Posts Tagged ‘Tamil Nadu’
என்ன வேண்டும் தமிழ்நாட்டுக்கு?
இந்து தமிழ் திசை நாளிதழில் 18/03/2021 அன்று வெளியான கட்டுரையின் முழு வடிவம். தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி கடல் சூழலியல்-வள அரசியல் குறித்து பேராசிரியர் வறீதையா கான்ஸ்தந்தின், பழங்குடியினர் நலன் குறித்து திரு. எஸ். சி. நடராஜ், பொது சுகாதாரம், மருத்துவம் குறித்து திரு. ஜி. ஆர். இரவீந்திரநாத், பொதுக்கல்வி குறித்து பேராசிரியர் வீ. அரசு என பல துறைசார் வல்லுனர்களின் கட்டுரைகள் இதே தலைப்பில் வெளியானது.
இயற்கை, காட்டுயிர் பாதுகாப்பு தொடர்பான சில கருத்துக்களை இந்தக் கட்டுரை மூலம் தெரிவிக்க வாய்ப்பு கிடைத்தது. இது ஒரு முழுப்பட்டியல் அல்ல.
பருவநிலை அவசரநிலை – முதலில் பருவநிலை மாற்றம் குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள், அதற்கான காரணங்கள் யாவற்றையும் பற்றி எல்லா அரசியல் கட்சிகளுக்கும் புரிதல் ஏற்பட வேண்டும். அதன் பிறகு வளர்ச்சி எனும் பெயரில் எடுக்கப்படும் எல்லா செயல் திட்டங்களிலும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகளையும், அவை எந்த வகையில் இயற்கைச் சீரழிவுக்கும், புவிவெப்பமயமாதலுக்கு காரணமாகிறது என்பதைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ப செயல்படவேண்டும். பருவநிலை அவசரநிலையை பிரகடனம் (Climate Emergency Declaration) செய்யவேண்டும். பொருளாதார வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல், இயற்கைக்கு இணக்கமான வளங்குன்றாத வளர்ச்சி முறைகளைப் பின்பற்ற வேண்டும். நிலையான, உறுதியான பொருளாதார வளர்ச்சிக்கு சீரழிக்கப்படாத சுற்றுச்சூழல் தான் முக்கிய முதலீடு என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
நில, நீர், காற்று மாசு – இயற்கை அன்னை இலவசமாக நம் அனைவருக்கும் தந்த பரிசு. நாம் வாழும் இந்த நிலம், பருகும் நீர், சுவாசிக்கும் காற்று. நிலத்தை பாழ் படுத்தும் எந்த வகையான செயல் திட்டங்களையும் ஊக்கப்படுத்தக் கூடாது. இயற்கை விவசாயத்திற்கு மானியங்களும், கடனுதவிகளும் தாராளமாகத் தந்துதவி ஊக்குவிக்க வேண்டும். திடப்பொருள் கழிவு மேலாண்மையை (குறிப்பாக மருத்துவ, பிளாஸ்டிக் கழிவு) சரிவரச் செய்ய வேண்டும். இரசாயன, தொழிற்சாலை, சாயக் கழிவுகளை ஆறு, குளங்கள், கடல் முதலான நீர்நிலைகளில் வெளியேற்றுவதை முற்றிலும் தடுக்க வேண்டும். காற்று மாசினை கட்டுப்படுத்தவும், குறைக்கவும் (குறிப்பாக நகரங்களிலும், தொழிற்சாலைகள் நிரம்பிய பகுதிகளிலும்) வழி வகை செய்ய வேண்டும். தூய்மையான நீரையும், காற்றையும் பொதுமக்கள் இலவசமாகப் பெற வழி செய்ய வேண்டும்.
நீர்வளங்கள் பாதுகாப்பும் மேலாண்மையும் – குளம், ஏரி, ஆறு, சதுப்பு நிலங்கள், கடல் பகுதி முதலான நீர்நிலைகளை மேன்மேலும் மாசுபடாமலும், ஆக்கிரமிக்கப்படாமலும், சீரழியாமலும் சரிவரப் பாதுகாக்க வேண்டும். குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க குழாய் மூலமாகவும், நதிகளை இணைப்பதன் மூலமாகவும் நிரத்தரத் தீர்வு காணமுடியாது என்பதையும், இது இயற்கையை மேன்மேலும் சீர்குலைக்கும் என்பதையும் அறிய வேண்டும். தூய்மை செய்கிறோம் எனும் பெயரில் ஆறுகளின், ஏரிகளின் கரைகளை சிமெண்டு (வைத்துப்) பூசி அவற்றை மூச்சடைக்க வைக்காமல் கழிவுகளை அகற்றி, மாசை நீரில் கலக்கும் தொழிற்சாலைகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவும் வேண்டும்.
இயற்கையான வாழிடங்களின் பாதுகாப்பு – இயற்கையான வாழிடங்கள் (காடு, வெட்டவெளிப் புல்வெளிகள், நீர் நிலைகள்) மேன்மேலும் ஆக்கிரமிக்கப்படாமலும், அயல் தாவரங்களால் பாதிப்படையாமலும் பாதுகாக்கப்பட வேண்டும். வெட்டவெளிகள் பாழ் நிலங்கள் (Waste lands) அல்ல அதுவும் ஒரு வகையான இயற்கையான வாழிடம் என்பதை அறிய வேண்டும். இந்த வாழிடங்களை பாதுகாப்பது எவ்வளவு முக்கியமோ, அதேபோல் அவ்வாழிடங்களில் சீரழிந்த பகுதிகளை அங்குள்ள தாவரங்களை மட்டும் வைத்து வளர்த்து அறிவியல் பூர்வமாக மீளமைத்தலும் (Ecological restoration) முக்கியம் என்பதை அறிய வேண்டும். அதற்காக திறந்த வெளி புதர் காடுகளிலும், வெட்டவெளிப் புல்வெளிகளிலும் யூக்கலிப்டஸ் முதலான அயல் தாவரங்களை நட்டு வைத்து வளர்ப்பது மீளமைத்தல் ஆகாது என்பதையும் அறிய வேண்டும். இது போல வளர்த்து வைத்த ஓரினத்தாவரங்கள், காடுகள் ஆகிவிடாது என்பதையும், இவற்றால் வனப்பரப்பு அதிகரித்து விட்டதாகச் சொல்வதையும் ஏற்க முடியாது.
வனத்துறை மேம்பாடு – வனத்துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். குறிப்பாக பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் (சரணாலயங்கள், புலிகள் காப்பகங்கள்) வேட்டைத் தடுப்புக் காவலர்களின் (Anti-poaching watchers) எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட பகுதிகள் அல்லாத வனத்துறையின் கீழ் உள்ள இடங்களிலும் இது போன்ற வேட்டைத் தடுப்புக் காவலர்களை பணியில் அமர்த்தி அவர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியத்தை அளிப்பதோடு, ஆயுள், விபத்து காப்பீடுகளையும் அளிக்க வேண்டும். வனத்துறை அதிகாரிகளுக்குத் தேவையான உபகரணங்களையும் (காமிரா, ஜி.பி.எஸ்), நவீன ஆயுதங்களையும் வழங்க வேண்டும். வனப் பாதுகாப்பு, காட்டுயிர் பாதுகாப்புச் சட்டங்களை தளர்த்தவோ, நீர்த்துப்போகவோ செய்யாமல் கடுமையாக்கவும், தேவையான இடங்களில் விரிவாக்கவும் வேண்டும். திருட்டு வேட்டையை தடுக்கவும், கண்காணிக்கவும் ஒவ்வொரு சரகத்திற்கும் பறக்கும் படையை அமைக்கவேண்டும். காட்டுயிர் ஆராய்ச்சியாளர்களையும் (Wildlife Biologist) காட்டுயிர் மருத்துவர்களையும் (Wildlife Veterinarians) எல்லா பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலும் நிரந்தரப் பணியில் அமர்த்தி அவர்களின் ஊதியத்தையும் சீரமைக்க வேண்டும்.
மனித-காட்டுயிர் எதிர்கொள்ளல் – மாறிவரும் பொருளாதாரச் சூழலை சமாளிக்க, இயற்கை வளங்களைக் குன்ற வைக்கும் பல வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும் காரணங்களால் (யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமிக்கும் கட்டமைப்புகள், விவசாயப் பெருக்கத்திற்காக வனப்பகுதிகளின் ஓரங்களை ஆக்கிரமித்தல், இயற்கையான வாழிடங்களின் ஊடே செல்லும் சாலை, இரயில் தடம், மின் கம்பிகள் முதலான நீள் கட்டமைப்புத் திட்டங்கள்) மனித-காட்டுயிர் எதிர்கொள்ளல் மேன்மேலும் அதிகரிக்கின்றது. இதனால் மனித உயிர் இழப்பும், காட்டுயிர் உயிர் இழப்பும், வாழிட இழப்பும் ஏற்படுகிறது. மனித-காட்டுயிர் எதிர்கொள்ளலை சமாளிக்க வனத்துறையுடன், வருவாய்த் துறை, காவல் துறை போன்ற துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்பட வைக்க வேண்டும். பாதுகாக்கப்பட்டப் பகுதிகளுக்கு (Protected areas) வெளியேயும் தென்படும் காட்டுயிர்களால் (குறிப்பாக மயில்) சேதம் அதிக அளவில் இருப்பின் அதை உறுதி செய்த பிறகு, அங்கும் அரசு இழப்பீடு அளிக்கும் திட்டத்தை ஏற்படுத்துதல் அவசியம். விவசாயிகளுக்கும் பயிர்களை காப்பீடு செய்யும் திட்டங்களை தொடங்குவதும் அவசியம். காட்டுயிர்களின் உயிருக்கு ஆபத்தில்லாத பயிர்களைப் பாதுகாக்கும் முறைகளை கண்டறிந்து அந்த முயற்சிகளை அதிகப்படுத்த வேண்டும்.
விலங்குவழி நோய்த்தொற்றுப் பரவல் கண்காணிப்பும் மேலாண்மையும் – எதிர்காலத்தில் விலங்குவழி பெருந்தொற்றின் தீமைகளைக் குறைக்க ஒரே நலவாழ்வு கோட்பாட்டை (One Health Concept) முதன்மைப்படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும். அதாவது, நல்வாழ்வு என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, அவர்களைச் சுற்றியிருக்கும் நிலவமைப்பு, சுற்றுச்சூழல், அதிலுள்ள காட்டுயிர்கள் ஆகிய எல்லாவற்றின் நலனையும் கருத்தில் கொண்டது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். விலங்குவழித் தொற்றுக்குக் காரணமான காட்டுயிர் கள்ளச் சந்தை, காட்டுயிர் வேட்டை போன்றவற்றை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். விலங்குவழி நோய்த்தொற்று பரவல், மேலாண்மை குறித்த ஆராய்ச்சிக் கூடங்களை உருவாக்க வேண்டும்.
இயற்கைக் கல்வி – இயற்கை பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறிந்த கருத்தாக்கங்கள் கொண்ட பாடத்திட்டத்தினை பள்ளிகள், கல்லூரிகள் என எல்லா தளத்திலும் ஏற்படுத்த வேண்டும். பொதுமக்களுக்கும் இந்த கருத்தாக்கங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக மனித காட்டுயிர் எதிர்கொள்ளல் அதிகமாக உள்ள பகுதியில் உள்ளவர்களுக்கு காட்டுயிர்களின் பால் இயல்பாகவே இருக்கும் நல்உணர்வுகளையும், உணர்வுபூர்மவான ஈர்ப்பையும், பிடிப்பையும் போற்றியும், அவை குன்றாமல் இருக்கவும் ஆவன செய்ய வேண்டும். விலங்குவழித் தொற்றுக்குக்கான காரணங்களையும், அவை பரவாவண்ணம், தனிமனிதராக செய்ய வேண்டிவற்றையும், பொது சுகாதாரத்தை வலியுறுத்தியும், இயற்கை சீரழிவுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ துணைபோகாமல் இருப்பதையும் பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டும்.
அழிவின் விளிம்பில் இருக்கும் வாழிடங்கள், காட்டுயிர்கள் பாதுகாப்பு – யானை, புலி முதலான பேருயிர்கள் மட்டுமல்லாது, அதிகம் அறியப்படாத உயிரினங்களின் (உதாரணமாக அலங்கு, வௌவால் வகைகள் போன்றவை) பாதுகாப்பையும் மேம்படுத்த வேண்டும். பாறு கழுகுகள் போன்ற அழிவில் விளிம்பில் இருக்கும் பறவைகளைப் பாதுகாக்க நெடுங்காலத் திட்டங்களை தொடங்க வேண்டும். வனத்துறையால் பாதுகாக்கப்படாத பகுதிகளில் உள்ள புதர்காடுகள், வெட்டவெளிப் புல்வெளிகள், கடலோரப் பகுதிகள் முதலான வெகுவாக அழிக்கப்பட்டுவரும் வாழிடங்களையும், அங்குள்ள உயிரினங்களையும் பாதுகாக்க வழிவகை செய்ய வேண்டும்.
நகரச் சூழல் மேம்பாடு – நகர்ப்புறங்களில் உள்ள உயிர்ப் பன்மையம் குறித்த விழிப்புணர்வையும், அவற்றின் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும். நகர்ப்புறங்களிலும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் உள்ள (பூங்கா, ஏரி, குளம் முதலான) இயற்கையான பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்யாமல், சாலை விரிவாக்கப் பணிகளுக்காக சாலையோர மரங்களை வெட்டாமல், மேன்மேலும் இயல் வகை தாவரங்களையும், மரங்களையும் நட்டு வளர்க்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மையில் பொதுமக்களின் பங்கை வலியுறுத்தி அவர்களையும் அதில் ஈடுபட வைக்க வேண்டும். கார்பனை அதிகமாக வெளியிடும் செயல்பாடுகளை வெகுவாகக் குறைக்க பொதுப் போக்குவரத்து வசதிகளை பெருக்க வேண்டும்.
——
உலக அளவில் தேர்தல் அறிக்கைகளில் பொதுவாக இயற்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த திட்டங்கள் மிகக் குறைவாகவே உள்ளது. இதனால் துறைசார் வல்லுனர்கள், ஆர்வலர்கள் அரசியல் கட்சிகள் இதற்காக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பல கட்டுரைகளையும், அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளனர். அவற்றில் சில கட்டுரைகளை இங்கே காணலாம்.
- சுற்றுச்சூழல் குறித்த விரிவான தேர்தல் அறிக்கையை “பூவுலகின் நண்பர்கள்” குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. காண்க செய்தி.
- Neha Sinha (2019). How Environment-friendly are election manifestos? Economic and Political Weekly. Vol. 54, Issue No. 20, 18 May, 2019.
- Guha, Asi & Joe, Elphin. (2019). ‘Environment’ in the election manifestos. Economic and Political Weekly. 54. 13-16.
- Mayank Aggarwal (2019). Environment gets voted into party manifestos. Mongabay India. 12th April 2019)
——
தமிழகத்தில் eBirdல் இது வரை பறவைகள் பார்க்கப்படாத இடங்கள்
அப்படிக் கூட இடங்கள் உள்ளதா எனக்கேட்டால் ஆம், உள்ளது. அந்த இடங்களை eBirdல் எப்படி கண்டுபிடிப்பது?
1. https://ebird.org/content/india/ க்கு செல்லுங்கள்
2. Explore – ஐ சொடுக்கவும்
3. Species Map ஐ சொடுக்கவும்
4. பொதுவாக எல்லா இடங்களிலும் எளிதில் காணக்கூடிய பறவை ஒன்றின் பெயரை Species பகுதியில் அடிக்கவும் (உதாரணமாக House Crow)
5. Locationல் Tamil Nadu என அடிக்கவும்
6. இப்போது தென்னிந்திய வரைபடமும், House Crow வின் பரவலும் திரையில் விரியும்.
7. அடர் ஊதா நிறத்தில் இருக்கும் பகுதிகளில் இருந்து சமர்ப்பிக்கப்பட்ட 40-100% பறவைப் பட்டியல்களில் House Crow பதிவுசெய்யப்பட்டுள்ளது. இள ஊதா நிறம் குறைவாக பதிவு செய்யப்பட்டதைக் குறிக்கும். சாம்பல் நிறம் அங்கே பறவைகள் பார்த்து பட்டியல் சமர்ப்பிக்கப்படுள்ளது, ஆனால் காகம் அந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை.
8. இது தவிர சில கட்டங்கள், சாம்பல் நிறத்தில் கூட இல்லாமல் வரைபடம் தெளிவாகத் தெரியும். அந்தப் பகுதிகள் தான் இது வரை பறவைகளே பார்க்கப்படாத இடங்கள்.
9. இப்பொது Locationல் உங்களது மாவட்டத்தின் பெயரை அடிக்கவும். உங்கள் பகுதிகளில் இது போன்ற காலி இடங்கள் இருந்தால் அப்பகுதிக்குச் சென்று பறவைகளைப் பார்த்து பட்டியலிட்டு eBirdல் சமர்ப்பிக்கவும்.
10. இப்போது Dateக்கு சென்று Year-Round, All Years என்பதை சொடுக்கவும். CUSTOM DATE RANGE… பகுதியில் கிழே மாதம் வாரியாக (Jan–Jan, Feb-Feb போன்று) காகத்தின் பரவலை/பதிவை பார்க்கவும். பல இடங்கள் காலியாக இருப்பதைக் காணலாம்.
இது போல வேறு பல பறவைகளுக்கும் பார்த்து அறியவும். உதாரணமாக Common Myna அல்லது Large-billed Crow போன்ற பறவைகளின் பெயர்களையும் மாதம் வாரியாக பார்த்து அவற்றின் பரவல் நிலையை அறிந்து அதற்குத் தக்க உங்களது பறவை நோக்கலை திட்டமிடவும்.
இதைச் செய்வதால் என்ன பயன்?
பறவைகளின் பரவல், எண்ணிக்கை, அடர்வு போன்ற காரணிகள் அவற்றின் பாதுகாப்பிற்கும், அவற்றின் வாழிடங்களின் பாதுகாப்பிற்கும் உதவும். ஓரிடத்தில் இருந்து தொடர்ச்சியாக பறவைகளைப் பார்த்து பதிவு செய்து வந்தால் மட்டுமே அந்த இடத்தில் அவற்றின் சரியான, துல்லியமான, உண்மை நிலையை அறிய முடியும்.
நாம் பதிவு செய்யும் ஒவ்வொரு பறவையின் குறிப்பும் அவற்றின் பாதுகாப்பிற்கும் உதவும்.
தமிழ் நாட்டில் எங்கே, எப்போது பறவைகளைப் பார்க்க வேண்டும்?
தமிழ்நாட்டில் பறவை பார்த்தலும், அப்படி பார்ப்பதை eBirdல் உள்ளிடுவதும் அண்மைக் காலங்களில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகின்றது.
எனினும், தற்போது தமிழ்நாட்டில் பறவை பார்ப்போர் அதிகமாக இருக்கும் இடங்களில் இருந்தே (உதாரணமாக கோவை, சென்னை, காஞ்சிபுரம் முதலிய மாவட்டங்கள்) eBirdல் பறவைப் பட்டியல்கள் அதிகமாக வந்து குவிகின்றன. ஆனாலும் இந்த இடங்களில் கூட ஆண்டு முழுவதும் ஒரே சீராக (அதாவது மாதா மாதம் அல்லது வாரா வாரம்) பறவைகள் பார்க்கப்பட்டு பட்டியல்கள் eBirdல் வந்து சேர்கிறதா என்றால் இல்லை.
சில மாவட்டங்களில் ஒரு சில குறிப்பிட்ட பறவை ஆர்வலர்களாலும், குழுவினர்களாலும் (உதாரணமாக சென்னையில் The Nature Trust, கோவையில் Coimbatore Nature Society – CNS), அப்பகுதிகளில் பறவைகள் பார்ப்பதும் பட்டியலிடுவதும் ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. எனினும் மாவட்ட அளவில் பார்க்கும் போது இப்படிப்பட்ட நிகழ்வுகள் ஓரிரு குறிப்பிட்ட இடங்களில் மற்றும் காலங்களில் மட்டுமே தொடந்து நடைபெறும்.
சில மாவட்டங்களில் சில காலங்களில் மட்டும் அதிகமான பறவைப் பட்டியல்கள் சமர்ப்பிக்கப்படும். உதாரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கோடியக்கரைக்கு பல பறவை ஆர்வலர்கள் செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை வலசை வரும் பறவைகளைக் காணச் செல்வார்கள். ஆனால் இடைப்பட்ட மாதங்களில் (ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதங்களில்) அப்பகுதியில் உள்ள பறவைகளின் நிலை பற்றிய தகவல்கள் குறைவாகவே இருக்கும்.
பறவைகளின் பரவல், எண்ணிக்கை, அடர்வு போன்ற காரணிகள் அவற்றின் பாதுகாப்பிற்கும், அவற்றின் வாழிடங்களின் பாதுகாப்பிற்கும் உதவும். ஓரிடத்தில் இருந்து தொடர்ச்சியாக பறவைகளைப் பார்த்து பதிவு செய்து வந்தால் மட்டுமே அந்த இடத்தில் அவற்றின் சரியான, துல்லியமான, உண்மை நிலையை அறிய முடியும்.
அந்த ஓர் இடம் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியாகவும் அதாவது சரணாலயம், நீர்நிலை அல்லது பரந்த நிலப்பரப்பாகவும் அதாவது ஒரு ஊர், மாவட்டம், மாநிலம், நாடு என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
தமிழ் நாட்டில் தற்போது மொத்தம் 32 மாவட்டங்கள் உள்ளன. பாண்டிச்சேரியையும் காரைக்காலையும் சேர்த்தால் 34. இவற்றில் எந்த எந்த மாவட்டங்களில் எந்த எந்த மாதங்களில் பறவைகள் பார்க்கப்பட்டு eBirdல் உள்ளிடப்படுகின்றன என்று பார்த்த போது சில உபயோகமுள்ள தகவல்களை பட்டை வரைபடத்தின் மூலம் (Bar Chart) அறிய முடிந்தது. அதன் முடிவுகளில் சிலவற்றை இக்கட்டுரையில் காணலாம்.
அதற்கு முன் இந்த பட்டை வரைபடத்தினை (Bar Chart) எப்படி eBirdல் அடைவது என்பதையும் அதை புரிந்து கொள்வது எப்படி என்பதையும் அறிந்து கொள்வோம்.
1. eBird India இணையத்திற்கு செல்லவும்
2. Explore Data வை சொடுக்கவும்
3. Bar Charts ஐ சொடுக்கவும்
4. Choose a Locationல் Select a region:ல் Tamil Nadu ஐ தேர்ந்தெடுக்கவும்
5. Then select a subregion: ல் Counties in Tamil Nadu வை தேர்ந்தெடுக்கவும்
6. பின்னர் “Continue” வை சொடுக்கவும்
7. தமிழ் நாட்டில் உள்ள எல்லா மாவட்டங்களும் பட்டியலிடப் பட்டிருக்கும். அதில் நீங்கள் பார்க்க விரும்பும் மாவட்டத்தை தேர்ந்தெடுத்து “Continue” வை சொடுக்கினால் பட்டை வரைபடத்தை அடையலாம்.
இந்த பட்டை வரைபடத்தில் (eBirdல்) ஒரு மாதம் நான்கு வாரங்களாக பிரிக்கப்பட்டு இருக்கும். 1-7 முதல் வாரம், 8-14, இரண்டாவது வாரம், 15-21 முன்றாவது வாரம், 22 30 or 31 நான்காம் வாரம். அதாவது மாதத்தின் கடைசி வாரத்தில் நாட்கள் அதிகம்.
இப்போது உதாரணமாக அரியலூர் மாவட்டத்தை எடுத்துக் கொள்வோம். இந்த மாவட்டத்தில் Lesser Whistling Duck (Dendrocygna javanica) – சீழ்கைச் சிரவி – ஜனவரி முதல் வாரத்திலும் மூன்றாவது வாரத்திலும் பார்க்கப்பட்டதை பச்சை நிற பட்டையை வைத்து அறிந்து கொள்ளலாம். இரண்டாவது வாரத்தில் அந்த மாவட்டத்தில் பறவைகள் பார்க்கப்பட்டு பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டாலும் சீழ்கை சிரவி பதிவு செய்யப்படவில்லை. ஆகவேதான் அங்கே இளநீல வெற்றிடம் உள்ளது. ஆனால் மார்ச் நான்காம் வாரத்தை கவனியுங்கள். இளங்கருப்பு புள்ளிகளால் ஆனா பட்டையால் நிரப்பப்படிருக்கும். இது போதிய தரவுகள் இல்லை என்பதை அதாவது அந்த மாவட்டத்தில், அந்த வாரத்தில் பறவைகளைப் பார்த்து ஒரு பட்டியல்கூட உள்ளிடப்படவில்லை என்பதைக் குறிக்கிறது.
இந்த பட்டை வரைபடம் மிகக் குறைவான தரவுகளைக் (Data) கொண்டே தீட்டப்பட்டுள்ளது என்பதை மனதில் கொள்ள வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் ஜனவரி முதல் மார்ச் வரை ஓரளவிற்கு பறவைகளைப் பார்த்து பட்டியல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் அதன் பின் தொடர்ச்சியாக அப்படி ஒன்றும் பெரிய நிகழ்வுகள் ஏதும் இல்லை. இந்த பட்டை வரைபடம் 1900ம் ஆண்டு முதல் 2016 வரை உள்ளிடப்பட்ட தரவுகளைக் கொண்டது. எனினும் பெரும்பாலான பட்டியல்கள் 2014 க்குப் பிறகுதான் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன (மேலும் விவரங்களுக்கு இந்த உரலியை சொடுக்கவும்). அதுவும் பெரும்பாலும் கரைவெட்டி பறவைகள் சரணாலத்தில் இருந்து, ஓரிரு பறவை ஆர்வலர்களால் மட்டுமே பதிவு செய்யப்பட்டவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
நாம் உதாரணத்திற்கு எடுத்துக் கொண்ட அரியலூர் மாவட்டத்தைப் போல எல்லா 34 மாவட்டங்களின் நிலையை July 2016 முதல் வாரத்தில் எடுக்கப்பட்ட கீழ்க்கண்ட பட்டை வரைபடங்களின் மூலம் அறியலாம்.
இந்த வெற்றிடங்களை நிரப்ப என்ன செய்யலாம்?
- பறவை ஆர்வலர்கள் தங்கள் தங்கியிருக்கும் மாவட்டங்களின் பட்டை வரைபடைத்தை eBirdல் பார்த்து, எந்த எந்த வாரங்களில் அல்லது மாதங்களில் பறவைகளைப் பற்றிய விவரங்களில் வெற்றிடங்கள் இருக்கிறன என்பதைக் கண்டறிந்து அந்த குறிப்பிட்ட காலங்களில் பறவைகளைப் பார்த்து பட்டியலிடலாம்.
- ஒரிரு பறவை ஆர்வலர்களாலோ, குழுவினர்களாலோ ஒரு மாவட்டத்தில் உள்ள எல்லா இடங்களுக்கும் சென்று பறவைகளைப் பார்த்து பட்டியலிடுவது என்பது முடியாத காரியம். ஆகவே தங்களது மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும் ஆர்வமுள்ளவர்களுக்கு பறவைகள், பறவை பார்த்தல், அவற்றின் முக்கியத்துவம் முதலியவற்றை கருத்தரங்குகள், பட்டறைகள் மூலம் எடுத்துச் சொல்லலாம். அவர்களுக்கு சரியான தருணத்தில் eBird ஐ பற்றி எடுத்துச் சொல்லலாம்.
- பறவை ஆர்வலர்கள் இதற்கு முன் பல்வேறு மாவட்டங்களில் பார்த்து குறித்து வைத்திருந்தால் அல்லது பழைய நிழற்படங்களில் இருந்து பறவைகளைப் பற்றிய (இடம், எண்ணிக்கை நேரம் போன்ற) தகவல்களை அறிந்து Historical அல்லது Incidental முறையில் eBirdல் உள்ளிடலாம்.
- அதிகம் பயணம் செய்யும் பறவை ஆர்வலர்களாக இருந்தால் தாங்கள் இருக்கும் மாவட்டத்திற்கு அருகில் இருக்கும் மாவட்டங்களில் எந்த மாதங்களில் விவரங்கள் இல்லை என்பதை eBirdல் பார்த்து தங்களது பயணங்களை திட்டமிட்டு அங்கே சென்று பறவைகளைப் பார்த்து பட்டியலிடலாம்.
- இது கொஞ்சம் வினோதமான யோசனை. நீங்கள் கொஞ்சம் adventurous typeஆக இருந்தால், நேரமும், கொஞ்சம் பணமும் இருந்தால் தனியாகவோ அல்லது ஒரு குழுவாகவோ ஆகஸ்டு இரண்டாவது வாரத்தில் (8-14 தேதிகளில்) அதாவது இந்த ஆண்டின் 30ஆவது வாரத்தில் அரியலூர், கடலூர், தருமபுரி, கன்னியாகுமரி, கரூர், நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திருநெல்வேலி, திருவாரூர், திருவண்ணாமலை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள பறவைகளைப் பார்த்து பட்டியலிடவும். இப்படிச் செய்தால் ஒரே வாரத்தில் 16 மாவட்டங்களில் உள்ள வெற்றிடங்களை நிறப்ப முடியும். அவரவர் வசதி, விருப்பத்திற்கு ஏற்றவாறு பைக்கிலோ, பேருந்திலோ, இரயிலிலோ, தனியாக ஒரு வண்டியைப் பிடித்துக் கொண்டோ பயணம் செய்யலாம். இந்த வினோதமான பயணத்திற்கு ஆகஸ்டில் முடியவில்லை என்றால் செப்டம்பர் முதலிரண்டு வாரங்கள் உகந்தவை. அப்படியெல்லாம் செய்ய முடியவில்லையெனில் அடுத்த ஆண்டு (2017) மார்ச் 3ம் வாரம் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு சென்று பறவை பட்டியல்களை eBirdல் சமர்ப்பித்தால் அங்குள்ள ஒரே ஒரு வெற்றிடத்தை அடைத்த பெருமை உங்களுக்கு வரும்!
மேலே உள்ள 34 மாவட்டங்களின் பட்டை வரைபடங்களை அடிப்படையாக வைத்து ஒரு வரைபடம் தயாரித்துள்ளேன். இது எந்த எந்த மாவட்டங்களில் எத்தனை வாரங்கள் இது போன்ற இடைவெளிகள் உள்ளன, ஒரே வாரத்தில் அதிகபட்சமாக எத்தனை மாவட்டங்களில் இது போன்ற இடைவெளிகள் உள்ளன என்பதை அறிய உதவும். இந்தத் தரவுகளை இந்த Excel File ல் பார்க்கலாம்.

இளநீல பின்னணியில் புள்ளிகளைக் கொண்ட கட்டங்கள் eBird ல் அந்த மாவட்டத்தில் அந்த வாரத்தில்/மாதத்தில் பறவைப் பட்டியல்கள் எதுவுமே இல்லாததைக் குறிக்கிறது. July 2016 முதல் வாரத்தில் eBird ல் உள்ள பட்டை வரைபடத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது இந்த வரைபடம்.
இன்னும் பல ஆண்டுகள் இந்த 34 மாவட்டங்களின் பல பகுதிகளில் இருந்து பலரும் எல்லா மாதங்களில் இருந்தும் பறவைகளைப் பார்த்து eBirdல் பட்டியலிட்டால் அந்த மாவட்டத்தில் உள்ள பறவையினங்களையும், அவற்றின் பரவல், எண்ணிக்கை, தென்படும் காலம் முதலிய விவரங்களையும் ஓரளவிற்கு தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.
பறவைகளைப் பார்த்து eBirdல் பட்டியலிட்டு நாம் எத்தனை வகையான பறவைகளைப் பார்த்திருக்கிறோம், எத்தனை பட்டியல்களை சமர்ப்பித்திருக்கிறோம் என்று மட்டும் பார்ப்பது ஒரு நல்ல பறவை ஆர்வலர்களுக்கு அழகல்ல. அவரவர் வாழும் பகுதிகளில் எந்த எந்த இடங்களில்/ காலங்களில் இருந்து தரவுகள் குறைவாகவோ அல்லது முற்றிலும் இல்லாமலோ இருந்தால் அந்த வெற்றிடங்களையும் நிரப்புவது ஒரு பொறுப்பான பறவை ஆர்வலரின் கடமையாகும்.