UYIRI

Nature writing in Tamil

Posts Tagged ‘Books

இயற்கையைக் கூர்ந்துநோக்குதல்

with 3 comments

“பார்ப்பதற்கும், கூர்ந்துநோக்குவதற்கும் என்ன வேறுபாடு?” சில ஆண்டுகளுக்கு முன் ஒரு கல்லூரியில் இயற்கை குறித்த பயிலரங்கில் இந்தக் கேள்வியை மாணவர்களிடையே கேட்டபோது, அனைவரும் அமைதியாகவும், தங்களுக்குள் கிசுகிசுத்துக்கொண்டும்,  ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டும் இருந்தனர். தொடக்கத்திலேயே இந்தக் கேள்வியைக் கேட்டதால் ஒருவேளை கூச்சத்தால் யாரும் விளக்கமளிக்க முன்வரவில்லை போலும். அவர்களது விரிவுரையாளர்களும் அங்கே அமர்ந்திருந்ததால் சற்றுத் தயங்கியிருக்கக் கூடும். ஆகவே, எளிமையாகப் புரியவைக்க, “ ‘மெர்சல்’  படத்தில் விமானநிலையக் காட்சியில் நடிகர் விஜய் என்ன உடை அணிந்திருப்பார்?” என்று கேட்டேன். வகுப்பறையின் பல இடங்களில் இருந்து பதில்கள் வந்தபடி இருந்தன.  “வேட்டி சட்டை” என்றார் ஒருவர்.  “பச்சை கலர் சட்டை, வெள்ளை வேட்டி” என்றார் மற்றொருவர். இன்னொருவர்,  “சட்டைக்கு உள்ளே அவர் வெள்ளை நிற முண்டா பனியன்  போட்டிருப்பார்” என்றார். அவர்களுக்கு இப்போது புரிந்திருக்கும் பார்ப்பதற்கும், கூர்ந்துநோக்குவதற்கும் உள்ள வேறுபாடு.

அடுத்ததாக அந்த மாணவர்களிடம் நான் கேட்டது, “நடிகர் அஜித்குமார் நடித்த பத்து படங்களின் பட்டியல்”. எதிர்பார்த்தது போலவே பலரும் அவர்களுக்குத் தெரிந்த பெயர்களைச் சொல்லிக்கொண்டே போனார்கள். எனது அடுத்த கேள்வி, “உங்கள் கல்லூரி வளாகத்தில் தென்படும் பத்து மரங்களின் பெயர்களைப் பட்டியலிடவும்.” மூன்று அல்லது நான்கு மரங்களுக்கு மேல் அதுவும் ஓரிருவரைத் தவிர யாரும் பதில் சொல்லவில்லை.  

நமக்குப் பிடித்தவற்றைத்தான் நாம் சரியாகக் கவனித்து உள்வாங்குகிறோம். அப்படிக் கூர்ந்து கவனிப்பதாலேயே அவை நம் மனதிலும் பதிந்துவிடுகிறது. அந்த மாணவர்களின் குறையைச் சுட்டிக்காட்டுவதற்காகவோ, அவர்களைக் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்குவதற்காகவோ அந்தக் கேள்விகள் கேட்கப்படவில்லை.  இயற்கையைக் கூர்ந்துநோக்குதல் ஒரு நல்ல பண்பு. அதைப் புரியவைக்க கையாளப்பட்ட ஓர் உத்திதான் அது. 

புறவுலகின்பால் நாட்டம் ஏற்பட்டால்தான் அவற்றைக் கூர்ந்துநோக்க முற்படுவோம், அதன் தொடர்ச்சியாக அவற்றைப் பாதுகாக்கவும் போராடுவோம். அந்த நாட்டத்தைப் பல விதங்களில் ஏற்படுத்த முடியும். நேரடிக் கள அனுபவம் ஒரு சிறந்த வழி. அதற்கு அடுத்ததாக கள அனுபவங்களின் பகிர்வுகளை அதைப் பெற்றவர்களின் வாயால் சொல்லக் கேட்பது. ஆயினும், நாம் பெற்ற அனுபவங்களைப் பலரிடமும் கொண்டுசேர்க்க சிறந்த வழிகளில் ஒன்று அவற்றைக் கட்டுரைகளாகப் பதிவுசெய்தல். மேலும் அது  அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் தாய்மொழியில் இருப்பது இன்னும் நல்லது. இந்த நூலின் நோக்கமும் அதுதான்.

குமரன் சதாசிவம் அவர்கள் தமிழ் வாசகர்கள் பலர் அறிந்திராத ஓர் இயற்கையியலாளர். புகழ்பெற்ற Marine Mammals of India (இந்திய கடல்வழ் பாலூட்டிகள்) என்ற நூலின் ஆசிரியர். ஆங்கில இதழ்களில் வெளியான அவரது இயற்கை சார்ந்த கட்டுரைகளுக்குத் தமிழ் வடிவம் தந்திருப்பது ஆதி வள்ளியப்பன் அவர்கள்.

இயற்கை ஒவ்வொரு நாளும் நமக்குப் புதிது புதிதாக அறிவையும், அனுபவங்களையும் பெற்றுத் தரும். இயற்கையின் விந்தைகளைக் கண்டு ரசிக்க  வெகுதூரம் பயணிக்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டின் மொட்டைமாடி, கொல்லைப்புறம் என எங்கிருந்து வேண்டுமானாலும் நாம் இயற்கையின் அங்கமான பறவைகளையும், பூச்சிகளையும் பார்த்து ரசிக்க முடியும். ஏன், நம் வீட்டுக்குள்ளேயே, நம்முடனேயே வாழும் பல்லி, சிலந்தி, பலவகையான பூச்சிகள் யாவையும் கூர்ந்துநோக்கினால் நம்மை வியப்பில் ஆழ்த்தும், சிந்தனையைத் தூண்டும் பல காட்சிகளை நாம் காணலாம். எனினும், நாம் அனைவரும் எல்லா அனுபவங்களையும் பெறுவது என்பது இயலாதது. ஆனால், இந்த நூலின் ஆசிரியர் தாம் அனுபவித்த ஒன்றை விவரிப்பதை ஊன்றிப் படிக்கும் போது நாமும் கிட்டத்தட்ட அந்த அனுபவத்தை மனதளவில் பெறுகிறோம்.

கானுலாவின் போது காட்டுப்பன்றியை நேருக்குநேர் சந்தித்தது, அழகர்கோயில் மலைப் பகுதியில் கண்ட பறவைகள், பூச்சிகள் குறித்த கள அனுபவம் சார்ந்த கட்டுரைகள், இமைகள் இல்லாத உயிரினங்கள் யாவை, அவை எப்படித் தூங்கும்? காயம்பட்ட காட்டுயிர்களின் நிலை போன்ற இயற்கையின் விந்தைகளையும், புதிர்களையும் விவரிக்கும் கட்டுரைகளையும், சிறுத்தை-மனிதர்கள் எதிர்கொள்ளல், இயற்கை பாதுகாப்பு குறித்துப் பேசும் கட்டுரைகளையும் உள்ளடக்கியது இந்த நூல்.

புள்ளிவிவரங்களையும், போதனைகளையும் மட்டுமே கொண்ட படைப்புகளால் இயற்கையின்பால் நாட்டத்தைக் ஏற்படுத்துவது கடினம். இயற்கையின் விந்தைகளை எளிமையாக, வியக்கத்தக்க வகையில் விவரிக்கும்போது அது படிப்பவர்களின் ஆர்வத்தைத் தூண்டும். நாமும் இயற்கையைக் கூர்ந்துநோக்க வேண்டும், அத்தகைய அனுபவங்களைப் பெற வேண்டும் என்கிற எண்ணத்தை உருவாக்கும். இந்த நூல் அதற்கு நிச்சயமாக வழிவகை செய்யும்.

இயற்கையியலாளர் குமரன் சதாசிவத்தின் ஆங்கிலக் கட்டுரைகளை எழுத்தாளர் ஆதி வள்ளியப்பன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இவை “இயற்கையைத் தேடும் கண்கள்” ‘காட்டின் குரல் கேட்கிறதா?’ என இரண்டு நூல்களாக வெளிவந்துள்ளது. அவற்றில் ஒன்றான ‘காட்டின் குரல் கேட்கிறதா? ‘எனும் நூலுக்கு எழுதிய மதிப்புரை.

ஆதி வள்ளியப்பனின் அனைத்து நூல்களையும் அவரது வலைத்தளத்தில் காணலாம் https://adhivalliappan.in/valliappan/

Written by P Jeganathan

June 11, 2022 at 6:39 pm

Posted in Books

Tagged with , ,

சிற்றுயிர்களையும் கொண்டாடுவோம்

with one comment

சிற்றுயிர்கள் அழகானவை!

பூச்சி எனும் ஒரு சொல் பலரிடம் பலவிதமான எதிர்வினைகளை ஏற்படுத்தும். அதில் பெரும்பாலும் முகச் சுழிப்பும், அருவருப்பும், பயமும் தான் இருக்கும். வெகு சிலரிடம் மட்டுமே ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சியையும் எதிர்பார்க்கலாம். ஒரு பூச்சியைக் கண்டவுடன் உடனடியாக நம்மில் பெரும்பாலானவர்கள் செய்வது அவற்றை அடித்துக் கொல்ல முயற்சிப்பதும், அதில் பெரும்பாலும் வெற்றி பெறுவதுமே ஆகும். வெகு சிலரே பூச்சிகளைக் கண்டதும் அவற்றை படமெடுக்க கேமிராவை எடுப்பார்கள்.

ஆறு கால்களையும், கூட்டுக் கண்களையும், தலைப் பகுதி, மார்புப் பகுதி, வயிற்றுப் பகுதி என உடல் மூன்று பகுதிகளாகவும், உணர்நீட்சிகளையும் கொண்டவை பூச்சிகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. பூச்சிகளின் பன்மையம் நம்மை வியக்க வைக்கும். இது வரை சுமார் 1.5 மில்லியன் வகையான பூச்சிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பூச்சியின் (தட்டானும் பூச்சி வகையே) உடல் பாகங்கள். Artwork: Wikimedia Commons

கண்ணுக்கே தெரியாத சுமார் 15௦ மைக்ரோ மீட்டர் நீளமே உள்ள குளவியில் இருந்து சுமார் 1 அடி நீளமுள்ள குச்சிப் பூச்சி வரை உருவில் சிறியதும் பெரியதுமாக இருப்பவை பூச்சிகள். தரையில் ஊர்ந்தும் (எறும்புகள்), நீரில் நீந்தியும் (தட்டான்களின் தோற்றுவளரிகள்), வானில் பறந்தும் (வண்ணத்துப்பூச்சிகள்), மண்ணுக்குள்ளும் (சில் வண்டின் இளம் பருவம்) வாழக்கூடியவை பூச்சிகள். இவற்றில் கண்ணைப்பறிக்கும் வண்ணங்களைக் கொண்டவையும் உண்டு, கண்ணுக்கு எளிதில் புலப்பாடாத உருமறைத்தோற்றம் கொண்டவையும் உண்டு. பகலாடிகளும் உண்டு, இரவாடிப் பூச்சிகளும் உண்டு. சில பூச்சிகள் இன்னும் வியக்கத்தக்க வகையில் தமது இனத்தை ஒத்த உயிரினங்களின் நிறத்தையும் ஒப்புப்போலி தோற்றத்தையும் கொண்டிருக்கும். பசலைச் சிறகன் வண்ணத்துப்பூச்சியின் பெண் பூச்சி வெந்தய வரியனை நிறத்திலும் உருவிலும் ஒத்திருப்பது போல. இலைப்பூச்சி பசுமையான இலையைப் போலவே தோற்றமளிக்கும். நமக்கும் முன்னே சுமார் 4௦௦ மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியவை. பூக்கும் தாவரங்களுடன் ஒருமித்துப் பரிணமித்தவை பூச்சிகள்.

பூச்சிகளைப் பற்றிய சரியான புரிதல் இன்னும் நம்மிடையே இல்லை. அறிவியல் ஆராய்ச்சிகளாக இருக்கட்டும், அவற்றைப் பற்றிய இயற்கை வரலாற்று செய்திகளாக இருக்கட்டும், ஏன் ஓரிடத்தில் எத்தனை வகையான பூச்சி வகைகள் உள்ளன என்பது குறித்த அடிப்படை தரவுகள் கூட நம்மிடையே சரியாக இல்லை. அறிவியல் பூர்வமான புரிதல் இல்லாதது ஒரு பக்கம் இருக்கட்டும். பூச்சிகளைப் பற்றிய சில அடிப்படை தகவல்கள் கூட பலருக்குத் தெரிவதில்லை. எட்டுக்கால் பூச்சியும், சிலந்தியும், பூரானும், தேளும், மரவட்டையும் பூச்சி வகையைச் சார்ந்தவை அல்ல என்பதை எத்தனை பேர் அறிவார்கள்?

என் பெயர் எட்டுக்கால் பூச்சி தான் ஆனால் நான் பூச்சி வகை அல்ல!

 

இவையெல்லாம் நம்மைச்சுற்றி இருக்கும் காட்டுயிர்கள். ஆம் காட்டுயிர் என்றால் காடுகளில் மட்டுமே வசிக்கும் உயிரினம் என்று அர்த்தமாகாது. நாம் வசிக்கும் வீடுகூட பல்லிக்கும், சிலந்திக்கும் உகந்த வாழிடமாகிறது. இயற்கையான சூழலில், வளர்ப்பு உயிரினங்கள் அல்லாத எல்லா உயிரினங்களுமே காட்டுயிர்கள் தான். பறவைகள், பாலுட்டிகள், ஊர்வனங்கள், இருவாழ்விகள் யாவும்,  எப்போதுமே அவற்றின் அழகாலும், கண்கவரும் வண்ணங்களாலும், விசித்திரமான குணாதிசயங்களாலும், உருவில் பெரியதாக இருப்பதாலும் நம்மை எளிதில் கவர்ந்துவிடும். இது போன்ற பேருயிர்கள் இயல்பாகவே நம் கவனத்தை ஈர்த்துவிடுகின்றன.

புலி, யானை, பாடும் பறவைகள், கழுகு வகைகள், பாம்புகள், வண்ணத்துப்பூச்சிகள் போன்ற வசீகரமான உயிரினங்களுக்கு கிடைக்கும் கவனம் பல சிற்றுயிர்களுக்குக் கிடைப்பதில்லை. எனினும் மேற்சொன்ன உயிரினங்களுக்கு எந்தவிதத்திலும் குறையாத எண்ணிலடங்கா பல சிறிய உயிரினங்கள் நம்மைச் சுற்றி இருக்கத்தான் செய்கின்றன. ஏனைய உயிரினகளைப் போல் அவையும் இந்த இயற்கைச் சூழலில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை மகரந்தச்சேர்க்கை முதல் மட்கச்செய்வது வரை பல வகையில் இந்த பூமியின் செயல்பாட்டிற்கு பேருதவி புரிகின்றன. இது போன்ற அதிகம் கண்டுகொள்ளப்படாத சிற்றுயிர்களைப் பற்றிய ஒரு அருமையான நூல் இது. இயற்கையை அவதானிக்க நாம் வெகுதொலைவு செல்லவேண்டியதில்லை. நாம் அமர்ந்திருக்கும் இடத்தைச் சுற்றிப் முதலில் பார்க்கத் தொடங்கினாலே போதும். அதைத்தான் இந்த நூலாசிரியர் ஆதி வள்ளியப்பன் செய்திருக்கிறார். அவரது வீட்டினருகே அதுவும் நகரப்பகுதியில் தென்பட்ட பூச்சிகளையும் ஏனைய சிற்றுயிர்களையும் பதிவு செய்து அவற்றை இந்த நூலில் நமக்கு அறிமுகம் செய்கிறார்.

இது போன்ற சிற்றுயிர்களை கவனத்துடன் அவதானித்து அவற்றை படமும் பிடித்துள்ளார். விலையுயர்ந்த காமிராவோ, மேக்ரோ லென்சாலோ அல்ல. படங்கள் அனைத்தும் கைபெசி காமிரா! இந்த உயிரினங்களை அடையாளம் காண்பதென்பது சற்றே சவாலான வேலைதான். இதற்காக India biodiversity Portal – https://indiabiodiversity.org/, iNaturalist – https://www.inaturalist.org/ போன்ற மக்கள் அறிவியல் திட்டங்களில் இணைந்து அங்குள்ளவர்களின் உதவியுடன் பல உயிரினங்களை அடையாளம் கண்டுள்ளார். நாம் எடுக்கும் காட்டுயிரினங்களின் படங்களை நாமே வைத்துக்கொண்டிருப்பதால் பெரிய பயன் ஏதும் இருக்கப்போவதில்லை. இது போல், மக்கள் அறிவியல் திட்டங்களுக்கு பங்களிப்பதன் மூலம் பல உயிரினங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதோடு, அல்லாமல், அறிவியல் ஆராய்ச்சிக்கும் உதவும்.

நாம் கால்களில் மிதிபடக்கூடிய, விளக்கு வெளிச்சத்தில் வீட்டுக்குள் வந்து வெளியேற முடியாமல் தவிகின்ற, நம் கண்களுக்கு அருவருக்கத்தக்கதாகத் தெரிகின்ற, நம்மை பயப்பட வைக்கின்ற, நாம் வெறுத்து ஒதுக்குகின்ற எண்ணிலடங்கா சிறிய உயிரினங்களை எதிர்மறையான எண்ணங்கள் இல்லாமல் சற்று நேரம் உற்று நோக்கினால் நம் முன் ஒரு புதிய உலகம் தெரிய ஆரம்பிக்கும். அதற்கு இந்த நூல் பெரிதும் உதவும்.


ஆதி வள்ளியப்பன் எழுதிய “எனைத் தேடி வந்த சிற்றுயிர்கள் – பெருநகரில் ஒரு தனி உலகம்எனும்  நூலிற்கான  முகவுரை

Written by P Jeganathan

March 2, 2020 at 9:00 am

உயிரெழுத்து இதழுக்கான நேர்காணல்

with one comment

உயிரெழுத்து மாத இதழில் (அக்டோபர் 2013 மலர் 7, இதழ் 4) வெளியான நேர்காணல். பத்திரிக்கையாளர்/பசுமை எழுத்தாளர் திரு ஆதி. வள்ளியப்பன் அவர்களின் கேள்விகளும் எனது பதில்களும். 

மனித – விலங்கு மோதல்

மனித விலங்கு மோதல் சார்ந்து உங்களுடைய அனுபவங்கள். குறிப்பாக, யானை, சிறுத்தை போன்றவற்றுடன் மோதல் நிகழும் பகுதியில் இருக்கிறீர்கள். இதன் பின்னணி என்ன. இதை எப்படி புரிந்து கொள்ள வேண்டும்?

முதலில் மனித-விலங்கு மோதல் என்ற பதத்தை மாற்றி மனிதர்-காட்டுயிர் எதிர்கொள்ளல் எனக்கொள்ளவேண்டும். எனது வீட்டை புலியோ, சிறுத்தையோ, யானையோ கடந்து சென்றால் அவை என்னை தாக்க வருகின்றன என்று அர்த்தம் இல்லை. எதிர்பாராவிதமாக நான் இக்காட்டுயிர்களை நேருக்கு நேர் சந்திக்க நேரிட்டால், அவற்றின் வெகு அருகில் சென்று விட்டால், அவை பயத்தினாலோ, தம்மை தற்காத்துக்கொள்ளவோ என்னைத் தாக்கினால் அது எதிர்பாரா விதமாக நடக்கும் ஒரு விபத்திற்கு சமமானதே. அது திட்டமிட்ட தாக்குதல் அல்ல. எந்த ஒரு காட்டுயிரும் தானாக (சினிமாவில் காட்டுவதுபோல்) எந்த ஒரு மனிதரையும் துரத்தித் துரத்தி கடிப்பதோ, மிதிப்பதோ இல்லை, பழிவாங்குவதும் இல்லை. ஆகவே இது மோதல் அல்ல. நீங்கள் ஆட்கொல்லிகளைப் பற்றி (man-eaters) கேட்கலாம். இந்த ஓரிரு தனிப்பட்ட புலியோ, சிறுத்தையோ தொடர்ந்து மனிதர்களை குறிவைத்து தாக்கினால் அங்குள்ள அனைத்து இரைக்கொல்லிகளும் (Predators) அப்பண்பு உள்ளவையே எனக் கூறவே முடியாது. அப்படித் தாக்கும் அந்தத் தனிப்பட்ட விலங்கினை அந்த இடத்திலிருந்து விலக்கத்தான் வேண்டும். எனினும் அப்படி அடையாளம் காண்பது என்பதும் சிரமம். இது போன்ற சம்பவங்கள் நடக்கும் இடம், நேரம், சூழல் அனைத்தையும் ஆராய்ந்து, மேன்மேலும் மனித உயிரிழப்பு ஏற்படாத வண்ணம் ஆவன செய்ய வேண்டும்.

நான் தற்போது பணி புரிவது வால்பாறையில். சுமார் 220 சதுர கி.மீ. பரப்பளவவில் அமைந்துள்ள இங்கு பெரும்பகுதி தேயிலைத் தோட்டங்களால் நிரம்பியது. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்கள் இப்பகுதிக்கு வந்து தேயிலை பயிரிட ஏதுவான உயரமும், சூழலும் இருந்ததால் இங்குள்ள மழைக்காட்டை திருத்தி தேயிலைத் தோட்டங்களை அமைத்தனர். பயிரிடத் தகுதியில்லாத சில இடங்களில் காடுகளை அப்படியே விட்டு வைத்து விட்டனர். பச்சைப் பாலைவனம் என சூழியலாளர்களால் அழைக்கப்படும் தேயிலைத் தோட்டத்தில் இன்று இந்தத் துண்டுச்சோலைகள் ஆங்காங்கே சிறு சிறு தீவுகளாகக் காட்சியளிக்கின்றன. வால்பாறையைச் சுற்றிலும் இருப்பது ஆனைமலை புலிகள் காப்பகம் (இந்திரா காந்தி தேசிய பூங்கா), பரம்பிகுளம் புலிகள் காப்பகம், சின்னார் வனவிலங்கு சரணாலயம் முதலிய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள். இந்த வனப்பகுதிகளில் உள்ள (யானை, சிறுத்தை முதலிய) விலங்குகள் பல்லாயிரம் ஆண்டுகளாக காலத்திற்கேற்ப உணவு, நீர், உறைவிடம் தேடி வனத்தின் ஒரு பகுதியிலிருந்து வேறோர் பகுதிக்கு இடம்பெயர்கின்றன. சுமார் 100 ஆண்டுகளுக்க்கு முன் இப்பகுதியில் நாம் குடியேறி இவ்வுயிரினங்களின் உறைவிடங்களை அழித்து விட்டு, இன்று அவை நாமிருக்கும் இடங்களுக்கு வரக்கூடாது என்று சொல்கிறோம்.

இவ்வளவு காலம் இல்லாமல், ஏன் இப்போது மனித – விலங்கு மோதல் எதிர்கொள்ளல் உச்சத்தை நோக்கி சென்று வருகிறது?

மனித-விலங்கு எதிர்கொள்ளல் இன்று நேற்றல்ல ஆதிகாலத்திலிருந்தே இருந்து வரும் ஒன்று. பெருகி வரும் மக்கள் தொகையினால் காட்டுயிர்களின் உறைவிடங்கள் நாளுக்கு நாள் அருகி வருகிறது. காடழிப்பு, காட்டுயிர்களின் வழித்தடங்களை ஆக்கிரமித்தல், சரியான (அறிவியல் பூர்வமான) மேலாண்மையின்மை, நீண்டகால தீர்வு காணும் எண்ணத்துடன் செயல்படாமை முதலியவையே இவ்வகையான நிகழ்வுகளுக்குக் காரணம். மேலும் காட்டுயிர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் இந்தப் பிரச்சனையை வனத்துறையினர் மட்டும் தான் சமாளிக்க வேண்டும் என்று நினைப்பதும் தவறு. பல அரசுத் துறைகளும், ஊடகங்களும், தன்னார்வ நிறுவனங்களும், ஆராய்ச்சியாளர்களும், பொதுமக்களும் சேர்ந்து சமாளிக்க வேண்டிய பிரச்சனை இது. இன்னும் ஒன்றையும் சொல்லவேண்டும் – ஊடகங்கள் காட்டுயிர்களை ஏதோ பயங்கரவாதிகளைப் போல சித்தரிப்பதும், இந்தப் பிரச்சனையை ஊதிப் பெரிது படுத்துவதும் செய்தித்தாள்களிலும், செய்திகளிலும் பார்க்கலாம். ஏற்பட்ட சம்பவத்தின் தீவிரத்தையும், இப்பிரச்சனையை தீர்க்க/சமாளிக்க/தணிக்க செய்ய வேண்டியவைகளை நன்கு உணர்ந்து செயல் பட வேண்டியது ஊடகங்களில் கடமை. அண்மையில் வெளியான ஒரு திரைப்படத்தில் யானையை ஏதோ ஒரு வில்லனைப் போல சித்தரித்திருந்தார்கள். இந்த நிலை மாற வேண்டும்.

ele_near human habitation_Photo_P Jeganathan

விலங்குகளுக்கு இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

யானை, சிறுத்தை போன்ற காட்டுயிர்கள் நம் வீட்டின் வெகு அருகில் இருந்தால் நாம் எப்படிப்பட்ட மனவுளைச்சலுக்கும், மனஅழுத்தத்திற்கும் ஆளாகிறோம். அதே போலத்தான் ஓரிடத்திலிருந்து யானைகளை பட்டாசு வெடித்து, டயரை எரியவிட்டு மேலே விட்டெறிந்து துரத்தும் போது அவையும் குழப்பத்திற்கும் மன அழுத்தத்திற்கும் ஆளாகின்றன. அச்சமயத்தில் குட்டியுடன் இருக்கும் போது இந்த அழுத்தம் பன்மடங்காகிறது. பகலில் இப்படி ஓட ஓட விரட்டுவதால் அவை ஓரிடத்தில் நிம்மதியாக இருந்து சாப்பிட முடியாமல் (யானைகளுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 150-200 கி.லோ எடை உணவும், சுமார் 200 லிட்டர் நீரும் அவசியம்) போகிறது. விளைவு, இரவு நேரங்களில் ரேஷன் கடைகளுக்கும், சத்துணவுக்கூடங்களுக்கும், அவற்றின் அருகாமையில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கும் புகுந்து அங்கிருக்கும் அரிசி, பருப்பு முதலியவற்றை சாப்பிடுகின்றன.

இது போலவே சிறுத்தை போன்ற இரைக்கொல்லிகளை நம் வீட்டினருகே பார்த்த உடனேயே அவற்றை அங்கிருந்து அகற்ற வேண்டும் என வனத்துறையிடம் முறையிடுவதால் அவர்களும் பல நிர்பந்தங்களுக்கு ஆளாகி கூண்டு வைத்து அவற்றை பிடித்துவிடுகின்றனர். அதைக் கொண்டு போய் வேறு இடங்களில் விட்டு விடுகின்றனர். இதனால் பிரச்சனை தீர்ந்து விடாது. இது ஒரு நீண்ட காலத் தீர்வு அல்ல. அவற்றை பிடித்து கூண்டுக்குள் அடைக்கும் போதும், வேறு இடங்களுக்கு கொண்டு செல்லும் போதும் ஏற்படும் மன அழுத்தம், குழப்பம், மன உளைச்சல் காரணமாக அவை எரிச்சலைடைகின்றன. அவை கூண்டுக்குள்ளிருந்து தப்பிக்க நினைக்கும் போது காயங்களும் ஏற்படுகின்றது. அந்த குறிப்பிட்ட விலங்கை வேறு இடங்களில் கொண்டு விடும் போது காயம் காரணமாக அவை வேட்டையாட முடியாமல் அங்குள்ள கால்நடைகளைத் தாக்குகின்றன. இது கிட்டத்தட்ட சில இந்திய சினிமாக்களில் காண்பிப்பது போல் ஒரு நல்லவனை/நிரபராதியை ஜெயிலில் போட்டு குற்றவாளி ஆக்கி அவன் விடுதலையாகும் போது கெட்டவனாக மாறி வருவது போலத்தான்.

Photo: Ganesh Raghunathan

Photo: Ganesh Raghunathan

இதனால் தமிழகத்தில் இறந்துள்ள உயிரினங்களின் எண்ணிக்கை என்ன?

இவ்வகையான புள்ளிவிபரங்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. மேலும் மனித-விலங்கு எதிர்கொள்ளலால் தான் ஒரு விலங்கு மரணமடைந்தது என அறுதியிட்டுக் கூறுவது எல்லா சமயங்களிலும் சாத்தியமில்லை. எனது சக ஊழியர் ஆனந்தகுமாரின் கூற்றுப்படி வால்பாறை பகுதியில் 4 யானைகள் (2 – தவறுதலாக பூச்சிமருந்தை உட்கொண்டு, 2 – மின்வேலி மின்சாரத்தினால் தாக்கப்பட்டு) மரணமடைந்துள்ளன. சிறுத்தைகளைப் பொறுத்தவரை 2007-2012 வரை வால்பாறை அதனை அடுத்தப் பகுதிகளில் 12 சிறுத்தைகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பலவற்றிற்கு உடலில் (பெரும்பாலும் முகத்தில்) காயம் ஏற்பட்டது. வேறு இடங்களில் கொண்டுசெல்லப்பட்டவை உயிருடன் இருக்கின்றனவா இல்லையா என்பதை செல்லுவது கடினம்.

இதைத் தடுப்பதற்கான பல்வேறு வழிமுறைகளை விளக்க முடியுமா?. மனிதர்கள்-யானை மோதலைத் தடுக்க என்.சி.எஃப் அமைப்பு (Nature Conservation Foundation – NCF) மேற்கொண்டுள்ள முயற்சியின் அறிவியல் பின்னணி ?

நான் மேற்சொன்ன தகவல்கள் அனைத்தும் வால்பாறையை மையமாக வைத்தே. மேலும் நான் மனித-விலங்கு எதிர்கொள்ளலைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடவில்லை. எனது நண்பர்களும், சக ஊழியர்களும் இப்பணியில் பல ஆண்டுகளாக இப்பகுதியில் ஈடுபட்டு வருகின்றனர். எனது பணி, அவர்களது நீண்ட கால ஆராய்ச்சி முடிவுகளை கட்டுரைகள், பொதுக்கூட்டங்கள் வாயிலாக பொதுமக்களிடன் கொண்டு போய் சேர்ப்பது.

எனது சக ஊழியர் ஆனந்தகுமார் வால்பாறைப் பகுதியில் யானைகளின் இடம்பெயர்வையும், அவற்றின் பண்புகளையும், யானைகளால் மனிதர்களுக்கு எந்த விதத்தில், எங்கெங்கே பாதிப்பு ஏற்படுகின்றது, அந்த பாதிப்புகளை தணிக்க செய்ய வேண்டியவை பற்றிய ஆராய்ச்சியில் கடந்த 12 வருடங்களாக ஈடுபட்டு வருகிறார்.

வால்பாறையைச் சுற்றிலும் வனப்பகுதியாதலால் காலகாலமாக யானைகள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இடம்பெயர்வது வழக்கமான ஒன்றாகும். இவ்வேளையில் அவை மனிதர்களையும், குடியிருப்புகளையும் எதிர்கொள்வதை சில நேரங்களில் தவிர்க்க முடியாது. யானை-மனிதர்கள் எதிர்கொள்ளலை சரியான முறையில் சமாளிப்பதற்கும், அதனால் ஏற்படும் பாதிப்புகளைத் தணிப்பதற்கும், அவற்றின் இடம்பெயறும் பண்பை அறிந்திருத்தல் அவசியம். யானைகளின் நடமாட்டத்தைப் பற்றிய அறிவு இங்கு வாழும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு இன்றியமையாதது.

வால்பாறைப் பகுதியில் உள்ள யானைத் திரள்களை பின் தொடர்ந்து அவை போகும் இடத்திற்கெல்லாம் சென்று ஜி.பி.எஸ் கருவி மூலம் அவை இருக்குமிடத்தை குறித்துக்கொள்ளப்பட்டது. யானைகளால் ஏற்படும் சேதங்கள் யாவும் நேரில் சென்று மதிப்பிடப்பட்டது. மனித உயிரிழப்பும் பதிவு செய்யப்பட்டது. வால்பாறைப் பகுதியில் ஒர் ஆண்டில் சுமார் 80-100 யானைகள் நடமாடுகின்றன. எனினும் மூன்று யானைக்கூட்டங்களைச் சேர்ந்த சுமார் 45 யானைகள் 8-10 மாதங்கள் இப்பகுதியில் நடமாடுகின்றன. இங்குள்ள காலங்களில் யானைகள் பகலில் பெரும்பாலும் மழைக்காட்டு துண்டுச்சோலைகளிலும், ஆற்றோரக்காடுகளிலும்தான் தென்பட்டன. காபி, சூடக்காடு (யூகலிப்டஸ்), தேயிலை தோட்டப் பகுதிகளை அவை அதிகம் விரும்புவதில்லை. எனினும் இரவு நேரங்களில் ஒரு துண்டுச்சோலையிலிருந்து மற்றொன்றிற்கு கடக்கும்போது மட்டுமே தோட்டப்பகுதிகளின் வழியாக சென்றன.

விவரங்களை தெளிவாகக் காண படத்தின் மேல் சுட்டியை வைத்துச் சொடுக்கவும் Map: NCF

விவரங்களை தெளிவாகக் காண படத்தின் மேல் சுட்டியை வைத்துச் சொடுக்கவும் Map: NCF

இந்த ஆராய்ச்சி முடிவின் படி நடு ஆறு – சோலையார் ஆற்றோரக் காடுகள் யானைகள் நடமாட்டத்திற்கான முக்கியமான பகுதிகள் என்பது அறியப்பட்டது. ஆற்றங்கரையின் இருபுறமும் சுமார் 20 மீ அகலத்தில் இயற்கையாக வளரும் இம்மண்ணுக்குச் சொந்தமான மரங்களையும், தாவரங்களையும் நட்டு வளர்த்தால் யானைகளின் நடமாட்டத்திற்கு ஏதுவாகவும், அவை மனிதர்களை எதிர்கொள்வதை வெகுவாகக் குறைக்கவும் முடியும். ரேஷன் கடைகளிலும், பள்ளிகளில் உள்ள மதிய உணவுக்கூடங்களிலும் வைக்கப்பட்டிருக்கும், அரிசி, பருப்பு, சர்க்கரை முதலிய உணவுப்பொருட்களை யானைகள் உட்கொள்ள வருவதால் அவற்றை எடுக்கும் வேளையில் இந்தக் கட்டிடங்களின் கதவு, சுவர்கள் சேதமடைகின்றன. இந்த உணவு சேமிப்பு கட்டிடங்கள் குடியிருப்புப் பகுதிகளிலோ அல்லது அருகாமையிலோ இருப்பதால் அங்கும் சில வீடுகளிலும் சேதங்கள் ஏற்படுகின்றன. உணவுப்பொருட்களை சேமித்து வைக்கும் கட்டிடங்களை, குடியிருப்புப் பகுதியிலிருந்து தூரமாக அமைப்பது, உணவுப் பொருட்களை ஓரிடத்தில் வைத்திடாமல் நடமாடும் விநியோகமாக மாற்றுவதால் இவற்றிற்கு யானைகளால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க முடியும்.

மனித-யானை எதிர்கொள்ளல் வால்பாறையின் பெரும்பாலான பகுதிகளில் இருந்தாலும், அதிகமாக இருப்பது துண்டுச்சோலைகள் இல்லாத அல்லது மிகக் குறைவான வனப்பகுதிகளைக் கொண்ட இடங்களில் தான். மனிதர்களின் உடமைகளுக்கு சேதம் ஏற்படுவது பெரும்பாலும் அக்டோபர் மாதத்திலிருந்து பிப்ரவரி மாதம் வரைதான்.

Elephant sms_GAN4551_700

மனித-யானை எதிர்கொள்ளலின் மற்றொரு விளைவு மனித உயிரிழப்பு. இதை மட்டுப்படுத்த, முற்றிலுமாக தவிர்க்க, பல்வேறு அரசுத் துறைகள் இணைந்து பொதுமக்களை கலந்தாலோசித்து திட்டங்களை வகுக்க வேண்டும். இதுவே, எடுக்கப்படும் நடவடிக்கைகள் நீண்ட காலம் நீடித்து நிலைக்கவும், யானைகளின் நடமாட்டத்தை பொதுமக்கள் பொறுத்துக்கொள்ளவும், சமரச மனப்பான்மையை வளர்க்கவும் உதவும். மனித அடர்த்தி மிகுந்த குடியிருப்புகள் இருக்கும் பகுதிகளில், ஆண்டில் 10 மாதங்கள் யானைகள் நடமாட்டம் இருப்பின், பல வேளைகளில் யானையும் மனிதனும் எதிர்பாரா விதமாக ஒருவரை ஒருவர் எதிர்கொள்ள நேரிடும். இதனால் மனித உயிரிழிப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம். 1994 முதல் 2012 வரை 39 பேர் யானையால் எதிர்பாராவிதமாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதில் 72 விழுக்காடு உயிரிழப்பு ஏற்பட்டது தேயிலை எஸ்டேட்டிலும் சாலையிலுமே. யானைகள் இருப்பதை அறியாமலேயே அவை நடமாடும் பகுதிகளுக்கு சென்றதுதான் இதற்கான முக்கிய காரணம். அதிக உயிரிழப்பு ஏற்பட்டது  டிசம்பர், பிப்ரவரி மாதங்களில் தான். ஆகவே, தமிழக வனத்துறையினரின் ஆதரவுடன், வால்பாறைப் பகுதியில் யானைகள் இருப்பிடத்தை அறிந்து அந்தச் செய்தியை பொதுமக்களிடம் தெரிவிக்கும் பணியை மேற்கொள்ளும் குழுவை ஏற்படுத்தினோம்.

யானைகள் இருக்குமிடத்தைப் பற்றிய செய்தியை முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரிவிக்க மூன்று முறைகள் பின்பற்றப்பட்டது.

1. யானைகள் நடமாட்டம், இருக்குமிடம் முதலிய தகவல்கள் மாலை வேளைகளில் கேபிள் டி.வி. மூலம் ஒளிபரப்பப்பட்டது.

2. யானைகள் இருக்குமிடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் (2 கி.மீ.சுற்றளவில்) உள்ள பொதுமக்களுக்கு மாலை வேளைகளில் அவர்களுடைய கைபேசியில் யானைகள் இருக்குமிடம் பற்றிய குறுஞ்செய்தியை (SMS) ஆங்கிலத்திலும் தமிழிலும் அனுப்பப்பட்டது.

3. மின்னும் சிகப்பு LED விளக்குகள் வெகுதூரத்திலிருந்து பார்த்து அறியக்கூடிய உயரமான பகுதியில் பொறுத்தப்பட்டது. யானைகள்  அச்சுற்றுப்புறங்களில் (2 கி.மீ. தூரத்துக்குள்ளாக) இருந்தால் இவ்விளக்கு எரிய வைக்கப்படும். இந்த விளக்கினை ஒரு பிரத்தியோக கைபேசியினால் எரிய வைக்கவும், அணைக்கவும் முடியும். இதை அப்பகுதி மக்களே செயல்படுத்தவும் ஊக்கமளிக்கப்பட்டது. நாளடைவில் பொதுமக்களே இவ்விளக்கை செயல்படுத்தவும் ஆரம்பித்தனர்.

Photo: Kalyan Varma

Photo: Kalyan Varma

வால்பாறைப்பகுதியில்மனித-யானைஎதிர்கொள்ளலால்ஏற்படும்விளைவுகளைசமாளிக்க, சரியான (அறிவியல்பூர்வமான) முறையில்கையாள, பாதிப்பினைதணிக்கஎடுக்கப்படும்நடவடிக்கைகள், நீண்டகாலம்நீடித்துநிலைக்கபொதுமக்களைஈடுபடுத்துதல்எந்தஅளவிற்குஅவசியம்என்பதைஇந்த ஆராய்ச்சியின்வாயிலாகஅறியமுடிகிறது.

சாலைபலி (Roadkill)

காடுகளைப் பிளந்து செல்லும் சாலைகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றிய உங்களுடைய ஆராய்ச்சி பற்றி. இந்தச் சாலைகள் உயிரினங்களிடையே ஏற்படுத்தும் பாதிப்புகள் என்ன?

ஒரு தீண்டப்படாத, தொன்னலம் வாய்ந்த வனப்பகுதியை வெகு விரைவில் சீர்குலைக்க வேண்டுமெனில், செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் – அதன் குறுக்கே ஒரு சாலையை அமைத்தால் போதும். கொஞ்சம் கொஞ்சமாக அவ்வனப்பகுதி அதன் இயற்கைக் தன்மையை இழந்துவிடும். சாலைகள் மட்டுமல்ல காட்டில் தீ பரவாமல் இருக்க நீளவாக்கில் மரங்களையும் தாவரங்களையும் அகற்றி ஏற்படுத்தும் தீத்தடுப்பு வெளிகள் (Fire lines), மின் கம்பிகளின் கீழேயும், கால்வாய்கள், இரயில் பாதைகள், பிரம்மாண்டமான தண்ணீர் குழாய்கள் முதலியவை உயிரினங்களின் வாழிடங்களை இரண்டு துண்டாக்கும் இயல்புடையவை. இவற்றை ஆங்கிலத்தில் Linear intrusion என்பர்.

linear intrusions_4_2100

இந்த நீளவாக்கில் அமைந்த கட்டமைப்புகள் காட்டுயிர்களின் வழித்தடங்களில் (animal corridors) குறுக்கீடுகளாகவும் சில உயிரினங்களுக்கு நீளவாக்கில் அமைந்த தடைகளாகவும் (barrier) அமைகிறது. காட்டின் குறுக்கே செல்லும் சாலைகளிலும், இரயில் பாதைகளிலும் அடிபட்டு சின்னஞ் சிறிய பூச்சி, தவளையிலிருந்து உருவில் பெரிய யானை, புலி என பல உயிரினங்கள் அடிபட்டு பரிதாபமாக உயிரிழக்கின்றன. அது மட்டுமல்ல, சாலையோரங்களில் களைகள் மண்டி காட்டுத்தீ பரவுவதற்கும், இக்களைச்செடிகள் அங்குள்ள மண்ணுக்குச் சொந்தமான தாவரங்களை வளரவிடாமலும் தடுக்கின்றன.

ஆனைமலை புலிகள் காப்பகம், வால்பாறை பகுதியில் வாகனப் போக்குவரத்தினால், உயிரினங்களுக்கும், அவற்றின் வாழிடத்திற்கும் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிய ஆராய்ச்சியை 2011 தொடங்கியுள்ளோம்.

இது மனஅழுத்தத்தை (ஸ்டிரெஸ்) தரும் அனுபவமாக இருந்தது என்று ஒரு முறை குறிப்பிட்டு இருக்கிறீர்கள். அது பற்றி கொஞ்சம் விளக்க முடியுமா?

தினமும் காலை வேளையில் சாலையில் நடந்து சென்று இப்படி உயிரிழந்த காட்டுயிர்களை எண்ணுவதும், பட்டியலிடுவதும் மகிழ்ச்சியான அனுபவத்தை கொடுப்பதில்லை. எனினும் மென்மேலும் இவ்விதத்தில் உயிரிழப்புகள் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் இது போன்ற வேலைகளில் ஈடுபடுவது ஒரு காட்டுயிர் ஆராய்ச்சியாளனின் கடமை.

குறிப்பிட்ட ஒரு கால இடைவெளியில் இந்தச் சாலைகளில் அடிபட்டு இறக்கும் உயிரினங்கள் தொடர்பாக ஏதாவது கணக்கெடுப்பு இருக்கிறதா?

Photo: Ganesh Raghunathan

கேளையாடு Photo: Ganesh Raghunathan

இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் இவ்வகையான ஆராய்ச்சி அதிகம் இல்லை. அப்படியே இருந்தாலும் ஆராய்ச்சி முடிந்தவுடன் பரிந்துரைகளைக் கொண்ட கட்டுரையையும், ரிப்போட்டையும் எழுதி பதிப்பித்த பின் அந்த வேலை முடிந்து விடும். அது மட்டுமே போதாது. ஆராய்ச்சியின் முடிவில் கொடுக்கப்பட்ட பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டனவா? அப்படியே செயல் படுத்தப்பட்டாலும் அவை எதிர்பார்த்த விளைவுகளை கொடுத்ததா? எந்த அளவிற்கு அவை பயனுள்ளதாக இருக்கிறது என்பதை எல்லாம் தொடர்ந்து கண்காணிப்பது அவசியம். எங்களது ஆராய்ச்சி இன்னும் முழுமையாக முடிவு பெறவில்லை. எனினும் இது வரை செய்த களப்பணியின் தரவுகள் சில – கோடைகாலத்தை விட மழைக்காலங்களில் சாலையில் பல உயிரினங்கள் அதிலும் குறிப்பாக தவளைகளும், பாம்புகளும் அரைபட்டுச் சாகின்றன. பாலூட்டிகளைப் பொறுத்தவரை கடம்பை மான், கேளையாடு, சிங்கவால் குரங்கு, மலபார் மலையணில், மரநாய், புனுகுப் பூனை, முள்ளம்பன்றி, சருகு மான் முதலியன சாலையில் அரைபட்டு உயிரிழந்துள்ளன.

இதைத் தடுப்பதற்குச் செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன?

ஒரு வனப்பகுதிகளின் வழியே செல்லும் சாலைகளில் பயணிக்கும் போது நம்மை அறியாமலேயே நாம் செல்லும் வண்டிச் சக்கரத்தால் அரைத்து, அடித்து பல உயிர்களை சாகடிக்கின்றோம். காடுகளின் வழியாகச் செல்லும் சாலைகள் மனிதர்களுக்கு மட்டுமே இல்லை அங்கு வாழும் உயிரினங்களுக்கும் சேர்த்து தான் என்பது அவ்வழியே பயணிக்கும் பொதுமக்களும், சுற்றுலாவினரும் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வகையான உயிரிழப்பை தடுக்க பொதுமக்களின், சுற்றுலாவினரின் உதவியும், ஒத்துழைப்பும் பெருமளவில் தேவைப்படுகிறது. நாம் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்

1. காட்டுப்பகுதியில் வேகத்தைக் கட்டுப்படுத்தி மெதுவாகச் செல்வது,

2. வழியில் தென்படும் குரங்குகளுக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் தின்பண்டங்களை கொடுக்காமல் இருப்பது,

3. உணவுப் பண்டங்களை, பிளாஸ்டிக் குப்பைகளை சாலையோரத்தில் தூக்கி எறியாமல் இருப்பது.

காடுகளின் வழியாகச் செல்லும் சாலைகளை அளவிற்கு அதிகமாக அகலப்படுத்தக் கூடாது. சாலையின் இருபுறமும் மரங்கள் இருத்தல் குரங்கு, அணில் முதலிய மரவாழ் (arboreal) உயிரினங்களின் இடம்பெயர்வுக்கு இன்றியமையாதது. சாலைகளில் உயிரினங்களின் நடமாட்டத்திற்கு ஏற்ப தகுந்த இடைவெளியில் வேகத்தடைகள் இருப்பதும் அவசியம். இவ்வகையான இடங்களில் நெடுஞ்சாலைத் துறையினரும், வனத்துறையினரும், ஆராய்ச்சியாளர்களும் சேர்ந்து கருத்துகளைப் பரிமாரி செயல்படுதல் அவசியம்.

பசுமை இலக்கியம்

தமிழில் பசுமை எழுத்தின் இன்றைய நிலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இது என்னைவிட இத்துறையில் மூத்தவர்களிடம் கேட்கப்பட வேண்டிய கேள்வி. எனினும்நான் பார்த்த வரையில் இயற்கை வரலாறு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எழுதப்படும் கட்டுரைகள் தான் அதிகம். இவையும் அவசியம் தான். அதே வேளையில் பல வித உயிரினங்களின் கையேடுகள் (Field guides), இத்துறை சார்ந்த தரமான நூல்கள், மொழிபெயர்ப்புகள் இன்னும் வரவேண்டும். வேங்கைப்புலிகளைப் பற்றிய கானுறை வேங்கை (கே. உல்லாஸ் கரந்த் – தமிழில் தியடோர் பாஸ்கரன்), பறவையியலைப் பற்றிய நூலான “அதோ அந்த பறவை போல (எழுதியவர் ச. முகமது அலி) போன்ற சில நூல்களைத் தவிர இத்துறை சார்ந்த நூல்கள் இருப்பதாகத் தெரியவில்லை. இதோடு களப்பணி முறைகள், விளக்கக் கையேடுகள், ஆராய்ச்சி அறிக்கைகள், காட்டுயிர், சுற்றுச்சூழல் சட்டங்கள் யாவும் தமிழில் எழுதப்பட வேண்டும். இவற்றையெல்லாம் எழுதவும், எழுதுவதை ஊக்குவிக்கவும் துறைசார் சொற்களை உருவாக்கவும், அவற்றை புழக்கத்திலும் கொண்டு வரவேண்டும். பாலுட்டிகள், பறவைகள், சில பாம்புகள் தவிர பல உயிரினங்களுக்கு தமிழில் பெயரே கிடையாது. அவற்றிற்கெல்லாம் பெயரிட வேண்டும்.

துறைசார்ந்த நூல்களும் (technical, reference books) கையேடுகளும், கட்டுரைகளும் மட்டுமே பசுமை இலக்கியம் இல்லை. சுற்றுச்சூழல், பல்லுயிர் பாதுகாப்பு, புறவுலகு சார்ந்த தத்துவார்த்தமான சொல்லாடல்களும், புதினங்களும், கவிதைகளும், குழந்தைகளுக்கான கதைகளும் என மென்மேலும் பதிப்புகள் வெளிவரவேண்டும். இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

தமிழ் ஊடகச் சூழல் இயற்கை பாதுகாப்புக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கிறதா. அந்த வகையில் உங்களுக்கு நம்பிக்கை தரும் முயற்சிகள் நடக்கின்றனவா?

சுற்றுச்சூழல், காட்டுயிர் பாதுகாப்பு முதலியவை பெரும்பாலான மாத, வார இதழ்களிலும், தினசரிகளிலும் கிட்டத்தட்ட பக்கத்தை நிரப்பும் ஒரு அம்சமாகவே இருக்கும். சில பத்திரிக்கைகளில் இவ்வகையான பகுதிகள் இருக்கவே இருக்காது. சினிமாவும், அரசியலும் தான் மேலோங்கி இருக்கும். ஆன்மீகத்திற்கு, சிறுவர்களுக்கு, சினிமாவிற்கு, சமையலுக்கு என தினமும் ஒரு இணைப்பை தினசரிகள் வழங்கும் போது சுற்றுச்சூழலுக்கு, இயற்கை வரலாறு சங்கதிகளுக்கு என ஏன் வரக்கூடாது? காட்டுயிர், புதிய கல்வி, துளிர், பூவுலகு, கலைக்கதிர் முதலிய பத்திரிக்கைகளைத் தவிர. இது போன்ற பத்திரிக்கைகள் இருப்பது கூட எத்தனை பேருக்கு தெரியும்?

nerupu kuziyil kuruviஅதுபோல சில பத்திரிக்கைகளும், நாளிதழ்களும் காட்டுயிர்களை பயங்கரமானவை, கொடியவை என்பது போல சித்தரிப்பதையும் அடிக்கடி காணலாம். காட்டுயிர் இதழின் ஆசிரியர் ச. முகமது அலி எழுதிய “நெருப்பு குழியில் குருவி” நூலை எத்தனை பத்திரிக்கையாளர்கள் படித்திருப்பார்கள்? அண்மையில் வால்பாறையில் ஒரு புலி குடியிருப்புப் பகுதியில் புகுந்து விட்டது. அங்கிருந்த மாடு ஒன்று புலியை முட்டி விட்டது. மறுநாள் அப்புலி உயிரிழந்தது. உடனே தினசரிகள் என்ன எழுதின தெரியுமா? மாடு முட்டி புலி உயிரிழந்தது எனவும், அப்புலி 10 மாடுகளை அடித்து சாப்பிட்டுவிட்டது எனவும். இறந்த அப்புலியின் உடலை கிழித்து பரிசோதனை செய்த போது தான் தெரிந்தது அதன் இருதயத்தில் முள்ளம்பன்றியின் உடலில் உள்ள கூரிய முள் குத்தியிருந்தது. அதன் வயிற்றில் கூட எதுவுமே இல்லை. படிப்பவரை ஈர்க்கும் வண்ணம் எழுதுவதற்காக அந்த கம்பீரமான வேங்கையை, அதுவும் இறந்து போன வேங்கையை அவமானப்படுத்துதல், அவமதித்தல் சரியா? இப்போதெல்லாம் மிருகம், விலங்கு எனும் வார்த்தைகளையே நான் அதிகம் உபயோகிக்காமல் எனது கட்டுரைகளில் உயிரினம் என்றே குறிப்பிடுகிறேன். இவ்வார்த்தைகள் கிட்டத்தட்ட கெட்ட மனிதர்களைக் குறிக்கும் கெட்ட வார்த்தைகள் ஆகிவிட்டன.

எனினும் மாற்றங்களை கொண்டு வரவேண்டும் எனும் எண்ணமுடையவர்கள், ஊடகங்களை மட்டுமே குறை கூறாமல், முயற்சி எடுத்து மீண்டும் மீண்டும் அணுகி அவர்களுக்கு விளக்கமளித்தும், பத்திரிக்கையாளர்களுக்கு பட்டறைகள், கருத்தரங்குகள் நடத்துவதன் மூலம் இந்நிலையை மாற்ற முடியும் என்றே தோன்றுகிறது. இது போன்ற கருத்தரங்குகளை நாங்கள் இப்பகுதியில் நடத்தியும், பங்கு கொண்டும் இருக்கிறோம். ஒரு சில ரிப்போட்டர்களிடம் மாற்றத்தைக் காணவும் முடிகிறது.

புத்தகம், இதழ்களில் எழுதுவதன் மூலம் இயற்கை பாதுகாப்பு பரவலாகும் என்று நம்புகிறீர்களா?

அதுவும் உதவும். சுற்றுச்சூழல் மாசு இப்பூமிப்பந்தினை விழுங்கிக் கொண்டும், இயற்கையான வாழிடங்கள் அருகியும் வரும் இச்சூழலில் இவற்றைப் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் ஏற்படுத்த புறவுலகின் பால் கரிசனம் கொண்டுள்ளவர்கள் எல்லா வகையான ஊடகச் சூழலையும் பயன்படுத்திக் கொள்வது இன்றியமையாதது.

——————————————————————————

இக்கட்டுரையின் PDF ஐ இங்கே பெறலாம்.

Written by P Jeganathan

November 1, 2013 at 1:46 pm