UYIRI

Nature writing in Tamil

நீங்களும் விஞ்ஞானிதான்!

leave a comment »

தியாகராஜனும், தேவாவும், அப்ரஹாமும் பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதிக்கு அதிகாலையிலேயே வந்தடைந்து விட்டார்கள். பள்ளிக்கரணையின் வெவ்வேறு பகுதிகளுக்கு பிரிந்து சென்று பறவைகளை பார்த்து கணக்கெடுத்துக் கொண்டிருந்தனர். சுமார் 2 மணி நேரத்திற்குப் பிறகு அவர்களுக்கு பயிற்சியளித்து, இந்த நடவடிக்கைகளை ஒருங்கினைக்கும் திருநாரணனுடன் சேர்ந்து, அவர்கள் அன்று பார்த்த பறவைகளின் பட்டியலை eBird இணையதளத்தில் உள்ளீடு செய்தார்கள். அன்று ஞாயிற்றுக் கிழமை. இது முடித்து மாலை வீடு திரும்பியதும் அவர்களது வீட்டுபாடங்களை எழுதவோ, படிக்கவோ வேண்டும். ஆம் அவர்கள் அனைவரும் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படிக்கும் மாணவர்கள். அவர்கள் பறவை ஆராய்ச்சியாளர்கள் அல்ல. சென்னையைச் சேர்ந்த இயற்கை அறக்கட்டளை (The Nature Trust) எனும் இயற்கைக் குழுவின் அங்கத்தினர்கள். இவர்கள் இப்படி உருப்படியாக பொழுதைக் கழித்து ஓரிடத்திலிருக்கும் பறவைகளின் வகைகளையும், எண்ணிக்கையையும் பட்டியலிடுவது, பல ஆராய்ச்சியாளர்களும், பறவையியலாளர்களுக்கும் உதவியாக இருக்கிறது. ஏனெனில் ஆராய்ச்சியாளர்கள் எல்லா இடங்களிலும் எல்லா நேரத்திலும் இது போன்ற பணிகளைச் செய்வது இயலாத காரியம். ஆகவே இது போன்ற இயற்கை ஆர்வலர்களின் பங்கு அவர்களுக்கு பேருதவி புரிகிறது.

*****

சில ஆண்டுகளாக சிட்டுக்குருவிகள் அழிந்து வருகின்றன, பல இடங்களில் அற்று போய்விட்டன என்றெல்லாம் செய்தி வந்து கொண்டிருந்தது. இது உண்மையா எனக் கண்டறிய நாடு தழுவிய சிட்டுக்குருவிகள் கணக்கெடுப்பு இணையத்தில் 1 April முதல் 15 June 2012 வரை நடத்தப்பட்டது. இதில் சிட்டுக்குருவிகளை அவரவர் வீட்டின் அருகில், ஊரில், பொது இடங்களில் பார்த்த விவரங்கள் கேட்கப்பட்டது.

citizen_sparrow_header

இந்த துரித, இணைய கணக்கெடுப்பின் மூலம் சிட்டுக்குருவிகள் இந்தியாவின் பல பகுதிகளில் பல பரவியிருப்பதும், பல இடங்களில் குறிப்பாக கிராமப்புறங்களில் ஒரளவு நல்ல எண்ணிக்கையில் இருப்பதையும், மாநகரங்களின் சில பகுதிகளில் அவை குறைந்த எண்ணிக்கையில் இருப்பதையும் அறிய முடிந்தது. நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பின்பே அவை சில இடங்களில் ஏன் குறைந்து வருகின்றன என்பதை அறிய முடியும் என்றாலும், இது போன்ற துரித கணக்கெடுப்பின் (Rapid Survey) மூலம் தற்போதைய நிலையை ஓரளவிற்கு மதிப்பிட முடிந்தது. இந்த கணக்கெடுப்பின் முடிவில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையைப் பற்றி 10666 பதிவுகள், 8425 இடங்களிலிருந்து கிடைத்தது. இத்தகவல்களை அளித்தது 5655 பங்களிப்பாளர்கள் (மேலும் விவரங்களுக்கு காண்க www.citizensparrow.in). இவர்கள் யாவரும் அறிவியல் ஆராய்ச்சியாளர்களோ அல்லது விஞ்ஞானிகளோ அல்ல. பொதுமக்களும், இயற்கை ஆர்வலர்களுமே.

*****

காட்டுயிர்களை, இயற்கையான வாழிடங்களை பாதுகாப்பதிலும், இது சம்பந்தமாக நடைபெறும் அறிவியல் ஆராய்ச்சிகளிலும் பொதுமக்கள் பங்களிக்க முடியுமா? என்றால், நிச்சயமாக முடியும். சொல்லப் போனால் பல வித அறிவியல் ஆராய்ச்சிகளிலும், பல்லுயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் பொதுமக்களின் பங்களிப்பு மிகவும் அவசியம். தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியினால் இது போன்ற பங்களிப்புகள் மென்மேலும் பெருகிவருகின்றன. பொதுமக்கள் அறிவியல் ஆராய்ச்சிக்கு உதவும் இத்திட்டத்திற்கு மக்கள் அறிவியல் (citizen science) என்று பெயர்.

புறவுலகினைப் போற்றுதல், சுற்றுச்சூழல் மென்மேலும் சீரழியாமல் பாதுகாத்தல், காட்டுயிர்களைப் பேணுதல், வாழிடங்களை மதித்தல், இயற்கையை நேர்மையான பொறுப்பான முறையில் அனுபவித்தல் பற்றிய புரிதல்களை பொதுமக்களுக்கும், இளைய தலைமுறையினருக்கும் சுற்றுச்சூழல் கல்வி (Environmental Education) அல்லது இயற்கைக் கல்வியின் (Nature Education) மூலம் விளக்க முடியும். எனினும், வகுப்பில் பாடமாக படிப்பதைக் காட்டிலும் தாமாகவே இவற்றிற்கான அவசியத்தை உணர்ந்தால் ஒருவரின் மனதில் இவற்றைப் பற்றிய புரிதல்கள் எளிதில் பதியும். ஒரு முறை இப்படி உணர்ந்தால் இயற்கைப் பாதுகாப்பிலும், சுற்றுச்சூழலை பேணுவதிலும் பற்றுதல் ஏற்பட்டு வாழ்நாள் முழுவதும் அதற்கான நற்செயல்களையும், நற்பண்புகளையும் கடைபிடிக்கும் வாய்ப்புகள் அதிகம்.

உதாரணமாக சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்காமல் துணிப் பையை எடுத்துச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள நாம் இளைய தலைமுறையினரை பழக்க அவர்களிடம் இதைப் பற்றி எப்போதும் போதிப்பது சில வேளைகளில் அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். அப்படிச் செய்யாமல், பெற்றோர்களே ஒரு முன் உதாரணமாக இருந்து இதைக் கடைபிடித்தால், அவர்களைப் பார்த்து கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து கிடக்கும் அசிங்கமான காட்சியைக் கொண்ட படங்களையும், ஒளிப்படங்களையும் காட்டும் போது இது குறித்த புரிதல்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அல்லது பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து கிடக்கும் இடங்களுக்கு நேரடியாகக் கூட்டிச் சென்று காண்பித்தால் அக்காட்சி அவர்களின் உணர்வினைத் தூண்டி சுற்றுச்சூழலுக்குப் புறம்பான செயல்களை செய்யாமல் இருக்க வழிகோலும்.

angalakuruchi_garbage_700

அது போல காட்டுயிர்களையும், அவற்றின் இயற்கையான வாழிடங்களையும் பற்றி பல மணி நேரம் வகுப்பிலோ, கருத்தரங்குகளிலோ சொல்லிக் கொடுப்பதைக் காட்டிலும், அவை வாழும் இடங்களுக்கே ஒருவரை அழைத்துச் சென்று காட்டுவது நல்லது. ஏனெனில், படிப்பதைக் காட்டிலும் நேரடி அனுபவதில் கிடைக்கும் பட்டறிவே சிறந்தது. இதற்காக வெகு தொலைவு பயணம் செய்துதான் காட்டுயிர்களைப் பார்க்கவேண்டும் என்று இல்லை. நம் வீட்டில் இருக்கும், சிலந்தியையும், பல்லியையும், வீட்டைச் சுற்றித் திரியும் பல வகைப் பறவைகளையும், அணிலையும், பல வகையான அழகிய தாவரங்களையும், மரங்களையும் பார்த்து ரசிக்கலாம். நகரத்தில் வசித்தாலும் அங்கும் பல (வளர்ப்பு உயிரிகள் அல்லாத) இயற்கையாக சுற்றித்திரியும் பல உயிரினங்களும், பல வகை மரங்களும், செடி கொடிகளும், இருக்கவே செய்கின்றன.

இப்படி புறவுலகின் மேல் ஆர்வத்தைத் தூண்ட, கரிசனம் காட்ட மற்றொரு வழி பொது மக்களையும், மாணவர்களையும், இயற்கை ஆர்வலர்களையும் அறிவியல் ஆராய்ச்சியில் மக்கள் அறிவியல் திட்டங்களில் பங்கு பெற வைத்தல். இதனால் புறவுலகினைப் பற்றிய புரிதலும், இயற்கையின் விந்தைகளை நேரிடையாக பார்த்து அனுபவிக்கும் வாய்ப்பும், அதே வேளையில் இது சம்பந்தமாக நடக்கும் ஆராய்ச்சிகளுக்கு நேரிடையாக பங்களிக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.

மக்கள் அறிவியல் திட்டங்களின் தலையாய நோக்கங்களில் ஒன்று, இத்திட்டங்களில் பங்கு பெறுவோர் வெறும் தகவல் சேகரிக்கும் வேலையை செய்பவர்களாக மட்டும் இல்லாமல் அதை ஏன் செய்கிறார்கள் எனும் அறிவியல் பின்னனியை தெரிந்து கொள்ளவும், அதைப் பற்றிய அறிவை மென்மேலும் பெருக்கிக் கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டுவதும், ஒரு பொறுப்பான இயற்கைவாதிக்கான பண்பை வளர்ப்பதற்காகவும் தான்.

வளர்ந்த நாடுகளில் பல மக்கள் அறிவியல் திட்டங்களும், அதற்கு பொதுமக்கள் பலரும் பங்களிப்பதும் அதிகம். ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இவை இப்போதுதான் தொடங்கப்பட்டு வருகின்றன. இது போன்ற திட்டங்கள் குறிப்பாக அதிக மக்கள் தொகையுள்ள நாடுகளில் அறியப்படாத அறிவியல் தகவல்கள் பலவற்றை பலரது ஒத்துழைப்புடன் சேகரிக்க உதவும். அது மட்டுமல்லாமல், இத்திட்டங்களின் மூலம் அனைவருக்கும் சுற்றுச்சூழல் பேணல், இயற்கை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வையும் ஊட்ட முடியும்.

இதுபோன்ற மக்கள் அறிவியல் திட்டங்கள் செயல்படுவது மக்களின் உதவியுடன், நாம் அனைவரும் வாழும் இப்பூமியின் நலனுக்காக. ஆகவே இதற்குப் பங்களிக்கும் மக்கள் நேர்மையாக இருந்து உண்மையான தகவலையே அளிப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான் இத்திட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஆகவே இது போன்ற திட்டங்களுக்கு பங்களிப்பவர்கள் பொருப்புடன் செயல்படுதல் அவசியம்.

பல்லுயிர்ப் பாதுகாப்பிற்கும், சுற்றுச்சூழல் பேணலுக்கும் சூழியல்வாதிகளும், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்களும், சுற்றுச்சூழல்வாதிகளும் மட்டுமே பங்களிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கைப் பாதுகாப்பு, புறவுலகின் பால் கரிசனம் முதலியவை இந்த பூமியில் வாழும் ஓவ்வொருவருக்கும் அவசியம் இருக்க வேண்டிய பண்புகளில் ஒன்று. மக்கள் அறிவியல் திட்டங்கள் அதற்கான வாய்ப்பை அனைவருக்கும் அளிக்கின்றன.
இந்தியாவில் செயல்பட்டு வரும் சில மக்கள் அறிவியல் திட்டங்கள்:

seasonwatchlogo

SeasonWatch

காலநிலை மாற்றத்தை (Climate change) தாவரங்களின் வாழ்வியலை ஆவணப்படுத்துவதன் மூலம் அறியும் திட்டம். அதாவது இத்திட்டத்தில் ஒரு மரம் இளந்தளிர்களை, பூக்களை, காய்களை, கணிகளை எந்த வாரத்தில், மாதத்தில் தோற்றுவிக்கின்றன என்பதை அவதானித்து இணையத்தில் ஆவணப்படுத்துதல் வேண்டும். உதாரணமாக வேப்பம்பூ சித்திரையில் பூக்கும் என்பதை அறிவோம். ஆனால் ஒவ்வோர் ஆண்டும் வேப்பமரம் சரியாக சித்திரையில் தான் பூக்கிறதா, அல்லது சற்று முன்போ அல்லது தாமதமாகவோ பூக்கிறதா என்பதை அறிய, அது பூக்கும் நாளை/வாரத்தை தொடர்ந்து பல ஆண்டுகள் ஆவணப்படுத்தப்படவேண்டும். ஒரு வேளை தாமதமாகப் பூத்தால் தட்ப வெப்ப நிலை, மழையளவு போன்ற காரணிகளுக்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என ஆராய்ந்து அறிய முடியும். மாத்ருபூமி மலையாள தினசரியின் SEED திட்டதின் கீழ் தற்போது கேரளாவிலிருந்து பல பள்ளி மாணவர்கள் இத்திட்டத்திற்கு பங்களித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு காண்க www.seasonwatch.in 

*******

mwlogo

MigrantWatch

வலசை வந்து போகும் விருந்தாளிப் பறவைகள் ஓரிடத்திற்கு வருவது எப்போது, அங்கிருந்து அவை மீண்டும் திரும்பிப் போவதெப்போது? இதை அறியும் முயற்சியிலேயே சுமார் பத்தாண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட மக்கள் அறிவியல் திட்டம். இதைத் தெரிந்து கொள்வதால் லாபம் என்ன? வலசை வரும் பறவைகளை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேரும் நாட்களை ஆண்டாண்டு காலமாக கண்காணித்து வருவதன் மூலம் புறச்சூழலில் ஏற்படும் காலநிலை மாற்றங்களை கணிக்க முடியும். காலநிலை மாற்றத்தினால் வலசை பறவைகளின் வலசைப் பயணமும் பாதிப்படையும். எனினும் இந்திய துணைக்கண்டத்தில் இது பற்றிய புரிதல்கள் இன்னும் தெளிவாக இல்லை. இதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளவே இத்திட்டம் தொடங்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு காண்க www.migrantwatch.in

*******

GBBC2014

ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (Great Backyard Bird Count – GBBC)

இந்நிகழ்ச்சி உலகம் முழுவதும் (இந்தியாவில் இது கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது) பிப்ரவரி மாதம் 13 முதல் 16ம் தேதி வரை நடைபெறும்.

உலகம் முழுவதும் உள்ள பறவைகளை ஒரே நேரத்தில் ஒவ்வோர் ஆண்டும் கணக்கிடுவதால், பறவைகளின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்களை ஆண்டு தோறும் கண்காணிக்க முடியும். ஓரிடத்தில் அவற்றின் எண்ணிக்கையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை வைத்து அதற்கான காரணங்களைக் கண்டறியவும் முடியும். வரும் ஆண்டு தமிழகத்தில் பொங்கல் தின பறவைகள் கணக்கெடுப்பு (Pongal Bird Count) நடத்தப்பட உள்ளது.

மேலும் விவரங்களுக்கு காண்க GBBC-ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு எப்போது? ஏன்? எப்படி?

மற்றும் www.birdcount.in

*******

eBird logo

eBird

நாம் ஓரிடத்தில் பார்க்கும் பறவைகளின் பட்டியலை இந்த இணையதளத்தில் சேகரித்து வைத்துக் கொள்ளலாம். பலர் இவ்வறு தங்களது அவதானிப்புகளை சமர்ப்பித்தால், பறவைகளின் பரவலையும், எண்ணிக்கையையும் இந்த இணையதளத்தின் மூலம் அறிய முடியும். இதன் மூலம் பறவை பார்ப்போரும், பறவை ஆராய்ச்சியாளர்களும், பொதுமக்களும் பயனடைவார்கள். Migrantwatch, GBBC முதலிய திட்டங்களுக்காக eBird இணையதளம் மூலமாகவே பறவைப் பட்டியலை, அவதானிப்பை உள்ளீடு செய்யலாம்.

மேலும் விவரங்களுக்கு காண்க http://www.ebird.org மற்றும்

*******

india biodiversity portal_logo

India Biodiversity Portal (இந்தியப் பல்லுயிரிய வலைவாசல்)

இந்தியாவில் உள்ள அனைத்து உயிரினங்களைப் பற்றிய தகவல்களை ஓரே இடத்தில் சேகரிக்கும் திட்டம். உதாரணமாக ஒரு வண்ணத்துப்பூச்சி அல்லது ஒரு தாவரத்தினைப் பற்றிய அனைத்துத் தகவல்களும் ஒரே பக்கத்தில் சேகரித்து வைக்கப்பட்டு அனைவரும் இத்தகவல்களை பார்த்தறிந்து பயன்பெறலாம். இந்த வலைவாசலில் அங்கத்தினராக இருக்கும் பல அறிஞர்களிடமும் உயிரினங்களைப் பற்றிய சந்தேகங்களை கேட்டறிந்து கொள்ளலாம். உதாரணமாக நாம் காணும் ஏதோ ஒரு தாவரத்தின் பெயரோ, தகவலோ தெரியவில்லை எனில், அத்தாவரத்தின் படத்தை இந்த வலைவாசலில் உள்ளீடு செய்தால் அங்குள்ள தாவரவியலாளார்கள் அத்தாவரத்தை அடையாளம் காண உதவுவார்கள்.

treesindia_logo_newஅண்மையில் இந்த வலைவாசலின் ஒரு அங்கமான TreesIndia நடத்திய  Neighbourhood Tree Campaign (மரம் பார்ப்போம் மரம் காப்போம்) எனும் மரங்கள் கணக்கெடுப்பில் பலர் கலந்துகொண்டு அவரவர் வீடுகளில், தெருக்களில் உள்ள மரங்களின் வகையை, எண்ணிக்கையை, இருப்பிடத்தை பட்டியலிட்டு இந்த வலைவாசலில் உள்ளீடு செய்தார்கள்.

மேலும் விவரங்களுக்கு www.indiabiodiversity.org மற்றும் மரம் பார்ப்போம் மரம் காப்போம்

*******

hornbill-logo

Hornbill Watch – இந்திய இருவாசிகளுக்கான இணையதளம்

இருவாசி ஒரு அழகான பறவையினம். இவை அத்திப் பழங்களையே பெரும்பாலும் உண்டு வாழும். மிகப்பெரிய மரங்களில் கூடு கட்டும். இந்தியாவில் 9 வகையான இருவாசிப் பறவைகள் உள்ளன. இவற்றின் இறக்கைகளுக்காகவும், மண்டையோட்டிற்காகவும் இவை கள்ள வேட்டையாடப்படுவதாலும், வாழிட அழிப்பினாலும், மிகப்பெரிய மரங்களை வெட்டிச் சாய்ப்பதாலும், இவை அபாயத்திற்குள்ளாகியுள்ளன. இவற்றின் பாதுகாப்பு அவசியத்தை விளக்கவும், இவற்றின் பரவலை ஆவணப்படுத்தவும் இந்த இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நம்மிடம் இருக்கும் இந்திய இருவாசிகளின் படத்தை இந்த இணையத்தில் உள்ளீடு செய்யலாம். படம் எடுக்கப்பட்ட தேதி, நேரம், இடம் முதலிய தகவல்களையும் அளிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு காண்க http://www.hornbills.in/

*******

conservation-india

Conservation India (CI)

அழகிய நிலவமைப்புகளையும், காட்டுயிர்களையும் மட்டுமே பலவித கோணங்களில் படம்பிடித்துக் கொண்டிருக்காமல், இயற்கையான வாழிடங்களையும், சுற்றுச்சூழலையும் சீரழிக்கும் காட்சிகளையும் ஆவணப்படுத்தி அதை அந்த வாழிடத்திற்கும், அங்குவாழும் உயிரினங்களும் நன்மை புரியும் வகையில் இயற்கை பாதுகாப்பு ஒளிப்படங்களை எடுத்து இந்த இணைய தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். உதாரணமாக நாம் ஏதேனும் வனப்பகுதிக்குச் செல்லும் போது அங்கு கள்ள வேட்டையில் ஈடுபட்டிருப்பவர்களின் படத்தையோ, மரவெட்டிகளின் படத்தையோ எடுத்து இது பற்றி விளக்கங்களை அளித்து இந்த இணையத்தில் பதிப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு காண்க www.conservationindia.org

********

தி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 18th & 25th November 2014 தினங்களில் வெளியான கட்டுரைகளின் முழுப் பதிப்பு. அக்கட்டுரைகளை 18th Nov இங்கும் (PDF) & 25th Nov இங்கும் (PDF) காணலாம்.

Leave a comment