Posts Tagged ‘Asian elephant’
இது ஒரு நல்ல வாய்ப்பு – ஒலி வடிவம்
தி இந்து தமிழ் செய்த்தித்தாளின் உயிர்மூச்சு இணைப்பிதழில் 4-4-2020 அன்று வெளியான கட்டுரையின் முழுப்பதிப்பு ஒலி வடிவில்.
இந்தக் கட்டுரையை ஒலிவடிவில் பேசித் தந்த மேகலா சுப்பையாவுக்கும், காணொளி ஆக்கித் தந்த வெ. இராஜராஜனுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
பின்னணி இசை உபயம்
Naoya Sakamata – Dissociation” is under a Creative Commos license (CC BY 3.0). Music promoted by BreakingCopyright: http://bit.ly/2PjvKm7
“Steffen Daum – Goodbye My Dear” is under a Creative Commons license (CC-BY 3.0) Music promoted by BreakingCopyright: https://youtu.be/X7evDQiP3yI
பறவைகளின் குரலோசை ஒலிப்பதிவு
குயில் (ஆண்) – Peter Boesman, XC426536. Accessible at www.xeno-canto.org/426536.
குயில் (பெண்) – Mandar Bhagat, XC203530. Accessible at www.xeno-canto.org/203530
காகம் – Vivek Puliyeri, XC191299. Accessible at www.xeno-canto.org/191299.
சிட்டுக்குருவி – Nelson Conceição, XC533271. Accessible at www.xeno-canto.org/533271
செண்பகம் – Peter Boesman, XC290517. Accessible at www.xeno-canto.org/290517
செம்மூக்கு ஆள்காட்டி – AUDEVARD Aurélien, XC446880. Accessible at www.xeno-canto.org/446880.
இது ஒரு நல்ல வாய்ப்பு
இது ஒரு நல்ல வாய்ப்பு. நமக்காக, நாமே ஏற்படுத்திக் கொண்ட வாய்ப்பு.
உறவுகளைப் புதுப்பிக்க, மேம்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பு. இயற்கையுடனான நமக்குள்ள உறவுகளைச் சொல்கிறேன். எவ்வளவு அமைதியாக இருக்கிறது? இதற்கு முன் அனுபவிக்காத அமைதி. எப்போதும் இப்படியே இருந்துவிடாதா என ஏங்க வைக்கும் அமைதி. இத்தனை காலமாக எவ்வளவு இரைச்சல்களை கேட்டுக்கொண்டிருந்தோம்? நாம் வகுத்து வைத்த எல்லைகளில் போரிட்ட இரைச்சல், தரையின் அடியிலும், கடலின் அடியிலும் அணுகுண்டை வெடிக்க வைத்த போது ஏற்பட்ட இரைச்சல், மலைகளை வெடி வைத்துத் தகர்த்ததனால் எழுப்பிய இரைச்சல், கனரக வாகனங்கள் காட்டை அழிக்கும் போது எழுந்த இரைச்சல், மதப் பண்டிகைகள், கேளிக்கைகள் என நாம் ஏற்படுத்திக் கொண்ட இரைச்சல் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

Atomic bombing Nagasaki (Photo: Wikimedia commons) | A 21 kiloton underwater nuclear weapons effects test (Photo: Wikimedia Commons)
இந்த இரைச்சலை எல்லாம் சகித்துக் கொண்டு, இவற்றிலிருந்து கொஞ்ச நாட்களாவது விலகி இருக்க வேண்டுமென, அமைதியான இடங்களுக்குச் சென்றதும், அங்கு சென்றும் இரைச்சலை ஏற்படுத்தியது இப்போது நினைவுக்கு வருகிறதா? தேடிச்சென்ற அமைதி இப்போது தேடாமலேயே வந்துவிட்டது. அதை அனுபவிக்க வேண்டாமா? இத்தனை நாட்களாக நமது காதுகளை நாமே செவிடாக்கிக் கொண்டும், நம்மைச் சுற்றியிருந்த பல உயிரினங்களின் குரல்வளைகளை நெரித்து, அவற்றை பேசவிடாமலும் செய்து கொண்டிருந்தோம். நம் உலகம் வாயை மூடிக்கொண்டிருக்கும் போது நாமிருக்கும் உலகின் குரலை கேட்க எவ்வளவு நன்றாக இருக்கிறது?
இன்று காலை வீட்டினருகில் ஒரு அணில் ஓயாமல் கத்திக் கொண்டே இருந்தது. ஆண் குயில் தூரத்தில் கூவியது. பெண் குயில் வீட்டின் அருகில் இருந்த வேப்ப மரத்தில் இருந்து கெக்… கெக்… கெக்… என கத்தியது. ஆண் குயில் கருப்பு. பெண் குயில் உடலில் பழுப்பும் வெள்ளைப் புள்ளிகளும் இருக்கும். இவற்றின் நிறம் மட்டுமல்ல எழுப்பும் குரலொலியும் வேறு. காகங்கள் கரைந்தன. தெருமுனையில் சிட்டுக்குருவிகள் கத்திக்கொண்டிருந்தன. பொதுவாக வீட்டின் முகப்பில் இருந்தோ, மொட்டை மாடியில் இருந்தோ அவை இருக்கும் திசை நோக்கி பார்த்தால் மட்டுமே தென்படும். இதுவரையில் வீட்டினுள் இருந்தபடி அவற்றின் குரலை கேட்டதில்லை. ஆனால் இன்று கேட்டது. தூரத்தில் செண்பகம் ஒன்று ஊப்..ஊப்..ஊப்..என தொடந்து கத்திக் கொண்டிருந்தது. இந்தப் பறவை இப்பகுதியில் இருப்பதை இன்றுதான் அறிய முடிந்தது. அந்தி சாயும் வேலையில் ஒரு செம்மூக்கு ஆள்காட்டி வீட்டின் மேல் பறந்து கொண்டே கத்துவது கேட்டது. வீட்டுச் சன்னலில் இருந்து பார்த்த போது சப்போட்டா மரத்தில் இருந்து வௌவால்கள் இரண்டு பறந்து சென்றன. இவர்கள் யாவரும் என் தெருக்காரர்கள், அண்டை வீட்டுக்காரர்கள். இந்த அமைதியான தருணம், இவர்களையெல்லாம் அறிந்துகொள்ளும் ஒரு வாய்ப்பாக அமைந்தது.
சில உறவுகைளை களைவதற்கும் கூட இது ஒரு நல்ல வாய்ப்பு. நமக்கும் குப்பைகளுக்கும் இடையேயான உறவைச் சொல்கிறேன். ஒவ்வொரு நாள் காலையிலும், தெருவில் அந்த வயதான பெண்மணி நான்கு பெரிய ட்ரம்களைக் கொண்ட வண்டியை தள்ளிக்கொண்டு வருவார். ஒவ்வொரு நாளும் வீட்டு குப்பை டப்பாவும் நிரம்பி வழியும். அதில் பிளாஸ்டிக் குப்பை, காய்கறி கழிவு எல்லாம் சேர்ந்தே இருக்கும். ஆனால் கடந்த சில நாட்களாக குப்பை டப்பா நிரம்புவதே இல்லை. நொறுக்குத்தீனி இல்லை, ஆகவே பிளாஸ்டிக் குப்பையும் இல்லை. அப்படியே இருந்தாலும், அதிகம் சாப்பிட்டால் பருமன் அதிகரிக்கும் எனும் கவலையால், வாயைக் கட்டவும் கற்றுக் கொண்டாகிவிட்டது. வெளியில் செல்வது சரியல்ல என்பதால் ரசத்தில் மூன்று தக்காளிக்கு பதிலாக ஒன்று மட்டுமே. அதிகம் ஆசைப்படாமல், மேலும் மேலும் வேண்டும் என எண்ணாமல், இருப்பதை வைத்து சமாளிக்க, சிறியதே அழகு, குறைவே நிறைவு என்பதை இந்த அமைதியான நேரம் கற்றுத் தந்திருக்கிறது.
மற்றவர்களின் துயரங்களை உற்று நோக்கவும், அவர்கள் நிலையில் நம்மை வைத்து நினைத்துப் பார்க்கவும் இது ஒரு நல்ல வாய்ப்பு. வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பது எவ்வளவு கொடுமையாக இருக்கிறது. உயிரியல் பூங்காக்களில் சிறிய கூண்டில் புலி ஒன்று ஓயாமல் அங்குமிங்கும் திரும்பித் திரும்பி நடந்து கொண்டே இருந்ததும், கோயிலில் சங்கிலியால் கட்டிவைக்கப்பட்ட யானை இடைவிடாமல் தலையையும், தும்பிக்கையையும் மேலும் கீழும் ஆட்டி, கால்களை மாற்றி மாற்றி வைத்துக் கொண்டே இருந்ததும் நினைவுக்கு வந்தது. இது மன அழுத்தத்தால் ஏற்படும் விளைவு. என் வீட்டு சன்னல் வழியாகப் பார்த்தால் பக்கத்து வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் வளர்ப்புக் கிளிகளின் கூண்டு தெரியும். வெகுதொலைவில் இருந்து, அமேசான் காடுகளில் இருந்தோ, ஆஸ்திரேலியாவிலிருந்தோ நம்மால் கடத்திக் கொண்டுவரப்பட்டவை அவை. வளர்ப்பு உயிரிகளின் நேசம் காரணமாக ஏற்பட்ட கள்ள சந்தையின் விளைவு. ஒவ்வொரு முறை நாம் கடைக்குச் சென்று அழகாக இருக்கிறதென்று கிளிகளை வாங்கி வரும் போது, நாமும் அந்தக் கள்ளச் சந்தையை ஊக்குவிக்கிறோம்.
கூண்டுக்குள் மட்டும்தான் அடைத்து வைத்திருக்கிறோமா? நம்மைத் தவிர இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் சுதந்திரமாக உலவ விடாமல், ஒடுக்கியுமல்லவா வைத்திருக்கிறோம். காபி, தேயிலை, யூக்கலிப்டஸ் என ஓரினப்பயிர்களை வளர்க்க, அகலமான சாலைகளை, இரயில் பாதைகளை அமைக்க, உயர் அழுத்த மின் கம்பிகளை கொண்டுசெல்ல, இராட்சத நீர் குழாய்களையும், கால்வாய்களையும் கட்ட, நகரங்களை விரிவாக்கி கட்டடங்களை எழுப்ப, மலைகளை வெட்டி, காடுகளைத் திருத்தி இயற்கையான வாழிடங்களை துண்டு துண்டாக்கி, அங்கு வாழும் யானைகள், சிங்கவால் குரங்குகள், மலையணில்கள், பறவைகள், சின்னஞ்சிறிய தவளைகள் முதலான பல உயிரினங்களின் வழித்தடத்தை மறித்தும், அவற்றின் போக்கை மாற்றியும், அவற்றில் பலவற்றை பலியாக்கிக் கொண்டுமல்லவா இருக்கிறோம். வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் போது நம்மால் அடைத்து வைக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட உயிரினங்களின் நிலையையும் சற்றே உணர இது ஒரு நல்ல வாய்ப்பு.
ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, அனுசரித்து நடக்கவும், சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொள்ளவும் இது ஒரு நல்ல வாய்ப்பு. நான் புரிந்து கொள்ளச் சொல்வது நாம் ஆக்கிரமித்த பகுதியில் ஏற்கனவே வசித்து வந்த உயிரினங்களை, அவற்றின் குணாதிசயங்களை. எத்தனை யானைகளை பிடித்து கட்டிவைத்திருப்போம், எத்தனை சிறுத்தைகளை ஓரிடத்தில் பிடித்து வேறு இடங்களில் விட்டு விட்டு வந்திருக்கிறோம்? எத்தனை மயில்களை நஞ்சிட்டுக் கொன்றிருப்போம்? எத்தனை பாம்புகளை அடித்தே சாகடித்திருப்போம்? சினிமாவில் நிகழ்வது போல் எந்த காட்டுயிரியும் நம்மை துரத்தித் துரத்தி வந்து கொல்வதில்லை. “துஷ்டரைக் கண்டால் தூர விலகு” என்பது போல அவை நம்மைக் காணும் போதெல்லாம் விலகியே செல்ல முற்படும் என்பதை நாம் அறியவேண்டும். எதிர்பாராவிதமாக நாம் அவற்றின் அருகில் செல்ல நேர்ந்தால் ஏற்படும் அந்த அசாதாரணமான சந்திப்பில், பயத்தில் அவை தாக்க நேரிட்டு மனிதர்கள் காயமுறவோ, இறக்கவோ செய்யலாம். ஆறறிவு கொண்ட நாம் கவனமாக இருக்க வேண்டாமா? எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டாமா? கண்ணுக்குத் தெரியாத ஒரு நுண்ணுயிரி அது நம் மேல் வராமல் இருக்க வேண்டும் என்பதற்காக எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறோம், அதுபோல காட்டுயிர்கள் வாழும் பகுதியில் நாமும் வாழ நேர்ந்தால் நாம் தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நாம் வீட்டுக்குள்ளேயே இருக்கும் போது வீட்டில் இருப்பவர்களிடம் எவ்வளவு கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள். இருந்தாலும் அவர்களை எல்லாம் வீட்டை விட்டு விரட்டிவிடுகிறோமா? அல்லது கண்காணாத இடத்தில் விட்டுவிட்டு வருகிறோமா? எனவே, எல்லா உயிரினங்களுடனும் எச்சரிக்கையுடன், சரியான இடைவெளியில் சேர்ந்து வாழ பழகிக்கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு.

Coronavirus – Photo: Wikimedia Commons
யாரையும் குற்றம் சொல்லாமல் இருக்கக் கற்றுக்கொள்ள, இது ஒரு நல்ல வாய்ப்பு. வைரஸை தமிழில் தீநுண்மி என்கின்றனர். ஒரு உயிரினம் என்ன செய்ய வேண்டுமோ, அதாவது, நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோமோ அதைத்தான் அதுவும் செய்கிறது. பல்கிப்பெருகிக்கொண்டுள்ளது, நாம் வளர எத்தனையோ வகையான உயிரினங்களை அழிக்கிறோம்? நமக்கு என்ன பெயர்? மனிதர்கள் என்பதை மாற்றி தீயவர்கள் என வைத்துக் கொள்ளலாமா?
இந்த அமைதியான நேரத்தில் இனிவரும் காலங்களில் இந்த உலகிற்கும், நமக்குமான உறவு எப்படி இருக்க வேண்டும் என எண்ணிப்பார்க்க, என்ன செய்ய வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள, சிந்திக்க, அதை எப்போது, எப்படிச் செய்ய வேண்டும் எனத் திட்டமிட, இது ஒரு நல்ல வாய்ப்பு.
—
தி இந்து தமிழ் செய்த்தித்தாளின் இணைப்பிதழில் 4-4-2020 அன்று வெளியான கட்டுரையின் முழுப்பதிப்பு https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/547821-good-chance.html
வன உயிரின வார துவக்க விழா-2015, திருப்பூர் – சில பதிவுகள்
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் வாரம் இந்தியாவில் வன உயிரின வார விழாவாக கொண்டாடப்படுவது நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கும். இந்த ஆண்டு திருப்பூரில் 02-09-2015 அன்று, வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் நடந்த அதற்கான துவக்க விழாவிற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
வன உயிரின வார விழா கொண்டாட்டம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. ஒரு பெரிய அறையில் காட்டுயிர் பேணலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அரசு சாரா இயக்கங்களின் செயல் திட்டங்களை விவரிப்பதற்காகவும், ஆனைமலை, முதுமலை மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகங்களுக்காகவும் தனித்தனியாக அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. கோவையைச் சேர்ந்த ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் விளாக்கவுரைகளுடன் கூடிய காட்டுயிர் படக் கண்காட்சியும் அதே அறையில் வைக்கப்பட்டிருந்தது. மற்றொரு பெரிய கலையரங்கத்தின் மேடையில் கலை நிகழ்ச்சிகளும், சிறப்பாக பணிபுரியும் வனத்துறை அதிகாரிகளுக்கும், வன உயிரின வார போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குதலும் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
காலையில் அரங்கின் உள்ளே நுழைந்தவுடனே ஒரு வேதனையான நிகழ்வைப் பார்க்க நேர்ந்தது. வாசலில் ஒரு கூட்டம் எதையோ சூழ்ந்து, வேடிக்கைப் பார்த்துக்கொண்டும், போட்டோ எடுத்துக்கொண்டும் இருந்தது. உள்ளே எட்டிப் பார்த்தேன்; பெரிய கூண்டு தென்பட்டது. புலி வேடமணிந்த ஒருவர் அதனுள்ளே மண்டியிட்டு நடந்து சென்றவுடன் கூண்டின் கதவு பலத்த ஓசையுடன் மூடிக்கொண்டது. சுற்றி நின்றவர்கள் சிரித்தும், கைகொட்டியும் ஆர்ப்பரித்தனர். இத்தகைய செயல்பாடுகள், வனத்துறையினர் இது போன்ற வேலைகளை மட்டுமே செய்வார்கள் என்கிற ஒரு தவறான எண்ணத்தைத் தந்துவிடும்.
காட்டுயிர்களுக்கு மனிதனால் வரையறுக்கப்பட்ட எல்லைகள் கிடையாது, பல உயிரினங்கள் மனிதனின் செயல்களால் அழிந்தும், அற்றும் போய்க்கொண்டிருக்கின்றன, காட்டுயிர்களையும், அவற்றின் வாழிடங்களையும் பாதுகாப்பது நாம் அனைவரின் கடமை, இதற்காக பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன? திருட்டு வேட்டையில் ஈடுபடுவோரை பிடிக்க எப்படி பொதுமக்கள் வனத்துறைக்கு உதவி செய்யலாம் என்பதைப் பற்றியெல்லாம் படங்கள், திரைப்படங்கள், நாடகம் மூலமாக பார்வையாளர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இவை யாவும் புலி எப்படி கூண்டு வைத்து பிடிக்கப்படுகிறது என்று விளக்கிச் சொல்வதைக் காட்டிலும் மிகவும் அவசியமானதும், முக்கியமானதும் ஆகும்.
கலை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்த அரங்கிற்குள் சென்று பார்த்தேன். ஒலிபெருக்கியின் ஓசை காதைக் கிழித்தது, சற்று நேரத்திலேயே வெளியே வந்து விட்டேன். அரங்கின் பின் பக்கத்திற்குச் சென்ற போது பள்ளி மாணவ மாணவியர் புலி, மயில், மரம் என பலவித வேடங்களில் அவர்களது நிகழ்ச்சிகளுக்காக தயாராகிக் கொண்டிருந்தனர். மயில் வேடமனிந்தவர்கள் உண்மையான மயில் தோகையை அணிந்திருந்தனர். இவை எப்படி, எங்கிருந்து வந்தது என்பதை அவர்கள் அறிந்திருப்பார்களா?
அரங்குகள் நிறைந்த அறைக்குள் நுழைந்து பார்வையிட்டேன். வனத்துறை மற்றும் இயற்கை பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும் நண்பர்கள் பலரை ஒரே இடத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த அறையின் நடுவிலும் ஒரு சிறிய கூண்டையும், அதன் மேலே ஒரு பெரிய புலி பொம்மையையும் பார்வைக்கு வைத்திருந்தனர். என்ன சொல்ல வருகிறார்கள் என்பதே புரியவில்லை. அந்தப் பொம்மைப் புலியைச் சுற்றிக் கூட்டம் கூடுவதும் கலைவதுமாக இருந்தது. பெரும்பாலானோர் அந்த பொம்மைப் புலியை தொட்டுப் பார்த்துக் கொண்டும், அதனருகில் நின்று கைபேசியில் படமெடுத்துக் கொண்டும் இருந்தனர்.
ஒரு அரங்கில் சிறுத்தையை வலையை வைத்துப் பிடிக்கும் காட்சியைத் தொடர்ந்து ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர். பார்க்கப் பாவமாக இருந்தது. உயிரினங்கள் பிடிக்கப்படுவது போன்ற காட்சிகளை மட்டுமே தொடர்ந்து ஒளிபரப்பாமல், மனித காட்டுயிர் எதிர்கொள்ளலை சமாளித்தல் பற்றிய படங்களையும், இது போன்ற நிகழ்வுகளுக்கான காரணங்களை விளக்கும் காட்சிகளையும் சேர்த்து திரையிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
வனப்பகுதியை ஒட்டிய சில இடங்களில் எதிர்பாரா விதமாக மனிதர்கள் வசிக்கும் பகுதியில் நுழைந்து விட்ட காட்டுயிர்களை யாருக்கும் (அந்த உயிரினத்திற்கும், அங்குள்ள மனிதர்களுக்கும்) தொந்தரவு ஏற்படாத வண்ணம் பிடிப்பதும், விரட்டிவிடுவதும் சில வேளைகளில் அவசியமாகிறது. ஆனால் அவற்றை பிடிப்பதும், விரட்டுவதும் மட்டுமே மனித-காட்டுயிர் எதிர்கொள்ளலை சமாளிக்க நிரந்தரத் தீர்வாகிவிடாது. வனப்பகுதிகளின் அருகாமையில் வாழ்பவர்களுக்கு காட்டுயிர்களின் குணங்களையும், அவை குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் அடிக்கடி நடமாடாமல் இருக்க நாம் செய்ய வேண்டியவைகளையும் எடுத்துச் சொல்வது அவசியம். மனிதர்-சிறுத்தை எதிர்கொள்ளலை சமாளிக்க எடுக்க வேண்டிய சில செயல் முறைகளை இந்த விளக்கச் சுவரொட்டிகளில் காணலாம்.
வால்பாறையில் பல வழிகளில் மனிதர்-யானை எதிர்கொள்ளலை குறைக்க/சமாளிக்க பாடுபட்டுக் கொண்டிருக்கும் எனது நண்பர் முனைவர் ஆனந்தகுமாரின் செயல் திட்டங்களை விளக்கும் குறும்படத்தை இந்த விழாவில் திரையிடவும், ஒரு விளக்கச் சுவரொட்டியை அங்கே காட்சிக்கு வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேர மாறுதல்களால் அக்குறும்படம் திரையிடப்படவில்லை. வால்பாறையில் யானைகளும் மனிதர்களும் ஒத்திசைந்து வாழ வழிசெய்யும் முன்னறிவிப்பு முறைகளை விளக்க வனத்துறை தனியாக ஒரு அரங்கையே அமைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

யானை ஆராய்ச்சியாளர் அஷ்வினும், திட்ட உதவியாளர் சதீஷும் மின்னும் சிவப்பு விளக்கினைப் பற்றி பார்வையாளார்களுக்கு விளக்குகின்றனர்.
யானை-மனிதர் எதிர்கொள்ளலை சமாளிக்கும் இந்த முக்கியமான திட்டத்தினைப் பற்றிய விளக்கச் சுவரொட்டியைக் கீழே காணலாம். திரையில் பெரிதாகப் பார்க்க அதன் மேலே சொடுக்கவும்.
புலிகள் காப்பக அரங்குகளில் பாடம்செய்யப்பட்ட சில காட்டுயிர்களை பார்வைக்கு வைத்திருந்தனர். முதுமலை புலிகள் காப்பகத்தின் அரங்கில் பார்த்த காட்சி என் மனதை கலக்கமடையச் செய்தது. பாடம்செய்யப்பட்ட சிறுத்தை, யானைக் குட்டி, அலங்கு இரண்டு கரடிக் குட்டி ஆகிய உயிரினங்களை வனச்சூழலில் இருக்குமாறு அமைத்திருந்தனர். தத்ரூபமாக காட்சியளிக்க இயற்கையான சூழலில் இருந்தே தாவரங்களை எடுத்து வந்து அங்கு அலங்காரப் படுத்தியிருந்தார்கள். அழகிய பெரணிச் செடிகள் (தகரை – Ferns), மரங்களில் படர்ந்திருக்கும் பாசிச் செடிகள் (Moss), மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் உயரமான பகுதிகளில் மட்டுமே தென்படும் மலைப்பூவரசு (Rhododendron), சேம்பு வகைச் செடி (Arisaema), தரையில் வளரும் ஆர்கிடு (Orchid) முதலிய தாவரங்களை பார்க்க முடிந்தது. இது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.
கோவையைச் சேர்ந்த ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் கானுயிர் படக்கண்காட்சி அருமையாக இருந்தது. வெறும் படங்களை மட்டுமே காட்சிக்கு வைக்காமல் விளாக்கவுரைகளையும் இடையிடையே வைத்திருந்தார்கள். வனப்பகுதியைப் பிளந்து அமைக்கப்படும் சாலைகளினால் காட்டுயிர்களுக்கு ஏற்படும் ஒரு முக்கியமான பாதிப்புகளில் ஒன்று அங்கே சீறி வரும் வாகனங்களில் அடிபட்டு சாலைப்பலியாதல் (Roadkill). அதைப்பற்றிய விளக்கப்படங்கள் வைக்கப்பட்டிருந்தது.
மேற்குத் தொடர்ச்சி மலை – நம் நதிகளின் தாய்மடி எனும் தலைப்பில் ஒரு நதி எப்படி உற்பத்தியாகும்? எனும் படங்களுடன் கூடிய விளக்கவுரை அருமை. தமிழகத்தில் தென்படும் வண்ணத்துப்பூச்சிகளின் படங்களும், குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மட்டுமே தென்படும் ஓரிடவாழ் வண்ணத்துப்பூச்சிகளின் (Endemic butterflies) படங்களையும் காட்சிக்கு வைத்திருந்தனர். படங்களில் ஆங்கிலப் பெயர் மட்டுமே இருந்தது. வண்ணத்துப்பூச்சிகளுக்கு இப்போது தமிழிலும் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது, அவற்றையும் இது போன்ற படங்களில் சேர்க்க வேண்டும். காண்க “வண்ணத்துப்பூச்சிகள் – அறிமுகக் கையேடு”.
தமிழகத்தில் காட்டு ஆராய்ச்சி, இயற்கைப் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபட்டுக்கொண்டுள்ள பல அரசு சாரா நிறுவனங்களின் (WWF-India, Zoo Outreach Organization, Wildlife & Nature Conservation Trust, SACON, Kenneth Anderson Nature Society, Traffic India, Keystone Foundation, Arulagam Trust, Nature Society of Tirupur.) அரங்குகள் பல இருந்தன.
பாறு கழுகுகளின் (Vultures – பிணந்தின்னிக் கழுகுகள்) பாதுகாப்பிற்காக பாடுபட்டு வருபவர்கள் அருளகம் அமைப்பைச் (Arulagam Trust) சேர்ந்தவர்கள். பாறு இனப் பறவைகள் பல அழிவின் விளிம்பில் இருக்கின்றன. ஒரு காலத்தில் வானமெங்கும் கூட்டம் கூட்டமாக பறந்து திரிந்த அவை, எண்ணிக்கையில் 99% அழிந்து போய்விட்டது. குறிப்பாக Gyps வகை பாறுகள். காரணம் Diclofenac எனும் கால்நடைகளுக்கான வலிநீக்கி மருந்து. உடல் வலிக்காக செலுத்தப்படும் இம்மருந்து அக்கால்நடை இறந்த பின்னும் அதன் உடலின் உள்ளுறுப்புகளில் தங்கி விடுகிறது. அதை உண்ணும் பாறுகளுக்கு அம்மருந்து நஞ்சாகிறது. ஆகவே தான் பாறுகள் எண்ணிக்கையில் குறைந்து பல இடங்களிலிருந்து அற்றும் போய்விட்டன. தற்போது Diclofenac இந்திய அரசால் தடை செய்யப்பட்டு விட்டது. எனினும் இந்த மருந்து இன்னும் புழக்கத்தில் தான் இருக்கிறது.
பாறு கழுகுகள் இறப்பதற்கான காரணம், Diclofenac மருந்தின் விளைவு, இயற்கையாக இறந்த உயிரினங்களை புதைக்காமல் இருத்தலின் நன்மை இவற்றையெல்லாம் மையக்கருத்தாக வைத்து ஒரு அருமையான பரமபத விளையாட்டை உருவாக்கியிருந்தனர் அருளகம் அமைப்பினர். பள்ளி மாணவர்கள் தாயக்கட்டைகளை உருட்டி விளையாட, ஒவ்வொரு நகர்விலும் பாறு கழுகின் பாதுகாப்பினைப் பற்றி அறிந்து கொள்ள ஏதோ ஒரு தகவல் அச்சிடப்பட்டிருந்தது. அதை அருளகம் அமைப்பினர் விளையாடுவோருக்கு விளக்கிக் கொண்டிருந்தனர். பார்வையாளர்களை ஈடுபடுத்தி, அவர்களாகவே ஒரு தகவலை அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் இது போன்ற விளையாட்டுகள் இவ்வகையான நிகழ்ச்சிகளில் பெருக வேண்டும்.
காட்டுயிர்களை திருட்டு வேட்டையாடி அவற்றின் பாகங்களை அல்லது அவற்றை உயிருடன் கடத்தப்படுவதைக் கண்கானித்து, அது பற்றிய தகவல்களை சேகரித்து இது போன்ற செயல்களை கட்டுப்படுத்த அரசுக்கு தகவல் அளித்து உதவும் ஒரு அரசு சாரா நிறுவனம் Traffic India. இவர்களது அரங்கில் அலங்கினைப் பற்றிய ஒரு விளக்கச் சுவரொட்டி வைத்திருந்தனர். அதைப் படிக்கப் படிக்க வேதனையாக இருந்தது. அலங்கின் செதில்களுக்காகவும், மாமிசத்திற்காகவும் 2008-2014 வரை குறைந்தபட்சம் 3000 வரை கொல்லப்பட்டு கடத்தப்பட்டிருக்கிறது. இது ஒரு தோராயமான மதிப்பீடு தான், உண்மையான எண்ணிக்கை இதை விட அதிகமாகத்தான் இருக்கும். மேலும் விவரங்களுக்கு இப்பக்கத்தை காண்க.
அரங்கின் வெளியே மதிய உணவிற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருந்தார்கள். உயர் அதிகாரிகளுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும் அரங்கின் உள்ளே மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உள்ளேயிருந்த பிளாஸ்டிக் தண்ணீர் குப்பியும், வெளியே கிடந்த ஐஸ்கிரீம் சாப்பிடத் தந்த பிளாஸ்டிக் தட்டும், காலையில் மாணவர்களால் ஏந்தப்பட்டு மதிய வேளையில் தரையில் போடப்பட்டிருந்த வாசக அட்டைகளும், எனது கண்ணை உறுத்தியது. “Say Goodbye To plastic” என்றது ஒரு வாசக அட்டை. அரசு விழாக்களில் இது போன்ற பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக தவிர்த்தால் நன்றாக இருக்கும்.
இதையெல்லாம் பார்த்துவிட்டு வெளியே வந்த போது எதிரே ஒருவர் பல பைகளை உடைய பச்சை உடையணிந்து, அச்சிறிய பைகளில் மரக்கன்றுகளை வைத்துக் கொண்டு வளாகத்தில் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார். அவரது உடையில் “மரம் நடுவீர்!”. “நட்ட மரத்தை பாதுகாத்திடுவீர்!” எனும் வாசகங்கள் அச்சடித்து ஒட்டப்பட்டிருந்தது. அவரது அருகில் சென்று அறிமுகம் செய்து கொண்டேன். என் பெயர் ‘மரம் அய்யப்பன்’ என்றார். மரத்தை தன் உடலில் மட்டுமல்ல பெயரிலும் தாங்கிக் கொண்டிருப்பவர். மரக்கன்றுகளின் பாரத்தைத் தாங்கிக் கொண்டு ஆடி அசைந்து நடந்து சென்றார். வேடிக்கையான தோற்றத்தில் இருந்த அவரை அனைவரும் திரும்பிப் பார்த்து புன்னகை புரிந்தனர். சிலர் அவரைத் தேடிச் சென்று பாராட்டினர்.
Wildlife Week Celebration என்பதைத்தான் வன உயிரின வாரவிழா என தமிழில் சொல்கிறோம். Wildlife எனும் ஆங்கிலச் சொல்லின் அர்த்தம் வனத்தில் இருக்கும் உயிரினங்களை மட்டுமே குறிப்பது அல்ல. நம் வீட்டின் உள்ளே இருக்கும் பல்லி, நாம் தெருவில் பார்க்கும் காகம், வீட்டுத் தோட்டத்தில் வளரும் புற்கள், அதில் இருக்கும் சிறிய பூச்சி இவையனைத்தும் கூட Wildlifeல் அடக்கம். வன உயிரின வாரவிழா எனும் பெயரை மாற்றி புறவுலகைப் போற்றும் வாரவிழா எனக் கொண்டாட வேண்டும். புறவுலகிற்கு ஏற்படும் பாதிப்புகளையும், அவற்றைத் தவிர்க்க நம்மால் செய்ய வேண்டியதையும், இயற்கை மற்றும் நமது பல்லுயிர் வளத்தினைப் பற்றி அறிந்து கொள்ளவும், அவற்றைப் போற்றவும் இது போன்ற நிகழ்ச்சிகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த ஒரு வார காலத்தில் பெற்ற படிப்பினையை வாழ்நாள் முழுவதும் அனைவரின் ஞாபகத்திலும் வைத்துக் கடைபிடிக்குமாறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டும். கிடைக்கும் இந்த வாய்ப்பை அரசுத் துறைகளும், அரசு சாரா நிறுவனங்களும் சரியான முறையில் பயன்படுத்துதல் அவசியம்.
——–
9 அக்டோபர் அன்று தி ஹிந்து தமிழ், சிந்தனைக்களம், வலைஞர் பக்கத்தில் “சரியாக நடக்கின்றனவா வன உயிரின வார விழாக்கள்? எனும் தலைப்பில் வெளியான கட்டுரையின் முழுவடிவம். அதன் உரலி இங்கே. அதன் PDF இங்கே.
களக்காடு தந்த பரிசுகள்
இயற்கை ஆர்வலர்களுக்கும், காட்டுயிர் களப்பணியாளர்களுக்கும் அவசியம் இருக்க வேண்டிய பழக்கங்களில் ஒன்று அவர்கள் காண்பதை, அவதானிப்பதை களக்குறிப்பேட்டில் உடனுக்குடன் பதிவு செய்வது. எனது களக்காடு-முண்டந்துறை களக்குறிப்பேட்டை அன்மையில் திறந்து, பார்த்துக் கொண்டிருந்தேன். என் கண் முன்னே வந்தது: புலி, யானை, கரடி, கொம்பு புலி, செந்நாய், பழுப்பு மரநாய், அலங்கு, சிறுத்தைப் பூனை, வரையாடு, நீலகிரி கருமந்தி, சிங்கவால் குரங்கு, பறக்கும் அணில் மலபார் முள்வால் எலி, பெரிய இருவாசி, கருப்பு மரங்கொத்தி, காட்டுக்குருகு, கருநாகம், பறக்கும் பல்லி, பல வகையான பூச்சிகள் மற்றும் பல தாவரங்கள். குறிப்புகளைக் காணக்காண கண் முன்னே விரிந்தன பல காட்சிகள்.
****
சிலம்பனும் நானும் காட்டுப்பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தோம். வளைந்து செல்லும் அந்த தடத்தின் மறு முனையிலிருந்து ஏதோ உறுமும் ஒலி கேட்டது. இருநாட்களுக்கு முன் அப்பகுதியில் கரடிகள் இரண்டு கத்திக் கொண்டிருந்ததைக் கேட்டிருந்தோம். களப்பணி உதவியாளரான சிலம்பன், அவரிடமிருந்த அரிவாளால் வழியில் இருந்த மரங்களில் தட்டிக்கொண்டும், அவ்வப்போது கணைத்துக் கொண்டும் வந்தார். ஏதாவது ஒலி எழுப்பிக்கொண்டே நடந்தால் ஒரு வேளை ஏதெனும் பெரிய காட்டுயிர்கள் நாம் போகும் வழியில் இருந்தால், விலகிச் சென்றுவிடும். மெல்ல நடந்து முன்னேறிக் கொண்டிருந்த போது சட்டென சிலம்பன் நின்று, என்னிடம் சொன்னார், “அங்க ஏதோ நகர்ந்து போகுது, புலி மாதிரி இருக்கு” என்றார். நாங்கள் நின்று கொண்டிருந்த தடத்தின் சரிவான மேற்பகுதியில் காட்டு வாழைகள் நிறைந்த அந்த பகுதியில் சுமார் 20மீ தூரத்தில் ஒரு புலி இடமிருந்து வலமாக நடந்து சென்றது. புலியை இயற்கையான சூழலில் அப்போதுதான் நான் முதல் முறையாகப் பார்த்தேன்.
****
ஒரு நான் களப்பணி உதவியாளரான ராஜாமணியும் நானும் செங்குத்தான காட்டுப்பாதையின் மேலேறிக் கொண்டிருந்தோம். அடிபருத்த ஒரு பெரிய மரம் ஒன்று தடத்தின் நடுவில் இருந்தது. அதைச் சுற்றிலும் பழங்கள் கீழே சிதறிக் கிடந்தன. அம்மரத்தைச் சுற்றிக் கொண்டு சென்றபோது மரத்தின் பின்னால் இருந்து ஏதோ ஒரு கருப்பான காட்டுயிர் உர்ர்..என உறுமிக்கொண்டு எங்களை நோக்கி வந்தது. சட்டெனத் திரும்பி இருவரும் ஓட ஆரம்பித்தோம். உருண்டு, புரண்டு சரிவான அந்தப் பாதையின் கீழ்ப்பகுதியை வந்தடைந்தோம். பின்பு தான் உணர்ந்தோம் அது ஒரு கரடி என. கரடிகளுக்கு நுகரும் சக்தி அதிகம், எனினும் கண் பார்வையும், கேட்கும் திறனும் சற்று கம்மி. மரத்தின் கீழிருக்கும் பழங்களை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக நாங்கள் அங்கு சென்று அதை திடுக்கிடச் செய்ததால்தான் எங்களைக் கண்டு உறுமி விரட்டியிருக்கிறது.
****
காட்டுக்குள் இருந்த ஒரு கட்டிடத்தில் தங்கியிருந்து களப்பணியில் ஈடுபட்டிருந்த சமயம் அது. ஒரு நாள் மாலை யானைகளின் பிளிறல் வீட்டின் அருகில் கேட்டது. இரவானதும் வீட்டின் பின்னால் இருந்த புற்கள் நிறைந்த பகுதியில் சலசலக்கும் ஒலி கேட்டு அங்கிருந்த சன்னலைத் திறந்த போது யானைக் குட்டியொன்று நின்று கொண்டிருந்ததைக் கண்டேன். உடனே அதை மூடிவிட்டு வீட்டுக்குள் வந்துவிட்டேன். சற்று நேரத்திற்கெல்லாம் 5-6 யானைகள் வீட்டின் முன்னே வெகு அருகில் வந்து நின்றுகொண்டிருந்தன. எரிந்து கொண்டிருந்த பெட்ரோமாக்ஸ் விளக்கை (அங்கு மின்வசதிகள் கிடையாது) அணைத்துவிட்டு கண்ணாடி சன்னல்கள் வழியாக யானைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவை அனைத்தையும் தெளிவானக் காண வீட்டுக்குள் அங்குமிங்கும் நடந்ததை அக்கூட்டத்திலிருந்த ஒரு யானை கேட்டிருக்க வேண்டும். உடனே நான் இருக்கும் திசையை நோக்கி தனது தும்பிக்கையை வைத்து நுகர்ந்தது. பின்னர் யானைகள் அனைத்தும் திரும்பி எதிர்த் திசையில் செல்ல ஆரம்பித்தன. அன்று முழு நிலவு. இரவுநேரத்திலும், நிலவின் ஒளியில் ஒரு யானைத்திரளை வெகு அருகில் கண்டது ஒரு மறக்க முடியாத நிகழ்வு.
****
களப்பணிக்காக ஒரு நாள் காட்டுப்பாதையில் சென்று கொண்டிருந்த போது தரையிலிருந்து சரசரவென ஏதோ ஒரு காட்டுயிர் அருகிலிருந்த ஒரு பெரிய ஆத்துவாரி மரத்தினைப் பற்றிக் கொண்டு மேலேறியது. நான்கு கால்களாலும் மரத்தண்டினைப் பற்றி மேலேறி ஒரு கிளையை அடைந்தது. பின்பு இலாவகமாக மரக்கிளைகளினூடே ஏதோ தரையில் நடந்து செல்வது போல அனாயாசமாக மரம் விட்டு மரம் தாவி சென்றது. நீலகிரி மார்டென் (Nilgiri Marten) என ஆங்கிலத்திலும் கொம்பு புலி என பொதுவாக அழைக்கப்படும் இது, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலேயே மிக அரிதான உயிரினங்களில் ஒன்று. மரநாய், கீரி, நீர்நாய் முதலிய சிறு ஊனுண்ணி (smaller carnivore) வகையைச் சேர்ந்தது. மரநாயைப் போன்ற உடலும், நீண்ட அடர்ந்த வாலும், அழகான வெளிர் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிற கழுத்தும் கொண்ட ஒரு அழகான உயிரினம் இது.
****
இந்நிகழ்வுகள் எல்லாம் நடந்தது 1999ல். நான் இருந்தது களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பத்தில். இது 1988ல் தோற்றுவிக்கப்பட்ட தமிழகத்தின் முதல் புலிகள் காப்பகம். இப்போது இந்த புலிகள் காப்பத்திற்கு வயது 25. ஒரு ஆரம்ப நிலை காட்டுயிர் ஆராய்ச்சியாளனாக எனது 25 வது வயதில் அங்கு சென்ற எனக்கு, களப்பணியின் போது பல வித அனுபவங்களையும், பல மறக்க முடியாத தருணங்களையும் எனக்களித்தது களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம் தான். படங்களில் மட்டுமே பார்த்து ரசித்துக் கொண்டிருந்த, பார்பேன் என கனவிலும் நினைத்திராத பல உயிரிங்களை முதன்முதலில் கண்டதும் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் தான்.
மழைக்காட்டில் தென்படும் சிறு ஊனுண்ணிகளில் ஒன்றான பழுப்பு மரநாய் (Brown palm Civet) பற்றிய ஆராய்ச்சியில் களப்பணி உதவியாளனாக இங்கு பதினோரு மாதங்கள் தங்கியிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பழுப்பு மரநாய் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டுமே தென்படும் ஓரிடவாழ்வியாகும் (Western Ghats Endemic). இந்த அரிய வகை மரநாய் ஒரு இரவாடி (Nocturnal) ஆகும். இரவிலும் பகலிலும் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் மழைகாட்டுப் பகுதிகளில் திரிந்து களப்பணி மேற்கொள்ளும் வேளையில் இக்கானகத்தின் செல்வங்கள் பலவற்றை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.
உலகில் உள்ள பல்லுயிர் செழுப்பிடங்களில் ஒன்று (biodiversity hotspot) மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதி. இந்த மலைத்தொடரில் தீண்டப்படாத, தொன்னலம் வாய்ந்த வனப்பகுதிகளைக் கொண்ட வெகு சில இடங்களில் ஒன்று களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம். இதன் மொத்த பரப்பு 895 சதுர கி.மீ. அகஸ்தியமலை உயிர்கோள மண்டலத்தின் ஒரு பகுதியான இது பல்லுயிரியத்தில் சிறந்து விளங்கும் பகுதிகளில் மிகவும் முக்கியமான இடங்களில் ஒன்று. சுமார் 150 ஓரிடவாழ் தாவர வகைகளும், 33 வகை மீன்களும், 37 வகை நீர்நில வாழ்விகளும், 81 வகை ஊர்வனங்களும், 273 வகை பறவையினங்களும், 77 வகையான பாலுட்டிகளும் இதுவரை இப்பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல அரிய உயிரினங்களின் வாழ்விடமாகத் திகழ்கிறது. தென்னிந்தியாவிலேயே ஐந்து வகை குரங்கினங்களைக் (சோலைமந்தி (சிங்கவால் குரங்கு), நீலகிரி கருமந்தி, வெள்ளை மந்தி, நாட்டுக்குரங்கு மற்றும் தேவாங்கு) கொண்ட வெகு சில பகுதிகளில் ஒன்றாகவும் இப்பகுதி அறியப்படுகிறது. இப்பகுதியில் எண்ணற்ற பல காட்டோடைகளும், கொடமாடியாறு, நம்பியாறு, பச்சையாறு, கீழ் மணிமுத்தாறு, தமிரபரணி, சேர்வலாறு, கடனாநதி, ராமநதி போன்ற ஆறுகளும் உற்பத்தியாவதால் நதிகளின் சரணாலயமாகவும் கருதப்படுகிறது.
புலிகள் காப்பகங்கள் புலிகளை மட்டும் பாதுகாப்பதில்லை. புலிகளையும் சேர்த்து பல வித வாழிடங்களையும், உயிரினங்களையும், நிலவமைப்புகளையும் பாதுகாக்கிறது. புலிகள் பாதுகாப்பு இன்றியமையாதது. ஏனெனில் அது காட்டுயிர்களுக்கு மட்டுமல்ல மனிதகுலத்திற்கும் நன்மை புரிவது.
*******
தி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 3oth September 2014 அன்று வெளியான கட்டுரையின் முழுப் பதிப்பு. அக்கட்டுரையை இங்கே காணலாம். அதன் PDF ஐ இங்கே பெறலாம்.
நாம் வாழ, நம் யானைகளும் வாழ…
ஒரு நாள் காலை நண்பர் தொலைபேசியில் அழைத்து அய்யர்பாடிகாரனும், சின்ன மோனிகாவும் வனப்பகுதியின் ஓரமாக தேயிலைத் தோட்டத்தின் அருகில் இருப்பதாகச் சொன்னார். கூடவே ஒரு ஆச்சர்யமான சங்கதியையும் சொன்னார். அவன் படுத்து உறங்கிக் கொண்டிருகிறான், அவள் நின்று கொண்டிருக்கிறாள் என. வியப்பு மேலிட உடனே அந்த இடத்திற்கு விரைந்தேன். அவர் சொன்னபடியேதான் இருந்தது நான் இதுவரை கண்டிறாத அந்தக் காட்சி. சற்று நேரத்தில் அவளும் மெதுவாக தனது கால்களை மடக்கி பக்கவாட்டில் சாய்ந்து படுத்துக் கொண்டாள். இரவெங்கும் சுற்றியலைந்து உணவு தேடும் போதும், இடம்பெயரும் போதும் வழியெங்கும் மனிதர்களால் ஓட ஓட விரட்டப்பட்டதாலோ என்னவோ பகலில் அவர்களிருவரும் ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். ஆள் அரவமற்ற அந்த இடத்தில் அவர்கள் இருவரும் நிம்மதியாகத் தூங்குவதைக் கண்டு எங்களுக்கு நிம்மதியாக இருந்தது.
ஒவ்வொரு யானையையும் அடையாளம் கண்டு பெயரிடுவது ஆராய்ச்சியாளர்களின் இயல்பு அய்யர்பாடிக்காரனையும், சின்ன மோனிகாவையும் போல வால்பாறை பகுதியில் சுமார் 80-100 யானைகள் இருக்கிறார்கள். வால்பாறையைச் சுற்றிலும் உள்ள வனப்பகுதிகளில் உள்ள யானைகள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இடம்பெயர்வது காலகாலமாக நிகழ்ந்து வருகிறது. நூறு ஆண்டுகளுக்கு முன் குடியேறிய மனிதர்களாகிய நாம் யானைகளின் வழித்தடங்களில் (elephant corridors) வீடு கட்டி வசிக்க ஆரம்பித்தோம். ஆகவே, இந்த வால்பாறை பகுதி மனிதர்களுக்கு மட்டுமல்ல, இங்கு வாழும் யானை முதலிய காட்டுயிர்களுக்கும் தான். தற்போது சுமார் 220 சதுர கி.மீ பரப்பில் அமைந்த, தேயிலைத் தோட்டங்களும், துண்டாக்கப்பட்ட மழைக்காட்டுச் சோலைகளும் உள்ள இப்பகுதியில் மக்கள் தொகை சுமார் ஒரு இலட்சம். ஆகவே மனித அடர்த்தி மிகுந்த இடத்தில் யானைகளுடன் மனிதர்களோ, மனிதர்களுடன் யானைகளோ எதிர்கொள்ள நேரிடுவது பல வேளைகளில் தவிர்க்க முடியாது. இதன் விளைவுகளில் முதலாவது பொருட்சேதம், இரண்டாவது உயிர்ச்சேதம். அதாவது, ரேஷன் கடைகளிலும், பள்ளிகளில் உள்ள மதிய உணவுக்கூடங்களிலும் வைக்கப்பட்டிருக்கும் அரிசி, பருப்பு முதலிய உணவுப்பொருட்களை யானைகள் உட்கொள்ள வருவதால், அக்கட்டிங்களின் கதவு, சுவர்கள் சேதமடைகின்றன. இந்த உணவு சேமிப்பு கட்டிடங்கள் குடியிருப்புப் பகுதிகளின் அருகாமையில் இருப்பின் அங்கும் சில வீடுகளிலும் சேதம் ஏற்படுகிறது. இந்த பொருட்சேதத்தை பல வழிகளில் ஈடுகட்ட முடியும். ஆனால் மனித உயிரிழப்பு ஈடு செய்ய முடியாதது. இதைத் தவிர்க்க இப்பகுதியில் வனத்துறையும், யானை ஆராய்ச்சியாளர்களும், பொதுமக்களும் பல வழிகளை கையாண்டு வருகின்றனர். அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றுள்ளனர்.
முதலில் மனித உயிரிழப்பு ஏன், எப்படி, எப்போது, எங்கு ஏற்படுகிறது என்பது ஆராயப்பட்டது. இப்பகுதியில் கடந்த 12 ஆண்டுகளாக யானைகளின் இடம்பெயர்வையும், பண்புகளையும் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் Dr. ஆனந்தகுமாரும் அவரது குழுவினரும் இதற்கான விடைகளைக் கண்டறிந்தனர். சுற்றிலும் வனப்பகுதியைக் கொண்ட, மனிதர்களின் அடர்த்தி மிகுந்த வால்பாறை பகுதியில் ஆண்டில் 10 மாதங்கள் யானைகள் நடமாட்டம் இருப்பின், பல வேளைகளில் யானைகளும் மனிதர்களும் எதிர்பாராவிதமாக ஒருவரை ஒருவர் எதிர்கொள்ள நேரிடும். இதனால் மனித உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். 1994 முதல் 2012 வரை 39 பேர் யானையால் எதிர்பாராவிதமாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதில் 72 விழுக்காடு உயிரிழப்பு ஏற்பட்டது தேயிலை எஸ்டேட்டிலும், சாலையிலுமே. யானைகள் இருப்பதை அறியாமலேயே அவை நடமாடும் பகுதிகளுக்கு சென்றதுதான் முக்கிய காரணம். டிசம்பரிலிருந்து பிப்ரவரி மாதம் வரைதான் அதிக உயிரிழப்பு ஏற்பட்டது. ஆகவே வனத்துறைனரின் உதவியுடன் வால்பாறையில் யானைகள் இருப்பிடத்தை அறிந்து அந்தச் செய்தியை பொதுமக்களிடம் தெரிவிக்கும் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. யானைகளின் இருப்பிடம், முன்கூட்டியே பொதுமக்களுக்கு மாலை வேளைகளில் கேபிள் டிவி மூலம் ஒளிபரப்பப்பட்டது, யானைகள் இருக்குமிடத்தைச் சுற்றி வாழும் (சுமார் 2 கீ.மீ. சுற்றளவில்) பொதுமக்களுக்கு அவர்களுடைய கைபேசிக்கு குறுஞ்செய்தி (SMS) அனுப்பப்பட்டது, அப்பகுதியின் மின்னும் சிகப்பு LED விளக்குகள் வெகுதூரத்திலிருந்து பார்த்து அறியக்கூடிய உயரமான பகுதியில் பொறுத்தப்பட்டது. இவ்விளக்கினை ஒரு பிரத்தியோக கைபேசியியினால் எரிய வைக்கவும், அணைக்கவும் முடியும். இதை அப்பகுதி மக்களே நாளடைவில் செயல்படுத்தவும் ஆரம்பித்துள்ளனர். 2011ம் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்பட்ட இத்திட்டங்களினால் மனித உயிரிழப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. அதிலும் 2013ம் ஆண்டு எந்த ஒரு மனித உயிரிழப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வினைப் பற்றிய விரிவான கட்டுரையை இங்கே காணலாம்
இயற்கையோடு இயைந்து வாழ்ந்து வந்தவர்கள் நம் முன்னோர்கள். மனித-காட்டுயிர் எதிர்கொள்ளல் இன்று நேற்றல்ல கால காலமாக இருந்து வரும் ஒன்று. இதை நம் இலக்கியங்களிலிருந்தும், புராணக் கதைகளிலிருந்தும் நாம் அறியலாம். சமீப காலமாக இந்த எதிர்கொள்ளல் அதிகரித்திருப்பதென்னவோ உண்மைதான். அதற்கான காரணங்களில் முக்கியமானவை மக்கள் தொகைப் பெருக்கம், காடழிப்பு, கள்ளவேட்டை, விவசாய முறைகளில் மாற்றம் முதலியவை தான் என்பதை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அழிந்து வரும் பேருயிர் யானை. அதைப் பாதுகாப்பது நம் கடமை. யானைகளால் ஏற்படும் சேதங்களால் பாதிக்கப்படுவோர் அவற்றை எதிரியாகப் பாவிப்பது இயல்புதான். ஆகவே இதுபோன்ற மனித-யானை எதிர்கொள்ளலால் ஏற்படும் விளைவுகளை, வால்பாறையில் செயல்படுத்தப்பட்டது போன்ற அறிவியல் ஆய்வுத் தரவுகளைக் கொண்டு கையாளவும், சமாளிக்கவும் வேண்டும். பாதிப்பினை தணிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் இடத்திற்கு இடம் மாறுபடும். வால்பாறையில் பின்பற்றப்படும் செயல்திட்டங்கள் அனைத்தும் மனிதர்-யானை எதிர்கொள்ளல் இருக்கும் எல்லா இடத்திற்கும் பொருந்தும் என நினைப்பதும் தவறு. இடத்திற்குத் தகுந்தவாறு எதிர்கொள்ளாலைத் தணிக்க, சரியான திட்டங்களை அடையாளம் கண்டு செயல்படுத்த வேண்டும். இது வனத்துறையின் பணிமட்டுமே அல்ல. எல்லா அரசுத்துறைகளும், ஆராய்ச்சியாளர்களும், பத்திரிக்கையாளர்களும், குறிப்பாக பொதுமக்களும் இவற்றில் பங்கு பெறவேண்டும். அப்போதுதான் எந்த ஒரு செயல் திட்டமும் நீண்ட காலம் நீடித்துப் பலன் தரும். இதுவே யானைகள் நடமாட்டத்தை பொதுமக்கள் பொறுத்துக்கொள்ளவும், சமரச மனப்பான்மையை வளர்க்கவும் உதவும். இங்கே நாமும் நிம்மதியாக வாழ வேண்டும், யானைகளும் வாழ வேண்டும்.
வால்பாறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களை விரிவாகக் காண கீழ்கண்ட வீடியோவைக் காண்க
யானைகளைப் பற்றி மேலும் அறிய காண்க:
யானை அழியும் பேருயிர் எழுதியவர் ச. முகமது அலி
******
தி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 12th August 2014 அன்று வெளியான கட்டுரையின் முழுப் பதிப்பு. அக்கட்டுரையை இங்கே காணலாம். அதன் PDF ஐ இங்கே பெறலாம்.
உயிரெழுத்து இதழுக்கான நேர்காணல்
உயிரெழுத்து மாத இதழில் (அக்டோபர் 2013 மலர் 7, இதழ் 4) வெளியான நேர்காணல். பத்திரிக்கையாளர்/பசுமை எழுத்தாளர் திரு ஆதி. வள்ளியப்பன் அவர்களின் கேள்விகளும் எனது பதில்களும்.
மனித – விலங்கு மோதல்
மனித விலங்கு மோதல் சார்ந்து உங்களுடைய அனுபவங்கள். குறிப்பாக, யானை, சிறுத்தை போன்றவற்றுடன் மோதல் நிகழும் பகுதியில் இருக்கிறீர்கள். இதன் பின்னணி என்ன. இதை எப்படி புரிந்து கொள்ள வேண்டும்?
முதலில் மனித-விலங்கு மோதல் என்ற பதத்தை மாற்றி மனிதர்-காட்டுயிர் எதிர்கொள்ளல் எனக்கொள்ளவேண்டும். எனது வீட்டை புலியோ, சிறுத்தையோ, யானையோ கடந்து சென்றால் அவை என்னை தாக்க வருகின்றன என்று அர்த்தம் இல்லை. எதிர்பாராவிதமாக நான் இக்காட்டுயிர்களை நேருக்கு நேர் சந்திக்க நேரிட்டால், அவற்றின் வெகு அருகில் சென்று விட்டால், அவை பயத்தினாலோ, தம்மை தற்காத்துக்கொள்ளவோ என்னைத் தாக்கினால் அது எதிர்பாரா விதமாக நடக்கும் ஒரு விபத்திற்கு சமமானதே. அது திட்டமிட்ட தாக்குதல் அல்ல. எந்த ஒரு காட்டுயிரும் தானாக (சினிமாவில் காட்டுவதுபோல்) எந்த ஒரு மனிதரையும் துரத்தித் துரத்தி கடிப்பதோ, மிதிப்பதோ இல்லை, பழிவாங்குவதும் இல்லை. ஆகவே இது மோதல் அல்ல. நீங்கள் ஆட்கொல்லிகளைப் பற்றி (man-eaters) கேட்கலாம். இந்த ஓரிரு தனிப்பட்ட புலியோ, சிறுத்தையோ தொடர்ந்து மனிதர்களை குறிவைத்து தாக்கினால் அங்குள்ள அனைத்து இரைக்கொல்லிகளும் (Predators) அப்பண்பு உள்ளவையே எனக் கூறவே முடியாது. அப்படித் தாக்கும் அந்தத் தனிப்பட்ட விலங்கினை அந்த இடத்திலிருந்து விலக்கத்தான் வேண்டும். எனினும் அப்படி அடையாளம் காண்பது என்பதும் சிரமம். இது போன்ற சம்பவங்கள் நடக்கும் இடம், நேரம், சூழல் அனைத்தையும் ஆராய்ந்து, மேன்மேலும் மனித உயிரிழப்பு ஏற்படாத வண்ணம் ஆவன செய்ய வேண்டும்.
நான் தற்போது பணி புரிவது வால்பாறையில். சுமார் 220 சதுர கி.மீ. பரப்பளவவில் அமைந்துள்ள இங்கு பெரும்பகுதி தேயிலைத் தோட்டங்களால் நிரம்பியது. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்கள் இப்பகுதிக்கு வந்து தேயிலை பயிரிட ஏதுவான உயரமும், சூழலும் இருந்ததால் இங்குள்ள மழைக்காட்டை திருத்தி தேயிலைத் தோட்டங்களை அமைத்தனர். பயிரிடத் தகுதியில்லாத சில இடங்களில் காடுகளை அப்படியே விட்டு வைத்து விட்டனர். பச்சைப் பாலைவனம் என சூழியலாளர்களால் அழைக்கப்படும் தேயிலைத் தோட்டத்தில் இன்று இந்தத் துண்டுச்சோலைகள் ஆங்காங்கே சிறு சிறு தீவுகளாகக் காட்சியளிக்கின்றன. வால்பாறையைச் சுற்றிலும் இருப்பது ஆனைமலை புலிகள் காப்பகம் (இந்திரா காந்தி தேசிய பூங்கா), பரம்பிகுளம் புலிகள் காப்பகம், சின்னார் வனவிலங்கு சரணாலயம் முதலிய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள். இந்த வனப்பகுதிகளில் உள்ள (யானை, சிறுத்தை முதலிய) விலங்குகள் பல்லாயிரம் ஆண்டுகளாக காலத்திற்கேற்ப உணவு, நீர், உறைவிடம் தேடி வனத்தின் ஒரு பகுதியிலிருந்து வேறோர் பகுதிக்கு இடம்பெயர்கின்றன. சுமார் 100 ஆண்டுகளுக்க்கு முன் இப்பகுதியில் நாம் குடியேறி இவ்வுயிரினங்களின் உறைவிடங்களை அழித்து விட்டு, இன்று அவை நாமிருக்கும் இடங்களுக்கு வரக்கூடாது என்று சொல்கிறோம்.
இவ்வளவு காலம் இல்லாமல், ஏன் இப்போது மனித – விலங்கு மோதல் எதிர்கொள்ளல் உச்சத்தை நோக்கி சென்று வருகிறது?
மனித-விலங்கு எதிர்கொள்ளல் இன்று நேற்றல்ல ஆதிகாலத்திலிருந்தே இருந்து வரும் ஒன்று. பெருகி வரும் மக்கள் தொகையினால் காட்டுயிர்களின் உறைவிடங்கள் நாளுக்கு நாள் அருகி வருகிறது. காடழிப்பு, காட்டுயிர்களின் வழித்தடங்களை ஆக்கிரமித்தல், சரியான (அறிவியல் பூர்வமான) மேலாண்மையின்மை, நீண்டகால தீர்வு காணும் எண்ணத்துடன் செயல்படாமை முதலியவையே இவ்வகையான நிகழ்வுகளுக்குக் காரணம். மேலும் காட்டுயிர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் இந்தப் பிரச்சனையை வனத்துறையினர் மட்டும் தான் சமாளிக்க வேண்டும் என்று நினைப்பதும் தவறு. பல அரசுத் துறைகளும், ஊடகங்களும், தன்னார்வ நிறுவனங்களும், ஆராய்ச்சியாளர்களும், பொதுமக்களும் சேர்ந்து சமாளிக்க வேண்டிய பிரச்சனை இது. இன்னும் ஒன்றையும் சொல்லவேண்டும் – ஊடகங்கள் காட்டுயிர்களை ஏதோ பயங்கரவாதிகளைப் போல சித்தரிப்பதும், இந்தப் பிரச்சனையை ஊதிப் பெரிது படுத்துவதும் செய்தித்தாள்களிலும், செய்திகளிலும் பார்க்கலாம். ஏற்பட்ட சம்பவத்தின் தீவிரத்தையும், இப்பிரச்சனையை தீர்க்க/சமாளிக்க/தணிக்க செய்ய வேண்டியவைகளை நன்கு உணர்ந்து செயல் பட வேண்டியது ஊடகங்களில் கடமை. அண்மையில் வெளியான ஒரு திரைப்படத்தில் யானையை ஏதோ ஒரு வில்லனைப் போல சித்தரித்திருந்தார்கள். இந்த நிலை மாற வேண்டும்.
விலங்குகளுக்கு இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
யானை, சிறுத்தை போன்ற காட்டுயிர்கள் நம் வீட்டின் வெகு அருகில் இருந்தால் நாம் எப்படிப்பட்ட மனவுளைச்சலுக்கும், மனஅழுத்தத்திற்கும் ஆளாகிறோம். அதே போலத்தான் ஓரிடத்திலிருந்து யானைகளை பட்டாசு வெடித்து, டயரை எரியவிட்டு மேலே விட்டெறிந்து துரத்தும் போது அவையும் குழப்பத்திற்கும் மன அழுத்தத்திற்கும் ஆளாகின்றன. அச்சமயத்தில் குட்டியுடன் இருக்கும் போது இந்த அழுத்தம் பன்மடங்காகிறது. பகலில் இப்படி ஓட ஓட விரட்டுவதால் அவை ஓரிடத்தில் நிம்மதியாக இருந்து சாப்பிட முடியாமல் (யானைகளுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 150-200 கி.லோ எடை உணவும், சுமார் 200 லிட்டர் நீரும் அவசியம்) போகிறது. விளைவு, இரவு நேரங்களில் ரேஷன் கடைகளுக்கும், சத்துணவுக்கூடங்களுக்கும், அவற்றின் அருகாமையில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கும் புகுந்து அங்கிருக்கும் அரிசி, பருப்பு முதலியவற்றை சாப்பிடுகின்றன.
இது போலவே சிறுத்தை போன்ற இரைக்கொல்லிகளை நம் வீட்டினருகே பார்த்த உடனேயே அவற்றை அங்கிருந்து அகற்ற வேண்டும் என வனத்துறையிடம் முறையிடுவதால் அவர்களும் பல நிர்பந்தங்களுக்கு ஆளாகி கூண்டு வைத்து அவற்றை பிடித்துவிடுகின்றனர். அதைக் கொண்டு போய் வேறு இடங்களில் விட்டு விடுகின்றனர். இதனால் பிரச்சனை தீர்ந்து விடாது. இது ஒரு நீண்ட காலத் தீர்வு அல்ல. அவற்றை பிடித்து கூண்டுக்குள் அடைக்கும் போதும், வேறு இடங்களுக்கு கொண்டு செல்லும் போதும் ஏற்படும் மன அழுத்தம், குழப்பம், மன உளைச்சல் காரணமாக அவை எரிச்சலைடைகின்றன. அவை கூண்டுக்குள்ளிருந்து தப்பிக்க நினைக்கும் போது காயங்களும் ஏற்படுகின்றது. அந்த குறிப்பிட்ட விலங்கை வேறு இடங்களில் கொண்டு விடும் போது காயம் காரணமாக அவை வேட்டையாட முடியாமல் அங்குள்ள கால்நடைகளைத் தாக்குகின்றன. இது கிட்டத்தட்ட சில இந்திய சினிமாக்களில் காண்பிப்பது போல் ஒரு நல்லவனை/நிரபராதியை ஜெயிலில் போட்டு குற்றவாளி ஆக்கி அவன் விடுதலையாகும் போது கெட்டவனாக மாறி வருவது போலத்தான்.
இதனால் தமிழகத்தில் இறந்துள்ள உயிரினங்களின் எண்ணிக்கை என்ன?
இவ்வகையான புள்ளிவிபரங்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. மேலும் மனித-விலங்கு எதிர்கொள்ளலால் தான் ஒரு விலங்கு மரணமடைந்தது என அறுதியிட்டுக் கூறுவது எல்லா சமயங்களிலும் சாத்தியமில்லை. எனது சக ஊழியர் ஆனந்தகுமாரின் கூற்றுப்படி வால்பாறை பகுதியில் 4 யானைகள் (2 – தவறுதலாக பூச்சிமருந்தை உட்கொண்டு, 2 – மின்வேலி மின்சாரத்தினால் தாக்கப்பட்டு) மரணமடைந்துள்ளன. சிறுத்தைகளைப் பொறுத்தவரை 2007-2012 வரை வால்பாறை அதனை அடுத்தப் பகுதிகளில் 12 சிறுத்தைகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பலவற்றிற்கு உடலில் (பெரும்பாலும் முகத்தில்) காயம் ஏற்பட்டது. வேறு இடங்களில் கொண்டுசெல்லப்பட்டவை உயிருடன் இருக்கின்றனவா இல்லையா என்பதை செல்லுவது கடினம்.
இதைத் தடுப்பதற்கான பல்வேறு வழிமுறைகளை விளக்க முடியுமா?. மனிதர்கள்-யானை மோதலைத் தடுக்க என்.சி.எஃப் அமைப்பு (Nature Conservation Foundation – NCF) மேற்கொண்டுள்ள முயற்சியின் அறிவியல் பின்னணி ?
நான் மேற்சொன்ன தகவல்கள் அனைத்தும் வால்பாறையை மையமாக வைத்தே. மேலும் நான் மனித-விலங்கு எதிர்கொள்ளலைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடவில்லை. எனது நண்பர்களும், சக ஊழியர்களும் இப்பணியில் பல ஆண்டுகளாக இப்பகுதியில் ஈடுபட்டு வருகின்றனர். எனது பணி, அவர்களது நீண்ட கால ஆராய்ச்சி முடிவுகளை கட்டுரைகள், பொதுக்கூட்டங்கள் வாயிலாக பொதுமக்களிடன் கொண்டு போய் சேர்ப்பது.
எனது சக ஊழியர் ஆனந்தகுமார் வால்பாறைப் பகுதியில் யானைகளின் இடம்பெயர்வையும், அவற்றின் பண்புகளையும், யானைகளால் மனிதர்களுக்கு எந்த விதத்தில், எங்கெங்கே பாதிப்பு ஏற்படுகின்றது, அந்த பாதிப்புகளை தணிக்க செய்ய வேண்டியவை பற்றிய ஆராய்ச்சியில் கடந்த 12 வருடங்களாக ஈடுபட்டு வருகிறார்.
வால்பாறையைச் சுற்றிலும் வனப்பகுதியாதலால் காலகாலமாக யானைகள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இடம்பெயர்வது வழக்கமான ஒன்றாகும். இவ்வேளையில் அவை மனிதர்களையும், குடியிருப்புகளையும் எதிர்கொள்வதை சில நேரங்களில் தவிர்க்க முடியாது. யானை-மனிதர்கள் எதிர்கொள்ளலை சரியான முறையில் சமாளிப்பதற்கும், அதனால் ஏற்படும் பாதிப்புகளைத் தணிப்பதற்கும், அவற்றின் இடம்பெயறும் பண்பை அறிந்திருத்தல் அவசியம். யானைகளின் நடமாட்டத்தைப் பற்றிய அறிவு இங்கு வாழும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு இன்றியமையாதது.
வால்பாறைப் பகுதியில் உள்ள யானைத் திரள்களை பின் தொடர்ந்து அவை போகும் இடத்திற்கெல்லாம் சென்று ஜி.பி.எஸ் கருவி மூலம் அவை இருக்குமிடத்தை குறித்துக்கொள்ளப்பட்டது. யானைகளால் ஏற்படும் சேதங்கள் யாவும் நேரில் சென்று மதிப்பிடப்பட்டது. மனித உயிரிழப்பும் பதிவு செய்யப்பட்டது. வால்பாறைப் பகுதியில் ஒர் ஆண்டில் சுமார் 80-100 யானைகள் நடமாடுகின்றன. எனினும் மூன்று யானைக்கூட்டங்களைச் சேர்ந்த சுமார் 45 யானைகள் 8-10 மாதங்கள் இப்பகுதியில் நடமாடுகின்றன. இங்குள்ள காலங்களில் யானைகள் பகலில் பெரும்பாலும் மழைக்காட்டு துண்டுச்சோலைகளிலும், ஆற்றோரக்காடுகளிலும்தான் தென்பட்டன. காபி, சூடக்காடு (யூகலிப்டஸ்), தேயிலை தோட்டப் பகுதிகளை அவை அதிகம் விரும்புவதில்லை. எனினும் இரவு நேரங்களில் ஒரு துண்டுச்சோலையிலிருந்து மற்றொன்றிற்கு கடக்கும்போது மட்டுமே தோட்டப்பகுதிகளின் வழியாக சென்றன.
இந்த ஆராய்ச்சி முடிவின் படி நடு ஆறு – சோலையார் ஆற்றோரக் காடுகள் யானைகள் நடமாட்டத்திற்கான முக்கியமான பகுதிகள் என்பது அறியப்பட்டது. ஆற்றங்கரையின் இருபுறமும் சுமார் 20 மீ அகலத்தில் இயற்கையாக வளரும் இம்மண்ணுக்குச் சொந்தமான மரங்களையும், தாவரங்களையும் நட்டு வளர்த்தால் யானைகளின் நடமாட்டத்திற்கு ஏதுவாகவும், அவை மனிதர்களை எதிர்கொள்வதை வெகுவாகக் குறைக்கவும் முடியும். ரேஷன் கடைகளிலும், பள்ளிகளில் உள்ள மதிய உணவுக்கூடங்களிலும் வைக்கப்பட்டிருக்கும், அரிசி, பருப்பு, சர்க்கரை முதலிய உணவுப்பொருட்களை யானைகள் உட்கொள்ள வருவதால் அவற்றை எடுக்கும் வேளையில் இந்தக் கட்டிடங்களின் கதவு, சுவர்கள் சேதமடைகின்றன. இந்த உணவு சேமிப்பு கட்டிடங்கள் குடியிருப்புப் பகுதிகளிலோ அல்லது அருகாமையிலோ இருப்பதால் அங்கும் சில வீடுகளிலும் சேதங்கள் ஏற்படுகின்றன. உணவுப்பொருட்களை சேமித்து வைக்கும் கட்டிடங்களை, குடியிருப்புப் பகுதியிலிருந்து தூரமாக அமைப்பது, உணவுப் பொருட்களை ஓரிடத்தில் வைத்திடாமல் நடமாடும் விநியோகமாக மாற்றுவதால் இவற்றிற்கு யானைகளால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க முடியும்.
மனித-யானை எதிர்கொள்ளல் வால்பாறையின் பெரும்பாலான பகுதிகளில் இருந்தாலும், அதிகமாக இருப்பது துண்டுச்சோலைகள் இல்லாத அல்லது மிகக் குறைவான வனப்பகுதிகளைக் கொண்ட இடங்களில் தான். மனிதர்களின் உடமைகளுக்கு சேதம் ஏற்படுவது பெரும்பாலும் அக்டோபர் மாதத்திலிருந்து பிப்ரவரி மாதம் வரைதான்.
மனித-யானை எதிர்கொள்ளலின் மற்றொரு விளைவு மனித உயிரிழப்பு. இதை மட்டுப்படுத்த, முற்றிலுமாக தவிர்க்க, பல்வேறு அரசுத் துறைகள் இணைந்து பொதுமக்களை கலந்தாலோசித்து திட்டங்களை வகுக்க வேண்டும். இதுவே, எடுக்கப்படும் நடவடிக்கைகள் நீண்ட காலம் நீடித்து நிலைக்கவும், யானைகளின் நடமாட்டத்தை பொதுமக்கள் பொறுத்துக்கொள்ளவும், சமரச மனப்பான்மையை வளர்க்கவும் உதவும். மனித அடர்த்தி மிகுந்த குடியிருப்புகள் இருக்கும் பகுதிகளில், ஆண்டில் 10 மாதங்கள் யானைகள் நடமாட்டம் இருப்பின், பல வேளைகளில் யானையும் மனிதனும் எதிர்பாரா விதமாக ஒருவரை ஒருவர் எதிர்கொள்ள நேரிடும். இதனால் மனித உயிரிழிப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம். 1994 முதல் 2012 வரை 39 பேர் யானையால் எதிர்பாராவிதமாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதில் 72 விழுக்காடு உயிரிழப்பு ஏற்பட்டது தேயிலை எஸ்டேட்டிலும் சாலையிலுமே. யானைகள் இருப்பதை அறியாமலேயே அவை நடமாடும் பகுதிகளுக்கு சென்றதுதான் இதற்கான முக்கிய காரணம். அதிக உயிரிழப்பு ஏற்பட்டது டிசம்பர், பிப்ரவரி மாதங்களில் தான். ஆகவே, தமிழக வனத்துறையினரின் ஆதரவுடன், வால்பாறைப் பகுதியில் யானைகள் இருப்பிடத்தை அறிந்து அந்தச் செய்தியை பொதுமக்களிடம் தெரிவிக்கும் பணியை மேற்கொள்ளும் குழுவை ஏற்படுத்தினோம்.
யானைகள் இருக்குமிடத்தைப் பற்றிய செய்தியை முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரிவிக்க மூன்று முறைகள் பின்பற்றப்பட்டது.
1. யானைகள் நடமாட்டம், இருக்குமிடம் முதலிய தகவல்கள் மாலை வேளைகளில் கேபிள் டி.வி. மூலம் ஒளிபரப்பப்பட்டது.
2. யானைகள் இருக்குமிடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் (2 கி.மீ.சுற்றளவில்) உள்ள பொதுமக்களுக்கு மாலை வேளைகளில் அவர்களுடைய கைபேசியில் யானைகள் இருக்குமிடம் பற்றிய குறுஞ்செய்தியை (SMS) ஆங்கிலத்திலும் தமிழிலும் அனுப்பப்பட்டது.
3. மின்னும் சிகப்பு LED விளக்குகள் வெகுதூரத்திலிருந்து பார்த்து அறியக்கூடிய உயரமான பகுதியில் பொறுத்தப்பட்டது. யானைகள் அச்சுற்றுப்புறங்களில் (2 கி.மீ. தூரத்துக்குள்ளாக) இருந்தால் இவ்விளக்கு எரிய வைக்கப்படும். இந்த விளக்கினை ஒரு பிரத்தியோக கைபேசியினால் எரிய வைக்கவும், அணைக்கவும் முடியும். இதை அப்பகுதி மக்களே செயல்படுத்தவும் ஊக்கமளிக்கப்பட்டது. நாளடைவில் பொதுமக்களே இவ்விளக்கை செயல்படுத்தவும் ஆரம்பித்தனர்.
வால்பாறைப்பகுதியில்மனித-யானைஎதிர்கொள்ளலால்ஏற்படும்விளைவுகளைசமாளிக்க, சரியான (அறிவியல்பூர்வமான) முறையில்கையாள, பாதிப்பினைதணிக்கஎடுக்கப்படும்நடவடிக்கைகள், நீண்டகாலம்நீடித்துநிலைக்கபொதுமக்களைஈடுபடுத்துதல்எந்தஅளவிற்குஅவசியம்என்பதைஇந்த ஆராய்ச்சியின்வாயிலாகஅறியமுடிகிறது.
சாலைபலி (Roadkill)
காடுகளைப் பிளந்து செல்லும் சாலைகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றிய உங்களுடைய ஆராய்ச்சி பற்றி. இந்தச் சாலைகள் உயிரினங்களிடையே ஏற்படுத்தும் பாதிப்புகள் என்ன?
ஒரு தீண்டப்படாத, தொன்னலம் வாய்ந்த வனப்பகுதியை வெகு விரைவில் சீர்குலைக்க வேண்டுமெனில், செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் – அதன் குறுக்கே ஒரு சாலையை அமைத்தால் போதும். கொஞ்சம் கொஞ்சமாக அவ்வனப்பகுதி அதன் இயற்கைக் தன்மையை இழந்துவிடும். சாலைகள் மட்டுமல்ல காட்டில் தீ பரவாமல் இருக்க நீளவாக்கில் மரங்களையும் தாவரங்களையும் அகற்றி ஏற்படுத்தும் தீத்தடுப்பு வெளிகள் (Fire lines), மின் கம்பிகளின் கீழேயும், கால்வாய்கள், இரயில் பாதைகள், பிரம்மாண்டமான தண்ணீர் குழாய்கள் முதலியவை உயிரினங்களின் வாழிடங்களை இரண்டு துண்டாக்கும் இயல்புடையவை. இவற்றை ஆங்கிலத்தில் Linear intrusion என்பர்.
இந்த நீளவாக்கில் அமைந்த கட்டமைப்புகள் காட்டுயிர்களின் வழித்தடங்களில் (animal corridors) குறுக்கீடுகளாகவும் சில உயிரினங்களுக்கு நீளவாக்கில் அமைந்த தடைகளாகவும் (barrier) அமைகிறது. காட்டின் குறுக்கே செல்லும் சாலைகளிலும், இரயில் பாதைகளிலும் அடிபட்டு சின்னஞ் சிறிய பூச்சி, தவளையிலிருந்து உருவில் பெரிய யானை, புலி என பல உயிரினங்கள் அடிபட்டு பரிதாபமாக உயிரிழக்கின்றன. அது மட்டுமல்ல, சாலையோரங்களில் களைகள் மண்டி காட்டுத்தீ பரவுவதற்கும், இக்களைச்செடிகள் அங்குள்ள மண்ணுக்குச் சொந்தமான தாவரங்களை வளரவிடாமலும் தடுக்கின்றன.
ஆனைமலை புலிகள் காப்பகம், வால்பாறை பகுதியில் வாகனப் போக்குவரத்தினால், உயிரினங்களுக்கும், அவற்றின் வாழிடத்திற்கும் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிய ஆராய்ச்சியை 2011 தொடங்கியுள்ளோம்.
இது மனஅழுத்தத்தை (ஸ்டிரெஸ்) தரும் அனுபவமாக இருந்தது என்று ஒரு முறை குறிப்பிட்டு இருக்கிறீர்கள். அது பற்றி கொஞ்சம் விளக்க முடியுமா?
தினமும் காலை வேளையில் சாலையில் நடந்து சென்று இப்படி உயிரிழந்த காட்டுயிர்களை எண்ணுவதும், பட்டியலிடுவதும் மகிழ்ச்சியான அனுபவத்தை கொடுப்பதில்லை. எனினும் மென்மேலும் இவ்விதத்தில் உயிரிழப்புகள் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் இது போன்ற வேலைகளில் ஈடுபடுவது ஒரு காட்டுயிர் ஆராய்ச்சியாளனின் கடமை.
குறிப்பிட்ட ஒரு கால இடைவெளியில் இந்தச் சாலைகளில் அடிபட்டு இறக்கும் உயிரினங்கள் தொடர்பாக ஏதாவது கணக்கெடுப்பு இருக்கிறதா?
இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் இவ்வகையான ஆராய்ச்சி அதிகம் இல்லை. அப்படியே இருந்தாலும் ஆராய்ச்சி முடிந்தவுடன் பரிந்துரைகளைக் கொண்ட கட்டுரையையும், ரிப்போட்டையும் எழுதி பதிப்பித்த பின் அந்த வேலை முடிந்து விடும். அது மட்டுமே போதாது. ஆராய்ச்சியின் முடிவில் கொடுக்கப்பட்ட பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டனவா? அப்படியே செயல் படுத்தப்பட்டாலும் அவை எதிர்பார்த்த விளைவுகளை கொடுத்ததா? எந்த அளவிற்கு அவை பயனுள்ளதாக இருக்கிறது என்பதை எல்லாம் தொடர்ந்து கண்காணிப்பது அவசியம். எங்களது ஆராய்ச்சி இன்னும் முழுமையாக முடிவு பெறவில்லை. எனினும் இது வரை செய்த களப்பணியின் தரவுகள் சில – கோடைகாலத்தை விட மழைக்காலங்களில் சாலையில் பல உயிரினங்கள் அதிலும் குறிப்பாக தவளைகளும், பாம்புகளும் அரைபட்டுச் சாகின்றன. பாலூட்டிகளைப் பொறுத்தவரை கடம்பை மான், கேளையாடு, சிங்கவால் குரங்கு, மலபார் மலையணில், மரநாய், புனுகுப் பூனை, முள்ளம்பன்றி, சருகு மான் முதலியன சாலையில் அரைபட்டு உயிரிழந்துள்ளன.
இதைத் தடுப்பதற்குச் செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன?
ஒரு வனப்பகுதிகளின் வழியே செல்லும் சாலைகளில் பயணிக்கும் போது நம்மை அறியாமலேயே நாம் செல்லும் வண்டிச் சக்கரத்தால் அரைத்து, அடித்து பல உயிர்களை சாகடிக்கின்றோம். காடுகளின் வழியாகச் செல்லும் சாலைகள் மனிதர்களுக்கு மட்டுமே இல்லை அங்கு வாழும் உயிரினங்களுக்கும் சேர்த்து தான் என்பது அவ்வழியே பயணிக்கும் பொதுமக்களும், சுற்றுலாவினரும் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வகையான உயிரிழப்பை தடுக்க பொதுமக்களின், சுற்றுலாவினரின் உதவியும், ஒத்துழைப்பும் பெருமளவில் தேவைப்படுகிறது. நாம் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்
1. காட்டுப்பகுதியில் வேகத்தைக் கட்டுப்படுத்தி மெதுவாகச் செல்வது,
2. வழியில் தென்படும் குரங்குகளுக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் தின்பண்டங்களை கொடுக்காமல் இருப்பது,
3. உணவுப் பண்டங்களை, பிளாஸ்டிக் குப்பைகளை சாலையோரத்தில் தூக்கி எறியாமல் இருப்பது.
காடுகளின் வழியாகச் செல்லும் சாலைகளை அளவிற்கு அதிகமாக அகலப்படுத்தக் கூடாது. சாலையின் இருபுறமும் மரங்கள் இருத்தல் குரங்கு, அணில் முதலிய மரவாழ் (arboreal) உயிரினங்களின் இடம்பெயர்வுக்கு இன்றியமையாதது. சாலைகளில் உயிரினங்களின் நடமாட்டத்திற்கு ஏற்ப தகுந்த இடைவெளியில் வேகத்தடைகள் இருப்பதும் அவசியம். இவ்வகையான இடங்களில் நெடுஞ்சாலைத் துறையினரும், வனத்துறையினரும், ஆராய்ச்சியாளர்களும் சேர்ந்து கருத்துகளைப் பரிமாரி செயல்படுதல் அவசியம்.
பசுமை இலக்கியம்
தமிழில் பசுமை எழுத்தின் இன்றைய நிலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இது என்னைவிட இத்துறையில் மூத்தவர்களிடம் கேட்கப்பட வேண்டிய கேள்வி. எனினும்நான் பார்த்த வரையில் இயற்கை வரலாறு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எழுதப்படும் கட்டுரைகள் தான் அதிகம். இவையும் அவசியம் தான். அதே வேளையில் பல வித உயிரினங்களின் கையேடுகள் (Field guides), இத்துறை சார்ந்த தரமான நூல்கள், மொழிபெயர்ப்புகள் இன்னும் வரவேண்டும். வேங்கைப்புலிகளைப் பற்றிய கானுறை வேங்கை (கே. உல்லாஸ் கரந்த் – தமிழில் தியடோர் பாஸ்கரன்), பறவையியலைப் பற்றிய நூலான “அதோ அந்த பறவை போல (எழுதியவர் ச. முகமது அலி) போன்ற சில நூல்களைத் தவிர இத்துறை சார்ந்த நூல்கள் இருப்பதாகத் தெரியவில்லை. இதோடு களப்பணி முறைகள், விளக்கக் கையேடுகள், ஆராய்ச்சி அறிக்கைகள், காட்டுயிர், சுற்றுச்சூழல் சட்டங்கள் யாவும் தமிழில் எழுதப்பட வேண்டும். இவற்றையெல்லாம் எழுதவும், எழுதுவதை ஊக்குவிக்கவும் துறைசார் சொற்களை உருவாக்கவும், அவற்றை புழக்கத்திலும் கொண்டு வரவேண்டும். பாலுட்டிகள், பறவைகள், சில பாம்புகள் தவிர பல உயிரினங்களுக்கு தமிழில் பெயரே கிடையாது. அவற்றிற்கெல்லாம் பெயரிட வேண்டும்.
துறைசார்ந்த நூல்களும் (technical, reference books) கையேடுகளும், கட்டுரைகளும் மட்டுமே பசுமை இலக்கியம் இல்லை. சுற்றுச்சூழல், பல்லுயிர் பாதுகாப்பு, புறவுலகு சார்ந்த தத்துவார்த்தமான சொல்லாடல்களும், புதினங்களும், கவிதைகளும், குழந்தைகளுக்கான கதைகளும் என மென்மேலும் பதிப்புகள் வெளிவரவேண்டும். இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது.
தமிழ் ஊடகச் சூழல் இயற்கை பாதுகாப்புக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கிறதா. அந்த வகையில் உங்களுக்கு நம்பிக்கை தரும் முயற்சிகள் நடக்கின்றனவா?
சுற்றுச்சூழல், காட்டுயிர் பாதுகாப்பு முதலியவை பெரும்பாலான மாத, வார இதழ்களிலும், தினசரிகளிலும் கிட்டத்தட்ட பக்கத்தை நிரப்பும் ஒரு அம்சமாகவே இருக்கும். சில பத்திரிக்கைகளில் இவ்வகையான பகுதிகள் இருக்கவே இருக்காது. சினிமாவும், அரசியலும் தான் மேலோங்கி இருக்கும். ஆன்மீகத்திற்கு, சிறுவர்களுக்கு, சினிமாவிற்கு, சமையலுக்கு என தினமும் ஒரு இணைப்பை தினசரிகள் வழங்கும் போது சுற்றுச்சூழலுக்கு, இயற்கை வரலாறு சங்கதிகளுக்கு என ஏன் வரக்கூடாது? காட்டுயிர், புதிய கல்வி, துளிர், பூவுலகு, கலைக்கதிர் முதலிய பத்திரிக்கைகளைத் தவிர. இது போன்ற பத்திரிக்கைகள் இருப்பது கூட எத்தனை பேருக்கு தெரியும்?
அதுபோல சில பத்திரிக்கைகளும், நாளிதழ்களும் காட்டுயிர்களை பயங்கரமானவை, கொடியவை என்பது போல சித்தரிப்பதையும் அடிக்கடி காணலாம். காட்டுயிர் இதழின் ஆசிரியர் ச. முகமது அலி எழுதிய “நெருப்பு குழியில் குருவி” நூலை எத்தனை பத்திரிக்கையாளர்கள் படித்திருப்பார்கள்? அண்மையில் வால்பாறையில் ஒரு புலி குடியிருப்புப் பகுதியில் புகுந்து விட்டது. அங்கிருந்த மாடு ஒன்று புலியை முட்டி விட்டது. மறுநாள் அப்புலி உயிரிழந்தது. உடனே தினசரிகள் என்ன எழுதின தெரியுமா? மாடு முட்டி புலி உயிரிழந்தது எனவும், அப்புலி 10 மாடுகளை அடித்து சாப்பிட்டுவிட்டது எனவும். இறந்த அப்புலியின் உடலை கிழித்து பரிசோதனை செய்த போது தான் தெரிந்தது அதன் இருதயத்தில் முள்ளம்பன்றியின் உடலில் உள்ள கூரிய முள் குத்தியிருந்தது. அதன் வயிற்றில் கூட எதுவுமே இல்லை. படிப்பவரை ஈர்க்கும் வண்ணம் எழுதுவதற்காக அந்த கம்பீரமான வேங்கையை, அதுவும் இறந்து போன வேங்கையை அவமானப்படுத்துதல், அவமதித்தல் சரியா? இப்போதெல்லாம் மிருகம், விலங்கு எனும் வார்த்தைகளையே நான் அதிகம் உபயோகிக்காமல் எனது கட்டுரைகளில் உயிரினம் என்றே குறிப்பிடுகிறேன். இவ்வார்த்தைகள் கிட்டத்தட்ட கெட்ட மனிதர்களைக் குறிக்கும் கெட்ட வார்த்தைகள் ஆகிவிட்டன.
எனினும் மாற்றங்களை கொண்டு வரவேண்டும் எனும் எண்ணமுடையவர்கள், ஊடகங்களை மட்டுமே குறை கூறாமல், முயற்சி எடுத்து மீண்டும் மீண்டும் அணுகி அவர்களுக்கு விளக்கமளித்தும், பத்திரிக்கையாளர்களுக்கு பட்டறைகள், கருத்தரங்குகள் நடத்துவதன் மூலம் இந்நிலையை மாற்ற முடியும் என்றே தோன்றுகிறது. இது போன்ற கருத்தரங்குகளை நாங்கள் இப்பகுதியில் நடத்தியும், பங்கு கொண்டும் இருக்கிறோம். ஒரு சில ரிப்போட்டர்களிடம் மாற்றத்தைக் காணவும் முடிகிறது.
புத்தகம், இதழ்களில் எழுதுவதன் மூலம் இயற்கை பாதுகாப்பு பரவலாகும் என்று நம்புகிறீர்களா?
அதுவும் உதவும். சுற்றுச்சூழல் மாசு இப்பூமிப்பந்தினை விழுங்கிக் கொண்டும், இயற்கையான வாழிடங்கள் அருகியும் வரும் இச்சூழலில் இவற்றைப் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் ஏற்படுத்த புறவுலகின் பால் கரிசனம் கொண்டுள்ளவர்கள் எல்லா வகையான ஊடகச் சூழலையும் பயன்படுத்திக் கொள்வது இன்றியமையாதது.
——————————————————————————
இக்கட்டுரையின் PDF ஐ இங்கே பெறலாம்.
வேழங்களை வாழவைக்க….
காடுகள் தொடர்ச்சியாக அழிக்கப்பட, யானைகளின் வீடுகளும் வாழ்க்கையும் வேகமாக அழிந்து வருகின்றன. இவ்வேழங்களை வாழவைக்க நாம் செய்ய வேண்டியது என்ன?
யானைக்கூட்டத்தை காட்டில் பார்ப்பது எவ்வளவு இனிமையான காட்சியாக இருக்கிறது! அதுவும் நீளமாக தந்தம் கொண்ட ஆண் யானையின் கம்பீரம் நம்மை வியக்க வைக்கிறது. பழக்கப்பட்ட யானை வீதியில் வரும்போது அதன் மேலே ஏறி பவனி வர செய்ய பலருக்கு ஆவலாயிருக்கும், நாம் கொடுக்கும் பழத்தையோ காசையோ தனது ஈரமான துதிக்கை முனையில் வாங்கி பெருமூச்சுடன் தலையில் சொல்லிக் கொடுத்தவாறு நம்மை ஆசீர்வதிக்கும் போது நமக்கு சிலிர்த்துப்போகுமல்லவா? கால்களில் சங்கிலியைக்கட்டி நமக்காக மரமிழுக்கும்போது கண்களில் நீர் வழிந்தாலும் முகத்தில் புன்னகையுடன் இருக்கும் யானைகளைப் பார்க்கும் போதெல்லாம் நாம் அவற்றிற்காக பரிதாப்படுகிறோம். யானைகளை விநாயகராகவும், கணபதியாகவும் உருவகித்து வழிபடுகிறோம். அதே சமயம் மனிதர்களாகிய நாம் தந்தத்திற்காக அவற்றை கொடூரமாக கொல்லவும் செய்கிறோம், மாதக்கணக்கில் அரும்பாடுபட்டு வளர்த்த பயிரை ஒரே இரவில் தின்று தீர்க்கும் யானைக்கூட்டத்தை கொல்லத்துடிக்கிறோம். ஒருபுறம் வணங்கவும் மறுபுறம் தூற்றவை செய்கிறோம். ஏனிந்த முரண்பாடு?
யானைத்திரளை தூரத்தில் இருந்து பார்த்து ரசிப்பதே ஒரு வித்தியாசமான அனுபவம். அவை இலாவகமான இலை, தழைகளை தமது துதிக்கையால் பிடித்துச் சாப்பிடுவதும், கூடி விளையாடுவதும், அளவளாவுவதும், தங்கள் குட்டிகளை அக்கறையுடன் பார்த்துக்கொள்ளும் விதத்தை நேரில் காண்பதே மிக சுவாரசியமானது.. உணர்வுப்பூர்வமான நெருக்கம், சமூக பழக்கவழக்கங்கள், ஒரு யானை துன்பத்திலிருக்கும் போது மற்றொன்று அதைப் பார்த்து பச்சாதாபப்படுவது என்று மனித உணர்வுகளுக்கும் யானைகளின் உணர்வுகளுக்கும் உள்ள ஒற்றுமைகள் நமக்கு ஆச்சரியம் அளிக்கும் விதத்தில் இருக்கின்றன.. அதேநேரம் அவை நமது வயல்களுக்குள் நுழைந்தாலோ, பல காலம் பணத்தையும் ஆற்றலையும் செலவழித்து நாம் உருவாக்கிய பயிர்களை அழித்தாலோ, கருணையின்றி மனிதர்களை மிதித்தாலோ, கொன்றாலோ நாம் அவற்றைக் கண்டு அஞ்சுகிறோம், வெறுக்கவும் செய்கிறோம். ஆனால் அவை ஏன் இப்படி நடந்து கொள்கின்றன என்று என்றைக்காவது சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா?
உண்மைதான், யானை – மனிதர்கள் இடையிலான மோதல் சம்பவங்கள் வருத்தம் தருபவைதான். ஆனால் அதேநேரம் நாம் யானைகளுக்கு எதிராக நாம் இதுவரை செய்த தொடர்ந்து செய்து கொண்டிருக்கிற மனிதத்தன்மையற்ற செயல்பாடுகளைப் பற்றி ஆறறிவுடைய நாம் உணர்ந்திருக்கிறோமா?
யானைகளின் வீடுகளான காடுகளும் புல்வெளிகளும் நாளுக்கு நாள் சுருங்கி வருகின்றன. யானைகள் பொதுவாகவே காட்டின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு இரை தேடப் போவது வழக்கம். இதற்காக யானைகள் பன்னெடுங் காலமாக பயன்படுத்தி வரும் வழித்தடங்களில் (elephant corridor) அணைக்கட்டுகள், ரயில் பாதைகள், சாலைகள், பிரமாண்டமான தண்ணீர் குழாய்கள், மனிதக் குடியிருப்புகள் போன்றவை பெருகிவிட்டன. இன்றைக்கு இந்த யானை வழித்தடங்கள் யாவும் ஆக்கிரமிப்புகள், தடைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் சூழப்பட்டுள்ளன.
மக்கள்தொகை தொடர்ச்சியாக அதிகரித்துக்கொண்டே இருப்பதால், மேலும் மேலும் காடுகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. யானைகளின் வீடுகளான காடுகள் ஒருபுறம் அழிந்து கொண்டிருக்கும் நிலையில், எஞ்சியுள்ள காடுகளும் சீரழிந்து கொண்டே செல்லும் நிலையில்தான் மனிதர்கள் – யானைகள் இடையிலான மோதல் வலுக்கச்செய்கிறது. ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சினையில் மனிதர்கள் யானைகளைக் கொல்வதும், யானைகள் மனிதர்களைக் கொல்வதும் நடக்கிறது. அது மட்டுமில்லாமல் யானைகளுக்கு இன்றியமையாத அடிப்படைத்தேவையான ஆதாரங்களான உணவு நிழல் தரும் பெரிய மரங்கள் கொண்ட வனம் யாவும் அற்றுப்போய்க்கொண்டிருக்கின்றன . தேயிலை, காப்பி, ரப்பர், ஏலக்காய் உள்ளிட்ட ஓரினப்பயிர்களை வளர்ப்பதற்காக காடுகள் துண்டு துண்டாக்கப்பட்டதும், சீரழிந்து போனதுமே இந்தப் பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம். யானைகளுக்குத் தேவையான உணவும், அவற்றை தேடிச் சென்றடைய யானைகள் காலங்காலமாகப் பயன்படுத்தி வந்த வழித்தடங்களும் அழிக்கப்பட்டுவிட்டன. இந்நிலையில், நமது பாரம்பரியம், காடுகளுடைய வளத்தின் அடையாளமாக இருக்கும் யானைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.
யானை வழித்தடங்கள் மட்டுமல்ல, யானைகளின் எண்ணிக்கையும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆண் யானைகளுக்கு உள்ள கவர்ச்சிகரமான தந்தம் காரணமாக, அவை கொடூரமாகக் கொல்லப்படுவதால் ஆண் – பெண் விகிதம் பாதிக்கப்படுகிறது. பயிர்களை சேதம் செய்யலாம் என்று நினைத்து மின்சாரம் பாய்ச்சப்பட்டோ, விஷம் வைக்கப்பட்டோ, அல்லது வேகமாக ஓடும் ரயிலில் அடிபட்டோ யானைக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கும் வயது முதிர்ந்த ஒரு பெண் யானை இறந்து போகும்போது, அந்தக் குடும்பம் தங்களது தலைவியை இழக்கிறது. இதன் காரணமாக அந்த யானைக் கூட்டம் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாட நேர்கிறது. இது சிலவேளைகளில் அந்த யானைக் குடும்பமே சிதறி வெவ்வேறு பாதைகளில் பிரிந்து செல்ல ஏதுவாகிறது. அது மட்டுமில்லாமல் சர்க்கஸில் வித்தை காட்டுவதற்காகவோ, கோவில்களில் சேவை செய்வதற்காகவோ யானைகள் பிடிக்கப்பட்டோ, கடத்தியோகொண்டு வரப்படும் போது அவை குடும்பத்திடம் இருந்து பிரிக்கப்பட்டு நிராதரவாகின்றன. அவற்றின் வீடான காடுகள் துண்டாக்கப்படும் போது, உறவினர்களுடனான நெருக்கமான தொடர்பை அவை இழக்கின்றன. அவை வாழும் காட்டிலேயே அகதியாக மாற்றப்படுகின்றன.
நமது சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டால் நாம் மனமுடைந்து போராட்டத்தில் குதிக்கிறோம். நீதி கேட்கிறோம். எப்படியெல்லாம் முடியுமோ, அப்படியெல்லாம் நமது ஆதரவை அவர்களுக்குத் தருகிறோம். ஏன்?அவர்களின் வலியை நாமும் உணர்வதால்தான். யானைகளும் நம்மைப் போன்ற சமூக விலங்குகள்தான். அவை தங்களது குட்டிகளை அக்கறையுடனும், உறவினர்களை நம்மைப் போலவே நெருக்கமாகவும் நடத்துகின்றன. யானைகளை வெறும் உணர்ச்சியற்ற பொருள்களாகப் பார்ப்பது தவறு என்று அவற்றை ஆராய்ச்சி செய்த உயிரியலாளர்களும், யானை ஆராய்ச்சியாளர்களும் வலியுறுத்துகின்றனர். அவை நம்மைப் போலவே உணர்ச்சி மிகுந்த விலங்குகள், நம்மைப் போலவே சமூகமாக வாழ்பவை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். யானைகளின் தேவைகளையும், அவற்றின் வலிகளையும் நாம் புரிந்துகொள்ளாத வரை, யானைகளை பாதுகாப்பது என்பது மிகப் பெரிய சவாலாகத்தான் இருக்கும்.
யானைகளை பாதுகாக்க மத்திய அரசு யானைகளை தேசிய பாரம்பரிய விலங்காக அங்கீகரித்துள்ளது. மேலும் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம் யானைகள் செயல்திட்ட அமைப்பை உருவாக்கியுள்ளது. அரசுடன் மக்களான நாமும் இணைந்து செயல்பட்டால்தான் யானைகளைக் காப்பாற்ற முடியும். அதற்கு தொடர்ச்சியான, ஒருங்கிணைந்த செயல்பாடுகள் தேவை என்று அந்த அமைப்பு பரிந்துரைத்துள்ளது (Elephant Task Force Report). யானைகளை பாதுகாப்பதற்காக அந்த அமைப்பு வழங்கியுள்ள முக்கியமான சில பரிந்துரைகள்:
- யானை வழித்தடங்களை மாற்றும் செயல்பாடுகளை தடை செய்ய வேண்டும்.
- யானைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் உள்ளூர் மக்களை ஈடுபடுத்த வேண்டும்.
- ஒவ்வொரு யானைப் பாதுகாப்பிடங்களிலும் உள்ளூர் நிர்வாகக் குழுக்களை அமைக்க வேண்டும்.
- யானைகள் வாழும் சூழலியல், அவற்றின் எண்ணிக்கை பற்றி அறிய தொடர்ச்சியாக ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.
- திருட்டுத்தனமாக நடக்கும் யானைத் தந்த வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.
- பழக்கப்பட்ட யானைகள் மீதான கவனமும் நிர்வாகமும் மேம்படுத்தப்பட வேண்டும்.
- அதிக மனித – விலங்கு மோதல் நடைபெற வாய்ப்புள்ள பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைக் குழுக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
- இந்த மோதலில் இழக்கப்படும் பயிர்களுக்குசெலவிட்ட முழுத்தொகையையும் நிவாரண நிதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்திடல் வேண்டும்.
- யானைகளின் முக்கியத்துவம், மதிப்பு பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

யானையின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்துவது அவசியம் (Photo: Kalyan Varma)
யானைகளைப் பாதுகாக்க நம்மால் என்ன செய்ய முடியும்:
- யானையைக் கொன்று பெறப்பட்ட அதனது உடல்பாகங்களை (உரோமம் மற்றும் தந்தம்) அல்லது அவற்றாலான ஆபரணங்ளை வாங்குவதைத் தவிர்க்கலாம்.
- யானை வாழும் பகுதியிலிருந்து வெட்டி வரப்பட்ட மரங்களாலான பொருட்களை வாங்குவதைத் தவிர்க்கலாம்.
- யானை ஆராய்ச்சி செய்யும் மையங்களுக்கு நம்மாலான தொண்டு செய்யலாம்.
- யானைகளின், அவற்றின் வாழிடங்கள் மற்றும் வழித்தடங்களின் முக்கியத்துவத்தையும் பிறருக்கு உணரவைக்க முயற்சி செய்யலாம்.
இந்தக் கட்டுரை Tamilnadu Science Forum (TNSF) வெளியிடும் துளிர் எனும் சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழில் (October 2011) வெளியானது. இக்கட்டுரையை இங்கு தரவிறக்கம் செய்துகொள்ளலாம்(PDF).
Edited version of this article on Asian Elephants published in ‘Thulir’ – a science monthly magazine for kids from Tamilnadu Science Forum (TNSF). You can download the PDF of this Tamil articlehere.
This is a Tamil Version of article titled “Trumpeting their Cause” published in The Hindu Young World on 18th July, 2011.