Archive for the ‘Photography’ Category
நீங்களும் விஞ்ஞானிதான்!
தியாகராஜனும், தேவாவும், அப்ரஹாமும் பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதிக்கு அதிகாலையிலேயே வந்தடைந்து விட்டார்கள். பள்ளிக்கரணையின் வெவ்வேறு பகுதிகளுக்கு பிரிந்து சென்று பறவைகளை பார்த்து கணக்கெடுத்துக் கொண்டிருந்தனர். சுமார் 2 மணி நேரத்திற்குப் பிறகு அவர்களுக்கு பயிற்சியளித்து, இந்த நடவடிக்கைகளை ஒருங்கினைக்கும் திருநாரணனுடன் சேர்ந்து, அவர்கள் அன்று பார்த்த பறவைகளின் பட்டியலை eBird இணையதளத்தில் உள்ளீடு செய்தார்கள். அன்று ஞாயிற்றுக் கிழமை. இது முடித்து மாலை வீடு திரும்பியதும் அவர்களது வீட்டுபாடங்களை எழுதவோ, படிக்கவோ வேண்டும். ஆம் அவர்கள் அனைவரும் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படிக்கும் மாணவர்கள். அவர்கள் பறவை ஆராய்ச்சியாளர்கள் அல்ல. சென்னையைச் சேர்ந்த இயற்கை அறக்கட்டளை (The Nature Trust) எனும் இயற்கைக் குழுவின் அங்கத்தினர்கள். இவர்கள் இப்படி உருப்படியாக பொழுதைக் கழித்து ஓரிடத்திலிருக்கும் பறவைகளின் வகைகளையும், எண்ணிக்கையையும் பட்டியலிடுவது, பல ஆராய்ச்சியாளர்களும், பறவையியலாளர்களுக்கும் உதவியாக இருக்கிறது. ஏனெனில் ஆராய்ச்சியாளர்கள் எல்லா இடங்களிலும் எல்லா நேரத்திலும் இது போன்ற பணிகளைச் செய்வது இயலாத காரியம். ஆகவே இது போன்ற இயற்கை ஆர்வலர்களின் பங்கு அவர்களுக்கு பேருதவி புரிகிறது.
*****
சில ஆண்டுகளாக சிட்டுக்குருவிகள் அழிந்து வருகின்றன, பல இடங்களில் அற்று போய்விட்டன என்றெல்லாம் செய்தி வந்து கொண்டிருந்தது. இது உண்மையா எனக் கண்டறிய நாடு தழுவிய சிட்டுக்குருவிகள் கணக்கெடுப்பு இணையத்தில் 1 April முதல் 15 June 2012 வரை நடத்தப்பட்டது. இதில் சிட்டுக்குருவிகளை அவரவர் வீட்டின் அருகில், ஊரில், பொது இடங்களில் பார்த்த விவரங்கள் கேட்கப்பட்டது.
இந்த துரித, இணைய கணக்கெடுப்பின் மூலம் சிட்டுக்குருவிகள் இந்தியாவின் பல பகுதிகளில் பல பரவியிருப்பதும், பல இடங்களில் குறிப்பாக கிராமப்புறங்களில் ஒரளவு நல்ல எண்ணிக்கையில் இருப்பதையும், மாநகரங்களின் சில பகுதிகளில் அவை குறைந்த எண்ணிக்கையில் இருப்பதையும் அறிய முடிந்தது. நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பின்பே அவை சில இடங்களில் ஏன் குறைந்து வருகின்றன என்பதை அறிய முடியும் என்றாலும், இது போன்ற துரித கணக்கெடுப்பின் (Rapid Survey) மூலம் தற்போதைய நிலையை ஓரளவிற்கு மதிப்பிட முடிந்தது. இந்த கணக்கெடுப்பின் முடிவில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையைப் பற்றி 10666 பதிவுகள், 8425 இடங்களிலிருந்து கிடைத்தது. இத்தகவல்களை அளித்தது 5655 பங்களிப்பாளர்கள் (மேலும் விவரங்களுக்கு காண்க www.citizensparrow.in). இவர்கள் யாவரும் அறிவியல் ஆராய்ச்சியாளர்களோ அல்லது விஞ்ஞானிகளோ அல்ல. பொதுமக்களும், இயற்கை ஆர்வலர்களுமே.
*****
காட்டுயிர்களை, இயற்கையான வாழிடங்களை பாதுகாப்பதிலும், இது சம்பந்தமாக நடைபெறும் அறிவியல் ஆராய்ச்சிகளிலும் பொதுமக்கள் பங்களிக்க முடியுமா? என்றால், நிச்சயமாக முடியும். சொல்லப் போனால் பல வித அறிவியல் ஆராய்ச்சிகளிலும், பல்லுயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் பொதுமக்களின் பங்களிப்பு மிகவும் அவசியம். தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியினால் இது போன்ற பங்களிப்புகள் மென்மேலும் பெருகிவருகின்றன. பொதுமக்கள் அறிவியல் ஆராய்ச்சிக்கு உதவும் இத்திட்டத்திற்கு மக்கள் அறிவியல் (citizen science) என்று பெயர்.
புறவுலகினைப் போற்றுதல், சுற்றுச்சூழல் மென்மேலும் சீரழியாமல் பாதுகாத்தல், காட்டுயிர்களைப் பேணுதல், வாழிடங்களை மதித்தல், இயற்கையை நேர்மையான பொறுப்பான முறையில் அனுபவித்தல் பற்றிய புரிதல்களை பொதுமக்களுக்கும், இளைய தலைமுறையினருக்கும் சுற்றுச்சூழல் கல்வி (Environmental Education) அல்லது இயற்கைக் கல்வியின் (Nature Education) மூலம் விளக்க முடியும். எனினும், வகுப்பில் பாடமாக படிப்பதைக் காட்டிலும் தாமாகவே இவற்றிற்கான அவசியத்தை உணர்ந்தால் ஒருவரின் மனதில் இவற்றைப் பற்றிய புரிதல்கள் எளிதில் பதியும். ஒரு முறை இப்படி உணர்ந்தால் இயற்கைப் பாதுகாப்பிலும், சுற்றுச்சூழலை பேணுவதிலும் பற்றுதல் ஏற்பட்டு வாழ்நாள் முழுவதும் அதற்கான நற்செயல்களையும், நற்பண்புகளையும் கடைபிடிக்கும் வாய்ப்புகள் அதிகம்.
உதாரணமாக சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்காமல் துணிப் பையை எடுத்துச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள நாம் இளைய தலைமுறையினரை பழக்க அவர்களிடம் இதைப் பற்றி எப்போதும் போதிப்பது சில வேளைகளில் அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். அப்படிச் செய்யாமல், பெற்றோர்களே ஒரு முன் உதாரணமாக இருந்து இதைக் கடைபிடித்தால், அவர்களைப் பார்த்து கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து கிடக்கும் அசிங்கமான காட்சியைக் கொண்ட படங்களையும், ஒளிப்படங்களையும் காட்டும் போது இது குறித்த புரிதல்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அல்லது பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து கிடக்கும் இடங்களுக்கு நேரடியாகக் கூட்டிச் சென்று காண்பித்தால் அக்காட்சி அவர்களின் உணர்வினைத் தூண்டி சுற்றுச்சூழலுக்குப் புறம்பான செயல்களை செய்யாமல் இருக்க வழிகோலும்.
அது போல காட்டுயிர்களையும், அவற்றின் இயற்கையான வாழிடங்களையும் பற்றி பல மணி நேரம் வகுப்பிலோ, கருத்தரங்குகளிலோ சொல்லிக் கொடுப்பதைக் காட்டிலும், அவை வாழும் இடங்களுக்கே ஒருவரை அழைத்துச் சென்று காட்டுவது நல்லது. ஏனெனில், படிப்பதைக் காட்டிலும் நேரடி அனுபவதில் கிடைக்கும் பட்டறிவே சிறந்தது. இதற்காக வெகு தொலைவு பயணம் செய்துதான் காட்டுயிர்களைப் பார்க்கவேண்டும் என்று இல்லை. நம் வீட்டில் இருக்கும், சிலந்தியையும், பல்லியையும், வீட்டைச் சுற்றித் திரியும் பல வகைப் பறவைகளையும், அணிலையும், பல வகையான அழகிய தாவரங்களையும், மரங்களையும் பார்த்து ரசிக்கலாம். நகரத்தில் வசித்தாலும் அங்கும் பல (வளர்ப்பு உயிரிகள் அல்லாத) இயற்கையாக சுற்றித்திரியும் பல உயிரினங்களும், பல வகை மரங்களும், செடி கொடிகளும், இருக்கவே செய்கின்றன.
இப்படி புறவுலகின் மேல் ஆர்வத்தைத் தூண்ட, கரிசனம் காட்ட மற்றொரு வழி பொது மக்களையும், மாணவர்களையும், இயற்கை ஆர்வலர்களையும் அறிவியல் ஆராய்ச்சியில் மக்கள் அறிவியல் திட்டங்களில் பங்கு பெற வைத்தல். இதனால் புறவுலகினைப் பற்றிய புரிதலும், இயற்கையின் விந்தைகளை நேரிடையாக பார்த்து அனுபவிக்கும் வாய்ப்பும், அதே வேளையில் இது சம்பந்தமாக நடக்கும் ஆராய்ச்சிகளுக்கு நேரிடையாக பங்களிக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
மக்கள் அறிவியல் திட்டங்களின் தலையாய நோக்கங்களில் ஒன்று, இத்திட்டங்களில் பங்கு பெறுவோர் வெறும் தகவல் சேகரிக்கும் வேலையை செய்பவர்களாக மட்டும் இல்லாமல் அதை ஏன் செய்கிறார்கள் எனும் அறிவியல் பின்னனியை தெரிந்து கொள்ளவும், அதைப் பற்றிய அறிவை மென்மேலும் பெருக்கிக் கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டுவதும், ஒரு பொறுப்பான இயற்கைவாதிக்கான பண்பை வளர்ப்பதற்காகவும் தான்.
வளர்ந்த நாடுகளில் பல மக்கள் அறிவியல் திட்டங்களும், அதற்கு பொதுமக்கள் பலரும் பங்களிப்பதும் அதிகம். ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இவை இப்போதுதான் தொடங்கப்பட்டு வருகின்றன. இது போன்ற திட்டங்கள் குறிப்பாக அதிக மக்கள் தொகையுள்ள நாடுகளில் அறியப்படாத அறிவியல் தகவல்கள் பலவற்றை பலரது ஒத்துழைப்புடன் சேகரிக்க உதவும். அது மட்டுமல்லாமல், இத்திட்டங்களின் மூலம் அனைவருக்கும் சுற்றுச்சூழல் பேணல், இயற்கை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வையும் ஊட்ட முடியும்.
இதுபோன்ற மக்கள் அறிவியல் திட்டங்கள் செயல்படுவது மக்களின் உதவியுடன், நாம் அனைவரும் வாழும் இப்பூமியின் நலனுக்காக. ஆகவே இதற்குப் பங்களிக்கும் மக்கள் நேர்மையாக இருந்து உண்மையான தகவலையே அளிப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான் இத்திட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஆகவே இது போன்ற திட்டங்களுக்கு பங்களிப்பவர்கள் பொருப்புடன் செயல்படுதல் அவசியம்.
பல்லுயிர்ப் பாதுகாப்பிற்கும், சுற்றுச்சூழல் பேணலுக்கும் சூழியல்வாதிகளும், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்களும், சுற்றுச்சூழல்வாதிகளும் மட்டுமே பங்களிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கைப் பாதுகாப்பு, புறவுலகின் பால் கரிசனம் முதலியவை இந்த பூமியில் வாழும் ஓவ்வொருவருக்கும் அவசியம் இருக்க வேண்டிய பண்புகளில் ஒன்று. மக்கள் அறிவியல் திட்டங்கள் அதற்கான வாய்ப்பை அனைவருக்கும் அளிக்கின்றன.
இந்தியாவில் செயல்பட்டு வரும் சில மக்கள் அறிவியல் திட்டங்கள்:
காலநிலை மாற்றத்தை (Climate change) தாவரங்களின் வாழ்வியலை ஆவணப்படுத்துவதன் மூலம் அறியும் திட்டம். அதாவது இத்திட்டத்தில் ஒரு மரம் இளந்தளிர்களை, பூக்களை, காய்களை, கணிகளை எந்த வாரத்தில், மாதத்தில் தோற்றுவிக்கின்றன என்பதை அவதானித்து இணையத்தில் ஆவணப்படுத்துதல் வேண்டும். உதாரணமாக வேப்பம்பூ சித்திரையில் பூக்கும் என்பதை அறிவோம். ஆனால் ஒவ்வோர் ஆண்டும் வேப்பமரம் சரியாக சித்திரையில் தான் பூக்கிறதா, அல்லது சற்று முன்போ அல்லது தாமதமாகவோ பூக்கிறதா என்பதை அறிய, அது பூக்கும் நாளை/வாரத்தை தொடர்ந்து பல ஆண்டுகள் ஆவணப்படுத்தப்படவேண்டும். ஒரு வேளை தாமதமாகப் பூத்தால் தட்ப வெப்ப நிலை, மழையளவு போன்ற காரணிகளுக்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என ஆராய்ந்து அறிய முடியும். மாத்ருபூமி மலையாள தினசரியின் SEED திட்டதின் கீழ் தற்போது கேரளாவிலிருந்து பல பள்ளி மாணவர்கள் இத்திட்டத்திற்கு பங்களித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு காண்க www.seasonwatch.in
*******
வலசை வந்து போகும் விருந்தாளிப் பறவைகள் ஓரிடத்திற்கு வருவது எப்போது, அங்கிருந்து அவை மீண்டும் திரும்பிப் போவதெப்போது? இதை அறியும் முயற்சியிலேயே சுமார் பத்தாண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட மக்கள் அறிவியல் திட்டம். இதைத் தெரிந்து கொள்வதால் லாபம் என்ன? வலசை வரும் பறவைகளை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேரும் நாட்களை ஆண்டாண்டு காலமாக கண்காணித்து வருவதன் மூலம் புறச்சூழலில் ஏற்படும் காலநிலை மாற்றங்களை கணிக்க முடியும். காலநிலை மாற்றத்தினால் வலசை பறவைகளின் வலசைப் பயணமும் பாதிப்படையும். எனினும் இந்திய துணைக்கண்டத்தில் இது பற்றிய புரிதல்கள் இன்னும் தெளிவாக இல்லை. இதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளவே இத்திட்டம் தொடங்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு காண்க www.migrantwatch.in
*******
ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (Great Backyard Bird Count – GBBC)
இந்நிகழ்ச்சி உலகம் முழுவதும் (இந்தியாவில் இது கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது) பிப்ரவரி மாதம் 13 முதல் 16ம் தேதி வரை நடைபெறும்.
உலகம் முழுவதும் உள்ள பறவைகளை ஒரே நேரத்தில் ஒவ்வோர் ஆண்டும் கணக்கிடுவதால், பறவைகளின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்களை ஆண்டு தோறும் கண்காணிக்க முடியும். ஓரிடத்தில் அவற்றின் எண்ணிக்கையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை வைத்து அதற்கான காரணங்களைக் கண்டறியவும் முடியும். வரும் ஆண்டு தமிழகத்தில் பொங்கல் தின பறவைகள் கணக்கெடுப்பு (Pongal Bird Count) நடத்தப்பட உள்ளது.
மேலும் விவரங்களுக்கு காண்க GBBC-ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு எப்போது? ஏன்? எப்படி?
மற்றும் www.birdcount.in
*******
நாம் ஓரிடத்தில் பார்க்கும் பறவைகளின் பட்டியலை இந்த இணையதளத்தில் சேகரித்து வைத்துக் கொள்ளலாம். பலர் இவ்வறு தங்களது அவதானிப்புகளை சமர்ப்பித்தால், பறவைகளின் பரவலையும், எண்ணிக்கையையும் இந்த இணையதளத்தின் மூலம் அறிய முடியும். இதன் மூலம் பறவை பார்ப்போரும், பறவை ஆராய்ச்சியாளர்களும், பொதுமக்களும் பயனடைவார்கள். Migrantwatch, GBBC முதலிய திட்டங்களுக்காக eBird இணையதளம் மூலமாகவே பறவைப் பட்டியலை, அவதானிப்பை உள்ளீடு செய்யலாம்.
மேலும் விவரங்களுக்கு காண்க http://www.ebird.org மற்றும்
*******
India Biodiversity Portal (இந்தியப் பல்லுயிரிய வலைவாசல்)
இந்தியாவில் உள்ள அனைத்து உயிரினங்களைப் பற்றிய தகவல்களை ஓரே இடத்தில் சேகரிக்கும் திட்டம். உதாரணமாக ஒரு வண்ணத்துப்பூச்சி அல்லது ஒரு தாவரத்தினைப் பற்றிய அனைத்துத் தகவல்களும் ஒரே பக்கத்தில் சேகரித்து வைக்கப்பட்டு அனைவரும் இத்தகவல்களை பார்த்தறிந்து பயன்பெறலாம். இந்த வலைவாசலில் அங்கத்தினராக இருக்கும் பல அறிஞர்களிடமும் உயிரினங்களைப் பற்றிய சந்தேகங்களை கேட்டறிந்து கொள்ளலாம். உதாரணமாக நாம் காணும் ஏதோ ஒரு தாவரத்தின் பெயரோ, தகவலோ தெரியவில்லை எனில், அத்தாவரத்தின் படத்தை இந்த வலைவாசலில் உள்ளீடு செய்தால் அங்குள்ள தாவரவியலாளார்கள் அத்தாவரத்தை அடையாளம் காண உதவுவார்கள்.
அண்மையில் இந்த வலைவாசலின் ஒரு அங்கமான TreesIndia நடத்திய Neighbourhood Tree Campaign (மரம் பார்ப்போம் மரம் காப்போம்) எனும் மரங்கள் கணக்கெடுப்பில் பலர் கலந்துகொண்டு அவரவர் வீடுகளில், தெருக்களில் உள்ள மரங்களின் வகையை, எண்ணிக்கையை, இருப்பிடத்தை பட்டியலிட்டு இந்த வலைவாசலில் உள்ளீடு செய்தார்கள்.
மேலும் விவரங்களுக்கு www.indiabiodiversity.org மற்றும் மரம் பார்ப்போம் மரம் காப்போம்
*******
Hornbill Watch – இந்திய இருவாசிகளுக்கான இணையதளம்
இருவாசி ஒரு அழகான பறவையினம். இவை அத்திப் பழங்களையே பெரும்பாலும் உண்டு வாழும். மிகப்பெரிய மரங்களில் கூடு கட்டும். இந்தியாவில் 9 வகையான இருவாசிப் பறவைகள் உள்ளன. இவற்றின் இறக்கைகளுக்காகவும், மண்டையோட்டிற்காகவும் இவை கள்ள வேட்டையாடப்படுவதாலும், வாழிட அழிப்பினாலும், மிகப்பெரிய மரங்களை வெட்டிச் சாய்ப்பதாலும், இவை அபாயத்திற்குள்ளாகியுள்ளன. இவற்றின் பாதுகாப்பு அவசியத்தை விளக்கவும், இவற்றின் பரவலை ஆவணப்படுத்தவும் இந்த இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நம்மிடம் இருக்கும் இந்திய இருவாசிகளின் படத்தை இந்த இணையத்தில் உள்ளீடு செய்யலாம். படம் எடுக்கப்பட்ட தேதி, நேரம், இடம் முதலிய தகவல்களையும் அளிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு காண்க http://www.hornbills.in/
*******
Conservation India (CI)
அழகிய நிலவமைப்புகளையும், காட்டுயிர்களையும் மட்டுமே பலவித கோணங்களில் படம்பிடித்துக் கொண்டிருக்காமல், இயற்கையான வாழிடங்களையும், சுற்றுச்சூழலையும் சீரழிக்கும் காட்சிகளையும் ஆவணப்படுத்தி அதை அந்த வாழிடத்திற்கும், அங்குவாழும் உயிரினங்களும் நன்மை புரியும் வகையில் இயற்கை பாதுகாப்பு ஒளிப்படங்களை எடுத்து இந்த இணைய தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். உதாரணமாக நாம் ஏதேனும் வனப்பகுதிக்குச் செல்லும் போது அங்கு கள்ள வேட்டையில் ஈடுபட்டிருப்பவர்களின் படத்தையோ, மரவெட்டிகளின் படத்தையோ எடுத்து இது பற்றி விளக்கங்களை அளித்து இந்த இணையத்தில் பதிப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு காண்க www.conservationindia.org
********
தி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 18th & 25th November 2014 தினங்களில் வெளியான கட்டுரைகளின் முழுப் பதிப்பு. அக்கட்டுரைகளை 18th Nov இங்கும் (PDF) & 25th Nov இங்கும் (PDF) காணலாம்.
கானுயிர் ஒளிப்படக்கலை – அழகும், அசிங்கமும்.
கானுயிர் ஒளிப்படங்கள் எடுப்பதென்பது அண்மைக் காலங்களில் பெருகிவரும் ஒரு பொழுது போக்கு. வசதி படைத்தவர்கள், டிஜிடல் SLR காமிராக்கள் வாங்கி, அதில் முழம் நீளத்தில் பெரிய பெரிய லென்சுகளை இணைத்து படமெடுப்பதையும், ஓரளவிற்கு வசதையுள்ளவர்கள் சிறிய டிஜிடல் காமிராக்களிலும், வசதியில்லாதவர்கள் தங்களது கைபேசி காமிராக்களில் படமெடுப்பதை பொதுவாகக் காணலாம். பின்னர், தாங்கள் எடுத்த படங்களை முகநூலிலும், ட்விட்டரிலும், ஏனைய சமூக வலைத்தாளங்களிலும் ஏற்றி தங்களது நண்பர்களுக்கும், இந்த உலகிற்கும் காண்பிப்பார்கள். ஓரிரு தினங்களில் பல “லைக்குகளை” வாங்கிக் குவித்த பின், இந்த படங்கள் வலைப்பக்கங்களின் அடியின் ஆழத்தில் சென்று தேங்கிவிடும்.
தற்போதைய சூழலில் எந்த வகை காமிராயும் வைத்து கானுயிர்களை (கைபேசி காமிராக்களையும் சேர்த்துத் தான்) ஒளிப்படங்கள் எடுப்பவர் அனைவருமே கானுயிர் ஒளிப்படக் கலைஞர்களே (Wildlife Photographers). உயிரினங்களை மட்டுமே ஒளிப்படங்கள் எடுக்காமல் இயற்கையான வாழிடங்களையும், நிலப்பரப்புகளையும் படமெடுப்பதை இயற்கை ஒளிப்படக்கலை (Nature photography) எனலாம். எனினும் கானுயிர்களுக்கும், அவற்றின் வாழிடங்களுக்கும், சுற்றுப்புறச் சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புகளை ஒளிப்படங்கள் மூலம் பதிவு செய்வதை இயற்கை பாதுகாப்பு ஒளிப்படக்கலை எனலாம் (Conservation photography).
தமது செந்த விருப்பத்திற்காக இது போன்ற பொழுது போக்குகளை தொடர்வது நல்லதே என்றாலும், நாம் எடுக்கும் இயற்கை சார்ந்த, கானுயிர் ஒளிப்படங்கள் பலவகையில் இயற்கை பாதுகாப்பிற்கும் ஏதோ ஒரு வகையில் உதவும் வகையில் இருப்பின் நாம் செய்யும் இந்த வேலைக்கு ஒரு அர்த்தம் இருக்கும். எனினும், உதவி செய்யாவிடினும் நாம் விரும்பும் இயற்கைக்கும், கானுயிர்களுக்கும் நாம் எடுக்கும் படங்களால், எந்தவிதத்திலும் தொந்தரவு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம். எந்த வகை ஒளிப்படக்காரராக இருந்தாலும், நேர்மையுடன் இருப்பது மிகவும் அவசியம். நாம் விருப்பத்திற்கு ஏற்றவாறு படங்கள் அமைய வேண்டும் என்பதற்காக குறுக்கு வழியில் சென்று, அத்துமீறிய முறைகளைக் கையாண்டு, படங்கள் எடுப்பது சரியல்ல.
முறையற்ற வகையில் கானுயிர் ஒளிப்படங்கள் எடுக்கப்படுவதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். ஒரு குரங்கின் படத்தை எடுக்க முயலும் போது, அது நம் காமிராவின் பக்கம் திரும்பும் வரை காத்திருந்து பின் படமெடுப்பதே சரி. அப்படியில்லாமல் அந்தக் குரங்கைச் சீண்டி தம் பக்கம் பார்க்க வைத்தோ, அவற்றிற்கு உணவளித்து நம் பக்கம் வரவழைத்தோ படமெடுப்பது சரியல்ல.
ஒரு உயிரினத்தை அதன் கூட்டில் படமெடுத்தல் பல நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது. கூட்டினருகில் சென்று படமெடுக்கும் போது ஏற்படும் ஒலிமாசு, மற்றும் ஒளிப்படக்காரர்கள் பொறுப்பின்றி (படம் நன்றாக அமைய வேண்டும் என்பதற்காக) கூடு இருக்கும் இடத்தின் தன்மையை மாற்றியமைப்பதாலும் பல வேளைகளில் சில பறவை வகைகள் தங்களது அடைகாக்கப்படாத முட்டைகளையோ, உணவூட்டப்படவேண்டிய குஞ்சுகளையோ விட்டு விட்டு கூட்டை விட்டு அகன்று விடுகின்றன.
சிலர் இரவாடிகளைப் படமெடுக்கும் போது அதிநவீன செயற்கை ஒளிஉமிழிகளை (flash) அடிக்கடி பயன்படுத்துகின்றனர். இவற்றை குறைவாகவோ அல்லது தற்போது வரும் அதிநவீன காமிராக்களில் இருக்கும் High ISO உதவியை உபயோகித்தால் இரவாடிகளின் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பினை வெகுவாகக் குறைக்க முடியும். சிலர் தாம் படமெடுக்க வேண்டிய (தவளை, பல்லி, ஓணான் முதலிய) உயிரினங்களை ஓரிடத்திலிருந்து பிடித்து வந்து அவற்றிற்கு சிறிய அளவில் மயக்க மருந்து கொடுத்து விடுகின்றனர். தமது தேவைக்கேற்ற பின்னனியில் அவற்றை வைத்து படமெடுக்கவே இந்த வேலை. சிலர் அரிய மலர்களை அவை வளர்ந்திருக்கும் செடிகளில் இருந்து கொய்து தமது வீட்டிற்கோ, ஸ்டூடியோவிற்கோ எடுத்து வந்து படமெடுக்கின்றனர்.
சாதாரண டிஜிடல் காமிரா வைத்திருப்பவர்களில் சிலர் அதி நவீன காமிராக்களால் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களைப் பார்த்து விட்டு அதைப் போலவே அவர்களது படங்களும் இருக்க வேண்டும் என எண்ணி சில நேர்மையற்ற, பாதுகாப்பற்ற வழிகளில் படம் பிடிக்கின்றனர். உதாரணமாக அன்மையில் சிலர் தமது சிறிய டிஜிடல் காமிரா, கைபேசி காமிராவைக் கொண்டு அமைதியாக நின்றிருக்கும் யானைக்கூட்டத்தின் அருகில் சென்று படமெடுக்க முயன்றனர். இதனால் யானைகள் எரிச்சலடைந்து தாக்க எத்தனிக்கும் வாய்ப்புகள் அதிகம். அவற்றை சீண்டுவதும் இல்லாமல் அவை ஒரு வேளை தாக்க வந்தால் அல்லது தாக்கி அவர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் பழி சுமத்தப்படுவது என்னவோ யானைகள் தான்.
அதீத தன்விருப்பம் (self-obsessed) மிகுந்த இத்தலைமுறையினர் சிலர் செல்பிகளை (selfies) சில காட்டுயிர்களுடனும் எடுத்துக் கொள்ள விரும்புகிறார்கள். அண்மையில் ஒரு வரையாட்டின் கால்களை வலுக்கட்டாயமாகப் பிடித்து இழுத்து தன்னுடன் நிற்கச் செய்து செல்பி எடுக்க முயன்ற ஒரு சுற்றுலா பயணி அவ்வழியே சென்ற வனத்துறை அதிகாரியிடம் சரியாக வாங்கிக் கட்டிக் கொண்டார்.
காத்திருந்து படமெடுத்தல் கானுயிர் ஒளிப்படக்கலையின் ஒரு முக்கிய அங்கம். ஆனால் விதவிதமான காமிராக்களும், இயற்கை ஆர்வலர்களும் பெருகி வரும் இச்சூழலில் பலருக்கு இந்தப் பண்பு வெகுவாக மாறி வருவது கவலையளிக்கிறது. இது குறித்த விரிவான கட்டுரைகளை தியோடோர் பாஸ்கரன் உயிர்மை மாத இதழிலும், சு. பாரதிதாசன் பூவுலகு சுற்றுச் சூழல் இதழிலும் (“கானுயிர் புகைப்படக்கலையா? கொலையா?” இதழ் Mar-April 2014 எழுதியுள்ளனர்.
எனினும் அனைத்து ஒளிப்படக்காரர்களுமே இப்படியில்லை. மிகவும் பொறுப்பாக செயல்படும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். இயற்கை ஒளிப்படக்கலையில் பொறுப்பற்று செயல்படுவதில் மேற்சொன்னவை ஒரு வகை. படமெடுத்த பின் செய்யும் அத்துமீறல்களும், நேர்மையின்மையும் கூட உண்டு. ஆம், படமெடுத்து, கணிணியில் இட்டு, சில மென்பொருட்களால் படங்களை அழகுபடுத்துவது அனைவருக்கும் தெரிந்ததே. ஒளி குறைவாக இருப்பின் அதை சற்று அதிகப்படுத்தியும், சில வண்ணங்களை அதிகரிக்கவும், குறைக்கவும் செய்து படத்தை மெருகூட்டுவது ஒத்துக்கொள்ளப்பட்ட செயலே. எனினும், சிலர் சற்று அளவுக்கு மீறி சென்று விடுகின்றனர்.
உதாரணமாக ஒரு அழகான நிலவமைப்பை படமெடுக்கும் போது அதில் பல வேளைகளில் தந்திக்கம்பித் தொடரோ, மின் கோபுரமோ இருப்பது தற்போதைய சூழலில் இயல்பே. ஆனால் மென்பொருட்களைக் கொண்டு அவற்றை அப்படத்திலிருந்து நீக்கிவிடுகின்றனர். இது சரியா எனும் கேள்விக்கு மூன்று வகையில் பதிலலிக்கலாம். அந்தப் படத்தை பெரிது படுத்தி அச்சிட்டு நம் வீட்டில் நமக்காக மட்டுமே மாட்டி வைத்து அழகு பார்த்தால், அப்படிச் செய்வதில் தவறில்லை. ஆனால் இப்படத்தையே ஒரு ஒளிப்படப் போட்டியில் பங்கேற்க சேர்ப்பிக்கும் போது இவ்வகையான திருத்தங்களைச் செய்து அனுப்புவது முறையல்ல. ஒரு கட்டுரைக்காக அதே படத்தை அனுப்பும் போது ஆசிரியரிடம் முன்பே இது பற்றி கூறி, அச்சில் வரும் போது அப்படத்தின் கீழ் “படம் செயற்கை முறையில் மெருகேற்றப்பட்டுள்ளது” என அனைவருக்கும் தெரிவிப்பதும் வேண்டும். இது போன்ற பித்தலாட்டங்கள் இருப்பதாலேயே ஒளிப்படப் போட்டிகளில் இப்போது “RAW” வகை படங்களை கேட்கின்றனர்.
Art Wolfe எனும் புகழ்பெற்ற இயற்கை ஒளிப்படக்கலைஞர் 1994ல் கானுயிர், இயற்கையான வாழிடங்களின் அழகிய படங்களைக் கொண்ட “Migration” எனும் நூலை வெளியிட்டார். எனினும் இரண்டு ஆண்டுகள் கழிந்து அந்நூலில் பதிப்பித்த பல படங்கள் யாவும் டிஜிடல் முறையில் மாற்றப்பட்டிருந்தது தெரிய வந்ததும் பலரது விமர்சனங்களுக்கு ஆளானார். வரிக்குதிரைகளின் நெருக்கமாக அருகருகே நிற்பது போன்ற அட்டைப் படத்தைக் கொண்டது இந்நூல். உண்மையில் அவை நெருக்கமாக அமைந்திருக்கவில்லை. படத்தில் இருந்த வெற்றிடத்தை ஓரிரு வரிக்குதிரை படங்களை இட்டு அவர் நிறப்பியிருந்தார் (Image here). இதை அவர் டிஜிடல் வரைபடம் (Digital Illustration) என்கிறார். இது போன்ற morphing, digital image cloning செய்தால் அதை அப்படத்தின் கீழ் அறிவித்துவிட வேண்டும். அழகாகத் தெரியவேண்டும் என்பதற்காக இயற்கையில் இல்லாததை படங்களில் டிஜிடல் முறையில் மாற்றியமைத்து பார்வைக்கு வைப்பது முறையல்ல. இதனால் இயற்கையில் இப்படித்தான் இருக்கும் என பொதுமக்களும், வளரும் இயற்கை ஆர்வலர்களும் தவறாக நினைக்கும் வாய்ப்புகள் அதிகம்.
இன்னும் சிலர் அடைத்து வைக்கப்பட்ட இடங்களில் இருக்கும் உயிரினங்களை இயற்கையில் இருப்பது போல படமெடுத்து அனைவரிடமும் பகிர்ந்து கொள்கின்றனர். இது போன்ற படங்களை ஓரளவிற்கு அனுபவமுள்ளவர்கள் கண்டு பிடித்துவிடுவார்கள் என்றாலும், விவரம் அறியாத பலர் அவை உண்மையிலேயே இயற்கையான சூழலில் எடுக்கப்பட்டிருப்பதாக நினைக்கும் வாய்ப்பு உள்ளது.
இயற்கையான வாழிடங்களுக்குச் செல்லும் போது அங்கு நாம் பார்க்கும் அழகிய நிலப்பரப்புகளையும், வாழிடங்களையும், கானுயிர்களையும், அழகிய முறையில் படமெடுத்துக் காட்டுவது புறவுலகின் பால் பலருக்கு நாட்டம் ஏற்படச்செய்ய உதவும் என்பது உண்மையே. எனினும், நடப்பு உலகில், பல கானுயிர்களும் அவற்றின் வாழிடங்களும் அற்றுப்போகும் நிலையில் உள்ளன.
சுற்றுப்புறச்சூழல் நாளுக்கு நாள் சீர்கெட்டுக் கொண்டே வருகிறது. இவ்வேளையிலும், அழகிய படங்களை மட்டுமே எடுத்துக் கொண்டிருப்பது நல்லதா? இயற்கையைக் காப்பாற்ற நம்மால் செய்யக்கூடியதை செய்யாமல், பார்த்துப் படமெடுத்து ரசித்துக் கொண்டிருப்பது, அழகா? ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம் என்பதை நாம் அறிவோம். நாம் விரும்பும் இயற்கையைக் காப்பாற்ற எந்த வகை காமிராவையும் கொண்டு நேர்மையான முறையில் படமெடுத்து, யதார்த்தத்தையும் நம் படங்களில் பதிவு செய்து ஒரு நல்ல மாற்றத்திற்கு வித்திடலாம். இயற்கையைப் பாதுகாக்கும் ஒளிப்படக்கலையே இப்போதைய அவசியத் தேவை.
பெட்டிச் செய்தி
பஷீரின் குடுமிக் கழுகு எனும் கட்டுரையில் வந்த ஒரு குடுமிக்கழுகின் படத்தில் அதன் தலையில் காய்ந்த மரக்கிளை ஒன்று தொட்டுக்கொண்டு அக்கழுகின் குடுமி சரியாகத் தெரியாமல் இருந்ததது. இந்த கிளையை மென்பொருளின் உதவியால் நீக்கி அப்படத்தை அனுப்பியிருந்தேன். ஆசிரியரிடமும் இதைப்பற்றி முன்பே அறிவித்திருந்தேன். இதை உங்களுடன் இப்போது பகிர்ந்து கொள்கிறேன். இது பற்றிய கட்டுரையை எழுதும் எண்ணம் இருந்ததால் அப்படத்தில் செய்யப்பட்ட திருத்தம் பற்றி அக்கட்டுரையில் அறிவிக்கப்படவில்லை. ஒரு வேளை இதை நான் யாரிடமும் சொல்லாமல் மறைத்திருந்தால் அது நேர்மையற்ற செயலாகும் என நான் கருதுகிறேன்.
தி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 11th November 2014 அன்று வெளியான கட்டுரையின் முழுப் பதிப்பு. அக்கட்டுரையை இங்கே காணலாம். அதன் PDF ஐ இங்கே பெறலாம்.