UYIRI

Nature writing in Tamil

அஞ்சல் தலையும் பறவைகளும்-29

leave a comment »

அஞ்சல் பொருட்கள் சேகரிப்பில் Permanent Pictorial Cancellations (நிரந்தர வரைபட முத்திரை) என்று ஒன்று உண்டு. நாம் அனுப்பும் அஞ்சலில் தேதியும், இடமும் கொண்ட வட்ட வடிவ முத்திரையைத்தான் பொதுவாக இடுவார்கள். ஆனால் ஒரு சில சிறப்புமிக்க ஊர்களில் அவ்வூரில் புகழ்பெற்றவையாக விளங்கும் வழிபாட்டுத் தளங்கள், தொலைநோக்கி மையங்கள், காட்டுயிர்கள் போன்றவற்றை வரைபடமாக முத்திரையில் அச்சு செய்து, நாம் கேட்டுக்கொண்டால் அந்த முத்திரையை நமது கடிதங்களில் வைத்து அனுப்புவார்கள்.

எடுத்துக்காட்டாக, கோடியக்கரை அஞ்சலகத்தில் அங்குள்ள கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் வலசை வரும் அழகிய பூநாரையின் வரைபடம் உள்ள முத்திரை இருக்கும்.

கோடியக்கரை அஞ்சல் அலுவலகத்தில் இருக்கும் Permanent Pictorial Cancellation குறித்த அறிவிப்புப் பலகை.

அதுபோலவே களக்காடு அஞ்சல் அலுவலகத்தில், சிங்கவால் குரங்கு (சோலைமந்தி) உள்ள முத்திரை இருக்கும்.

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள டாப்ஸ்லிபில் வரையாடு தலை கொண்ட முத்திரை இருக்கும். தமிழ்நாட்டில் மட்டும் 31 அஞ்சலகங்களில் இது போன்ற நிரந்தர வரைபட முத்திரைகள் இடப்படுகின்றன.

அண்மையில் அகமதாபாத் சென்றிருந்த போது சபர்மதி ஆசிரமம் சென்றிருந்தேன். அதனருகில் உள்ள அஞ்சலகத்திலிருந்து என் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் கடிதம் எழுதி அதில் சபர்மதி ஆசிரமம் கொண்ட முத்திரையை வைத்து அனுப்பினேன்.

காந்தி ஆசிரமம் வரைபடம் கொண்ட வரைபட முத்திரை

Written by P Jeganathan

November 29, 2023 at 9:00 am

Leave a comment