Posts Tagged ‘TreesIndia’
நீங்களும் விஞ்ஞானிதான்!
தியாகராஜனும், தேவாவும், அப்ரஹாமும் பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதிக்கு அதிகாலையிலேயே வந்தடைந்து விட்டார்கள். பள்ளிக்கரணையின் வெவ்வேறு பகுதிகளுக்கு பிரிந்து சென்று பறவைகளை பார்த்து கணக்கெடுத்துக் கொண்டிருந்தனர். சுமார் 2 மணி நேரத்திற்குப் பிறகு அவர்களுக்கு பயிற்சியளித்து, இந்த நடவடிக்கைகளை ஒருங்கினைக்கும் திருநாரணனுடன் சேர்ந்து, அவர்கள் அன்று பார்த்த பறவைகளின் பட்டியலை eBird இணையதளத்தில் உள்ளீடு செய்தார்கள். அன்று ஞாயிற்றுக் கிழமை. இது முடித்து மாலை வீடு திரும்பியதும் அவர்களது வீட்டுபாடங்களை எழுதவோ, படிக்கவோ வேண்டும். ஆம் அவர்கள் அனைவரும் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படிக்கும் மாணவர்கள். அவர்கள் பறவை ஆராய்ச்சியாளர்கள் அல்ல. சென்னையைச் சேர்ந்த இயற்கை அறக்கட்டளை (The Nature Trust) எனும் இயற்கைக் குழுவின் அங்கத்தினர்கள். இவர்கள் இப்படி உருப்படியாக பொழுதைக் கழித்து ஓரிடத்திலிருக்கும் பறவைகளின் வகைகளையும், எண்ணிக்கையையும் பட்டியலிடுவது, பல ஆராய்ச்சியாளர்களும், பறவையியலாளர்களுக்கும் உதவியாக இருக்கிறது. ஏனெனில் ஆராய்ச்சியாளர்கள் எல்லா இடங்களிலும் எல்லா நேரத்திலும் இது போன்ற பணிகளைச் செய்வது இயலாத காரியம். ஆகவே இது போன்ற இயற்கை ஆர்வலர்களின் பங்கு அவர்களுக்கு பேருதவி புரிகிறது.
*****
சில ஆண்டுகளாக சிட்டுக்குருவிகள் அழிந்து வருகின்றன, பல இடங்களில் அற்று போய்விட்டன என்றெல்லாம் செய்தி வந்து கொண்டிருந்தது. இது உண்மையா எனக் கண்டறிய நாடு தழுவிய சிட்டுக்குருவிகள் கணக்கெடுப்பு இணையத்தில் 1 April முதல் 15 June 2012 வரை நடத்தப்பட்டது. இதில் சிட்டுக்குருவிகளை அவரவர் வீட்டின் அருகில், ஊரில், பொது இடங்களில் பார்த்த விவரங்கள் கேட்கப்பட்டது.
இந்த துரித, இணைய கணக்கெடுப்பின் மூலம் சிட்டுக்குருவிகள் இந்தியாவின் பல பகுதிகளில் பல பரவியிருப்பதும், பல இடங்களில் குறிப்பாக கிராமப்புறங்களில் ஒரளவு நல்ல எண்ணிக்கையில் இருப்பதையும், மாநகரங்களின் சில பகுதிகளில் அவை குறைந்த எண்ணிக்கையில் இருப்பதையும் அறிய முடிந்தது. நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பின்பே அவை சில இடங்களில் ஏன் குறைந்து வருகின்றன என்பதை அறிய முடியும் என்றாலும், இது போன்ற துரித கணக்கெடுப்பின் (Rapid Survey) மூலம் தற்போதைய நிலையை ஓரளவிற்கு மதிப்பிட முடிந்தது. இந்த கணக்கெடுப்பின் முடிவில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையைப் பற்றி 10666 பதிவுகள், 8425 இடங்களிலிருந்து கிடைத்தது. இத்தகவல்களை அளித்தது 5655 பங்களிப்பாளர்கள் (மேலும் விவரங்களுக்கு காண்க www.citizensparrow.in). இவர்கள் யாவரும் அறிவியல் ஆராய்ச்சியாளர்களோ அல்லது விஞ்ஞானிகளோ அல்ல. பொதுமக்களும், இயற்கை ஆர்வலர்களுமே.
*****
காட்டுயிர்களை, இயற்கையான வாழிடங்களை பாதுகாப்பதிலும், இது சம்பந்தமாக நடைபெறும் அறிவியல் ஆராய்ச்சிகளிலும் பொதுமக்கள் பங்களிக்க முடியுமா? என்றால், நிச்சயமாக முடியும். சொல்லப் போனால் பல வித அறிவியல் ஆராய்ச்சிகளிலும், பல்லுயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் பொதுமக்களின் பங்களிப்பு மிகவும் அவசியம். தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியினால் இது போன்ற பங்களிப்புகள் மென்மேலும் பெருகிவருகின்றன. பொதுமக்கள் அறிவியல் ஆராய்ச்சிக்கு உதவும் இத்திட்டத்திற்கு மக்கள் அறிவியல் (citizen science) என்று பெயர்.
புறவுலகினைப் போற்றுதல், சுற்றுச்சூழல் மென்மேலும் சீரழியாமல் பாதுகாத்தல், காட்டுயிர்களைப் பேணுதல், வாழிடங்களை மதித்தல், இயற்கையை நேர்மையான பொறுப்பான முறையில் அனுபவித்தல் பற்றிய புரிதல்களை பொதுமக்களுக்கும், இளைய தலைமுறையினருக்கும் சுற்றுச்சூழல் கல்வி (Environmental Education) அல்லது இயற்கைக் கல்வியின் (Nature Education) மூலம் விளக்க முடியும். எனினும், வகுப்பில் பாடமாக படிப்பதைக் காட்டிலும் தாமாகவே இவற்றிற்கான அவசியத்தை உணர்ந்தால் ஒருவரின் மனதில் இவற்றைப் பற்றிய புரிதல்கள் எளிதில் பதியும். ஒரு முறை இப்படி உணர்ந்தால் இயற்கைப் பாதுகாப்பிலும், சுற்றுச்சூழலை பேணுவதிலும் பற்றுதல் ஏற்பட்டு வாழ்நாள் முழுவதும் அதற்கான நற்செயல்களையும், நற்பண்புகளையும் கடைபிடிக்கும் வாய்ப்புகள் அதிகம்.
உதாரணமாக சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்காமல் துணிப் பையை எடுத்துச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள நாம் இளைய தலைமுறையினரை பழக்க அவர்களிடம் இதைப் பற்றி எப்போதும் போதிப்பது சில வேளைகளில் அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். அப்படிச் செய்யாமல், பெற்றோர்களே ஒரு முன் உதாரணமாக இருந்து இதைக் கடைபிடித்தால், அவர்களைப் பார்த்து கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து கிடக்கும் அசிங்கமான காட்சியைக் கொண்ட படங்களையும், ஒளிப்படங்களையும் காட்டும் போது இது குறித்த புரிதல்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அல்லது பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து கிடக்கும் இடங்களுக்கு நேரடியாகக் கூட்டிச் சென்று காண்பித்தால் அக்காட்சி அவர்களின் உணர்வினைத் தூண்டி சுற்றுச்சூழலுக்குப் புறம்பான செயல்களை செய்யாமல் இருக்க வழிகோலும்.
அது போல காட்டுயிர்களையும், அவற்றின் இயற்கையான வாழிடங்களையும் பற்றி பல மணி நேரம் வகுப்பிலோ, கருத்தரங்குகளிலோ சொல்லிக் கொடுப்பதைக் காட்டிலும், அவை வாழும் இடங்களுக்கே ஒருவரை அழைத்துச் சென்று காட்டுவது நல்லது. ஏனெனில், படிப்பதைக் காட்டிலும் நேரடி அனுபவதில் கிடைக்கும் பட்டறிவே சிறந்தது. இதற்காக வெகு தொலைவு பயணம் செய்துதான் காட்டுயிர்களைப் பார்க்கவேண்டும் என்று இல்லை. நம் வீட்டில் இருக்கும், சிலந்தியையும், பல்லியையும், வீட்டைச் சுற்றித் திரியும் பல வகைப் பறவைகளையும், அணிலையும், பல வகையான அழகிய தாவரங்களையும், மரங்களையும் பார்த்து ரசிக்கலாம். நகரத்தில் வசித்தாலும் அங்கும் பல (வளர்ப்பு உயிரிகள் அல்லாத) இயற்கையாக சுற்றித்திரியும் பல உயிரினங்களும், பல வகை மரங்களும், செடி கொடிகளும், இருக்கவே செய்கின்றன.
இப்படி புறவுலகின் மேல் ஆர்வத்தைத் தூண்ட, கரிசனம் காட்ட மற்றொரு வழி பொது மக்களையும், மாணவர்களையும், இயற்கை ஆர்வலர்களையும் அறிவியல் ஆராய்ச்சியில் மக்கள் அறிவியல் திட்டங்களில் பங்கு பெற வைத்தல். இதனால் புறவுலகினைப் பற்றிய புரிதலும், இயற்கையின் விந்தைகளை நேரிடையாக பார்த்து அனுபவிக்கும் வாய்ப்பும், அதே வேளையில் இது சம்பந்தமாக நடக்கும் ஆராய்ச்சிகளுக்கு நேரிடையாக பங்களிக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
மக்கள் அறிவியல் திட்டங்களின் தலையாய நோக்கங்களில் ஒன்று, இத்திட்டங்களில் பங்கு பெறுவோர் வெறும் தகவல் சேகரிக்கும் வேலையை செய்பவர்களாக மட்டும் இல்லாமல் அதை ஏன் செய்கிறார்கள் எனும் அறிவியல் பின்னனியை தெரிந்து கொள்ளவும், அதைப் பற்றிய அறிவை மென்மேலும் பெருக்கிக் கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டுவதும், ஒரு பொறுப்பான இயற்கைவாதிக்கான பண்பை வளர்ப்பதற்காகவும் தான்.
வளர்ந்த நாடுகளில் பல மக்கள் அறிவியல் திட்டங்களும், அதற்கு பொதுமக்கள் பலரும் பங்களிப்பதும் அதிகம். ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இவை இப்போதுதான் தொடங்கப்பட்டு வருகின்றன. இது போன்ற திட்டங்கள் குறிப்பாக அதிக மக்கள் தொகையுள்ள நாடுகளில் அறியப்படாத அறிவியல் தகவல்கள் பலவற்றை பலரது ஒத்துழைப்புடன் சேகரிக்க உதவும். அது மட்டுமல்லாமல், இத்திட்டங்களின் மூலம் அனைவருக்கும் சுற்றுச்சூழல் பேணல், இயற்கை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வையும் ஊட்ட முடியும்.
இதுபோன்ற மக்கள் அறிவியல் திட்டங்கள் செயல்படுவது மக்களின் உதவியுடன், நாம் அனைவரும் வாழும் இப்பூமியின் நலனுக்காக. ஆகவே இதற்குப் பங்களிக்கும் மக்கள் நேர்மையாக இருந்து உண்மையான தகவலையே அளிப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான் இத்திட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஆகவே இது போன்ற திட்டங்களுக்கு பங்களிப்பவர்கள் பொருப்புடன் செயல்படுதல் அவசியம்.
பல்லுயிர்ப் பாதுகாப்பிற்கும், சுற்றுச்சூழல் பேணலுக்கும் சூழியல்வாதிகளும், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்களும், சுற்றுச்சூழல்வாதிகளும் மட்டுமே பங்களிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கைப் பாதுகாப்பு, புறவுலகின் பால் கரிசனம் முதலியவை இந்த பூமியில் வாழும் ஓவ்வொருவருக்கும் அவசியம் இருக்க வேண்டிய பண்புகளில் ஒன்று. மக்கள் அறிவியல் திட்டங்கள் அதற்கான வாய்ப்பை அனைவருக்கும் அளிக்கின்றன.
இந்தியாவில் செயல்பட்டு வரும் சில மக்கள் அறிவியல் திட்டங்கள்:
காலநிலை மாற்றத்தை (Climate change) தாவரங்களின் வாழ்வியலை ஆவணப்படுத்துவதன் மூலம் அறியும் திட்டம். அதாவது இத்திட்டத்தில் ஒரு மரம் இளந்தளிர்களை, பூக்களை, காய்களை, கணிகளை எந்த வாரத்தில், மாதத்தில் தோற்றுவிக்கின்றன என்பதை அவதானித்து இணையத்தில் ஆவணப்படுத்துதல் வேண்டும். உதாரணமாக வேப்பம்பூ சித்திரையில் பூக்கும் என்பதை அறிவோம். ஆனால் ஒவ்வோர் ஆண்டும் வேப்பமரம் சரியாக சித்திரையில் தான் பூக்கிறதா, அல்லது சற்று முன்போ அல்லது தாமதமாகவோ பூக்கிறதா என்பதை அறிய, அது பூக்கும் நாளை/வாரத்தை தொடர்ந்து பல ஆண்டுகள் ஆவணப்படுத்தப்படவேண்டும். ஒரு வேளை தாமதமாகப் பூத்தால் தட்ப வெப்ப நிலை, மழையளவு போன்ற காரணிகளுக்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என ஆராய்ந்து அறிய முடியும். மாத்ருபூமி மலையாள தினசரியின் SEED திட்டதின் கீழ் தற்போது கேரளாவிலிருந்து பல பள்ளி மாணவர்கள் இத்திட்டத்திற்கு பங்களித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு காண்க www.seasonwatch.in
*******
வலசை வந்து போகும் விருந்தாளிப் பறவைகள் ஓரிடத்திற்கு வருவது எப்போது, அங்கிருந்து அவை மீண்டும் திரும்பிப் போவதெப்போது? இதை அறியும் முயற்சியிலேயே சுமார் பத்தாண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட மக்கள் அறிவியல் திட்டம். இதைத் தெரிந்து கொள்வதால் லாபம் என்ன? வலசை வரும் பறவைகளை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேரும் நாட்களை ஆண்டாண்டு காலமாக கண்காணித்து வருவதன் மூலம் புறச்சூழலில் ஏற்படும் காலநிலை மாற்றங்களை கணிக்க முடியும். காலநிலை மாற்றத்தினால் வலசை பறவைகளின் வலசைப் பயணமும் பாதிப்படையும். எனினும் இந்திய துணைக்கண்டத்தில் இது பற்றிய புரிதல்கள் இன்னும் தெளிவாக இல்லை. இதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளவே இத்திட்டம் தொடங்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு காண்க www.migrantwatch.in
*******
ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (Great Backyard Bird Count – GBBC)
இந்நிகழ்ச்சி உலகம் முழுவதும் (இந்தியாவில் இது கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது) பிப்ரவரி மாதம் 13 முதல் 16ம் தேதி வரை நடைபெறும்.
உலகம் முழுவதும் உள்ள பறவைகளை ஒரே நேரத்தில் ஒவ்வோர் ஆண்டும் கணக்கிடுவதால், பறவைகளின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்களை ஆண்டு தோறும் கண்காணிக்க முடியும். ஓரிடத்தில் அவற்றின் எண்ணிக்கையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை வைத்து அதற்கான காரணங்களைக் கண்டறியவும் முடியும். வரும் ஆண்டு தமிழகத்தில் பொங்கல் தின பறவைகள் கணக்கெடுப்பு (Pongal Bird Count) நடத்தப்பட உள்ளது.
மேலும் விவரங்களுக்கு காண்க GBBC-ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு எப்போது? ஏன்? எப்படி?
மற்றும் www.birdcount.in
*******
நாம் ஓரிடத்தில் பார்க்கும் பறவைகளின் பட்டியலை இந்த இணையதளத்தில் சேகரித்து வைத்துக் கொள்ளலாம். பலர் இவ்வறு தங்களது அவதானிப்புகளை சமர்ப்பித்தால், பறவைகளின் பரவலையும், எண்ணிக்கையையும் இந்த இணையதளத்தின் மூலம் அறிய முடியும். இதன் மூலம் பறவை பார்ப்போரும், பறவை ஆராய்ச்சியாளர்களும், பொதுமக்களும் பயனடைவார்கள். Migrantwatch, GBBC முதலிய திட்டங்களுக்காக eBird இணையதளம் மூலமாகவே பறவைப் பட்டியலை, அவதானிப்பை உள்ளீடு செய்யலாம்.
மேலும் விவரங்களுக்கு காண்க http://www.ebird.org மற்றும்
*******
India Biodiversity Portal (இந்தியப் பல்லுயிரிய வலைவாசல்)
இந்தியாவில் உள்ள அனைத்து உயிரினங்களைப் பற்றிய தகவல்களை ஓரே இடத்தில் சேகரிக்கும் திட்டம். உதாரணமாக ஒரு வண்ணத்துப்பூச்சி அல்லது ஒரு தாவரத்தினைப் பற்றிய அனைத்துத் தகவல்களும் ஒரே பக்கத்தில் சேகரித்து வைக்கப்பட்டு அனைவரும் இத்தகவல்களை பார்த்தறிந்து பயன்பெறலாம். இந்த வலைவாசலில் அங்கத்தினராக இருக்கும் பல அறிஞர்களிடமும் உயிரினங்களைப் பற்றிய சந்தேகங்களை கேட்டறிந்து கொள்ளலாம். உதாரணமாக நாம் காணும் ஏதோ ஒரு தாவரத்தின் பெயரோ, தகவலோ தெரியவில்லை எனில், அத்தாவரத்தின் படத்தை இந்த வலைவாசலில் உள்ளீடு செய்தால் அங்குள்ள தாவரவியலாளார்கள் அத்தாவரத்தை அடையாளம் காண உதவுவார்கள்.
அண்மையில் இந்த வலைவாசலின் ஒரு அங்கமான TreesIndia நடத்திய Neighbourhood Tree Campaign (மரம் பார்ப்போம் மரம் காப்போம்) எனும் மரங்கள் கணக்கெடுப்பில் பலர் கலந்துகொண்டு அவரவர் வீடுகளில், தெருக்களில் உள்ள மரங்களின் வகையை, எண்ணிக்கையை, இருப்பிடத்தை பட்டியலிட்டு இந்த வலைவாசலில் உள்ளீடு செய்தார்கள்.
மேலும் விவரங்களுக்கு www.indiabiodiversity.org மற்றும் மரம் பார்ப்போம் மரம் காப்போம்
*******
Hornbill Watch – இந்திய இருவாசிகளுக்கான இணையதளம்
இருவாசி ஒரு அழகான பறவையினம். இவை அத்திப் பழங்களையே பெரும்பாலும் உண்டு வாழும். மிகப்பெரிய மரங்களில் கூடு கட்டும். இந்தியாவில் 9 வகையான இருவாசிப் பறவைகள் உள்ளன. இவற்றின் இறக்கைகளுக்காகவும், மண்டையோட்டிற்காகவும் இவை கள்ள வேட்டையாடப்படுவதாலும், வாழிட அழிப்பினாலும், மிகப்பெரிய மரங்களை வெட்டிச் சாய்ப்பதாலும், இவை அபாயத்திற்குள்ளாகியுள்ளன. இவற்றின் பாதுகாப்பு அவசியத்தை விளக்கவும், இவற்றின் பரவலை ஆவணப்படுத்தவும் இந்த இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நம்மிடம் இருக்கும் இந்திய இருவாசிகளின் படத்தை இந்த இணையத்தில் உள்ளீடு செய்யலாம். படம் எடுக்கப்பட்ட தேதி, நேரம், இடம் முதலிய தகவல்களையும் அளிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு காண்க http://www.hornbills.in/
*******
Conservation India (CI)
அழகிய நிலவமைப்புகளையும், காட்டுயிர்களையும் மட்டுமே பலவித கோணங்களில் படம்பிடித்துக் கொண்டிருக்காமல், இயற்கையான வாழிடங்களையும், சுற்றுச்சூழலையும் சீரழிக்கும் காட்சிகளையும் ஆவணப்படுத்தி அதை அந்த வாழிடத்திற்கும், அங்குவாழும் உயிரினங்களும் நன்மை புரியும் வகையில் இயற்கை பாதுகாப்பு ஒளிப்படங்களை எடுத்து இந்த இணைய தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். உதாரணமாக நாம் ஏதேனும் வனப்பகுதிக்குச் செல்லும் போது அங்கு கள்ள வேட்டையில் ஈடுபட்டிருப்பவர்களின் படத்தையோ, மரவெட்டிகளின் படத்தையோ எடுத்து இது பற்றி விளக்கங்களை அளித்து இந்த இணையத்தில் பதிப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு காண்க www.conservationindia.org
********
தி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 18th & 25th November 2014 தினங்களில் வெளியான கட்டுரைகளின் முழுப் பதிப்பு. அக்கட்டுரைகளை 18th Nov இங்கும் (PDF) & 25th Nov இங்கும் (PDF) காணலாம்.
தாவர நூல்கள்
தாவரங்களைப் பற்றிய நான் படித்த, படிக்கப் போகும் சில நூல்களைப் பற்றிய எனது கருத்துக்களை சுருக்கமாகத் தந்துள்ளேன். தாவரங்களின் பால் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவும் எனும் நம்பிக்கையில். இதில் தமிழ் நூல்கள், ஆங்கில நூல்கள், ஆதார நூல்கள் யாவும் அடக்கம்.
1.
ஆசிரியர்: கு. வி. கிருஷ்ணமூர்த்தி
வெளியீடு: பாரதிதாசன் பல்கலைக்கழகம்,திருச்சிராப்பள்ளி
நூலாசிரியர் திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தாவர அறிவியல் (Plant Science) துறையின் தலைவராக இருந்தவர். பண்டைய காலந்தொட்டு இன்று வரை தமிழர்களின் வாழ்வில், பண்பாட்டில் கலந்திருக்கும் தாவரங்கள் பற்றி இந்நூலில் விரிவாக அறிந்து கொள்ளலாம். சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்ட தாவரங்கள், தலமரங்களும் அவை இருக்கும் தலங்கள் முதலிய தகவல்களையும் இந்நூலில் காணலாம். தமிழார்வமும், தாவர ஆர்வமும் உள்ள அனைவரிடனும் இருக்க வேண்டிய அவசியமான நூல்.
2.
கபிலரின் குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள்
ஆசிரியர்: இரா. பஞ்சவர்ணம்
வெளியீடு:தாவரத் தகவல் மையம், பண்ருட்டி
நூலின் தலைப்பை வைத்தே இந்நூலின் உள்ளடக்கத்தை அறிய முடியும். “பூவெல்லாம் கேட்டுப்பார்” படத்தில் சூர்யா ஜோதிகாவிடம் 100 பூக்களின் பெயரை விடாமல் சொல்லிக் கொண்டே போவார், நினைவிருக்கிறதா? அவையனைத்தும் கபிலர் குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிட்டுள்ள பூக்களின் பெயர்கள். இந்நூலில் அப்பூக்களை அடையாளம் கண்டு படங்களுடன் விளக்கப்ட்டுள்ளது.
கபிலரின் இப்பூக்கள் பற்றி இதற்கு முன் பலர் ஆராய்ந்துள்ளனர். அதில் ஒன்றை இந்த வலைப்பூவில் காணலாம். இந்நூலில் அடையாளம் காணப்பட்ட பூக்களையும் இது சம்பந்தமாக செய்யப்பட்ட மற்ற ஆய்வுகளின் தரவுகளையும் யாராவது ஒப்பீடு செய்தால் நன்றாக இருக்கும்.
நான் இந்த நூலை வாங்கியதோடு சரி, இன்னும் முழுவதுமாகப் படிக்கவில்லை. எனினும் அவ்வப்போது புரட்டிப் பார்த்ததில் இந்நூலாசிரியர் தாவரங்களை வகைப்படுத்துதலிலும், பெயரிடுதலிலும் ஒரு புதுமையை புகுத்தியிருப்பது தெரிந்தது. அதாவது வகைப்பாட்டியலில் (Taxonomy) உயிரினங்களுக்கு அறிவியலாளர்கள் பெயரிடுவது போல இரு சொல் பெயரீட்டு முறையில் (binominal classification) ஒவ்வொரு தாவரத்திற்கும் தமிழில் பெயரிட்டுள்ளார். இது ஒரு வரவேற்கத்தக்க முயற்சி.
இந்நூலைப்பற்றிமேலும்அறிந்துகொள்ள http://www.plantinfocentre.com இணையதளத்தைக்காணவும்.
3.
வனங்கள் ஓர் அறிவியல் விளக்கம் & தமிழ்நாட்டுத் தாவரங்கள்
ஆசிரியர்: ச. சண்முகசுந்தரம்
வெளியீடு: மெய்யப்பன் பதிப்பகம்
அண்மையில் வாங்கியவை. முழுவதுமாக இன்னும் படிக்கவில்லை. எனினும், முதல் பார்வையிலேயே சொல்லிவிடலாம், இரண்டு நூல்களுமே மிகவும் அருமையான படைப்புகள். ஆசிரியர் ஒரு ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி. முதல் நூலை வேகமாகப் புரட்டியதில் இந்தியாவில் தென்படும் வனங்களின்வகைகளுக்கு அருமையான சில தமிழ் பதங்களை கொடுத்திருந்தார். தமிழ்நாட்டுத் தாவரங்கள் நூலில் பல வகையான தாவரங்களின் விளக்கங்கள் பாதி பக்கத்திற்கு தரப்பட்டிருந்தது. ஆங்காங்கே சில கோட்டோவியங்களையும் காண முடிந்தது.
4.
மரங்கள்: ஆசிய-பசிபிக் மரங்கள் பற்றிய குழந்தைகளுக்கான புத்தகம்
மொழிபெயர்ப்பாளர்: நிர்மலா பாலா
வெளியீடு: National Book Trust, India.
குழந்தைகளுக்கான நூல் எனக்குறிப்பிட்டிருந்தாலும் இது அனைவருக்குமான நூல். யுனெஸ்கோவில் உறுப்பினர்களாக உள்ள ஆசிய- பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த 18 நாடுகளிலிருந்து பெறப்பட்ட அந்நாடுகளின் மரங்கள், வனப்பகுதிகள் பற்றி சுவாரசியமாக கதை வடிவிலும், தகவல்களாகவும் தரப்பட்டுள்ளது. இந்நாடுகளில் தென்படும் மரங்கள், வனங்களின் சூழலியல் ஒழுங்கு, மரங்களின் பயன்கள், அழிக்கப்பட்டு வரும் வனங்களைக் காக்க நாம் செய்ய வேண்டியது என்ன என்பதைப் பற்றியெல்லாம் இந்நூலைப் படித்து தெரிந்துகொள்ளலாம்.
5.
சங்க இலக்கியத் தாவரங்கள்
ஆசிரியர்: கு. சீநிவாசன்
வெளியீடு: தமிழ்ப் பல்கலைக் கழகம்
தலைப்பை வைத்தே நூலினைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். இப்படி ஒரு நூல் இருப்பது எனக்குத் தெரிய வந்தது நாஞ்சில் நாடனின் “பனுவல்போற்றுதும்” நூலின் வாயிலாகத் தான். அதை அறிந்ததிலிருந்து தஞ்சைக்குச் செல்லும் போதெல்லாம் அரண்மனைவளாகத்தில் உள்ள தமிழ்ப் பல்கலைக் கழக பதிப்புத்துறைக்கு சென்று விசாரித்து வந்தேன். இந்நூல் out of stock. மறு பதிப்பு வர இன்னும் எவ்வளவு காலம் பிடிக்கும் என்பது யாருக்கும் தெரியாது. அண்மையில் தான் இந்நூலின் நகல் கிடைத்தது. இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை. இது என்னுடைய prized possession.
6.
ஆசிரியர்: சா. கந்தசாமி
வெளியீடு: காலச்சுவடு
சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது இந்தநூல். ஆனால் இன்றைய சூழலுக்கும் மிகவும் பொருந்துவது நம்மை ஆச்சர்யப்படவைக்கும். வளர்ச்சிப் பணிக்காக வனத்தை அழிக்கும் இந்த நூலின் கதாநாயகனான சிதம்பரம் போன்றோர் இவ்வுலகில் இப்போது ஏராளமானோர் உள்ளனர். அவன் போன்றோர் மென்மேலும் உருவாகாமல் இருக்க இந்தநூலை அனைவரும் படித்து அடுத்தவர்களுக்கும் இந்நூலை படிக்குமாறு பரிந்துரைக்கவேண்டும். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இந்நூலை பாடமாக வைப்பது அவசியம்.
7.
மரங்கள்: நினைவிலும் புனைவிலும்
தொகுப்பாசிரியர்: மதுமிதா
வெளியீடு: சந்தியா பப்ளிகேஷன்
ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு மரம் நிச்சயமாக இருக்கும். சிலருக்கு ஓரிரு மரங்கள் இருக்கலாம், சிலருக்கு பல மரங்கள் இருக்கலாம். அந்த சிலர் எழுத்தாளர்களாக இருந்தால் அவர்கள் தமது வாழ்வில் கண்டு வியந்த, தமது வாழ்வில் ஒன்றிப்போன மரங்களைப் பற்றி எழுதாமல் இருக்கவே மாட்டார்கள். நாஞ்சில் நாடனின் ஆலமரமும், மதுமிதாவின் மனோரஞ்சிதமும் அதற்கு சில எடுத்துக்காட்டு. இவர்களைப் போல பல படைப்பாளிகளின் நினைவில் இருக்கும் மரங்களைப் பற்றி அவர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. அனைவரும் படிக்க வேண்டிய நூல்.
English Books
8.
The Tree: A Natural History of What Trees Are, How They Live, and Why They Matter
ஆசிரியர்: Colin Tudge
வெளியீடு: Broadway Books
மரங்கள் எப்போது இவ்வுலகில் தோன்றின, எப்படி பரிணமித்தன, பல்வேறு சூழலுக்கு தம்மை எவ்வாறு தகவமைத்துக் கொள்கின்றன, எப்படி ஒன்றோடொன்று தொடர்பு கொள்கின்றன, முதலிய பல இயற்கை வரலாறு செய்திகளையும், உலகில் தென்படும் பல வகையான மரங்களைப் பற்றிய பல அரிய, நம்மை வியப்பிலாழ்த்தும் தகவல்களை இந்நூலினைப் படித்து அறிந்து கொள்ள முடியும்.
9.
ஆசிரியர்: Pradip Krishen
வெளியீடு: DK Publishing (Dorling Kindersley)
இவரது முதல் நூல். தாவரங்களுக்கான களக்கையேடுகளில் தலை சிறந்தது எனலாம். தில்லியில் அதன் சுற்றுப்புறத்தில் தென்படும் சுமார் 252 வகையான மரங்களின் தகவல்களைக் கொண்டது. பூ, காய், இலை, மரப்பட்டை, கிளை என ஒரு மரத்தினை அடையாளம் காண உதவும் அனைத்து பாகங்களின் அழகிய தெளிவான படங்களைக் கொண்டது இக்கையேடு. பல மரங்களைப் பற்றிய வியக்க வைக்கும் பல தகவல்களையும் தந்திருக்கிறார். ப்ரதீப் க்ரிஷென் ஒரு முன்னாள் ஆவணப்படத் தயாரிப்பாளர். இவர் எழுத்தாளர் அருந்ததி ராயின் முன்னாள் கணவர்.
10.
ஆசிரியர்: Pradip Krishen
வெளியீடு: Penguin Books India
மத்திய இந்தியாவில் தென்படும் மரங்களுக்கான களக்கையேடு. இம்மரங்களில் பல இந்தியா முழுவதிலும் பரவியிருப்பதால் தமிழகத்தில் உள்ள பல மரங்களைக் கண்டறியவும் இந்நூல் பயன்படும். மிக நேர்த்தியான வடிவமைப்பில், நான்கு ஆண்டுகள் உழைப்பில் விளைந்தது இந்நூல். ஒரு மரத்தினை அடையாளம் காணத் தேவையான பாகங்கள் அனைத்தையும் அழகிய, தெளிவான சுமார் 2000 படங்களைக் கொண்டு விளக்கப்பட்டுள்ளது.
11.
ஆசிரியர்: K. C. Sahni
வெளியீடு: Oxford University Press & Bombay Natural History Society
சுமார் 150 இந்திய மரங்களைப் பற்றிய தகவல்களை இந்நூலில் அறியலாம். மரங்களின் பாகங்கள் கோட்டோவியங்கள், புகைப்படங்கள் மூலம் விளக்கப்பட்டிருக்கும். மரங்களின் வணிகப் பயன்கள், மரங்களைப் பற்றி அது தென்படும் இடங்களில் மக்களால் சொல்லப்படும் கதைகள், மரங்களுக்கும் ஏனைய உயிரினங்களுக்குமிடையேயான உறவு என பல சுவையான தகவல்களைக் கொண்டது இந்நூல்.
12.
Discover Avenue Trees – A Pocket Guide
ஆசிரியர்: S. Karthikeyan
வெளியீடு: http://www.ecoedu.in
இந்நூலின் ஆசிரியர் S.கார்த்திகேயென் ஒரு அருமையான, அனுபவம் மிக்க இயற்கையியலாளர். ஏற்காடு மலைப்பகுதியில் மூங்கணத்தான்கள் (Madras Tree Shrew) குறித்து ஆராய்ச்சி செய்தவர். பெங்களூரு மாநகரத்தில் தென்படும் மரங்களைப் பற்றிய சுவையான தகவல்களை கொண்ட இவரது வலைதளத்தில் வெளியான தொடரின் சுருக்கமான கையடக்க நூல் வடிவம் இது. அண்மையில் இவரை பெங்களூரில் சந்தித்த போது இந்நூலில் அவரது ஆட்டோகிராப்பை வாங்கிக்கொண்டேன். அழகான வடிவமைப்பு. மரங்களைப் பார்க்கச் செல்லும் போது உதவிக்காக இந்நூலை சட்டைப் பைக்குள் வைத்து கூட எடுத்துச் செல்லலாம்.
13.
ஆசிரியர்: Pranab & Smita Chakravarti
வெளியீடு: National Book Trust, India
குழந்தைகளுக்கான நூல். மரம் ஓரிடத்தில் சும்மா நின்று கொண்டிருக்கவில்லை, அது பல விதமான உயிரினங்களின் புகலிடமாகிறது என்பதை படங்கள் மூலம் விளக்கும் நூல்.
14.
Trees and Tree Tales – Some common Trees of Chennai
ஆசிரியர்: Prof. K.N. Rao
வெளியீடு: Oxygen Books
சென்னையில் தென்படும் பல வகையான மரங்களைப் பற்றியும் அவை சார்ந்த சுவையான சில தகவல்களையும் கொண்டது இந்நூல். ஆசிரியர் ஒரு ஓய்வு பெற்ற தாவரவியல் துறை பேராசிரியர். பனைமர வகைகள், நாம் வணங்கும் மரங்கள், அழகிய பூக்கள் பூக்கும் மரங்கள், அழகிய இலைகளைக் கொண்ட மரங்கள், நாம் அதிகம் அறியப்படாத மரங்கள், பழம் தரும் மரங்கள் என சென்னையில் உள்ள மரங்களை இவ்வாறாக வகைப்படுத்தி இந்த நூலில் விளக்கியுள்ளார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இவ்வகை மரங்களை சென்னையில் எந்தெந்த பகுதியில் காணலாம் என்பதையும் தந்துள்ளார். எளிதில் படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் இருக்கும் மொழி நடை. சென்னைவாசிகள் மட்டுமல்ல ஆர்வமுள்ள அனைவருக்குமான நூல் இது. ஆனால் தற்போது out of stock. ஆகவே ஒருவேளை எங்காவது இந்நூலைக் கண்டால் உடனே வாங்கிவிடுவது நல்லது.
15.
ஆசிரியர்: Bernd Heinrich
வெளியீடு: HarperCollins Publishers
இந்நூலின் ஆசிரியர் வெர்மொன்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு உயிரியல் பேராசிரியர். இயற்கை அறிவியல் நூல்கள் பல இயற்றியவர். இந்த நூலின் சிறப்பம்சம் வனத்தில் அவர் காணும் மரங்களை அவரே அழகான கோட்டோவியங்களாகவும், விளக்கப்படங்களாகவும் சித்தரித்திருப்பது. அவருக்குச் சொந்தமான 300 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த வனப்பகுதியில் உள்ள மரங்களைப் பற்றியும் அங்குள்ள கானுயிர்கள் பற்றியும் எளிய நடையில் விளக்குகிறார். ஓரின மரத்தோட்டங்களுக்காக (monoculture tree plantations) வனங்களை அழிப்பதையும், ஒரே வகையான அயல் மரத்தோட்டத்தை (exotic tree plantation) ஏற்படுத்த பல்லாயிரம் இயல் தாவரங்களை (native plants) அழிப்பதையும் முற்றிலும் எதிர்க்கிறார். அதை சூழல்சாவு (ecodeath) என சித்தரிக்கிறார். வனத்தை பராமரிப்பது அபத்தம் என்றும், வனம் என்பது தன்னைத் தானே சீரமைத்துக் கொள்ளும் என்றும் விளக்குகிறார்.
இந்திய வனத்துறை அதிகாரிகள் பலர் படித்து அறிவு பெற வேண்டிய மிக முக்கியமான நூல் இது.
Reference books
16.
தொகுப்பு & வெளியீடு: Keystone Foundation
நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் தென்படும் தாவரங்கள் இரண்டு தொகுதிகளில் தரப்பட்டுள்ளது. இக்களக்கையேட்டில் இப்பகுதியில் காணக்கூடிய மரங்கள், கொடிகள், பெருங்கொடிகள் (lianas), புதர்கள், சிறு செடிகள், புற்கள் யாவும் விளக்கப்பட்டுள்ளது. நீலகிரிப் பகுதியில் வாழும் குரும்பர் இனத்தவரான திரு எல். பாலசுப்ரமணியம் இத்தாவரங்களின் விளக்கப்படங்களை (illustration) வரைந்திருப்பது இந்நூலின் சிறப்பு. தாவரங்களின் புகைப்படங்களும் தரப்பட்டுள்ளது. மற்றுமொரு சிறப்பு ஒவ்வொரு தாவரத்தின் ஆங்கிலப் பெயர், அறிவியல் பெயர் மட்டுமல்லாது குரும்பர், இருளர் மற்றும் பல பூர்வீகக் குடியினரின் பெயர்களையும் கொண்டுள்ளது இந்நூல்.
17.
The Flora of The Palni Hills Vol 1, 2 & 3
ஆசிரியர்: K. M. Matthew
வெளியீடு: The Rapinat Herbarium, St. Joseph’s College, Tiruchirapalli.
பல ஆண்டுகள் களப்பணியில் விளைந்தது இந்த ஆதார நூல் (Reference book). K.M. மேத்யூ ஒரு தலைசிறந்த தாவரவியலாளர். இவரது நூல்கள் இந்தியத் தாவரவியலுக்கு மாபெரும் பங்களிப்பாகும். இவரது இந்த மூன்று பாகங்கள் கொண்ட ஆதார நூலில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதியான பழனி மலைத் தொடரில் தென்படும் தாவரங்களை பல ஆண்டுகள் களப்பணியில் கண்டறிந்து ஆவணப்படுத்தியுள்ளார். முதல் தொகுதி அல்லி இணையாத தாவரங்களையும் (Polypetalae), இரண்டாம் தொகுதி அல்லி இணைந்த தாவரங்களையும் (Gamopetalae), ஒரு வட்டப்பூவிதழ் உடைய தாவரங்களையும் (Monochlamydae), மூன்றாவது தொகுதி ஒரு வித்திலைத் தாவரங்களையும் (Monocotyledones) உள்ளடக்கியது. இவர் சேகரித்த அனைத்துத் தாவரங்களும் திருச்சிராப்பள்ளியில் உள்ள புனித ஜோசப் கல்லூரி (St. Joseph College), தாவரவியல் துறை, ரபினட் உலர் தாவரத்தொகுப்பில் (The Rapinat Herbarium) பாடம் செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது.
இயல் விருது பெற்ற இயற்கையியல் எழுத்தாளரான தியோடோர் பாஸ்கரன் அவரது முதல் இயற்கையியல் கட்டுரைத் தொகுப்பிற்கு K.M. மேத்யூ சொன்ன வாக்கியத்தையே தலைப்பாக வைத்திருக்கிறார். இவரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள அந்த நூலில் உள்ள “இன்னும் பிறக்காத தலைமுறைக்காக..” எனும் கட்டுரையை படிக்கவும்.
18.
Illustrations on the Flora of the Palni Hills
ஆசிரியர்: K. M. Matthew
வெளியீடு: The Rapinat Herbarium, St. Joseph’s College, Tiruchirapalli.
மேலே குறிப்பிட்ட மூன்று தொகுதிகளில் பழனிமலைத்தொடரில் தென்படும் தாவரங்களை அடையாளம் காண உதவும் விளக்கக் குறிப்புகள் தரப்பட்டுள்ளது. இத்தாவரங்களின் விளக்கப்படங்கள் (illustrations) இந்த இரண்டு தொகுதிகளில் தரப்பட்டுள்ளது.
19.
K.M. மேத்யூ எழுதிய மேலும் இரண்டு ஆதார நூல்கள்
An Excursion Flora of Central Tamil Nadu, India மற்றும் Materials for the Flora of the Tamil Nadu Carnatic. முதலாவது நூலை அவரது மாணவரான எஸ். ஜான் பிரிட்டோ தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
A Pocket Flora of the Sirumalai Hills, South India – K.M. மேத்யூவின் மற்றொரு மாணவரான J.M.பள்ளித்தனம் எழுதியது சிறுமலை பகுதியில் தென்படும் தாவரங்களைப் பற்றிய நூலாகும்.
சொல்வனம் இணைய இதழில் (இதழ் 103) 23-4-2014 அன்று வெளியான நூல் அறிமுகத்தின் மறுபதிப்பு. அதற்கான உரலி இதோ http://solvanam.com/?p=32809
மரம் பார்ப்போம், மரம் காப்போம் !
இந்தியா முழுவதும் ஏப்ரல் 22 முதல் (உலக பூமி தினத்தன்று) தொடங்கவுள்ளது இந்த மரம் பார்க்கும் திருவிழா. இதில் ஆர்வமுள்ள அனைவரும் பங்கு பெறலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்:
1. உங்கள் வீட்டிலோ, வீட்டின் அருகிலோ, தெருவிலோ, நீங்கள் நடைபழகச் செல்லும் பூங்காவிலோ, பள்ளியிலோ உள்ள மரங்களைப் பாருங்கள். இந்த இடங்களில் தான் என்று இல்லை, உங்களுக்கு எங்கு விருப்பமோ, வசதியோ அங்கெல்லாம் கூட பார்க்கலாம்.
2. மரங்களின் இருப்பிடத்தை இடங்காட்டியிருந்தால் (Global Positioning System – GPS) அதன் மூலம் குறித்துக்கொள்ளவும். இல்லையெனில் கூகுள் வரைபடத்தில் (Google Earth or Wikimapia or Google Maps) உங்களது மரம் அல்லது மரங்களின் இருப்பிடத்தைக் குறித்து அந்த இடத்தின் அட்ச ரேகை/தீர்க்க ரேகையை (Latitude/Longitude) குறித்துக்கொள்ளவும். (தற்போது இடங்காட்டிகள் பல கைபேசிகளில் கூட உள்ளது)
3. உங்களிடம் கேமிரா இருந்தால் நீங்கள் பார்க்கும் மரத்தை புகைப்படம் எடுத்துக் கொள்ளவும். (மரத்தைப் புகைப்படமெடுக்கும் முறையை விரிவாகக் காண இங்கே சொடுக்கவும்)
4. ஒருவேளை உங்களிடம் காமிராவோ, இடங்காட்டியோ இல்லையென்றாலும் பரவாயில்லை. நீங்கள் மரம் பார்க்கும் இடத்திலுள்ள மரத்தின் வகைகளையும் அவற்றின் எண்ணிக்கையையும் பட்டியலிடவும்.
5. அதன் பின் இந்தியப் பல்லுயிரிய வலைவாசலின் (India Biodiveristy Portal) ஒரு பகுதியான இந்நிகழ்ச்சியில் பங்கு பெற இந்தியமரங்கள் பக்கத்திற்குச் சென்று <http://treesindia.indiabiodiversity.org/register/index> உங்களைப் பதிவு செய்து கொண்டு நீங்கள் சேகரித்த தகவல்களை உள்ளீடு செய்யவும்.
6. உங்களது பதிவுகளை உள்ளீடு எப்படிச் செய்வதென்பதை விளக்கும் படக்காட்சிகளை இப்பக்கத்தில் காணலாம் <http://treesindia.indiabiodiversity.org/page/44>
7. உங்களது மரத்தைப் பற்றிய ஏதேனும் சுவையான செய்தி இருந்தாலும் இந்த வலைவாசலில் உள்ள ஏனைய உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
8. இந்த மரம் பார்க்கும் நிகழ்ச்சியை நீங்கள் ஒருவர் மட்டுமே தனியாகவும் செய்யலாம், உங்கள் நண்பர்களுடன் ஒரு குழுவாகவோ, சக மாணவர்களுடனோ, உங்களது குடும்ப உறுப்பினர்களுடனோ சேர்ந்தும் செய்யலாம். நீங்கள் பள்ளி ஆசிரியராக இருந்தால் உங்கள் மாணவர்களுக்கு இந்நிகழ்வினைப் பற்றி எடுத்துச் சொல்லி பங்கு பெற ஊக்கப்படுத்தலாம். ஒரு வேளை நீங்கள் ஒரு தன்னார்வ அமைப்பின் அங்கத்தினராக இருந்தால் உங்களது உறுப்பினர்களுடன் சேர்ந்து மரம் பார்க்கும் நடை பயணத்தினை நடத்த ஏற்பாடு செய்யலாம். ஒருவேளை நீங்கள் மரங்களை அடையாளம் காணுவதில் தேர்ச்சி மிக்கவராக இருந்தாலும், உங்களை பதிவு செய்து கொண்டு மற்றவர்களுக்கு உதவலாம்.
இந்தத் திட்டத்தின் நோக்கம்
நிழலையும், உயிர் வளியையும் நமக்களிக்கும் மரங்களின் கொடையினை நாம் அனைவரும் உணர வைப்பதும், இந்தியா முழுவதிலும் உள்ள மரங்களை ஆவணப்படுத்துவதும், மரங்களைப் பற்றிய தரவுகளை அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் சேமித்து ஒரு பொதுத் தளத்தில் வைப்பதுமே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
மரம் பார்ப்போம், மரம் காப்போம் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதால் யாருக்கு என்ன பயன்?
ஒரு வேளை நீங்கள் பார்த்த மரத்தின் பெயர் உங்களுக்குத் தெரியவில்லையென்றாலும் நீங்கள் அம்மரத்தின் படத்தை உள்ளீடு செய்யலாம். வலைவாசலில் ஏற்கனவே பதிவு செய்துள்ள தாவரவியலாளர்கள், உறுப்பினர்கள் உங்களது மரத்தை அடையாளம் காண உதவுவார்கள். இதன் மூலம் நீங்களும் உங்களது மரங்களைப் பற்றி மேலும் பல சுவையான தகவல்களை அறிந்து பயனடைவீர்கள்.
இந்தியா முழுவதும் பலர் இதில் பங்கு பெற்றால் எந்தெந்த ஊர்களில் எவ்வகையான மரங்கள் உள்ளன, எத்தனை உள்ளன என்பதை அறிய முடியும். இது ஒரு முக்கியமான ஆவணமாக அமையும். இந்தியாவில் சுமார் 7500 வகையான மரங்கள் உள்ளன. இவையனைத்தின் பரவலையும், தற்போதைய நிலையையும் ஆவணப்படுத்துவது அவசியம்.
நீங்கள் தினமும் பார்க்கும் உங்களது மரங்களின் புகைப்படத்தையோ, அவற்றின் இருப்பிடத்தையோ, மரங்களின் பட்டியலையோ இந்த வலைவாசலில் உள்ளீடு செய்வதன் மூலம் உங்களது மரங்களின் பாதுகாப்பிற்கு உதவமுடியும்.
ஓரிடத்தில் உள்ள மரங்களின் எண்ணிக்கையை, பட்டியலை தயாரித்து அவற்றின் படங்களை, அமைவிடத்தை (location) பதிவு செய்து வைத்துக் கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் அந்த இடத்தில் மரங்கள் அதிகரித்துள்ளதா, குறைந்து போனதா என்பதை அறிய முடியும்.
நாளுக்கு நாள் ஊர்ப்புறங்களிலும், நகரங்களிலும் சாலை விரிவாக்கம் முதலிய காரணங்களால் மரங்கள் அருகி வரும் இந்நிலையில் இது போன்ற ஆவணப்படுத்தும் செயல்கள் மிகவும் அவசியம். இந்திய பல்லுயிரிய வலைவாசலில் உள்ள படங்கள், பட்டியல்கள் அனைத்தையும் பொதுமக்கள் அனைவரும் எளிதில் இலவசமாக தரவிரக்கம் செய்து கொள்ள முடியும். இது போன்ற ஆவணங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் சேமித்து வைப்பதன் மூலம் இயற்கை ஆர்வலர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும், ஆர்வமுள்ள பொதுமக்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும்.
ஒரு மரத்தின் பூ பூக்கும், காய் காய்க்கும் காலத்தை தொடர்ந்து பல ஆண்டுகள் கண்காணித்து ஆவணப்படுத்தி வருவதன் மூலம் ஒரு குறிப்பிட்ட பகுதியிலும், உலக அளவிலும் ஏற்படும் கால நிலை மாற்றத்தைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். மேலும் விவரங்களுக்கு seasonwatch எனும் இந்த திட்டத்தைப் பற்றி அறிந்து கொள்க.
இதையெல்லாம் ஓரிரு ஆர்வலர்களோ, ஆராய்ச்சியாளர்களோ மட்டுமே செய்து முடிக்கக்கூடிய காரியம் அல்ல. மரங்களின் பால் பற்று கொண்ட பொதுமக்களின் உதவியும் தேவை. இது போன்ற மக்கள் அறிவியல் (citizen science) திட்டங்களில் பங்கு கொள்வது விஞ்ஞானிகளுக்கும், அறிவியலுக்கும் பொது மக்களும் பங்களிக்க ஒரு வாய்ப்பாக அமையும்.
மேலும் விவரங்கள் அறிய treesindia@indiabiodiversity.org க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.