ்சிக் கோட்டை வாலிபன், முக்கியத்துவம் வாய்ந்த ஆனால் அதிகம் அறியப்படாத உயிரினங்களைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது வரவேற்க வேண்டிய ஒன்று.
படிகளில் மேலே ஏறிக்கொண்டிருந்த போதே குரலொலி வரும் திசையைக் கேட்டு கையைக் காட்டினார். இரண்டு மஞ்சள் தொண்டை சின்னார்கள் அங்கிருந்து பறந்து சென்றன. மிகவும் அழகான பறவை. பாறைகள் நிறைந்த பகுதிகளில் அதுவும் அத்திமரங்கள் (Ficus) இருந்தால் நிச்சயமாக இப்பறவைகளை அங்கே காணலாம். பாறைபாங்கான இடங்களில் இருப்பதால் இதை பாறை சின்னான் என்றும் சொல்லலாம். மலையின் மேல், பாதி வழியில் கமலக்கன்னியம்மன் கோயில் இருந்தது. அருகில் சிறிய குளமும் அதைச் சூழ்ந்து வெப்பாலை மரங்களும் நிறைந்திருந்த அழகான இடம். கோயிலின் பின் புறம் இருந்த பாறையில் மிகப்பழமையான அழகான ஓவியம் இருந்தது. சுற்றுலாத்தலங்களின் நியதிக்கேற்ப ஓவியத்தின் மேல் பலருடைய பெயர்களும் கிறுக்கப்பட்டிருந்தது.
அந்த இடத்தைத் தாண்டி மேலே ஏறிக்கொண்டிருந்த போது கலைமணி ஒரு பாறையின் இடுக்கில் குனிந்து பார்த்து எங்களை அழைத்தார். சத்தமிடாமல் மெதுவாகச் சென்று பார்த்தோம். ஒரு பொன்னிறப் பல்லி இருந்தது. கைபேசியின் டார்ச்சை அதன் மேலே அடித்துக் காண்பித்தார். அப்படி ஒன்றும் பொன் நிறத்தில் இல்லை. இனப்பருக்கக் காலத்தில் தான் அதுவும் ஆண் பல்லிக்குத்தான் உடலில் இலேசான பொன்னிறம் வரும் என்றார். அந்த இடத்திலேயே இன்னொரு மூலையில் பறையில் ஒட்டிக்கொண்டிருந்த இந்தப் பல்லியின் முட்டைகளைக் காண முடிந்தது. சற்றுத் தள்ளி திரளாக பொறிந்து போன முட்டைகளின் மீதங்கள் ஒட்டிக்கொண்டிருந்தது. இந்தப் பல்லியின் அறிவியல் பெயர் Calodactylodes aureus. இதில் Calodactylodes எனில் இலத்தீனில் அழகான விரல்கள் என்று பொருள். பெயருக்குத் தகுந்தாற்போல் இந்த பல்லியின் விரல்கள் அழகாக பூவின் வடிவத்தை ஒத்து இருக்கும்.
இந்தப் பல்லி வகையின் விபரம் முதன்முதலில் 1870ல் ரிச்சர்ட் ஹென்றி பெட்டோம் (Richard Henry Beddome) எனும் புகழ்பெற்ற ஆங்கிலேய இயற்கையியலாளரால் அந்நாளைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து அறியப்பட்டது. எனினும் சுமார் 100 ஆண்டுகள் கழித்து தான் திருப்பதி மலைப்பகுதியில் இப்பல்லி மீண்டும் கண்டறியப்பட்டது. அதன் பின் அண்மை காலங்களில் கலைமணியின் ஆராய்ச்சியின் விளைவால் தமிழ்நாட்டில் மேலும் சில இடங்களில் இவை இருப்பது (செஞ்சி உட்பட) தெரிய வந்துள்ளது. எனினும் இந்த பல்லி இது வரை கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருந்து மட்டுமே அறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செஞ்சிக்கோட்டையில் நானும் நண்பர்களும். (இடமிருந்து வலமாக) திருவண்ணாமலையில் இருந்து வந்த ஓவியர் சிவக்குமார், பள்ளி ஆசிரியர் சல்மான், காட்டுயிர் ஆராய்ச்சியாளர் கலைமணி (பச்சை சட்டைக்காரர்).
செஞ்சிக் கோட்டை அமைந்துள்ள மலையின் உச்சியை அடைந்த போது மணி இரண்டு. உயரமான மலையின் மேலிருந்து அதைச் சுற்றியிருக்கும் பாறைப்பாங்கான மலைகளையும், குன்றுகளையும், பரந்துபட்ட தரையோடு அமைந்த முட்புதர் காடுகளையும், வயல்வெளிகளையும், செஞ்சி நகரத்தையும், ராணி கோட்டையையும் பார்க்க முடிந்தது. உச்சியில் இருந்த கோட்டையின் ஒரு பகுதிக்குச் செல்லும் படிகள் இடிந்து போயிருந்தது. இருப்பினும் சில பொறுப்பான (?), ஆர்வம்மிக்க சுற்றுலாப்பயணிகள் கற்களின் இடுக்கில் கால்களை வைத்து மேலே ஏறி சிகரத்தை அடைந்த ஆனந்தத்தில் கத்திக் கொண்டிருந்தார்கள். கீழே சீட்டு வழங்கும் இடத்தில் இருந்த இரு காவலாளிகள் கையில் பெரிய தடியை வைத்திருந்தனர். குரங்குகளை விரட்டுவதற்காக. அவர்கள் இருந்திருக்க வேண்டிய இடம் வாயில் அல்ல, விரட்ட வேண்டியது குரங்குகளை அல்ல எனத் தோன்றியது.
விழுப்புரம் மாவட்டத்தில் இந்த இடங்களைத் தவிர மழவந்தாங்கலில் இருந்து அனந்தபுரம் செல்லும் சாலையில் பயணித்து பறவைகளை பார்க்கச் சென்றோம். அருமையான முட்புதர் காட்டின் வழியே செல்லும் ஒரு வழிப்பாதையில் நடந்து சென்ற போது அரசவால் ஈப்பிடிப்பானைக் கண்டதும், ஆறு மணிக்குருவி சரியாக ஆறு மணிக்கு குரலெழுப்பியதை கேட்டதும் மறக்க முடியாத அனுபவம்.
கடைசியாக கழிவெளி
பத்து நாள் பயணத்தின் முடிவில் நண்பர் சுரேந்தர் பூபாலன் கழிவெளி ஏரிக்கு அழைத்துச் சென்றார். எனினும் மாலை வேளையில் சென்றதால் அதிக நேரம் அங்கே செலவழிக்க முடியவில்லை. நான்கு ஆண்டுகளுக்கு முன் இதே இடத்திற்கு சென்றிருந்தேன். அப்போது சுமார் 70 வலசை வரும் சாம்பல் தலை ஆள்காட்டிகளை ஒரே இடத்தில் பார்த்தது நினைவுக்கு வந்தது. இந்த முறை பயணித்த சில தூரத்திலேயே, வெளிச்சம் குறைவாக இருந்த போதும் அந்த நிலவமைப்பில் ஏற்பட்டிருந்த மாற்றத்தைக் காணமுடிந்தது. ஏரியின் ஓரத்தில் இறால் பண்ணை குட்டைகள் சில இருந்தன. அவற்றில் ஒன்றின் கரை இடிக்கப்பட்டிருந்தது. ஏரியின் நிலத்தை ஆக்கிரமித்து கட்டியதனால் இடிக்கப்பட்டதாகச் சொன்னார் நண்பர். இதுபோல் உடைக்கப்பட வேண்டியவை இன்னும் சில உள்ளன என்றார். முழுவதுமாக இருட்டிய பின் இரவாடிப் பறவைகளின் குரல் ஏதும் கேட்கும் என சற்று நேரம் அங்கே நின்றிருந்தோம். அப்படி எதுவும் கேட்காததால் அடுத்தமுறை பகல் வேளையிலேயே வரவேண்டும் என பேசிக்கொண்டே அங்கிருந்து கிளம்பினோம்.
கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதியையும், சமவெளிகளையும், பல நீர்நிலைகளையும், கடல் புறத்தையும் கொண்ட விழுப்புரம் மாவட்டம் புவியியல் ரீதியாக தனித்துவம் வாய்ந்தது. எனினும் அங்கே உள்ள ஒசூடு ஏரியைத் தவிர பாதுகாக்கப்பட்ட வாழிடங்கள் வேறு ஏதும் இல்லை என்பது வியப்பாக இருக்கிறது. அதுவும் ஒசூடு ஏரி கூட சென்ற ஆண்டுதான் (2015) பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏரி புதுச்சேரியிலும் தமிழகத்திலும் பரவியுள்ளது. புதுச்சேரி அரசு 2008லேயே அவர்களது பகுதி ஏரியை பறவைகள் சரணாலயமாக அறிவித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இயற்கை வளம் மிகுந்த இந்த மாவட்டத்தில் இன்னும் பல இயற்கையான வாழிடங்களைப் பார்க்க ஆசைதான். விழிமா நகரப் பகுதிகளில் பயணிக்க மீண்டும் வாய்ப்பு கிட்டும் என்றே நம்புகிறேன்.
தி இந்து தமிழ் சித்திரை மலரில் (April 2017) ” செங்கால் நாரை தரிசனமும் ஆறு மணிக் குருவியின் அழைப்பும்” எனும் தலைப்பில் வெளியான கட்டுரையின் முழு வடிவம்.
நீர்நிலைகளின் தூதுவர்கள் – நீர்நாய்கள்
சலசலவென ஒடிக்கொண்டிருந்தது ஆறு. ஆற்றின் நடுவில் பாறைகள் ஆங்கங்கே துருத்திக்கொண்டுடிருந்தன. அதைச் சுற்றி நீர் அல்லிச் செடிகள் வளர்ந்திருந்தன. ஆற்றின் கரையை வரிசையாக வளர்ந்திருந்த நீர் மத்தி (நீர் மருது) மரங்கள் அலங்கரித்திருந்தன. எனக்கு விருப்பமான மரங்களில் நீர் மத்தியும் ஒன்று. வழவழப்பான, வெண்ணிற மரத்தண்டு, ஆங்கங்கே உரியும் மரப்பட்டை, சிலவேளைகளில் ஓடும் நீரின் மத்தியில் வளர்வதாலேயே நீர்மத்தி எனப்பெயர் பெற்றது. இம்மரத்தை எங்கு கண்டாலும் அருகில் சென்று மரத்தண்டில் உள்ளங்கை பதிய தடவிக் கொடுத்துவிட்டு வருவது வழக்கம். முடியாத போது கண்ணாலாவது தடவிச் செல்வதுண்டு.
மாலை வேளை சூரிய ஒளி ஓடிக் கொண்டிருந்த நீரில்பட்டு தங்க நிறத்தில் தகதகத்தது. மீன் திண்ணிக் கழுகு ஒன்று தனது குழந்தைக் குரலில் கத்திக் கொண்டிருந்தது. இருநோக்கியில் ஆற்றின் ஒட்டத்தைக் கண்களால் துழாவிக் கொண்டிருந்த போது ஆற்று ஆலா ஒன்று தனது வெண்ணிற கத்தி போன்ற இறக்கைகளை மேலும் கிழும் அசைத்து பறந்து வந்தது தெரிந்தது. பறந்து கொண்டே தலையை அங்குமிங்கும் திருப்பி நிரின் மேற் பரப்பை நோட்டமிட்ட அந்த ஆலா சட்டென் நீரில் முழ்கி ஒரு மீனை தனது அலகால் பிடித்து வெளி வந்து தனது வசிகரமான சிறகசப்பைத் தொடர்ந்தது.

ஆற்று ஆலா Photo: Wikimedia Commons
இதுபோன்ற சுழலில்தான் முதன்முதலில் அங்கு ஒர் நீர்நாய் கூட்டத்தைக் கண்டேன். கரையோரத்தில் திடீரென நீரிலிருந்து தலையை மேலே தூக்கி அங்கும் இங்கும் பார்த்தது ஓர் நீர்நாய் அதை தொடர்ந்து மற்றொரு நீர்நாய் தலையை நீரிலிருந்து தலையை வெளியே நீட்டியது. நீர்முழ்கி கப்பலில் உள்ள பெரிஸ்கொப்பினை போல நீரிலிருந்து தலையை வெளியே நீட்டி சுற்றும் முற்றும் பார்த்து மீண்டும் ‘டபக்’ என தலையை உள்ளே இழுத்துக் கொண்டது. இதை கண்ட குதூகலத்தில் இருந்த போதே இவை இருந்த இடத்தில் இருந்து சற்று தூரத்தில் மணற்ப்பாங்கான் கரையில் அவை ஏறி அமர்ந்துக் கொண்டன. அதனைத் தொடர்ந்து இன்னும் இரு நீர்நாய்கள் வெளிவந்து அவற்றுடன் சேர்ந்து அமர்ந்துக் கொண்டன. சற்று நேரம் கூட சும்மா இல்லாமல் துருதுருவென ஒன்றின் மேல் விழுந்து விளையாடிக் கொண்டிருந்தன.
நான் இருந்தது காவேரியாற்றின் கரையோரம். ஹோக்கனெக்கல் சரகத்தில் உள்ள பிலிகுண்டு எனும் சிறிய ஊருக்கு காவேரி ஆற்றோரமாக நடந்து சென்ற போது கண்ட காட்சியிது. இது நடந்ததது சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு. அண்மையில் அங்கு மீண்டும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இந்த முறை நடந்து செல்ல நேரமில்லை. ஹோக்கனெக்கலில் இருந்து பிலிகுண்டுக்கு அந்த காட்டின் குறுக்கே தார் சாலை போடப்பட்டிருந்தது. சாலை வந்தால் போதும் ஓர் இடத்தின் தன்மையே மாறிவிடும். பிலிகுண்டு பகுதிக்கு செல்ல வனத்துறையிடம் அனுமதி பெற்று ஒரு குழுவாக அங்கு சென்றிருந்தோம். ஆனால் அப்படியெல்லாம் செய்யாமல் நான்கு, ஐந்து கார்களில் வந்த சுற்றுலாவினர் கூட்டம் ஒன்று, ஆற்றோரத்தில் காரை நிறுத்தி குடித்துக் கொண்டிருந்தார்கள். பல ஆண்டுகளுக்கு முன் நான் நடந்து சென்ற ஆற்றோரப் பகுதி முழுவதிலும் பிளாஸ்டிக் குப்பைகள் சேர்ந்து கிடந்தன. அந்த குடிமக்களை எல்லாம் கடந்து சென்று ஆற்றோரமாக நடந்து சென்றோம். சுமார் 50 நிமிட ஆற்றோர நடை பயணத்தில் பல வகையான பறவைகளையும் அழகிய மரங்களையும் கண்டோம். சட்டென எங்களில் ஒருவர் நீர்நாய் என கத்தினார். எதிர்கரையில் இரண்டு நீர்நாய்கள் துள்ளி குதித்து நீரில் நீந்திக் கொண்டிருந்தன. நீர்நாய்களை அங்கே மீண்டும் பார்த்ததில் எனக்கு மகிழ்ச்சி.
நான் பார்த்துக் கொண்டிருந்தவை ஆற்று நீர்நாய்கள் (Smooth-coated otter Lutrogale perspicillata). ஆற்று நீர்நாய்களைப் பார்த்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. அவை ஒன்றொடுஒன்று விளையாட்டாக சண்டையிட்டுக் கொண்டு நீரில் முழ்குவதையும் பின்பு எதிர்பாராதவிதமாக முழ்கிய இடத்திலிருந்து சற்றுத்தொலைவில் மேல் எழும்பி நம்மை வியப்பில் ஆழ்த்தச் செய்யும். நீர்நாய்கள் குறும்புத்தனமும், மிகுந்த தைரியமும் கொண்டவை. அண்மையில் ஜிம் கார்பெட் புலிகள் காப்பகத்திற்கு சென்றபோது, அங்குள்ள ராம்கங்கா நதியில் நீர்நாய் ஒன்று தெளிந்த நீரினடியில் ஒரு மீனைப் போல நீந்திவருவதை உயரமான ஒரு பகுதியிலிருந்து பார்க்க முடிந்தது. இரண்டு கரியால் (Gharial) எனும் ஆற்று முதலைகள் அந்த நதிக்கரையோரம் வெயில்காய்ந்து கொண்டிருந்தன. நீரிலிருந்து வெளிவந்த அந்த நீர்நாய் அந்த முதலைகளில் ஒன்றின் வாலைக் கடித்தது. அந்த முதலை முகத்தைத் திருப்பாமலேயே வாலை வேகமாக அப்படியும் இப்படியும் ஆட்டி அந்த நீர்நாயை நெருங்க விடாமல் செய்தது. அந்த நீர்நாயும் சற்று நேரத்தில் நீருக்குள் சென்று மறைந்தது. இது போல காவிரி ஆற்றில் உள்ள முதலையை கூட்டமாக வந்த நீர்நாய்கள் கரையிலிருந்து நீருக்குள் விரட்டியடித்த சம்பவத்தினைப் பற்றிய குறிப்பு ஒன்று உள்ளது.
இந்தியாவில் மூன்று வகையான நீர்நாய்கள் உள்ளன. நீர்நாய்களின் முக்கிய உணவு மீன்களே. இதனால் ஆறு, ஏரி, நீர்த்தேக்கங்களில் மீன்பிடிப்போர்களுக்கு இவை தொந்தரவு கொடுக்கும் பிரணிகளாக கருதப்படுகின்றன. இதனால் இவை அவ்வப்போது கொல்லப்படுகின்றன. ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டுவதாலும், ஆற்றின் இயற்கையான போக்கை மாற்றியமைப்பதாலும், ஆற்று மணலை சுரண்டுவதாலும், இரசாயன கழிவுகளையும், ஏனைய கழிவுகளையும் ஆற்றில் கொண்டு சேர்ப்பதாலும், வேட்டு வைத்து மீன் பிடிப்பதாலும் (Dynamite fishing), வியாபார நோக்கத்தில் நம் நாட்டிற்குச் சொந்தமில்லாத மீன் வகைகளை (Invasive fishes)ஆற்றில் விட்டு வளர்ப்பதாலும், ஆற்றின் தன்மை சீர்கெட்டுப் போகிறது. நிலப்பகுதிகளில் இருக்கும் வனத்தை அழித்தால் அதன் விளைவையும், ஏற்பட்டிருக்கும் பாதிப்பையும் நாம் கண்கூடாகக் காண முடியும். எனினும் ஆற்றுக்கு நாம் இழைக்கும் பல கொடுமைகளை ஆறு பலவேளைகளில் வெளிப்படையாகக் காட்டிக்கொள்வதில்லை. ஆறு பல உயிரினங்களின் வாழிடம். ஆறு சீரழிக்கப்பட்டால் நீர்நாய்கள், முதலைகள், மேலும் ஆற்றைச் சார்ந்துள்ள இன்னும் பல உயிரினங்கள் வெகுவளவில் பாதிக்கப்படுகின்றன.
வாழிடச்சிதைவினால் ஒரு பக்கம் நீர்நாய்கள் பாதிப்படைந்தாலும், அவற்றை அழிவின் விளிம்பிற்குத் தள்ளுவது கள்ளவேட்டையே. அவற்றின் தோலுக்காக (pelt) இவை பெருமளவில் கொல்லப்படுகின்றன. நவநாகரிக ஆடை வடிவமைப்போர், பல மேல்தட்டு மக்கள் மற்றும் சில பாப் பாடகிகள் (ஜெனிபர் லோபஸ்-Jenifer Lopez போன்றவர்கள்) நீர்நாய், மின்ங் (Mink) முதலிய பல உயிரினங்களில் தோலினால் ஆன உடைகளை விரும்பி அணிகின்றனர். இதனால் கள்ளச் சந்தையில் நீர்நாய்களின் தோலுக்கு மதிப்பு அதிகம். இந்தியாவில் கொல்லப்படும் நீர்நாய்களின் தோல் கான்பூர், லக்னோ, கோட்டா, கொல்கத்தா, பெங்களூரு, டெல்லி முதலிய நகரங்களில் உள்ள கள்ளச் சந்தையில் விலை போகின்றன. இங்கிருந்து நேபாளம், வங்காளதேசம் முதலிய நாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட்டு அங்கிருந்து உலகின் பல மூலைகளுக்கு கள்ளத்தனமாக கொண்டு செல்லப்படுகின்றன.
இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களின் சந்திப்பில் அமைந்துள்ள தேசிய சம்பல் நதி சரணாலயத்தில் ஒரு காலத்தில் ஆற்று நீர்நாய்களைப் பொதுவாகக் காணமுடியும். அங்கு அவற்றினைப் பற்றிய ஆராய்ச்சியும் நடைபெற்றது. ஆனால் இன்று அங்கு ஒரு நீர்நாய்கூட இல்லை. ஆறு, ஏரி முதலிய நீர்நிலைகளின் சீரழிவை சுட்டிக்காட்டும் தூதுவர்களாக (Ambassador of wetlands) நீர்நாய்கள் கருதப்படுகின்றன. ஏனெனில் நீர்நாய்கள் நீர்நிலைகளின் ஒரு முக்கிய இரைகொல்லி (predator). அவற்றை ஒரு இடத்தில் கண்டால் அந்த நீர்ச்சூழல் ஓரளவிற்கு சீர்கெடாமல் இருக்கிறது என அர்த்தம். நீர்நாய்கள் இல்லாத ஒரு நீர்நிலை, புலிகள் இல்லாத வனப்பகுதிக்குச் சமம்.
பெட்டிச் செய்தி
நீர்நாய்கள் நீரிலும் நிலத்திலும் வாழ்வதற்கான தகவமைப்பைப் பெற்றுள்ளன. நீண்ட, மெல்லிய, நீந்தும் போது குறைந்த எதிர்ப்பைத் தரும் உடலமைப்பையும், விரலிடைத்தோலுடன் கூடிய கால்களையும் பெற்றுள்ளன. அடர்த்தியான உரோமத்தால் உடல் போர்த்தப்பட்டிருக்கும். ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகாவைத் தவிர உலகெங்கும் பரவலாக காணப்படுகின்றன.

1. ஆற்று நீர்நாய் (Photo: Kalyan Varma) 2. காட்டு நீர்நாய் (Photo: Kalyan Varma) 3. யூரேசிய நீர்நாய் (Photo: Wikipedia)
இந்தியாவில் மூன்று வகையன நீர்நாய்கள் தென்படுகின்றன. ஆற்று நீர்நாய் (Smooth-coated otter Lutrogale perspicillata), காட்டு நீர்நாய் (Oriental small-clawed otter Aonyx cinerea), மற்றும் யூரேசிய நீர்நாய் (Common otter Lutra lutra). யூரேசிய நீர்நாய் உலகில் பல பகுதிகளில் பரவி காணப்படுகிறது. அதிகாலை அல்லது அந்திவேளையில் இந்நீர்நாய்களின் இயக்கம் உச்சநிலையை அடைகிறது. ஆற்று நீர்நாய் இந்தியாவின் பெரும்பாலான இடங்களிலும், பாலஸ்தீனம், மலேசியா, சுமத்ரா, ஜாவா மற்றும் போர்னியோ ஆகிய பகுதிகளிலும் பரவி காணப்படுகின்றன. ஈராக்கிலும் சிறு எண்ணிக்கையில் இவை உள்ளன. சமவெளிகளிலும், வறண்ட பிரதேசங்களிலும் தென்படும். இவற்றை கழிமுகப் பகுதிகள், நீர்த்தேக்கங்கள், பெரிய ஏரிகள், ஆறுகள் போன்ற பகுதிகளில் பல வேளைகளில் கூட்டம் கூட்டமாக பார்க்க முடியும். பெரும்பாலும் பகலிலோ, அந்திக் கருக்கலிலோ இவை வெளிவரும். யூரேசிய மற்றும் ஆற்று நீர்நாய்களின் பிரதானமான உணவு மீன்களே. காட்டு நீர்நாய் சிறியது. ஏனைய நீர்நாய்களின் அளவில் பாதி இருக்கும். ஆற்று நீர்நாய் பரவியுள்ள பகுதிகளிலும் இந்த நீர்நாய் தென்படும். இது ஒரு இரவாடி. இவை பொதுவாக மலைப்பாங்கான வனப்பகுதிகளில் உள்ள நீரோடைகளில் வசிக்கின்றன. இவை ஏனைய நீர்நாய்களைப் போல் மீன்களை மட்டுமே உண்ணாமல், நீர்வாழ் பூச்சிகள், தவளைகள், நத்தைகள், இறால்கள், சிறிய மீன்கள் முதலியவற்றை உணவாகக் கொள்கின்றன.
******
தி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 4th November 2014 அன்று வெளியான கட்டுரையின் முழுப் பதிப்பு. அக்கட்டுரையை இங்கே காணலாம். அதன் PDF ஐ இங்கே பெறலாம்.