UYIRI

Nature writing in Tamil

Posts Tagged ‘ill effects of feeding monkeys

குப்பையில் உள்ள உணவு எங்களுக்கு வேண்டாம்

leave a comment »

பிளாஸ்டிக் குப்பைகளால் மற்ற உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிய ஒரு விளக்கச் சுவரிதழ். இதை ஆங்கிலத்தில் தயாரித்தது Nature Science Initiative எனும் காட்டுயிர் பாதுகாப்பு மற்றும் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் அரசு சாரா ஆராய்ச்சி நிறுவனம். விளக்கச் சித்திரங்களை வரைந்தது புகழ்பெற்ற கார்டூனிஸ்ட் ரோஹன் சக்கரவர்த்தி. இந்த சுவரிதழை ஆங்கிலத்தில் இந்த உரலியில் காணலாம்.

இந்தத் தமிழ் வடிவத்தின் உயர் பிரிதிறனுள்ள (High Resolution) படத்தைப் பெற இங்கே சொடுக்கவும். இதன் PDF வடிவத்தைப் பெற இங்கே சொடுக்கவும். இந்த சுவரிதழை தரவிறக்கம் செய்து அச்சிட்டு பள்ளிகளிலும், வீடுகளிலும் சுவற்றில் ஒட்டி பிளாஸ்டிக் குப்பைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

Written by P Jeganathan

July 9, 2023 at 12:32 am

உண்டி கொடுத்தோம், உயிர் கொடுத்தோமா?

leave a comment »

காரில் பயணம் செய்து கொண்டிருக்கிறீர்கள். மேற்குத் தொடர்ச்சி மலை அல்லது தமிழகத்தின் ஏதோ ஒரு காட்டுப் பாதையில் கார் வளைந்து நெளிந்து சென்றுகொண்டிருக்கிறது. மரத்தின் மேலும், சாலையின் ஓரத்திலும் நின்று கொண்டிருக்கும் குரங்குக் கூட்டம் சட்டென்று நம் கவனத்தை ஈர்க்கிறது. மரத்தில் இருக்கும் பூக்களையும், கனிகளையும் அவை அமைதியாகத் தின்று கொண்டிருக்கின்றன. அதை கண்டதும் நம்மையும் அறியாமல் முகத்தில் புன்னகை படர்கிறது.

_JEG2137_700

சட்டென்று காரை நிறுத்தி கையில் இருக்கும் பிஸ்கட் பாக்கெட்டைப் பிரித்து, குரங்குக் கூட்டத்தை நோக்கி வீசி எறிகிறோம். அதுவரை மரத்தில் இருந்த பூக்களையும், கனிகளையும், பூச்சிகளையும் அமைதியாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்த குரங்குகள், விட்டெறியப்பட்ட பிஸ்கெட்டுகளை எடுத்துத் தின்ன ஆரம்பிக்கின்றன.

Photo: M.D.Madhusudan

Photo: M.D.Madhusudan

பிஸ்கெட்டை எடுத்துத் தின்பதில் அவற்றுக்கிடையே போட்டி ஏற்பட்டு, கோபத்தில் ஒன்றையொன்று கடித்துத் துரத்துகின்றன. அந்த இடத்தின் அமைதியும், மரத்தில் இயற்கையான உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அக்குரங்கு கூட்டத்தினிடையே நிலவிய அமைதியும் ஒரே நேரத்தில் குலைந்து போகின்றன. அவை அடித்துக்கொள்வதைப் பார்த்து நம் மனதில் குதூகலம். மற்றொருபுறம் பல குரங்குகளின் பசியைப் போக்கிய நிம்மதியுடன், அந்த இடத்தைவிட்டு அகல்கிறோம்.

_JEG7404_12X10_700

நேர் முரண்கள்

போகும் வழியில் சாலையோரத்தில் “குரங்குகளுக்கு உணவு தர வேண்டாம்” எனக் கொட்டை எழுத்தில் வனத்துறை ஒரு போர்டை வைத்திருக்கிறது. அதை நாம் கவனிக்கவில்லை. உடன் வந்தவர் அதைப் பார்க்கிறார். ஆனால் அவருக்கு அது புரியவில்லை, ஏன் இப்படிச் சம்பந்தமில்லாமல் அறிவித்திருக்கிறார்கள் என்று.

_JEG3269_700

நாம் இதுவரை உணராத விஷயம் ஒன்று இருக்கிறது. அவ்வப்போது சாலையில் வேகமாகச் சீறிச்செல்லும் வாகனங்களின் சக்கரங்களில் அரைபட்டு இதே குரங்குக் கூட்டத்தின் சில உறுப்பினர்கள் செத்து போனதும், நம்மைப் போன்ற மனிதர்களால்தான். இப்படி அந்தக் குரங்குகளின் இயல்பு வாழ்க்கை பல வகைகளில், மனிதர்களால் சீர்குலைக்கப்படுகிறது.

குழப்பமும் நோய்களும்

மற்றொரு புறம் குரங்குகளுக்கு உணவளிப்பது அவற்றின் உடல்நிலையைப் பாதிக்கும், அவற்றின் குடும்பத்தினுள் (குரங்குகள் கூட்டமாக, அதாவது குடும்பமாக வாழும் தன்மை கொண்டவை) குழப்பத்தையும், சண்டையையும் விளைவிக்கும். அவற்றின் சமூக வாழ்வு பாதிக்கப்படும். நாம் கொடுக்கும் உணவால் அவற்றுக்குப் பல நோய்கள் வரலாம். இயற்கையான சூழலில், இயற்கையான உணவைச் சாப்பிடுவதே குரங்குகளுக்கு நல்லது, அதைப் பார்த்து மகிழும் நமக்கும் நல்லது. குரங்குகளுக்கு உணவளிப்பதாலும், தின்பண்டங்களைக் கண்ட இடத்தில் வீசி எறிவதாலும், மூடி வைக்கப்படாத குப்பைத் தொட்டிகளாலும் தான் குரங்குகளால் நமக்குத் தொந்தரவு ஏற்படுகிறது.

யார் மீது தவறு?

_JEG3274_12X10_700

குரங்குகளுக்கு ஒரு முறை நாம் சாப்பிடும் உணவைக் கொடுத்துப் பழகிவிட்டால், பல்வேறு சுவையூட்டிகள் சேர்க்கப்பட்ட அதே வகை உணவையே அவை மீண்டும் உண்ண விரும்புகின்றன. இதனால் காட்டுக்குள் சென்று உணவு தேடாமல் மனிதர்கள் வாழும் பகுதிகளிலும், சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் இடங்களிலுமே தங்கிவிடுகின்றன. ஊருக்குள் புகுந்து கோயில்களிலும், வீட்டிலும், கடைகளிலும் உள்ள தின்பண்டங்களை நமக்குத் தெரியாமலோ, நம் கைகளிலிருந்து பிடுங்கியோ எடுத்துச் செல்கின்றன. தெரிந்தோ, தெரியாமலோ நாம் செய்த தவறுகளால் குரங்குகளும் பாதிக்கப்பட்டு, சுற்றுலாத் தலங்களிலும் ஊருக்குள்ளும் நமக்குத் தொந்தரவு ஏற்படுத்தும் உயிரினங்களாக மாறுகின்றன. இப்படித் தொந்தரவு தரும் குரங்குகள் உருவாகக் காரணமாக இருப்பதே நாம்தான். ஆனால், தொந்தரவு அதிகரிக்க ஆரம்பித்தவுடன், அவற்றைக் கட்டுப்படுத்தும் பணியில் இறங்குகிறோம்.

கட்டுப்படுத்த வேண்டியது குரங்குகளை அல்ல, குரங்குகளுக்கு நன்மை செய்கிறோம் என்று தவறாக நம்பி அவற்றுக்கு உணவளிப்பவர்களையும், பொறுப்பற்ற சில சுற்றுலாப் பயணிகளின் நடவடிக்கைகளையும்தான்.

என்ன பிரச்சினை?

சில இடங்களில் தொந்தரவு செய்வதாகக் கருதப்படும் குரங்குக் கூட்டங்களைப் பிடித்து வேறு இடங்களுக்குச் சென்று விட்டுவிடும் பழக்கம், நம் நாட்டில் இருந்து வருகிறது. இதனால் பிரச்சினை தீர்வதில்லை. கொண்டு சென்று விடப்பட்ட புதிய இடத்துக்கு அருகிலுள்ள மனிதக் குடியிருப்புகளுக்கு மீண்டும் வந்து, அவை தொந்தரவு தரும். இதில் பிரச்சினைக்குக் காரணமாக இருக்கும் விஷயத்துக்கு முடிவு கட்டாமல், பிரச்சினையை ஓரிடத்திலிருந்து வேறோர் இடத்துக்கு மாற்ற மட்டுமே செய்கிறோம்.

இடமாற்றம் செய்வதற்காகக் குரங்குகளைப் பிடிக்கும்போது பலத்த காயம் ஏற்படவும், சில இறந்துபோகவும் நேரிடுகின்றது. ஒரு குரங்குக் கூட்டத்தை ஓரிடத்திலிருந்து பிடித்துச் சென்றுவிட்டால் அவை இருந்த இடத்தில், வேறோர் குரங்குக் கூட்டம், இடத்தைப் பிடித்துக்கொள்ளும். நகரத்தில் வெகுநாட்களாக வாழ்ந்து வரும் குரங்குக் கூட்டத்தைப் பிடித்து அருகிலுள்ள காட்டு பகுதியில் விடுவதால், அந்தக் குரங்குக் கூட்டத்தில் உள்ள நோய்கள் காட்டில் உள்ள உயிரினங்களுக்கும் பரவும் ஆபத்து உள்ளது. மேலும், காட்டுப்பகுதியில் ஏற்கெனவே வசித்துவரும் குரங்குகளுடன் இடத்தைப் பெறுவதற்காகச் சண்டை ஏற்பட்டுப் பல உயிரிழக்கவும் நேர்கிறது.

_JEG5090_700

சாலை விபத்தில் காலையும் கையும் இழந்த ஒரு நாட்டுக் குரங்கு (Bonnet Macaque)

உணவளிக்காமல் இருப்பதே தீர்வு

நகரத்தில் வாழும் பெண் குரங்குகளுக்குக் கருத்தடை அறுவைசிகிச்சை செய்து அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைக்கும் முயற்சிகள் சில இடங்களில் நடந்துள்ளன. ஆனால் அதைச் செய்வதற்கு அதிகச் செலவும், தகுந்த பயிற்சி பெற்ற நிபுணர்களும் அவசியம். என்றாலும்கூட, இது நீண்ட காலத் தீர்வாகாது.

உங்களுக்குக் குரங்குகளைப் பார்க்கப் பிடிக்கும் என்றால், அவற்றைப் பார்த்து ரசியுங்கள். அவற்றுக்கு உணவளிக்க வேண்டாம். ஒருவேளை யாரேனும் அப்படி உணவளிப்பதைப் பார்த்தாலும் அதனால் ஏற்படும் தீமைகளை அவர்களிடம் பொறுமையாக எடுத்துச் சொல்லுங்கள். குரங்குகளைப் பொறுத்தவரை உண்டி கொடுப்பது, அவற்றுக்கு உயிர் கொடுப்பது ஆகாது.

*********

தி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 16th September 2014 அன்று வெளியான கட்டுரை. அக்கட்டுரையை இங்கே காணலாம். அதன் PDF  ஐ இங்கே பெறலாம்.

Written by P Jeganathan

September 17, 2014 at 5:13 pm

முன்தோன்றி மூத்தவரே !

leave a comment »

குரங்குகளின் கூட்டத்தை எப்போதாவது கூர்ந்து கவனித்ததுண்டா நீங்கள்? சற்று நேரம் அமர்ந்து அவை செய்வதைப் பார்த்துக்கொண்டிருந்தால் அவையும் நம்முடைய குணநலன்களை கொண்டிருப்பதைக் காண்பீர்கள். ஆனால் நமக்கும் அவற்றின் குணாதிசியங்கள் இருக்கிறதென்பதே உண்மை. வானரங்களின் வழித்தோன்றல்தானே நாம்! ஆகவே நம்மைப்போலவே குரங்குகள் இருக்கின்றன என்று சொல்வதைவிட குரங்களைப் போல் நாம் இருக்கிறோம் என்று சொல்வதே சரி. சமூக வாழ்க்கை, ஒருவர் செய்வதைப்பார்த்து மற்றவரும் அதையே பின்பற்றுதல், கற்றுக்கொள்ளுதல், சக குடும்பத்தாருக்கும் இனத்தாருக்கும் ஆபத்து நேரிடும் போது பரிதாபப்படுதல், காப்பாற்ற முற்படுதல், குழந்தைகளைப் பேணுதல் முதலிய பல காரியங்களில் நாமும் குரங்களைப் போலவே இருப்பதை அறிவோம்.

ஆனாலும் பரிணாம வளர்ச்சியடைந்த மனித இனம் பல வகையில் மூதாதயர்களின் குணங்களை இழந்து விட்டது. உதாரணமாக மரவாழ்க்கை. பெரும்பாலன குரங்கினங்கள் மரத்தின் மேல் வசிப்பவை. சில குரங்கு வகைகள் தரையில் வசிக்கும். எனினும் எல்லா குரங்குகளுமே நன்றாக மரமேறும். அவற்றின் கை கால்களில் உள்ள நீண்ட விரல்கள், நகங்கள் எல்லாவற்றிற்கும் மேலாக பின்னோக்கி வளையக்கூடிய கட்டைவிரல் ஆகிய தகவமைப்புகளே இவை மரக்கிளையை பிடித்து மிக நன்றாக மரமேற உதவுகிறது. முன்னோக்கி அமைந்துள்ள கண்கள் மரம்விட்டு மரம் தாவும்போது கிளைகளின் தூரத்தை கச்சிதமாக கணிக்க வகைசெய்கிறது. இதனாலேயே அவை தாவும் போது கீழே விழுவதில்லை.

Photo Courtesy: http://ohhaitrish.wordpress.com/2012/02/

Photo Courtesy: ohhaitrish.wordpress.com

குரங்கினங்களின் வாழ்க்கைமுறை அலாதியானது. சில குரங்கினங்கள் ஆண்-பெண் என சோடியாக வாழும். சில கூட்டமாக வாழும். இக்கூட்டத்தில் பல பெண் குரங்குகளும் அவற்றிற்கெல்லாம் ஒரு ஆண் குரங்கு தலைவனாகவும் இருக்கும். இக்கூட்டத்தில் பிறக்கும் பெண் குரங்கு முதிர்ச்சியடைந்த பின்னும் அவைகளுடன் சேர்ந்தே வாழும். ஆனால் ஆண் குரங்கு அவை பிறந்து முதிர்ச்சியடைந்த பின் அக்கூட்டத்தை விட்டு விலகிச்சென்றுவிடும். சில வேளைகளில் ஒரு கூட்டத்திலேயே பல ஆண் மற்றும் பெண் குரங்குகள் சேர்ந்தே வாழும். இது போன்ற கூட்டத்தில் பிறந்த ஆண் குரங்கு முதிர்ச்சியடைந்தவுடன், வயதான தலைவனை விட வலிமையாகவும் மற்ற குரங்குகளை அடக்கும் திறனுடையதாகவும் இருப்பின் அதுவே அக்கூட்டத்தின் தலைவனாகிவிடும். குரங்குகள் ஒன்றுடன் ஒன்று விளையாடவும், சண்டையிடவும், பின்னர் சமாதானமாகப் போகவும், மகிழ்வூட்டவும் ஏமாற்றவும் செய்கின்றன.

இந்தியாவில் உள்ள மனிதர்கள் அல்லாத குரங்கினங்களை (non-human primates) தேவாங்குகள், குரங்குகள், மந்திகள் அல்லது முசுக்குரங்குகள், வாலில்லா குரங்கு என நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். ஒரே ஒரு வாலில்லாக் குரங்கும் (வட-கிழக்கு இந்தியப்பகுதிகளில் மட்டும்) இரண்டு வகையான தேவாங்குகளும், எட்டு வகையான குரங்குகளும், ஐந்து வகையான மந்திகளும், இந்தியாவில் தென்படுகின்றன. தென்னகத்தில் தேவாங்கு, வெள்ளை மந்தி, கருமந்தி, நாட்டுக்குரங்கு, சிங்கவால் குரங்கு ஆகியவற்றைக் காணலாம்.

Slender Loris. Photo: Kalyan Varma

தேவாங்கு – Slender Loris. Photo: Kalyan Varma

வாலில்லா மெலிந்த உடலுடன், இரவில் பார்க்க ஏதுவான மிகப்பெரிய கண்கள் கொண்டதே தேவாங்கு. இவை தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் பரவியுள்ளன. அடர்த்தியான புதர்கள் கூடிய இலையுதிர் காடுகளிலேயே அதிகம் காணப்படுகின்றன. இவை இரவாடிகள். மரத்தில் வாழும். இரவில் பூச்சிகளையும் பிடித்துண்ணும், சில சமயங்களில் பழங்களையும் மரச்சாறையும் கூட உட்கொள்ளும். இது மிகவும் மெதுவாக நகரும். பெரும்பாலும் தனித்தே வாழும். தேவாங்குகள் தமது சிறுநீரை மரக்கிளைகளில் தெளித்து தாம் வாழும் இடப்பரப்பின் எல்லையை குறிக்கும். பார்ப்பதற்கு சிறிய உருவில் சாதுவாக இருந்தாலும் அபாயமேற்படும்போது உரத்த குரலெழுப்பவும் தம்மை தற்காத்துக்கொள்ள கடிக்கவும் கூட செய்யும்.

முசுக்குரங்குகள் அல்லது மந்திகளில் இரு வகைகளை தென்னகத்தில் காணலாம். தலையில் கூம்பு வடிவில் அமைந்த உரோமம், கரிய முகம், நீண்டு வளைந்த வாலின் மூலம் வெள்ளை மந்தியை இனம்கண்டுகொள்ளலாம். இவற்றை காட்டுப்பகுதியிலும் சில நேரங்களில் நகர்புறங்களிலும் காணலாம். இவை பெரும்பாலும் தரையிலேயே திரியும். இவை இளந்தளிர்கள், காய்கள் மற்றும் விதைகளையே வெகுவாகச் சுவைத்துண்ணும். இலைகளை செரிப்பதற்காகவே பிரத்தியோகமான குடலை பெற்றுள்ளன. இதனாலேயே இவற்றின் வயிறு சற்று உப்பலாக காணப்படும். வெள்ளை மந்திக்கூட்டத்தில் ஒரு ஆணும் பல பெண்ணும் இருக்கும். இளவயது ஆண் மந்திகளை அக்கூட்டத்தின் தலைவன் (அதன் தகப்பன்) சண்டையிட்டு கூட்டத்தைவிட்டு விலகச்செய்யும். அவ்வாறு வெளியேற்றப்பட்ட இளவட்டங்கள் அனைத்தும் ஒன்றுகூடி வாழும். இவை நேரம் பார்த்து மற்ற கூட்டங்களின் தலைவனை வெளியேற்ற முயற்சிக்கும். அப்படி அவை ஒரு கூட்டத்தினை வேறொரு ஆண் மந்தியிடமிருந்து கைப்பற்றிவிடின், அக்கூட்டத்திலுள்ள பழைய தலைவனுக்குப் பிறந்த எல்லா குட்டிகளையும் கொன்றுவிடும்.

Gray Langur. Photo: Kalyan Varma

வெள்ளை மந்தி – Gray Langur. Photo: Kalyan Varma

ஈர இலையுதிர் காடுகள், பசுமைமாறாக் காடுகள் மற்றும் அதனைச்சார்ந்த தோட்டங்களிலும் தென்படுவது கருமந்தி அல்லது நீலகிரி முசுக்குரங்கு. கரிய முகமும், உடல் முழுதும் கரிய உரோமங்களால் போர்த்தப்பட்டும் தலைமுழுவதும் வெளிர் பழுப்பு நிற உரோமமும் கொண்டது இது. இவை அதிக அளவில் இளந்தழைகளையெ விரும்பி உண்கின்றன. இது ஓரிட வாழ்வியாகும். அதாவது, உலகிலேயே கேரளா, தமிழகம், கர்நாடகாவிலுள்ள குடகுமலை பகுதிகளிலுள்ள மேற்குத்தொடர்ச்சிமலைப்பகுதியிலேயே காணப்படுகிறது. இவை மற்ற கூட்டத்திலுள்ள மந்திகளை எச்சரிக்கும் வகையில் அவ்வப்போது உரத்த குரழுப்பும். பெரும்பாலும் கூட்டத்தின் தலைவனே இவ்வாறு முழக்கமிடும்.

Nilgiri Langur. Photo: Kalyan Varma

கருமந்தி – Nilgiri Langur. Photo: Kalyan Varma

செம்முகக் குரங்கு அல்லது நாட்டுக்குரங்கை பார்த்திராதவர் இருக்க முடியாது. நாட்டுக்குரங்குகள் தீபகற்ப இந்தியாவில் மட்டுமே பரவியுள்ளது. கோயில்களிலும், சுற்றுலாத்தலங்களிலும், கிராமங்களிலும் ஏன் மிகப்பெரிய நகரங்களிலும் கூட இவற்றைக்காணலாம். இவை எல்லாவகையான காடுகளிலும் தென்படுகின்றன. மற்ற குரங்கினங்களைப் போலல்லாமல் ஒரு குறிப்பிட்ட வனப்பகுதியை மட்டும் சார்ந்திறாமல் எல்லா விதமான வாழிடங்களிலும் இவை வாழக்காரணம் இவற்றின் உணவுப் பழக்கமே. இலைகளை மட்டுமே புசிக்கும் மந்திகளைப் போலில்லாமல், தாவரங்களில் பல்வேறு பாகங்களையும், விதைகள், பழங்கள், புற்கள், காளான்கள்,பூச்சிகள், பறவைகளின் முட்டை போன்ற பலதரப்பட்ட உணவுவகைகளை சாப்பிடுவதால் இவைகளால் எல்லா இடங்களிலும் பரவியிருக்க முடிகிறது.

Bonnet Macaque. Photo: Kalyan Varma

நாட்டுக்குரங்குகள் – Bonnet Macaque. Photo: Kalyan Varma

நாட்டுக்குரங்கு எங்கு வேண்டுமானலும் வாழும், ஆனால் சிங்கவால் குரங்கு அப்படி இல்லை. அவை வாழ தனித்தன்மை வாய்ந்த மழைகாடுகள் அல்லது சோலைக்காடுகள் தேவை. இங்குதான் ஆண்டு முழுவதும் அவற்றிற்கு தேவையான உணவு கிடைக்கும். ஒருகாலத்தில் சிங்கவால் குரங்குகள் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியெங்கும் பரவி இருந்தன. தோட்டப்பயிர்களுக்காக அவற்றின் வாழிடங்கள் அழிக்கப்பட்டதால் தற்போது மஹராஷ்டிரா மற்றும் கோவா பகுதிகளில் இவை முற்றிலுமாக அற்றுப்போய்விட்டது. எஞ்சியுள்ள இக்குரங்குகளின் எண்ணிக்கை தோட்டப்பயிர்கள் மற்றும் மனிதர்களால் சூழப்பட்ட காட்டுப்பகுதிகளிலேயே வாழ்கிறது. இச்சிறிய மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட குரங்குகளும் வெகுவாக வேட்டையாடப்படுகின்றன. மேற்குத்தொடர்ச்சி மலைபகுதிகளைத் தவிர உலகில் வேறெங்கும் இச்சிங்கவால் குரங்குகள் காணப்படுவது இல்லை. இங்கும் சுமார் 3500 முதல் 4000 சிங்கவால் குரங்குகளே இருப்பதாக அறியப்பட்டுள்ளது. இவை மிகவும் கூச்சசுபாவம் உள்ளவை. சில வேளைகளில் மனிதர்களை கண்ட மாத்திரத்தில் ஓடிச்சென்று விடும். தலையைச் சுற்றி பிடரியுடன், சிறிய வாலின் நுனியில் குஞ்சம் போன்ற அமைப்பை வைத்து நீண்ட வாலைக் கொண்ட கருமந்தியை இனம் பிரித்து அறியலாம். இதனாலேயெ ஆங்கிலத்தில் Lion-tailed Monkey என்று பெயர். இதன் தமிழாக்கமே சிங்கவால் குரங்கு, ஆனால் இதனை மலைவாழ் மக்கள் சோலைமந்தி என்றழைக்கின்றனர். சங்க இலக்கியங்களில் இது நரைமுகஊகம் என அறியப்படுகிறது.

Lion-tailed Macaque. Photo: Kalyan Varma

சிங்கவால் குரங்கு – Lion-tailed Macaque. Photo: Kalyan Varma

வனத்தின் மேம்பாட்டில் வானரங்கள் முக்கியப் பங்கு வகிக்கிறன. பலவிதமான காட்டு மரங்களின் பழங்களை உண்டு அவற்றின் விதைபரவலுக்கு வழிவகுக்கின்றன. நாட்டுக்குரங்கினங்கள் தம் வாயில் உள்ள பை போன்ற அமைப்பில் பழங்களை சேர்த்து வைத்து இடம் விட்டு இடம் சென்று விதைகளை துப்புவதால் அவ்விதைளை வனத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பரப்புகிறது. அவை பல வகையான பூச்சி மற்றும் பறவைகளின் முட்டைகளை உட்கொண்டு அவற்றின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைக்கின்றன. மேலும் குரங்குகளே சிறுத்தை போன்ற பெரிய மாமிசஉண்ணிகளுக்கு உணவாகவும் பயன்படுகிறது. எனினும் குரங்கினங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருவது சோகமான ஒன்றாகும். இதற்கு முக்கியமாக இரண்டு காரணங்களை குறிப்பிடலாம் – வாழிடம் குறைதலும் திருட்டு வேட்டையும். இவற்றின் உடலுறுப்புகள் மருத்துவகுணம் வாய்ந்தவை என்ற மூட நம்பிக்கையினால் இவை திருட்டுத்தனமாக கொல்லப்படுகின்றன.

இவை அபாயத்திற்குள்ளாவதற்கான இன்னோரு காரணமும் உண்டு. அது நாம் அவற்றின் மேல் காட்டும் பரிவு! ஆம் சுற்றுலாத்தலங்களுக்குப் போகும் போது குரங்குகளைக் கண்டால் ஏதோ அவற்றிற்கு உதவி செய்வதாக நினைத்து நாம் சாப்பிடும் உணவுப்பண்டங்களை கொடுப்பதால் அவற்றிற்கு பலவித நோய்கள் வரும் வாய்ப்புகள் உள்ளது. வனப்பகுதிகளினூடே செல்லும் சாலைகளை அகலப்படுத்தும் போது, சாலையோர மரங்களை வெட்டுவதால் சாலையின் மேலே பெரிய இடைவெளி உருவாகிறது. இதனால் மரவாழ்விகளான இவை இடம்பெயர, சாலையைக் கடக்கும் போதும், சாலையோரத்தில் மிச்சமீதியுள்ள உணவினை விட்டெறிவதால், அதை எடுக்க வரும் போதும் விரைந்து வரும் வாகனங்களில் அடிபட்டு உயிர் துறக்கின்றன.

P1180870_700

சாலையில் சீறி வந்த வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்த சிங்க வால் குரங்கு. Photo: Kalyan Varma

சாலையில் சீறி வந்த வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்த சிங்க வால் குரங்கு. Photo: Kalyan Varma

நாம் பரிவு காட்டுவதாக நினைத்து உணவூட்டி பழக்கப்படுத்திவிட்டோம். விளைவு? சில குரங்குகள் நம்மிடமிருந்தே உணவுவை பறிக்க முற்படுகின்றன. ஏன் தெரியுமா? இதற்கு குரங்குகளின் வாழ்க்கைமுறையைப் பற்றி கொஞ்சம் அறிந்திருக்க வேண்டும். ஒரு கூட்டத்தில் இருக்கும் எல்லா குரங்குகளும் சரிநிகர்சமானமாக இருப்பதில்லை. ஒன்றிற்கு ஒன்று கீழ்படிந்தே வாழ்கிறது. வயது குறைந்த குரங்கிற்கு உணவு கிடைத்தால் அக்கூட்டத்தின் தலைவனுக்கு பகிர்ந்தளித்தோ, விட்டுக்கொடுத்த பின்தான் சாப்பிடமுடியும். குரங்கியல் ஆய்வாளர்களின் (Primatologists) கூற்றின்படி நீங்கள் ஒரு குரங்கிற்கு உணவளிக்கும்போது அக்குரங்குற்கு நீங்கள் கீழ்ப்பணிந்தவராகிறீர்கள். அப்படித்தான் அக்குரங்கு நினைத்துக்கொள்ளும். பிறகு உணவு கொடுக்காத போது கோபமேற்பட்டு தாக்கவோ உங்களிடமுள்ள உணவினைப் பறிக்கவோ செய்கிறது. இதனாலேயெ இவை மனிதர்களுக்கு தொந்தரவு தரும் பிராணியாக கருதப்படுகிறது. மிகுந்த தொல்லைதரும் இக்குரங்குகளை ஒரு இடத்திலிருந்து பிடித்து மற்றொரு இடத்திற்கோ, அருகிலுள்ள வனப்பகுதிக்கோ கொண்டு விட்டுவிடுவதால் பிரச்சனையை தீர்க்க முடியாது. இதனால் இவற்றின் எண்ணிக்கை எதிர்காலத்தில் குறைந்து போகலாம். இவற்றிற்கு உணவளிப்பதையும், தேவையற்ற உணவுப்பதார்த்தங்களை வெளியே தூக்கி எறியாமல் இருப்பதனாலேயே இவற்றின் தொல்லையை கட்டுப்படுத்த முடியும்.

******

காக்கை குருவி எங்கள் ஜாதி தொடர். எண் 6. புதிய தலைமுறை 16 ஆகஸ்ட் 2012