Archive for the ‘Herps’ Category
செங்கால் நாரையும், மூங்கணத்தானும், பொன்னிறப் பல்லியும்
– விழுப்புரம் மாவட்ட பயணக் குறிப்புகள்
அண்மையில் விழுப்புரம் மாவட்டத்தில் சில இடங்களில் பணி நிமித்தம் பயணம் செய்ய வேண்டியிருந்தது. இந்த ஆண்டு (2016) நவம்பர் பின் பாதியில் சுமார் பத்து நாட்களில் விழுப்புரம், செஞ்சி, கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, கல்வராயன் மலைப்பகுதி என சுற்றியதில் பணியைத் தவிரவும் எதிர்பார்த்துக் காத்திருந்த சில ஆசைகள் நிறைவேறியது.
நாராய் நாராய் செங்கால் நாராய்
விழுப்புரத்தில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ள வீடுர் நீர்த்தேக்கத்திற்கு ஒரு நாள் மாலை நண்பர்கள் சுவாமி ரப்யா, சேகர், மகேஷ் ஆகியோருடன் சென்றிருந்தேன். பொழுது சாய இன்னும் கொஞ்சம் நேரம் தான் இருந்தது, ஆகவே வண்டியை விட்டு இறங்கியவுடன் சாலையில் இருந்து நீர்தேக்கத்தின் உயரமான கரையின் மேலே அவசர அவசரமாக ஏறினோம். எனது இருநோக்கியை கூட வந்திருந்த ஒரு நண்பரிடம் கொடுத்திருந்தேன். அவர் எனக்கு முன்னால் சற்று தூரத்தில் போய்க்கொண்டிருந்தார். நான் மேலே ஏறியதும் விசாலமான அந்த நீர்த்தேக்கத்தை இடமிருந்து வலமாக நோட்டம் விட்டேன். அணைக்கு சற்று முன்னே தூரத்தில் கொஞ்சமாக தண்ணீர் தேங்கி கிடந்தது. புற்கள் நிறைந்த தரையில் நின்று கொண்டிருந்த ஒரு பெரிய பறவையை பார்த்தமாத்திரத்திலேயே அடையாளம் கண்டுக்கொண்டேன். அது செங்கால் நாரை! வெள்ளை வெளேர் என உடல், அதன் பின் பகுதி அடர்ந்த கருப்பு. தூரத்தில் இருந்து பார்க்கும் போது இனப்பருக்கக் காலத்தில் இருக்கும் நத்தை குத்தி நாரையும் கிட்டத்தட்ட இது போலத்தான் தோன்றும். எனினும் நிற்கும் விதம், அலகின் நிறம், வடிவம் இவற்றை வைத்து இந்த இரு பறவைகளையும் பிரித்தறிய முடியும். நண்பரை அழைத்து இருநோக்கியை வைத்து பார்த்தேன். சிவந்த அலகைக் கொண்ட அழகான செங்கால் நாரை அது! சென்ற அனைவரும் இருநோக்கியை பகிர்ந்து வலசை வந்த அந்த அழகான பறவையை கண்டுகளித்தோம். செங்கால் நாரை இருந்த இடத்திற்கு சற்று தொலைவிலேயே ஏராளமான நத்தைகுத்தி நாரைகள் இருந்தன. ஆனால் அவற்றின் இறக்கைகள் சாம்பல் நிறத்தில் இருந்தது.
செங்கால் நாரைகள் மத்திய ஆசியப் பகுதியிலும், ஐரோப்பாவிலும் இனப்பெருக்கம் செய்கின்றன. இவை இந்தியப் பகுதிகளில் செப்டம்பர் மாதம் முதல் மே மாத இறுதி வரை இருப்பதாகத் தெரிகிறது. எனினும் தமிழ் நாட்டில் நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை பதிவு செய்யப்பட்டுள்ளது. செங்கால் நாரைகள் அவை இனப்பெருக்கம் செய்யும் இடங்களில் (ஐரோப்பிய நாடுகளில்) மரங்களின் மீதோ, வீட்டில் உள்ள புகைபோக்கிக்கு மேலோ, கட்டிடங்களின் மீதோ பெரிய கூடு கட்டி குஞ்சு பொரிக்கும். ஆண்டுதோறும் ஒரே கூட்டினை திருபத் திரும்ப உபயோகிக்கும். இப்பறவைகள் தங்கள் வீடுகளில் கூடமைப்பது நல்ல சகுனம் எனும் நம்பிக்கை அவ்வூர் மக்களிடம் இருகிறது. ஆகவே அவற்றின் கூடுகளை அவர்கள் தொந்தரவாக நினைப்பதில்லை.
இதற்கு முன் இந்தப் பறவையை குஜராத்தில் பாத்ததுண்டு. தமிழகத்தில் பார்ப்பது இது தான் முதல் முறை. பொழுது சாயும் வரை அங்கிருந்த பல பறவைகளையும் கண்டுகளித்துவிட்டு, கொஞ்சம் முன்பே வந்திருக்கலாம் என நொந்து கொண்டே அங்கிருந்து கிளம்பினோம்.
கல்வராயன் மலைப் பயணம்
கள்ளக்குறிச்சிக்கு சென்ற போது அருகில் இருக்கும் கல்வராயன் மலைப் பகுதிக்கும் சென்று வரலாம் என முடிவு செய்தேன். கூட வர யாரும் நண்பர்கள் இல்லை ஆகவே தனியே ஒரு வண்டியை வாடகைக்கு எடுத்துக் கொண்டு ஒரு நாள் அதிகாலை கிளம்பினேன். மிகவும் வேகமாகப் போகவேண்டாம், பாட்டு போடவேண்டாம், வண்டி ஓட்டிக்கொண்டே கைபேசியில் பேசவேண்டாம், போகும் வழியில் பல இடங்களில் பல முறை பறவைகளைப் பார்க்க வண்டியை நிறுத்த வேண்டி வரும், என்னிடம் ரொக்கமாக பணம் இல்லை எனவே ஆகும் செலவை உங்களது வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைப்பேன் என்றெல்லாம் முன்கூட்டியே ஓட்டுனரிடம் எனது நிபந்தனைகளைச் சொல்லியிருந்தேன்.
கச்சிராப்பாளையத்தில் இருந்து பரிகம் வரை இருந்த சாலை இன்னும் “மேம்படுத்தப்படாமல்” இருபுறமும் மரங்களுடன் மிகவும் அழகாக இருந்தது. இரண்டு வண்டிகள் பக்கம் பக்கமாக பயணிக்க போதுமான இடமிருந்தது. எனினும் இதை இருவழிச் சாலையாக்க பலர் முயன்று கொண்டிருக்கக்கூடும். சாலையோர மரங்கள் சிலரின் கண்ணை உறுத்திக்கொண்டே தான் இருக்கும். வண்டியை நிறுத்தி மரங்கள் சூழ்ந்த அந்தச் சாலையை படமெடுத்துக் கொண்டேன். இன்னும் எத்தனை நாட்களுக்கு இவை இருக்கும் என நினைத்து பெருமூச்சுடன் பயணத்தைத் தொடர்ந்தேன். பரிகம் அருகில் நீரில்லாத கோமுகி ஆற்றையும் அதைத் தொடர்ந்து கோமுகி அணையையும் கண்டேன். சற்று தூரத்தில் மலைப்பாதை ஆரம்பமானது.
போகும் வழியில் பெரியார் நீர்வீழ்ச்சி என ஓரிடத்தில் எழுதியிருந்தது (வனத்துறைக்கு ஒரு வேண்டுகோள் – அது நீர்வீழ்ச்சி அல்ல அருவி என திருத்தி எழுதவும், மேலும் அங்கே ஒரு குப்பைத் தொட்டியை வைக்கவும், சுற்றுலாவினர் போட்டுச் செல்லும் பிளாஸ்டிக் குப்பைகள், மதுக்குப்பிகளை அவ்வப்போது அப்புறப்படுத்தவும்). சரி பறவைகளைப் பார்க்கலாம் என அங்கே இறங்கி அங்கிருந்த ஓடைக்கு அருகே சென்றேன். நீர் வரத்து இல்லாததால் ஆள் அரவம் இல்லை. அங்கும் இங்குமாக சில இடங்களில் தண்ணீர் தேங்கிக் கிடந்தது. சாம்பால் வாலாட்டி ஒன்று என்னைக் கண்டதும் வாலை ஆட்டிக்கொண்டே வீச் என கத்திக் கொண்டு பறந்து சென்றது. சின்ன மீன்கொத்தியையும், ஈப்பிடிப்பான்களையும் பார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாரா விதமாக துடுப்புவால் கரிச்சான் ஒன்று பறந்து வந்து அருகில் உள்ள மரக்கிளையில் அமர்ந்தது. சுமார் அரை மணி நேரம் அங்கிருந்த பறவைகளைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு கிளம்பினேன்.
முந்தைய நாள் இணையத்தில் கல்வராயன் மலைப்பகுதியில் பார்க்க வேண்டிய இடங்களை தேடிப்பார்த்தேன். மேகம் அருவியின் படங்கள் ஏராளமாக வந்து விழுந்தன. பறவைகளைப் பார்த்து பட்டியலிடும் வலைத்தளமான eBirdல் பார்த்த போது அங்குள்ள பறவைகளைப் பற்றிய தகவல்கள் ஏதும் இல்லை. ஆகவே அங்கே செல்லலாம் என முடிவு செய்து அதன் அருகில் இருக்கும் ஊரான வெள்ளிமலைக்கு வந்தடைந்தோம். அங்கே மேகம் அருவிக்கு எப்படிச் செல்வது என்று கேட்டபோது குறத்திக்குன்றம் எனும் ஊரில் இருந்து போகவேண்டும் என்றார்கள்.
குறத்திக்குன்றத்திற்கு நாங்கள் வந்தடைந்த போது மணி சுமார் ஒன்றரை இருக்கும். அவ்வூரில் மேகம் அருவிக்கு போக வழித்துணைக்கு யாராவது வரமுடியுமா என விசாரித்த போது சதீஷ் எனும் இளைஞர் தாம் அழைத்துச் செல்வதாகச் சொன்னார். நல்ல வெய்யிலில் கிளம்பினோம். நான் மதிய உணவு சாப்பிடவில்லை, இரண்டு வாழைப்பழமும் எனது அலுமினியப் புட்டியில் குடிக்கத் தண்ணீரும் எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தோம்.
சதீஷ் கல்வராயன் மலையின் பூர்விகக் குடியைச் சேர்ந்த இளைஞர். நடக்க ஆரம்பித்ததில் இருந்து என்னை முன்னே அனுப்பி விட்டு சற்று பின்னால் தள்ளியே கைபேசியில் யாருடனோ வளவளவென பேசிக்கொண்டே வந்தார். ஓரிடத்தில் பாதை இரண்டாகப் பிரிந்தது. அவரோ மிகவும் மும்முரமாக பேசிக்கொண்டே இருந்தார். உச்சி வெயில் மண்டையை பிளந்தது, எனக்கு சற்று கோபமும் வந்தது. காட்டிற்குள் பறவைகள் பார்க்கச் செல்லும்போது பேசக்கூடாது என்றும் சற்று பேச்சை நிறுத்தி விட்டு எனக்கு வழியை காண்பிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.
வட கிழக்கு பருவ மழை பொய்த்துப் போனதால் காடு வாடிப்போய் இருந்தது. மெதுவாக சதீஷிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தேன். அவர் ஒன்பதாவது வரை படித்ததாகவும், அவரது பெற்றோருக்கு விவசாயப் பணியில் உதவுவதாகவும் சொன்னார். அங்கிருந்த மரம் ஒன்றின் பெயரைக் கேட்டேன் தெரியாது என்றார். எனக்கு ஆச்சர்யமாகவும், சற்று கவலையாகவும் இருந்தது. காட்டுக்குள் எப்போதெல்லாம் வருவாய் எனக் கேட்டேன், எப்போதாவதுதான் என்றார். இந்தக் காட்டுக்குள் என்ன என்ன பெரிய உயிரினங்கள் இருக்கின்றன எனக் கேட்டேன். காட்டுக்குள்ளே அதிகம் பார்த்ததில்லை ஆனால் ஊரின் அருகில் உள்ள பயிர்களை மேய காட்டு மாடுகள் (காட்டெருது) வருவதுண்டு எனவும், மான்களைக் கண்டதில்லை என்றார். மேகம் அருவி எனும் பெயர் நிச்சயமாக அண்மையில் வைத்த பெயராகத்தான் இருக்கும். சுற்றுலா மேம்பாட்டுக்காக இது போன்ற அழகான, அதிகம் அறியப்படாத இடங்களை கண்டுபிடித்து புதிதாக ஏதாவது பெயரிட்டு, அந்த இடங்களைச் சீரழிப்பதுதான் நமக்கு வாடிக்கையாயிற்றே. பள்ளத்தாக்கில் அமைந்துள்ள மேகம் அருவிக்கு அவர்கள் ஊரில் வழங்கும் பெயர் என்னவென்று கேட்டேன். அப்படி ஏதும் இல்லை என்றார், ஒரு வேலை இருந்தால், அவரது பெற்றோர்களிடம் கேட்டால் தெரியும் என்றார். சுமார் முக்கால் மணி நேர நடைக்குப் பின் களைப்பாக இருந்ததால் ஒரு மர நிழலில் அமர்ந்தோம். சதீஷ் தனது கைபேசியை நோண்ட ஆரம்பித்தார்.
மதிய வேளையாதலால் பறவைகள் அதிகம் தென்படவில்லை. அவற்றின் குரலொலியும் கம்மியாகத்தான் இருந்தது. வரும் வழியில் ஓரிரு இடங்களில் சில மரங்கள் வெட்டப் பட்டதற்கான அறிகுறிகள் தெளிவாகத் தெரிந்தது. காட்டுப்பாதை இதற்கு முன் ஒத்தையடிப்பாதையாக இருந்ததாகவும், சுற்றுலா வளர்ச்சிக்காக அதை அகலப்படுத்தப் பட்டதாகவும் சதீஷ் சொன்னார். எனினும் இதைச் செய்து சில ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். மழை வந்து பாதையை அரித்துச் சென்றிருந்தது. நாங்கள் அமர்ந்திருத்த போதே சற்று தொலைவில் துப்பாக்கி வேட்டுச் சத்தம் கேட்டது. நான் சதீஷை பாத்தேன், அவரும் என்னைப் பார்த்து விட்டு கைபேசியில் முகத்தை நுழைத்துக் கொண்டார்.
வெகுவாக கள்ள வேட்டையாடப்பட்ட வனப்பகுதிகளில் பெரிய உயிரினங்கள் (மான்கள், குரங்குகள், உருவில் பெரிய பறவைகள்) எதுவும் இருக்காது. ஆனால் காட்டைப் பார்த்தால் ஓரளவிற்கு சீரழியாமல் தென்படும். ஆங்கிலத்தில் இதை Empty forest syndrome என்பர். இந்த இடத்தைப் பார்க்கும் போது எனக்கு அந்த காலியான காட்டின் அறிகுறி தான் நினைவுக்கு வந்தது.
களைப்பு சற்று தீர்ந்தவுடன் எழுந்து நடக்க ஆரம்பித்தோம். கீழ் நோக்கிச் சென்ற பாதையின் முன்னே சில காட்டுச் சிலம்பன்கள் கத்திக் கொண்டிருந்தன. இருநோக்கியை வைத்துப் பார்த்துக் கொண்டிருந்த போது அதே மரத்தில் அணில் போன்ற ஒரு சிறு உயிரினம் ஓடி வந்தது. அது அணில் இல்லை. மூங்கில்கள் சூழ்ந்த அந்த காட்டுப்பகுதியில் நான் கண்ட அந்த அழகான உயிரினம் ஒரு மூங்கணத்தான்! Madras Treeshrew என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த மூங்கணத்தான் அருகில் இருக்கும் சேர்வராயன் மலைப்பகுதிகளில் இருப்பதற்கான குறிப்புகள் உள்ளன. ஆகவே இந்த இடத்திலும் இருப்பது ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எனினும் எதிர்பாராவிதமாகக் கண்டதில் எனக்கு மகிழ்ச்சி.
இது ஒரு பூச்சியுண்ணி. எனினும் இதை பாலூட்டி வகையில் எந்த வரிசையில் (order) வைப்பது என்பதில் வகைப்பாட்டியலாளர்களுக்கு இன்று வரை பல சந்தேகங்கள் உள்ளன. ஆரம்பத்தில் இது குரங்குகள் வகைக்குக் கீழ் வரிசைப்ப்படுத்தப்பட்டிருந்தது. எனினும் சிலர் முயல் (rabbit), பறக்கும் லெமூர் (flying lemur), யானை மூஞ்சூறு (elephant shrew) முதலிய வகை உயிரினங்களின் வரிசையில் கொண்டு வந்தனர். எனினும் அண்மைய காலங்களில் செய்த ஆராய்ச்சிகளின் விளைவால் இந்த வகை பாலுட்டிகளை தனி வரிசையில் வைக்க வேண்டும் என வகைப்பாட்டியலளர்கள் ஒத்துக்கொண்டுள்ளனர். இந்தியாவில் மட்டுமே தென்படக்கூடிய உயிரினம் இது. மத்திய இந்தியா, மேற்குத்தொடர்ச்சி மலையில் சில பகுதிகள், கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதி என ஆங்காங்கே தொடர்பற்று பரவிக் காணப்படுகின்றன. மூங்கில் அதிகமாக இருக்க்கக்கூடிய இடங்களில் போதுவாக தரையில் இரைதேடிக் கொண்டிருக்கும்.
அரிய உயிரினங்களையும், நிறைய ஓரிடவாழ்விகளையும், கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளுக்கு கிடைப்பதில்லை. இதற்கு பல காரணங்கள் உண்டு. முக்கயமாக இப்பகுதிகளின் பாதுகாப்பிற்கு ஒதுக்கப்படும் நிதியுதவியும் கம்மி. நிதி கிடைப்பதும் கடினம், ஏனெனில் புலி போன்ற அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் கவர்ச்சிகரமான, பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த உயிரினங்கள் இங்கே தென்படாதது தான். ஒரு காலத்தில் இது போன்ற உயிரினங்கள் இங்கே இருந்திருக்கும் ஆனால் அவை முற்றிலுமாக அற்றுப்போகச் செய்திருப்போம். ஆகவே பல்லுயிர் பாதுகாப்பிற்கான முன்னுரிமை இது போன்ற இடங்களுக்குக் கிடைப்பதில்லை.
கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள காட்டுயிர்கள் பற்றிய ஆராய்ச்சிகள் கூட மிகவும் அரிதே. கல்வராயன் மலைப்பகுதியைப் பற்றி இணையத்தில் தேடிய போது சில தாவரங்கள் அதுவும் மூலிகைத் தாவரங்கள் பற்றிய ஆராய்ச்சிகளின் ஆய்வுக் கட்டுரைகளைத் தவிர வேறு ஏதும் கிடைக்கவில்லை. இது போன்ற இடங்களில் தாவரங்கள் மற்றும் காட்டுயிர்கள் பற்றிய ஆய்வுப் பயணங்கள் (explorations) கூட ஆங்கிலேயர் காலத்தில் நடத்தப்பட்டவை. நம் நாட்டில் காட்டுயிர் ஆராய்ச்சிக்கென ஒதுக்கப்படும் நிதியும் குறைவு, இந்தத் துறையை தேர்ந்தேடுப்பவர்களும், இதை தொழிலாகச் செய்பவர்களும் குறைவு. உயிர்ப்பன்மயமும், ஓரிடவழ்விகளும் மிகுந்த, இடங்களை Biodiversity hotspots என்பர். பெரும்பாலான ஆராய்ச்சியாளர்களும், ஆராய்ச்சி நிறுவனங்களும் இது போன்ற இடங்களிலும், அங்குள்ள உயிரினங்களைப் பற்றியும்தான் ஆராய்வர். நிதியுதவி சற்று எளிதாகவும், தொடந்தும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம், ஏனெனில் உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இது போன்ற பகுதிகளை காப்பாற்ற வேண்டியது மிகவும் அவசியம் என்பது புரிந்து கொள்ளக்கூடியதே. அதேவேளையில் மூங்கணத்தான் போன்ற அதிகம் அறியப்படாத உயிரினங்கள் பற்றி அதுவும் கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெரிதாக யாரும் ஆராய்ச்சி மேற்கொள்ளாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணமாகிறது.
பாதுகாப்பு நிலையிலும், முன்னுரிமை அளிப்பதிலும் இருக்கும் இது போன்ற ஏற்றத்தாழ்வுகளினால் ஏற்படும் ஒரு முக்கியமான பாதிப்பு கல்வராயன் மலைப்பகுதி போன்ற இடங்களில் எங்கெங்கே என்ன வகையான உயிரினங்கள் உள்ளன, அவற்றின் நிலை என்ன என்பது பற்றிய புரிதல் நமக்குக் கிடைக்கும் முன்பே அவை அந்தப் பகுதிகளில் இருந்து (கள்ள வேட்டை முதலிய காரணங்களால்) முற்றுலுமாக அற்றுப் போவதற்கான வாய்ப்புகள் அதிகம். இரண்டாவதாக இங்குள்ள நிலங்களின் பாதுகாப்பு நிலையும் (காட்டுயிர் சரணாலயம் போன்று) அவ்வளவு உறுதியானதாக இருப்பதில்லை. ஆகவே இது போன்ற இயற்கையான வாழிடங்கள் காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கப்பட்டு (எ.கா விவசாய விரிவாக்கத்திற்காகவும், ஓரினப் பயிர்த் தோட்டங்களுக்காகவும்) சீரழிந்தோ அல்லது ஒட்டு மொத்தமாக பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்காக கையகப்படுத்தப்பட்டு (எ. கா. அணை கட்டுமானத்திற்கோ, சுரங்கம் தோண்டவோ) முற்றிலுமாக அழிக்கப்பட்டு விடும் அபாயமும் உண்டு.
மேகம் அருவிக்கு சென்றபோது மாலை மூன்று மணி இருக்கும். நீர் வரத்து இல்லாத பாறையின் மேல் அமர்ந்து பறவைகளைப் பாத்துக் கொண்டிருந்தோம். எங்களைத் தவிர வேறு யாரும் இல்லாதது நிம்மதியாக இருந்தது. காட்டின் அமைதியை பறவைகள் குரலுடன் சேர்த்து ரசித்தவாறு சற்று நேரம் இளைப்பாறி விட்டு கிளம்பினோம். பள்ளத்தாக்கில் இருந்ததால் கிழிறங்கி வந்தது அவ்வளவு சிரமமாக இல்லை. ஆனால் திரும்பப் போகும் பொது மேலே ஏறிச் செல்வது அவ்வளவு எளிதாக இல்லை. நல்ல வேலையாக சூரியன் சற்று தாழ்ந்து இருந்ததால் பறவைகளின் குரலொலியும், பறந்து திரிவதும் மதிய வேளையை விட அதிகமாகவே இருந்தது. அவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டே பொழுது சாயும் முன் ஊருக்குள் வந்தடைந்தோம்.
கல்வராயன் மலைப்பகுதியில் சாலை வழியே பயணித்த போது பல இடங்களில் காடுகள் திருத்தப்பட்டு மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டிருந்தது. வீடு திரும்பிய பின் கூகுள் எர்த்தில் (Google Earth) அந்த பகுதியின் தற்போதைய செயற்கைக்கோள் நில வரைபடத்தைப் (satellite imagery) பார்த்த போது கலக்கமாக இருந்தது. மனிதன் கோமுகி ஆற்றின் தாய் மடியை எந்த அளவிற்கு தனது வசிதிக்கு ஏற்ப திருத்தி அமைத்திருக்கிறான் என்பது கண்கூடாகத் தெரிந்தது.
செஞ்சிக் கோட்டை
விழுப்புரத்தில் இருந்து செஞ்சிக்குப் போகும் வழியில் அப்பம்பட்டு எனும் ஊரில் முட்டை மிட்டாய் என்ற பெயர்ப் பலகை எங்கள் கவனத்தை ஈர்த்தது. அவசரமாக போய்க்கொண்டிருந்ததால் நிறுத்தி வாங்க முடியவில்லை. ஆனால் செஞ்சிக் கோட்டைக்குப் போகும் போது இறங்கி மிருதுவான கேக் போன்ற சுவையான முட்டை மிட்டாயை சுவைத்து விட்டுத் தான் சென்றேன். செஞ்சி பேருந்து நிலையத்திற்கு அருகிலும் இவர்களது கிளை இருக்கிறது. இனிப்புப் பிரியர்கள் இங்கு சென்றால் சையத் இனிப்பகத்தில் மட்டுமே கிடைக்கும் முட்டை மிட்டாயை தவற விட வேண்டாம்.
செஞ்சிக் கோட்டைக்குப் போக விரும்பியதன் முக்கிய காரணம் இந்தியாவில் மட்டுமே காணப்படும் இரண்டு உயிரினங்கள் அப்பகுதில் தென்படுகின்றன, அவற்றைப் பார்க்கத்தான். திருவண்ணாமலையில் இருந்து வந்திருந்த நண்பர்கள் கலைமணி, சல்மான் மற்றும் சிவகுமார் அனைவரும் காலையிலேயே செஞ்சிக் கோட்டையின் வாயிலை அடைந்தோம். முகப்பிலேயே பெரிய ஆல், அரச மரங்கள் வீற்றிருந்தன. மலையடிவாரத்தில் கோட்டைக்குச் செல்லும் படிகளின் முன்னே குரங்குகள் ஜாக்கிரதை என்ற பலகை இருந்தது. அதன் அருகிலேயே பிளாஸ்டிக் குப்பைகளும், பிளாஸ்டிக் தண்ணீர் குப்பிகளும், பிளாஸ்டிக் தட்டுகளும் சிதறிக்கிடந்தது. குப்பைபோடும் மனிதர்கள் ஜாக்கிரதை என எழுதி வைக்கவேண்டும் எனத் தோன்றியது. சில நாட்டுக் குரங்குகள் மனிதர்கள் வீசி எறிந்த மிச்ச மீதி உணவுக் குப்பைகளையும், சில அங்கிருந்த அரச மரத்தின் பழங்களையும் சுவைத்துக் கொண்டிருந்தன.
கூட வந்திருந்த நண்பர் கலைமணி ஒரு காட்டுயிர் ஆராய்ச்சியாளர். இந்தியாவில் மட்டுமே தென்படும் பொன்னிறப் பல்லியைப் (Indian Golden Gecko) பற்றி ஆராய்ச்சி செய்தவர். தற்போது தனது முனைவர் பட்டத்திற்காக மஞ்சள் தொண்டை சின்னானைப் (Yellow-throated Bulbul) பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறார். இதுவும் இந்தியாவில் மட்டுமே தென்படும் பறவை. இந்த இரண்டையுமே செஞ்சிக் கோட்டைப் பகுதிகளில் காணலாம். சிலர் யானை, புலி முதலிய பெரிய உயிரினங்களின் பால் மட்டுமே நாட்டம் கொண்டு ஆராய்ச்சி மற்றும் அவற்றின் பாதுகாப்பிற்காக பாடுபடுவர். ஆனால் இந்த செஞ்சிக் கோட்டை வாலிபன், முக்கியத்துவம் வாய்ந்த ஆனால் அதிகம் அறியப்படாத உயிரினங்களைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது வரவேற்க வேண்டிய ஒன்று.
படிகளில் மேலே ஏறிக்கொண்டிருந்த போதே குரலொலி வரும் திசையைக் கேட்டு கையைக் காட்டினார். இரண்டு மஞ்சள் தொண்டை சின்னார்கள் அங்கிருந்து பறந்து சென்றன. மிகவும் அழகான பறவை. பாறைகள் நிறைந்த பகுதிகளில் அதுவும் அத்திமரங்கள் (Ficus) இருந்தால் நிச்சயமாக இப்பறவைகளை அங்கே காணலாம். பாறைபாங்கான இடங்களில் இருப்பதால் இதை பாறை சின்னான் என்றும் சொல்லலாம். மலையின் மேல், பாதி வழியில் கமலக்கன்னியம்மன் கோயில் இருந்தது. அருகில் சிறிய குளமும் அதைச் சூழ்ந்து வெப்பாலை மரங்களும் நிறைந்திருந்த அழகான இடம். கோயிலின் பின் புறம் இருந்த பாறையில் மிகப்பழமையான அழகான ஓவியம் இருந்தது. சுற்றுலாத்தலங்களின் நியதிக்கேற்ப ஓவியத்தின் மேல் பலருடைய பெயர்களும் கிறுக்கப்பட்டிருந்தது.
அந்த இடத்தைத் தாண்டி மேலே ஏறிக்கொண்டிருந்த போது கலைமணி ஒரு பாறையின் இடுக்கில் குனிந்து பார்த்து எங்களை அழைத்தார். சத்தமிடாமல் மெதுவாகச் சென்று பார்த்தோம். ஒரு பொன்னிறப் பல்லி இருந்தது. கைபேசியின் டார்ச்சை அதன் மேலே அடித்துக் காண்பித்தார். அப்படி ஒன்றும் பொன் நிறத்தில் இல்லை. இனப்பருக்கக் காலத்தில் தான் அதுவும் ஆண் பல்லிக்குத்தான் உடலில் இலேசான பொன்னிறம் வரும் என்றார். அந்த இடத்திலேயே இன்னொரு மூலையில் பறையில் ஒட்டிக்கொண்டிருந்த இந்தப் பல்லியின் முட்டைகளைக் காண முடிந்தது. சற்றுத் தள்ளி திரளாக பொறிந்து போன முட்டைகளின் மீதங்கள் ஒட்டிக்கொண்டிருந்தது. இந்தப் பல்லியின் அறிவியல் பெயர் Calodactylodes aureus. இதில் Calodactylodes எனில் இலத்தீனில் அழகான விரல்கள் என்று பொருள். பெயருக்குத் தகுந்தாற்போல் இந்த பல்லியின் விரல்கள் அழகாக பூவின் வடிவத்தை ஒத்து இருக்கும்.
இந்தப் பல்லி வகையின் விபரம் முதன்முதலில் 1870ல் ரிச்சர்ட் ஹென்றி பெட்டோம் (Richard Henry Beddome) எனும் புகழ்பெற்ற ஆங்கிலேய இயற்கையியலாளரால் அந்நாளைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து அறியப்பட்டது. எனினும் சுமார் 100 ஆண்டுகள் கழித்து தான் திருப்பதி மலைப்பகுதியில் இப்பல்லி மீண்டும் கண்டறியப்பட்டது. அதன் பின் அண்மை காலங்களில் கலைமணியின் ஆராய்ச்சியின் விளைவால் தமிழ்நாட்டில் மேலும் சில இடங்களில் இவை இருப்பது (செஞ்சி உட்பட) தெரிய வந்துள்ளது. எனினும் இந்த பல்லி இது வரை கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருந்து மட்டுமே அறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செஞ்சிக் கோட்டை அமைந்துள்ள மலையின் உச்சியை அடைந்த போது மணி இரண்டு. உயரமான மலையின் மேலிருந்து அதைச் சுற்றியிருக்கும் பாறைப்பாங்கான மலைகளையும், குன்றுகளையும், பரந்துபட்ட தரையோடு அமைந்த முட்புதர் காடுகளையும், வயல்வெளிகளையும், செஞ்சி நகரத்தையும், ராணி கோட்டையையும் பார்க்க முடிந்தது. உச்சியில் இருந்த கோட்டையின் ஒரு பகுதிக்குச் செல்லும் படிகள் இடிந்து போயிருந்தது. இருப்பினும் சில பொறுப்பான (?), ஆர்வம்மிக்க சுற்றுலாப்பயணிகள் கற்களின் இடுக்கில் கால்களை வைத்து மேலே ஏறி சிகரத்தை அடைந்த ஆனந்தத்தில் கத்திக் கொண்டிருந்தார்கள். கீழே சீட்டு வழங்கும் இடத்தில் இருந்த இரு காவலாளிகள் கையில் பெரிய தடியை வைத்திருந்தனர். குரங்குகளை விரட்டுவதற்காக. அவர்கள் இருந்திருக்க வேண்டிய இடம் வாயில் அல்ல, விரட்ட வேண்டியது குரங்குகளை அல்ல எனத் தோன்றியது.
விழுப்புரம் மாவட்டத்தில் இந்த இடங்களைத் தவிர மழவந்தாங்கலில் இருந்து அனந்தபுரம் செல்லும் சாலையில் பயணித்து பறவைகளை பார்க்கச் சென்றோம். அருமையான முட்புதர் காட்டின் வழியே செல்லும் ஒரு வழிப்பாதையில் நடந்து சென்ற போது அரசவால் ஈப்பிடிப்பானைக் கண்டதும், ஆறு மணிக்குருவி சரியாக ஆறு மணிக்கு குரலெழுப்பியதை கேட்டதும் மறக்க முடியாத அனுபவம்.
கடைசியாக கழிவெளி
பத்து நாள் பயணத்தின் முடிவில் நண்பர் சுரேந்தர் பூபாலன் கழிவெளி ஏரிக்கு அழைத்துச் சென்றார். எனினும் மாலை வேளையில் சென்றதால் அதிக நேரம் அங்கே செலவழிக்க முடியவில்லை. நான்கு ஆண்டுகளுக்கு முன் இதே இடத்திற்கு சென்றிருந்தேன். அப்போது சுமார் 70 வலசை வரும் சாம்பல் தலை ஆள்காட்டிகளை ஒரே இடத்தில் பார்த்தது நினைவுக்கு வந்தது. இந்த முறை பயணித்த சில தூரத்திலேயே, வெளிச்சம் குறைவாக இருந்த போதும் அந்த நிலவமைப்பில் ஏற்பட்டிருந்த மாற்றத்தைக் காணமுடிந்தது. ஏரியின் ஓரத்தில் இறால் பண்ணை குட்டைகள் சில இருந்தன. அவற்றில் ஒன்றின் கரை இடிக்கப்பட்டிருந்தது. ஏரியின் நிலத்தை ஆக்கிரமித்து கட்டியதனால் இடிக்கப்பட்டதாகச் சொன்னார் நண்பர். இதுபோல் உடைக்கப்பட வேண்டியவை இன்னும் சில உள்ளன என்றார். முழுவதுமாக இருட்டிய பின் இரவாடிப் பறவைகளின் குரல் ஏதும் கேட்கும் என சற்று நேரம் அங்கே நின்றிருந்தோம். அப்படி எதுவும் கேட்காததால் அடுத்தமுறை பகல் வேளையிலேயே வரவேண்டும் என பேசிக்கொண்டே அங்கிருந்து கிளம்பினோம்.
கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதியையும், சமவெளிகளையும், பல நீர்நிலைகளையும், கடல் புறத்தையும் கொண்ட விழுப்புரம் மாவட்டம் புவியியல் ரீதியாக தனித்துவம் வாய்ந்தது. எனினும் அங்கே உள்ள ஒசூடு ஏரியைத் தவிர பாதுகாக்கப்பட்ட வாழிடங்கள் வேறு ஏதும் இல்லை என்பது வியப்பாக இருக்கிறது. அதுவும் ஒசூடு ஏரி கூட சென்ற ஆண்டுதான் (2015) பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏரி புதுச்சேரியிலும் தமிழகத்திலும் பரவியுள்ளது. புதுச்சேரி அரசு 2008லேயே அவர்களது பகுதி ஏரியை பறவைகள் சரணாலயமாக அறிவித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இயற்கை வளம் மிகுந்த இந்த மாவட்டத்தில் இன்னும் பல இயற்கையான வாழிடங்களைப் பார்க்க ஆசைதான். விழிமா நகரப் பகுதிகளில் பயணிக்க மீண்டும் வாய்ப்பு கிட்டும் என்றே நம்புகிறேன்.
தி இந்து தமிழ் சித்திரை மலரில் (April 2017) ” செங்கால் நாரை தரிசனமும் ஆறு மணிக் குருவியின் அழைப்பும்” எனும் தலைப்பில் வெளியான கட்டுரையின் முழு வடிவம்.
பெருஞ்செதில் பச்சை ஓணான்
பெருஞ்செதில் பச்சை ஓணான்: மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியிலுள்ள காட்டுப்பகுதியில் மட்டுமே தென்படும் ஒரு வகை அரிய அழகான ஓணான். Large-scaled Forest Calotes (Calotes grandisquamis)ஆங்கிலத்தில் அறியப்படுகிறது. உடலை விட இதன் வால் நீளமானது. பச்சை நிறத்தில் இருந்தாலும் அவ்வப்போது அடர் பச்சையாகவும், உடலில் கரிய திட்டுக்களும், மஞ்சள் நிறமும், பச்சை கலந்த இளநீலமும் உடலில் தோன்றி மறையும். இலைகளின் மேல் இருக்கும் போது உருமறைந்து இருக்கவே இந்த தகவமைப்பு.
காவிரிக் கரையில் தலைப்பிரட்டைகள்
தலைப்பிரட்டைகள்: குடகுப் பகுதியில், காவிரி நதிக்கரையில் ஒரு காலை வேளையில் பறவைகளைப் பார்த்துக்கொண்டிருந்த போது ஆழம் குறைவான ஆற்றுக் கரையில் கூட்டமாக ஏதோ நீந்திவருவதைக் கண்டேன். மீனாக இருக்குமோ என சற்று அருகில் சென்று பார்த்தபோது அத்தனையும் தலைப்பிரட்டைகள்! எந்தத் தவளையின் இளம்பருவம் எனத் தெரியவில்லை. முட்டை வடிவில் கரும்பச்சை உடல் அவற்றின் மேல் இளஞ்சிவப்புக் கண்கள். நீண்ட கரும் புள்ளிகளைக் கொண்ட வால். அதை அசைத்து அசைத்து அவையனைத்தும் நீந்திச் சென்ற காட்சி இன்னும் நினைவில் இருக்கிறது.
இயற்கையை அழித்தா வளர்ச்சி?
கடந்த ஆகஸ்டு 2014 மற்றும் ஜனவரி 2015 நடந்த இரண்டே தேசிய காட்டுயிர் வாரியக் (National Board for Wildlife – NBWL) கலந்தாய்வுக் கூட்டங்களில், காட்டுயிர் சரணாலயங்களிலும் தேசிய பூங்கா பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் உள்ள சுமார் 2,300 ஹெக்டேர்கள் இயற்கையான வாழிடப் பகுதிகள், வளர்ச்சிப் பணிகளுக்காக எடுத்துக் கொள்வதற்காக ஆலோசனை செய்யப்பட்டது. சென்ற ஆண்டு செப்டம்பரிலிருந்து டிசம்பர் வரை நடந்த வன ஆலோசனை செயற்குழு (Forest Advisory Committee) கூட்டங்களில், சுமார் 3,300 ஹெக்டேர்கள் பரப்பு வனப்பகுதியை 28 வளர்ச்சித் திட்டங்களுக்காக எடுத்துக் கொள்ளவும் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்தக் கோரிக்கைகள்யாவும் சாலை, இரயில் பாதை மற்றும் மின் தொடர் கம்பிகள் அமைக்கும் திட்டங்களுக்காகவே. இத்திட்டங்களில் பல பெரும்பாலும் ஒப்புதலும் பெற்றுவிடும்.
சுரங்கப் பணிகளுக்காகவும், விவசாயத்திற்காகவும் திருத்தப்பட்டு, நீர்த்தேக்கங்களின் கீழ் அமிழ்ந்து வனப்பகுதிகள் காணாமல் போகும் இவ்வேளையில், பல்லாயிரம் கி.மீ நீளங்களில் இயற்கையான வாழிடங்களை ஊடுருவி அமைக்கப்படும் , நெடிய சாலை, கால்வாய், இரயில் பாதை, மின்கம்பித் தொடர் போன்ற நீள் கட்டமைப்புத் திட்டங்கள் (Linear infrastructure Projects) நமது வனங்களை அபாயத்திற்குள்ளாக்குகின்றன.
சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகமும் (Ministry of Environment, Forest and Climate Change), இது போன்ற திட்டங்களுக்கு ஆதரவாக அதன் வரைமுறைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்திக் கொண்டே கொண்டே இருக்கிறது. உதாரணமாக, இந்த அமைச்சகம், இது போன்ற திட்டங்களை செயல்படுத்தும் மத்திய நிறுவனத்திற்கு மரங்களை வெட்ட கொள்கையளவில் அனுமதி அளித்துள்ளது, அதாவது வனப்பாதுகாப்புச் சட்டம் 1980ன் கீழ் முதல் கட்ட ஒப்புதலை அளித்துள்ளது. இன்னும் எளிதாகச் சொல்ல வேண்டுமானால் இது போன்ற திட்டங்களுக்கு கோட்ட வன அலுவலரின் (Divisional Forest Officer) அனுமதி மட்டுமே போதும். இதனால் வளர்ச்சிப் பணிகளுக்காக வனப்பகுதிகளை கையகப்படுத்தும் வேளையில், எடுத்துக் கொள்ளப்படும் வனப்பரப்பப்பிற்கு சரிசமமான இடத்தை வேறெங்கிலும் கொடுத்து ஈடுகட்டி, காடு வளர்ப்புத் திட்டங்கள் தொடர்பான இரண்டாம் கட்ட ஒப்புதல்கள் எதையும் பெறத்தேவையில்லை.
இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பொருளாதார மேம்பாட்டிற்கும், துரிதமாக இடம்விட்டு இடம் செல்லவும், சரியான நேரத்தில் செய்ய வேண்டிய சேவைகளுக்கும் சாலைகளும், மின் தொடர் கம்பிகளும் துணைபுரியும் என்பதென்னவோ உண்மைதான். ஆனால், அதே வேளையில் அவை இயற்கையான வாழிடங்களுக்கும், கிராமப்புறத்தில் வாழும் பொதுமக்களுக்கும், பழங்குடியினருக்கும் பல்வேறு வகையில் ஊறு விளைவிக்கின்றன. வாழிடங்களை துண்டாடுகின்றன. வனப்பகுதியின் வழியே செல்லும் சாலைகள் அகலமாகிக் கொண்டே போவதும் வாகனப் பெருக்கமும் காட்டுயிர்கள் இடம்பெயர்விற்கு தடையாக உள்ளன. இதனால் பெரும்பாலான காட்டுயிர்கள் சாலைகளைக் கடந்து செல்வதை தவிர்க்கின்றன. பல காட்டுயிர்களுக்கு சாலைகள் கிட்டத்தட்ட வனப்பகுதியின் குறுக்கே கட்டப்பட்ட மிக உயரமான சுவரைப் போலவோ அல்லது வெட்டப்பட்ட ஆழமான அகழியைப் போலவோதான். சாலை விரிவாக்கத் திட்டங்களும், நான்கு வழிச்சாலைகளும் பல காட்டுயிர்களின் இயற்கையான வழித்தடங்களை வெகுவாக பாதிக்கின்றன. உதாரணமாக, மத்திய இந்தியாவில் உள்ள பெஞ்ச் மற்றும் கான்ஹா புலிகள் காப்பத்தின் குறுக்கே போடப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை 7 அங்குள்ள மிக முக்கியமான காட்டுயிர் வழித்தடத்தை ஊடுருவி செல்கிறது செல்கிறது.
சாலைகள், மலைப்பாங்கான பகுதிகளில் வனப்பகுதியின் சீரழிவிற்கும், நிலச்சரிவிற்கும், மண் அரிப்பிற்கும் காரணமாகின்றன. இதை இமயமலைப் பகுதிகளிலும், மேற்குத் தொடர்சி மலைப்பகுதிகளிலும் தினம் தோறும் காணலாம். சிதைக்கப்படாத வனப்பகுதியைக் காட்டிலும், செங்குத்தான மலைச்சரிவில் போடப்பட்டுள்ள சாலையினால் பல நூறு மடங்கு நிலச்சரிவும், மண் அரிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது என 2006ல் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மலைப்பாதையின் வழியே செல்லும் சாலையோரங்களில் உள்ள இயற்கையாக வளர்ந்திருக்கும் தாவரங்கள் சரிவில் இருக்கும் மண்ணை இறுக்கிப் பிடித்துக் கொள்ளவும், நிலச்சரிவினை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. ஆனால், சாலை இடும் பணிகள், ஓரிடத்தில் சுரண்டப்பட்ட மண், கப்பி முதலிய தேவையற்ற பொருட்களை சாலையோரங்களில் கொட்டிக் குவித்தல், இயற்கையாக வளர்ந்திருக்கும் சாலையோரத் தாவரங்களை வெட்டிச் சாய்த்தல், போன்ற அந்த நிலப்பகுதிக்கும், சூழலுக்கும் ஒவ்வாத வகையில் செய்யப்படும் போது, இயற்கையான சூழல் சீரழியவும், மண் அரிப்பு மென்மேலும் ஏற்படவும், களைச்செடிகள் பெருகவும் ஏதுவாகிறது.
இது மட்டுமல்ல, இலட்சக்கணக்கான காட்டுயிர்கள் சீறி வரும் வாகனங்களின் சக்கரங்களில் நசுங்கி உயிரிழக்கின்றன. சின்னஞ்சிறு பூச்சிகள், பல அரிய, உலகில் வேறெங்கிலும் தென்படாத தவளை மற்றும் ஊர்வன இனங்கள், பறவைகள், பெரிய காட்டுயிர்களான மான், சிறுத்தை, புலி ஏன் யானைகள் கூட சாலையில் அடிபட்டு உயிரிழந்து கொண்டிருப்பதை இந்தியாவில் நடத்தப்பட்ட பல ஆய்வுகள் மூலமாக அறியமுடிகிறது. இந்த சில ஆய்வு முடிவுகளின் படி இந்தியாவில் நாள் ஒன்றிற்கு, ஒரு கிலோ மீட்டர் தூரத்தில், சுமார் 10 உயிரினங்கள் மடிந்து போவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தொகை இன்னும் கூடுதலாகவே இருக்கக் கூடும். ஏனெனில், பதிவு செய்யப்படாமல் போன, சாலையில் உயிரிழந்த உயிரினங்களையும், வாகனத்தில் அடிபட்டு அதே இடத்தில் உயிரிழக்காமல் ஊனமாகவோ, சிறிது நாள் கழித்தோ, வேறிடத்திலோ இறந்து போனவற்றை நாம் அறிய முடியாத காரணத்தினால் அவை கணக்கில் வராது.
தினமும் எண்ணிலடங்கா காட்டுயிர்கள் மின்னோட்டமுள்ள கம்பிகளால் கொல்லப்படுகின்றன. திருட்டு வேட்டையர்கள் மின் கம்பிகளிலிருந்து திருட்டுத்தனமாக மின்சாரத்தை இழுத்து காண்டாமிருகம், மான்கள் என பல வகையான உயிரினங்களைக் கொல்கின்றனர். மின் கம்பிகளினூடே பறந்து செல்லும் போது எதிர்பாராவிதமாக பூநாரை (Flamingo), சாரஸ் பெருங்கொக்கு (Sarus Crane), பாறு கழுகுகள் (Vultures), கானல் மயில் (Great Indian Bustard) போன்ற பல வித பெரிய பறவையினங்கள் உயிரிழக்கின்றன. மின் வேலிகளால் யானைகளும் காட்டெருதுகளும் (Gaur) கூட மடிகின்றன. இரயில் தடங்களில் அரைபட்டும் பல உயிரினங்கள் தினமும் உயிரிழிக்கின்றன. எனினும் யானை முதலான பெரிய உயிரினங்கள் இவ்வாறு அடிபட்டுச் சாகும் போதுதான், இவை நமது கவனத்திற்கு வருகின்றன. இவ்வாறு தினமும் நடக்கும் காட்டுயிர் உயிரிழப்பு, நீள் கட்டமைப்புத் திட்டங்கள், காட்டுயிர்ப் பாதுகாப்பினை கவனத்தில் கொள்ளாமல் செயல்படுத்தப்படுவதையே காட்டுகிறது.
இந்த நீள் கட்டமைப்புத் திட்டங்களினால் ஏற்படும் பாதிப்பு அவற்றிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தைவிடவும் பன்மடங்கு அதிகம் என்பதே சோகமான உண்மை. சாலை, இரயில் தடம், மின் கம்பித் தொடர் இவற்றிற்காக அகற்றப்படும் பகுதியினால் இயற்கையான வாழிடத்திற்கு ஏற்படுத்தப்படும் பாதிப்பு அங்கு மட்டுமே இல்லாமல், அவ்வாழிடம் சிதைந்திருப்பதை அதன் ஓரங்களிலும், அதையும் தாண்டி அவ்வாழிடத்தினுள்ளே பல தூரம் வரையும் காண முடியும். இயற்கையான வாழிடத்தின் குறுக்கே செல்லும் ஒவ்வொரு கிலோ மீட்டர் சாலையும் குறைந்தது அதைச் சுற்றியுள்ள 10 ஹெக்டேர்கள் பரப்பிற்கு பாதிப்பினை ஏற்படுத்தும். கர்நாடகாவில் உள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் 2009ல் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் விளைவாகக வனத்தின் உட்பகுதியினை விட சாலையோரங்களில் மரங்கள் சாவது இரண்டரை மடங்கு அதிகம் என கண்டுபிடிக்கப்பட்டது. இது போலவே, காட்டுயிர்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் நடத்தைக்கு ஏற்படும் பாதிப்பு சாலையிலிருந்து வனத்தினுள் சுமார் 1 கீமீ துரத்திற்கு இருந்தது. சாலைகள் சூழியல் பொறியாகவும் (Ecological traps) விளங்குகிறது. அதாவது வனப்பகுதியில் உள்ள பாம்பு, ஓணான் முதலிய ஊர்வன இனங்கள் வெயில் காய (Basking) இயற்கையான பாறை, கட்டாந்தரையை விட்டு விட்டு சாலைக்கு வருகின்றன. (குளிர் இரத்தப் பிராணிகளான அவை உயிர்வாழ அவற்றின் உடலின் வெப்பநிலையை, சுற்றுப்புறத்துடன் சமநிலை செய்து கொள்ள வெயில் காய்வது இன்றியமையாதது). இந்தியாவில் சாலைகளினாலும், போக்குவரத்தினாலும் காட்டுயிர்களுக்கு ஏற்படும் விளைவுகளைப் பற்றி 2009ல் ஒரு விரிவான திறனாய்வு செய்யப்பட்டது. இதில் காட்டுயிர்களுக்கும், இயற்கையான வாழிடங்களுக்கும் ஏற்படும் நன்மைகளைவிட பாதகமான விளைவுகள் ஐந்து மடங்காக இருப்பது அறியப்பட்டது.
சாலைகளுக்காகவும், அவற்றை விரிவு படுத்தவும் மரங்கள் அகற்றப்படுவதால், மரவாழ் உயிரினங்களான மலையணில், குரங்குகள் யாவும் மரம் விட்டு மரம் தாவ முடியாமல் தரையின் கீழிறங்கி சாலையைக் கடக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. இதனால் இவை அவ்வழியே சீறி வரும் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் ஆபத்து அதிகமாகிறது. அதுபோலவே மின் தொடர் கம்பிகளுக்காக மரங்களை அகற்றும் போதும் மரவிதானப்பகுதியில் இடைவெளி ஏற்படுகிறது. இதனால் இவ்வுயிரினங்கள் மின்கம்பிகளை தவறுதலாக பற்றிக்கொண்டு இடம்பெயற முயற்சிக்கும் போது மின்சாரம் தாக்கியும் உயிரிழக்கின்றன.
சாலைகள், மின் தொடர் கம்பிகள், அகலமான கால்வாய்கள், இரயில் தடங்கள் போன்ற நீள் குறுக்கீடுகள் (linear intrusions) ஒன்றோ அதற்கு மேலோ ஒரு இயற்கையான நிலவமைப்பில் அமைக்கப்பட்டால் அவ்வாழிடத்திற்கும் அதில் வாழும் உயிரினங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் பன்மடங்காகிறது.
ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு எந்த அளவு நீள் கட்டமைப்புத் திட்டங்கள் அவசியமோ அது போலவே இன்றியமையாதது ஒரு நாட்டின் வனங்கள். அழித்துவிட்டால் மீண்டும் உருவாக்க அவை ஒன்றும் இயந்திரங்கள் அல்ல. தாவரங்கள், உயிரினங்கள், பழங்குடியினர்கள் என பல உயிர்கள் பொதிந்திருக்கும் ஓர் உயிர்ச்சூழல் அது.
நாட்டை முன்னேற்றப்பாதையில் எடுத்துச் செல்லவும், பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தவும் ஒரு அறிவார்ந்த சமூகம், வளர்ச்சித் திட்டங்களை சிறந்த தொழில்நுட்ப உதவியுடன் தான் எதிர்கொள்ளும். அவ்வேளையில், அத்திட்டங்களை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் விசாலப்பார்வையுடன் அத்திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். தற்போதைய அமைச்சகத்தின் ஆணையைப் போல் இது போன்ற திட்டங்களின் செயல்பாடுகளை கோட்ட வன அலுவலர் மட்டுமே நிர்ணயிக்கும் நிலை இருக்கக்கூடாது.
பொருளாதார ஆதாயத்திற்கு மட்டுமே ஆதரவளிக்காமல், நீள் கட்டமைப்புத் திட்டங்களால் ஏற்படும் சூழியல் பாதிப்புகளையும் நம்பத்தக்க, வெளிப்படையான விதத்திலும் அளவிடவும் அதன் நீண்ட கால பாதிப்புகளைச் சமாளிக்கவும் வேண்டும். இது போன்ற திட்டங்கள் பெரும்பாலும் பணம் கொழிக்கும் கான்ட்டிராக்ட்களையும், ஊழலையும் தான் உள்ளடக்கியிருக்கும்.
இதனால் திட்டத்தின் அளவிற்கே (சாலையாக இருப்பின் அதிக நீளமான, அகலமான சாலையே அதிக ஆதாயம் தரும்) முக்கியத்துவமளிக்கப்படுமே தவிர வேலையின் தரம், பயன் மற்றும் பாதுகாப்பு போன்றவை பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடும்.
உலகின் பல நாடுகளில் சாலை போன்ற நீள் கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்குவதற்கு முன் பொறியியலாளர்கள், சூழியலாளார்கள், பொருளாதார வல்லுனர்கள் என பல துறைகளைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்களும், வல்லுனர்களும் கலந்தாலோசித்த பின்னரே செயல்படுத்தப்படுகிறது. சாலைச்சூழியல் (Road Ecology) எனும் வளர்ந்து வரும் இத்துறையில் பல்துறை வல்லுனர்கள் பயன்முறை ஆய்வுகளை (applied research) மேற்கொண்டு இத்திட்டங்களால் ஏற்படும் பாதிப்புகளை ஆவணப்படுத்தியும், இயற்கையான சூழல் பெருமளவவில் பாதிப்படையா வண்ணம் தகுந்த மாற்று வழிகளையும், சரியான வடிவமைப்பையும், பரிந்துரைத்து வருகின்றனர்.
இந்தியாவில் 2011ல் அமைக்கப்பட்டிருந்த தேசிய காட்டுயிர் வாரியத்தின் நிலைக் குழு (Standing Committee) நீள் குறுக்கீடுகள் தொடர்பாக பின்பற்றவேண்டிய வரைவு நெறிமுறைகளையும், பின்னணித் தகவல்களையும் தயாரித்து அதன் முதல் பதிப்பை வெளியிட்டது (இங்கே காண்க). இந்தப் பதிப்பிலிருந்து ஒரு பகுதி டிசம்பர் 2014ல் துணை நிலைக்குழு (subcommittee) வெளியிட்ட பாதுகாக்கப்பட்ட இயற்கையான வாழிடங்களின் வழியே செல்லும் சாலைகளுக்கான நெறிமுறையாக ஆக்கப்பட்டது (இங்கே காண்க). இந்த ஆவணத்தின் முதன்மைக் கொள்கை இயற்கையான வாழிடங்களைப் தவிர்த்தலே. அதாவது, காட்டுயிர் பாதுகாப்புப் பகுதிகளையும், ஆபாயத்திற்குள்ளான இயற்கையான சூழலமைப்புகளையும், தேவையில்லாமல் நீள் குறுக்கீடுகளால் சீரழியாமல் பாதுகாப்பதோடு, காட்டுயிர் வழித்தடங்களை பாதிக்காமல் சாலைகளை சுற்று வழியில் அமைத்து, இயற்கையான வாழிடங்களின் விளிம்பில் இருக்கும் கிராமங்கள், சிற்றூர்களிடையே இணைப்பினை மேம்படுத்த மேம்படுத்துவதேயாகும்.
இது போன்ற, முக்கியமான சூழலில் குறுக்கே சாலைகள் அமைக்கப்படும் முன் காட்டுயிர்களின் நடமாட்டத்தில் ஏற்படும் இடர்பாடுகளை குறைக்க எங்கெங்கே மேம்பாலங்கள் (overpass), தரையடிப்பாதைகள், மதகுப்பாலங்கள் (underpass and culvert) அமைக்கலாம் என்பதற்கான ஆலோசனைகளை காட்டுயிர் ஆராய்ச்சியாளர்களிடமிருந்து பெறவேண்டும். அது போலவே சாலைகளில் ஏற்படும் காட்டுயிர்களின் உயிரிழப்பைக் குறைக்க தேவையான இடங்களில் வேகத்தடைகளும், போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதும் அவசியம்.
யானைகள் கடக்கும் பகுதிகளில் அகச்சிவப்புக் கதிர்களை வீசும் கருவிகளைப் பொருத்தி அவை வருவதை அறிந்து, இத்தகவலை இரயில் ஓட்டுனரின் கைபேசியில் குறுஞ்செய்தியாக அனுப்பும் தொழில்நுட்ப அமைப்பினை இரயில் தடங்களில் வைப்பதன் மூலம், அவை இரயிலில் அடிபட்டுச் சாவதைத் தடுக்க முடியும்.
மின்கம்பித் தொடர்களின் கட்டமைப்பில் சிறு மாறுதல் ஏற்படுத்துவதன் மூலம் அதாவது யானை போன்ற பெரிய உயிரினங்கள் கடக்கும் பகுதியில் உயரமாக வைப்பதனாலும், கானல் மயில், பாறு கழுகுகள் போன்ற பெரிய பறவைகளின் பார்வைக்குத் தெரியும் வகையில் அமைப்பதனாலும் அவை மின் கம்பிகளில் அடிபட்டு இறப்பதைத் தவிர்க்க முடியும். சாலையோரங்களில் வளர்ந்திருக்கும் இயல் தாவரங்களையும், மரங்களையும் வெட்டாமல் வைப்பதன் மூலம் உயிரினங்களின் இடம்பெயர்வுக்கு உதவுவது மட்டுமல்லாமல், அந்தத் தடத்தையும் அழகாக்கும்.
நீள் கட்டமைப்புகள் இயற்கையான சூழலின் மேல் கரிசனம் கொண்டு, அறிவியல் பூர்வமாகவும், சரியான வடிவமைப்புகளைக் கொண்டும் இருந்தால் பொருளாதார மேம்பாட்டிற்கும் உதவும், இயற்கையான வாழிடத்தையும் பாதுகாக்கும்.
———-
மார்ச் 19, 2015 தி ஹிந்து ஆங்கிலம் தினசரியில் வெளியான T. R. Shankar Raman எழுதிய “The long road to growth” கட்டுரையின் தமிழாக்கம். இக்கட்டுரையின் சுருக்கமான பதிப்பு “தி இந்து” தமிழ் தினசரியில் 18-04-2015அன்று வெளியானது. அதை இங்கே காணலாம்.
நட்சத்திர ஆமைகளைக் காப்பாற்றிய நட்சத்திரங்கள்
அங்கிள்..தாபேலு..தாபேலு.. என கத்திக் கொண்டே வீட்டின் கதவை திறந்து கொண்டு உள்ளே ஓடி வந்தார்கள் பக்கத்து வீட்டு வாண்டுகள். என்னவென்று கேட்டபோது கூப்பியிருந்த கையை திறந்து காண்பித்தார்கள். இருவர் உள்ளங்கைகளிலும் இருந்தது ஒரு சின்னஞ்சிறிய நட்சத்திர ஆமைக்குட்டி! தாபேலு என்றால் தெலுகில் ஆமை.
கடப்பா மாநிலத்தில் சில ஆண்டுகளுக்கு முன் களப்பணியில் ஈடுபட்டிருந்த காலம். நாங்கள் காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள் என்பதை அறிந்த அக்கம்பக்கத்திலுள்ள சிறுவ சிறுமியர் வந்து என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம் என கேள்விகளால் எங்களைத் துளைத்தெடுப்பார்கள். அவ்வப்போது கீழே விழுந்த குயில் குஞ்சு, கிளிக்குஞ்சு முதலியவற்றையும் எடுத்துக் கொண்டு எங்களிடம் என்ன செய்யலாம் எனக் கேட்டு உதவிக்கு வருவார்கள். ஆனால் ஆமைக்குட்டியை எடுத்து வந்தது அதுதான் முதல் முறை.
அந்த சின்னஞ்சிறிய பிஞ்சுக் கைகளில் அடைக்கலமாகியிருந்த அந்த ஆமைக்குட்டியைப் பார்த்த எனக்கு ஆச்சர்யமாகவும், கூடவே கவலையாகவும் இருந்தது. எனது கவலைக்குக் காரணம் இந்த வகை ஆமைகளை திருட்டுத்தனமாக காட்டிலிருந்து பிடித்து இவற்றின் அழகிய ஓடுகளுக்காக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கென ஒரு கும்பலே இயங்கி வருகிறது. இவ்வாறு கடத்தப்படும் போது சென்னையில் பல வேளைகளில் இவை பெட்டி பெட்டியாக பிடிக்கப்படுவதும் உண்டு. உடனே அந்த சிறுவர்களிடம் எப்படி, எங்கிருந்து கிடைத்தது என தெலுகில் அடுகினேன். அவர்களும் தங்களது சுந்தரத் தெலுகில் செப்பினார்கள்.
நடந்தது இதுதான்: இவர்கள் இன்னும் பல குழந்தைகளுடன் தெருவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது ஒருவன் சிக்ஸர் அடித்ததில் அருகில் இருந்த, புதர் மண்டிக்கிடந்த காலி மனையில் பந்து சென்று விழுந்திருக்கிறது. பந்தை தேடும் முயற்சியில் இருந்தவர்களுக்குக் கிடைத்தது அழகான நட்சத்திர ஆமைக் குட்டிகள். கிரிக்கெட்டை விட அந்த அழகிய ஆமைகள் அவர்களது கவனத்தை ஈர்த்ததால் உடனே விளையாடுவதை நிறுத்திவிட்டு குழந்தைகள் அனைவரும் ஆமைக்குட்டியை சேகரிக்கும் வேலையில் இறங்கிவிட்டார்கள். பல குழந்தைகள் அவற்றை தங்கள் வீட்டில் வைத்து வளர்ப்பதற்காக எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.
ஊருக்கு நடுவில் குடியிருப்புப் பகுதியில் எப்படி இந்த ஆமை வந்திருக்க முடியும்? அருகில் வனப்பகுதி கூட கிடையாது. ஒன்றிரண்டானாலும் பரவாயில்லை, ஆளுக்கு ஒரு ஆமைக்குட்டியை எடுத்துச் சென்றதாகச் சொல்கிறார்கள். குழப்பத்துடனேயே, அக்குழந்தைகளை அங்கே கூட்டிச் செல்லுமாறு கேட்டேன். சுற்றிலும் வீடுகளும் இடையே, கருவேல மரங்கள் அடர்ந்த ஒரு காலி மனையில் பாதி கட்டப்பட்டு முடிக்கப்படாத ஒரு குட்டிச்சுவரும் இருந்தது. அக்கம் பக்கத்தினர் தங்கள் வீடுகளில் இருந்து காய்கறி மீதங்களையும், குப்பைகளையும் அந்த இடத்தில் கொட்டி வைத்திருந்தனர்.
ஓரிரு குழந்தைகள் முட்செடிகள் நிறைந்த இடத்திலும் போய் ஆமைக்குட்டிகளை தேடும் முயற்சியில் இருந்தனர். இரண்டு குட்டிகளைத் தேடி எடுத்தும் விட்டனர். அக்குழந்தைகளிடம் ஆமைகளை வீட்டில் வைத்துக் கொள்ளக்கூடாது, வனத்துறையினர் வந்து பிடித்துக் கொள்வார்கள் எனச் சொல்லிப் பார்த்தேன். அவர்கள் அதற்கெல்லாம் பயப்படுவதாகத் தெரியவில்லை. சரி என்ன கொடுத்தால் அவர்கள் அதை எண்ணிடம் திரும்பித் தருவார்கள் எனக் கேட்டேன். புது ஆண்டு பிறக்க இன்னும் சில நாட்களே இருந்தன. அவர்கள் அனைவரும் புத்தாண்டு வாழ்த்து அட்டைகள் வாங்குவதில் ஆர்வம் கொண்டிருந்தனர். ஒவ்வொரு குட்டி ஆமைக்கும் ஐந்து வாழ்த்து அட்டைகளும், மற்ற குழந்தைகள் எடுத்துச் சென்ற ஆமைகளை மீட்டுத் தந்தால் பத்து வாழ்த்து அட்டைகள் தருவதாகச் சொன்னவுடன் அவர்களுக்கு மகிழ்ச்சி தாளவில்லை.
முதலில் குழந்தைகளால் எடுத்துச் செல்லப்பட்ட ஆமைகளை மீட்கும் பணியைத் தொடங்கினோம். ஐந்து குழந்தைகள் எங்களுடன் சேர்ந்து வீடு வீடாகச் சென்று அங்குள்ள குழந்தைகளிடம் விஷயத்தைச் சொல்லி எடுத்துச் சென்ற ஆமைக்குட்டியை மீட்டு ஒரு அட்டைப் பெட்டியில் பத்திரமாக சேர்த்து வைத்துக் கொண்டனர். இதற்குள் விஷயம் பரவி எங்களோடு இன்னும் பல குழந்தைகள் ஆமை மீட்புப் பணியில் இறங்கினர். சில குழந்தைகள் அவர்களது செல்ல ஆமைக்குட்டிகளை தரமாட்டேன் என அடம் பிடிக்க அவர்களது பெற்றோர்களிடம் இந்த ஆமைகள் இந்திய வனப்பாதுகாப்புச் சட்டத்தினால் பாதுகாக்கப்பட்டவை என்றும், இவற்றை வனத்துறையினரிடம் ஒப்படைப்பதுதான் முறை என்றும் எடுத்துச் சொன்னோம். அவர்களும் அதை உணர்ந்து அக்குழந்தைகளுக்கு விளையாட வேறு பொம்மைகள் வாங்கித்தருவதாகச் சொல்லிச் சமாதானப்படுத்தி ஆமைக்குட்டியை எங்களிடம் ஒப்படைத்தனர்.
சில குழந்தைகளிடமிருந்து மீட்கப்பட்ட ஆமைக்குட்டிகள் ஈரமாக இருந்தது. ஆமையென்றால் நீருக்குள் இருக்க வேண்டும் என தவறாக எண்ணிய சில குழந்தைகள் அவற்றை வாளியில் நீரை நிறப்பி உள்ளே விட்டிருக்கிறார்கள். நல்ல வேளையாக சரியான நேரத்தில் சென்று மீட்டதால் ஒன்றும் ஆகவில்லை. நட்சத்திர ஆமைகள் தரையில் வாழ்பவை, நீருக்குள் அல்ல. அவை சமவெளியில் உள்ள வறண்ட புதர்காடுகளிலும், இலையுதிர் காடுகளிலும் பொதுவாகத் தென்படும், என அவர்களுக்கு விளக்கினோம்.
ஒரு வழியாக எடுத்துச் செல்லப்பட்ட 15 ஆமைக்குட்டிகள் அனைத்தும் மீட்கப்பட்டன. அடுத்த நடவடிக்கையாக புதருக்குள் மேலும் பல ஆமைக்குட்டிகள் உள்ளனவா என தேட வேண்டும். அதற்குள் இருட்ட ஆரம்பித்தது. சரி மறுநாள் அந்த வேளையைத் தொடங்கலாம் என மீட்கப்பட்ட ஆமைக்குட்டிகளை எங்களது ஆராய்ச்சி நிலையத்திற்கு கொண்டு சென்றோம். வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்திருந்ததால் அவர்களும் வந்து ஆமைக்குட்டிகளைப் பார்வையிட்டனர். குழந்தைகள் ஆர்வத்துடன் அவர்களுக்கு நடந்ததை விளக்க ஆரம்பித்தனர். பத்திரிக்கையாளர்களுக்கும் இந்தச் செய்தி எட்டி அவர்களும் வந்து குழந்தைகளை பேட்டி எடுத்துச் சென்றனர்.
மறுநாள் காலை நான் விழிக்கும் முன்பே என் வீட்டு வாசலில் குழந்தைகள் கூடிவிட்டனர். வனத்துறையினரும் வந்து சேர்ந்தனர். எல்லோருமாக சேர்ந்து ஆமை தேடுதல் வேட்டையில் இறங்கினோம். புதர்கள் அகற்றப்பட்டன. பள்ளிக்குச் செல்லாமல் அன்று பகல் முழுவதும் குழந்தைகள் ஆர்வத்துடன் அவர்கள் கண்களில் அகப்பட்ட ஆமைக்குட்டிகளையும், ஒரு சில முதிர்ந்த ஆமைகளையும், சேகரிக்க ஆரம்பித்தனர். அந்த சிறிய இடத்திலிருந்து சிறியதும் பெரியதுமாக மொத்தம் 55 நட்சத்திர ஆமைகளை கண்டெடுத்தோம்.
இந்த நட்சத்திர ஆமைகள் பொதுவாக தாவர உண்ணிகள். அந்த காலி மனையின் ஒரு மூலையில் அப்பகுதி மக்கள் காய்கறிக் கழிவுகளையும், குப்பைகளையும் வீசி வந்திருக்கின்றனர். இவற்றையும் அங்கு வளர்ந்திருந்த புற்களையுமே உண்டு வாழ்ந்து கொண்டு இருந்திருக்க வேண்டும். யாராவது காட்டிலிருந்து பிடித்து கொண்டு வந்து வளர்த்துக் கொண்டிருந்த போது அங்கிருந்து தப்பித்து இங்கே வந்திருக்கலாம். கொண்டு வந்தது பெண் ஆமையாக இருந்திருக்கக் கூடும். இவை மண்ணில் குழி தோண்டி முட்டையிடுபவை. இந்த இடத்திற்கு வந்தபின் முட்டையிட்டு ஆமைக்குஞ்சுகள் வெளியேறி இங்கேயே வாழ ஆரம்பித்திருக்கலாம். பலவாறு யூகிக்க முடிந்ததே தவிர இவை எப்படி இங்கே வந்தன? எத்தனை காலமாக இங்கே வசிக்கின்றன? என்பதெல்லாம் புரியாத புதிராகவே இருந்தது எங்களுக்கு.
அடுத்த நாள், நட்சத்திர ஆமைகள் அனைத்தையும் திருப்பதியில் உள்ள விலங்குகாட்சி சாலைக்கு எடுத்துச் செல்வதாக முடிவு செய்யப்பட்டது. குழந்தைகளுக்கு சோகம் தாளவில்லை. இங்கேயே வைத்துக் கொள்ளலாம் என்றார்கள். அவர்கள் சேகரித்த பல ஆமைக்குட்டிகளின் கால்களிலும், கழுத்துப் பகுதிகளிலும் புண்ணும் அதில் புழுக்களும் நெளிந்து கொண்டிருந்தன. சுகாதாரமற்ற சூழலில் இருந்ததனால் இவை ஏற்பட்டிருக்கக் கூடும். ஆகவே இவற்றை காட்டுப்பகுதியில் கொண்டு விடுவது நல்லதல்ல. அங்குள்ள இயற்கையாகத் திரியும் ஆமைகளுக்கும், பிற காட்டுயிர்களுக்கும் இவற்றின் மூலம் இந்த நோய் தொற்றிக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். ஆகவே இவற்றை குணப்படுத்தவும், நோய் மேலும் மற்ற ஆமைகளுக்கு பரவாமல் இருக்கவும் இவற்றை அடைத்து வைத்துப் பராமரிப்பதே சிறந்தது. இதையெல்லாம் விளக்கிய பின்னும் குழந்தைகள் சமாதானமடையவில்லை.
ஆமைக்குட்டிகள் இங்கேயே இருந்தால் ஒவ்வொன்றாக உயிரிழக்க நேரிடும் என்றும், இதனால், அவர்கள் இவ்வளவு முயன்று காப்பாற்றியது எல்லாம் வீணாக போய்விடும் என்றும், விலங்குகாட்சி சாலைக்கு எப்பொழுது வேண்டுமானாலும் சென்று அவர்களது ஆமைக்குட்டிகளை பார்த்து வரமுடியும் என்றும் நம்பிக்கையூட்டிய பின்னரே கொஞ்சம் முகம் மலர்ந்து, அவர்களது செல்ல ஆமைக்குட்டிகளுக்கு பிரியா விடையளித்தார்கள்.
பெட்டிச் செய்தி
இந்தியாவில் தென்படும் ஆமைகளை பொதுவாக மூன்று வகையாகப் பிரிக்கலாம். நட்சத்திர ஆமை போன்ற தரை ஆமைகள் (tortoise), குளங்களிலும், ஏரிகளிலும், ஆறுகளிலும் தென்படுபவை நன்னீர்நீர்வாழ் ஆமைகள் (terrapins), கடலில் இருப்பவை கடலாமைகள் (sea turtles). இந்தியாவில் ஐந்து வகை கடலாமைகளும், சுமார் 34 வகையான ஆமைகளும் தென்படுகின்றன. கடலாமைகள் பொதுவாக உருவில் பெரியவை. அந்தமான் – நிக்கோபார், இலட்சத்தீவு கடற்கரைகளில் முட்டையிட வரும் தோணி ஆமை (Leatherback sea turtle) சுமார் 200 செ.மீ நீளமும் 650 கிலோ எடையும் இருக்கும். நீர்வாழ் ஆமைகள் நீருக்குள் இருந்தாலும் முட்டையிட அவை நிலப்பகுதிக்கே வருகின்றன. மண்ணின் வெப்பநிலையைப் பொருத்து ஆமை முட்டைகள் பொறியும். மண்ணின் வெப்பநிலை குறைவாக இருப்பின் ஆண் ஆமைக்குஞ்சுகளும், அதிகமாக இருப்பின் பெண் ஆமைக்குஞ்சுகளும் வெளிவரும்.
ஆமைகளின் உடல் உறுதியான ஓடால் மூடப்பட்டிருக்கும். மேல் ஓடும் (Carapace) கீழ் ஓடும் (Plastron) பக்கவாட்டில் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ஓடுகள் தரை ஆமைகளில் கடினமாகவும், சில வகை நீர் ஆமைகளில் சற்று மென்மையாகவும் இருக்கும். இந்த ஆமைகள் தம்மை எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள தலையையும், வாலையும், கால்களையும் கவசம் போன்ற தங்களது ஓடுகளுக்குள் இழுத்துக் கொள்கின்றன. கடலாமைகளால் இவ்வாறு செய்ய முடியாது.
ஆமைகள் அவற்றின் கடினமான ஓடுகளுக்காகவும், இறைச்சிக்காகவும் பெருமளவில் வேட்டையாடப்படுகின்றன. கடலாமைகளின் முட்டைகளும் அவற்றின் கூட்டிலிருந்து மனிதர்களால் உணவுக்காக திருடப்படுகின்றன. மீன்பிடி வலைகளில் சிக்கியும் பல கடலாமைகள் உயிரிழக்கின்றன.
******
தி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 28th October 2014 அன்று வெளியான கட்டுரையின் முழுப் பதிப்பு. அக்கட்டுரையை இங்கே காணலாம். அதன் PDF ஐ இங்கே பெறலாம்.
சினிமாவும், காட்டுயிரும் அவற்றின் வாழிடங்களும்
எந்தத் தமிழ் சினிமாவைப் பார்க்கும் போதும் அதில் வரும் கதாநாயகியையும், காமெடியையும் ரசிப்பதைத் தவிர எனக்கு வேறு ஒரு பொழுதுபோக்கும் உண்டு. அவுட் டோர் லொக்கேஷனில் எடுக்கப்பட்டிருந்தால் அது இந்தியாவா இல்லை உலகில் எந்தப்பகுதி, எவ்வகையான வனப்பகுதி, படத்தில் வரும் காட்சியைப் பொறுத்து எந்த அளவுக்கு அவ்வகையான வாழிடத்திற்கு அந்த ஷூட்டிங்கினால் பாதிப்பு ஏற்பட்டிருக்கும், என்பதையெல்லாம் பற்றியே எனது யோசனை இருக்கும். ஒரு வேளை ஏதேனும் பறவையையோ, பூச்சியையோ, மரத்தையோ காண்பிக்கும்போது அது எனக்குத் பரிச்சயமான ஒன்றாக இருந்தால் அருகில் இருப்பவர்களிடம் அதைப்பற்றிச் சொல்லுவேன். பெரும்பாலும் அவர்களிடமிருந்து வரும் பதில், “பேசாமல் படத்தைப் பார்”.
தமிழ்ப் படங்களில் பல காட்சிகளில் காட்டுயிர்களையும் அவற்றின் வாழிடங்களையும் காணலாம். நான் குறிப்பிடுவது பழைய படங்களில் வருவதுபோல் கதாநாயகர்கள் சண்டையிட்டு அடக்கும் (?) சிங்கத்தையே, புலியையோ, அல்லது டைரக்டர் இராமநாராயணனின் படத்தில் காட்டப்படும் பழக்கப்படுத்தப்பட்ட சர்க்கஸ் விலங்குகளையோ இல்லை, இயற்கையான சூழலில் தென்படும் உயிரினங்களை. பாரதிராஜா, ராஜ்கிரண் போன்றவர்களின் படங்களில் அழகிய வயல்வெளியையும், நீர்நிலைகளையும் கொண்ட கிராமங்களைக் காணலாம். வெள்ளைகொக்குகள், மீன்கொத்திகள் பறப்பதையும், பூச்சிகளையும், மீன்கள் துள்ளித்திரிவதையும் அவ்வப்போது காண்பிப்பார்கள். மணிரத்னத்தின் பல படங்களில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளின் பல இடங்களைக் காணலாம்.
இதுபோல, தமிழ் சினிமாவில் ஏதாவது பறவையோ, வண்ணத்துப்பூச்சியோ சில நொடிகள் தான் வந்து போகும். ஆனால், சமீபத்தில் பார்த்த “வாகை சூட வா” எனும் அருமையான படத்தில் சர சர சாரக்காத்து வீசும் போது…என்ற பாடலில் கிராமப்புறங்களில் பார்க்கக்கூடிய சில அழகான உயிரினங்களைக் கொண்ட இயற்கைக் காட்சிகளை படம்பிடித்து இப்பாடலின் பல இடங்களில் காண்பித்திருப்பார்கள். தொலைக்காட்சியில் அடுத்த முறை இந்தப்பாடலை பார்க்கும் போது கீழே பட்டியலிடப்பட்டிருக்கும் விளக்கங்களை (பாடலின் ஆரம்பத்திலிருந்து வரும் காட்சிகளுடன்) ஒப்பிட்டுப் பார்த்து மகிழுங்கள்:
1. கதாநாயகன் மின்மினிப்பூச்சியைப் பிடித்து நாயகியின் நெற்றியில் அதைப் பொட்டாக வைப்பான். மின்மினிப் பூச்சி மின்னுவதேன் தெரியுமா? தனது இரையையும், துணையையும் கவர்வதற்காக. எப்படி மின்னுகிறது தெரியுமா? அதனுடலில் இருக்கும் லூசிபெரின் (Luciferin) எனும் ஒரு வித வேதிப் பொருள் ஆக்ஸிஜனுடன் கலப்பதால் பளிச்சிடும் பச்சை நிற ஒளி இப்பூச்சியின் பின் பக்கத்திலிருந்து உமிழுகிறது.
2. ஒரு மஞ்சள் நிறத் தட்டான் தனது வயிற்றுப்பகுதியின் கீழ் நுனிப்பகுதியை (நாம் வால் என பிடித்து விளையாடும் பகுதி) தண்ணீரின் மேல் தொட்டுத் தொட்டுப் பறக்கும். அதன் மேலேயே சிகப்பு நிறத்தில் இன்னொரு தட்டானும் பறந்து கொண்டிருக்கும். மஞ்சள் நிறத்தில் இருப்பது பெண் தட்டான். அது தனது முட்டையை தண்ணீரில் இட்டுக்கொண்டிருக்கிறது. அதன் மேலே பறக்கும் சிகப்பு நிறத்தட்டானே அதன் ஆண் துணை. அது பறந்து கொண்டே தனது பெண் துணையை மற்ற ஆண் தட்டான்களிடமிருந்து பாதுகாக்கிறது.
3. கவுதாரி ஓடுவதை (அல்லது ஓடவிட்டுப்) படமெடுத்திருப்பார்கள்.
4. அடுத்து வருவது எலி. வயல் எலியாக இருக்கக்கூடும்.
5. ஒரு பறவை நீர்க் கரையின் ஓரத்தில் அமர்ந்திருப்பதைப்போன்ற காட்சி. இது Chestnut-bellied Sandgrouse எனும் பறவை. வறண்ட வெட்ட வெளிகளிலும், புதர் காடுகளிலும் இதைப் பார்க்கலாம். தமிழிலில் கல்கவுதாரி எனப்படும் (எனினும் இது கவுதாரி இனத்தைச் சார்ந்தது இல்லை). தரையில் இருக்கும் தானியங்கள், புற்களின் விதைகள் முதலியவற்றை சாப்பிடும். உச்சி வெயில் நேரத்தில் காட்டிலுள்ள நீர்க்குட்டைகளின் ஓரத்தில் தாகத்தைத் தனிக்க கூட்டமாக வந்திறங்குவதைக் காணலாம். ஆனால் இந்தப்பாடலில் காண்பிக்கப்படும் கல்கவுதாரியை இயற்கையான சூழலில் படம்பிடித்த மாதிரி தெரியவில்லை.
6. அதற்கு அடுத்து வருவது காட்டு முயல். Rabbit என நாம் பொதுவாகச் சொல்லுவது. ஆனால் இந்தியாவில் Rabbit இனம் கிடையாது. உணவிற்காகவும், செல்லப்பிராணியாகவும் மட்டுமே வளர்க்கப்படுகிறது. இந்தப்பாடலில் வருவது Black naped Hare – கதாநாயகி காதைப்பிடித்து தூக்கும் போது இம்முயலின் கரிய பிடரியைத் தெளிவாகக் காணலாம். இக்காட்டு முயல் இந்தியாவின் பல பகுதிகளில் இது திருட்டு வேட்டையாடப்படுகிறது. இந்திய வனவிலங்குச் சட்டத்தின் படி இது தண்டிக்கத் தகுந்த குற்றம்.
7. அடுத்து குளத்தில் மீன் அல்லது பாம்பு நீந்துவதைக் காண்பிப்பார்கள். ஒரு சில வினாடிகள் மட்டுமே வருவதால் தெளிவாகச் சொல்ல முடியவில்லை.
8. நத்தையைச் சமைப்பதற்காக கதாநாயகி தயார் செய்வாள்.
9. சிகப்பு நிற உடலில் கரும்புள்ளிகளையுடைய Blister Beetle-ஐ போன்ற வண்டுகள் புல்லின் மேலும் கீழுமாக ஏறி இறங்கிக் கொண்டிருக்கும்.
10. மழைபெய்து கொண்டிருக்கும் போது ஒரு மீன் பனைமரத்தின் மேலேறுவது போல ஒரு காட்சி. இதற்கு மரமேறி கெண்டை என்று பெயர். இதன் சிறப்பு என்னவென்றால் சுமார் 6 மணிநேரம் கூட நீருக்கு வெளியிலும் வந்து சுவாசிக்கக் கூடிய திறன் படைத்தது. ஆனால் இந்த படத்தில் காண்பித்திருப்பது போல செங்குத்தாக ஏற முடியுமா எனத்தெரியவில்லை. இக்காட்சியைக் காணும் போதும், இதற்கு அடுத்து வரும் பறவையும் நிச்சயமாக graphics தான் என்பது புலப்படுகிறது.
அடுத்து நான் பார்த்து வியந்த காட்சி “3” (மூன்று) எனும் படத்திலிருந்து. இப்படத்தில் கதாநாயகன், நாயகியின் வீட்டின் முன் நின்று கொண்டு அவளிடன் தனது காதலைச் சொல்லுவான். அக்காட்சியின் போது நாயகியின் கண்களில் தெரியும் பயம் கலந்த பிரமிப்பையும், பூரிப்பையும் பலர் ரசித்திருக்கலாம். ஆனால் நான் பூரிப்படைந்ததும், ரசித்ததும், அந்தக் காட்சியின் பின்னனியில் ஒரு பறவையின் இனிமையான குரலைக் கேட்டுத்தான். விசிலடிப்பது போன்ற அந்தக்குரல் குயிலினத்தைச் சேர்ந்த Indian Cuckoo எனும் பறவையினுடையது. இதன் குரல் நான்கு சுரங்களைக் (notes) கொண்டது. பறவைகள் பாடும் விதத்தையும், குரலையும் வைத்து அதற்கு செல்லப்பெயரிடுவது வழக்கம். ஆங்கிலத்தில் இப்பறவையின் குரல் கேட்பதற்கு, “One more bottle” என்று ஒலிப்பதைப் போலிருப்பதாக குறிப்பிடுகின்றனர். அடுத்த முறை இந்தக் காட்சியைக் காணும் போது இந்தத் தகவலை நினைத்துப் பாருங்கள். காட்சியை விட இந்தப் பறவையின் இனிமையான குரல் உங்களுக்கு நிச்சயமாகப் பிடித்துப் போகும்.
பழைய தமிழ்ப்படங்களில் புலி, சிறுத்தை, சிங்கம் முதலிய விலங்குகளுடன் கதாநாயகன் கட்டிப்பிடித்து சண்டையிட்டு அவற்றை கொல்லுவது போன்ற காட்சியைக் காணலாம். பல வேளைகளில் இந்த விலங்குகளுக்கெல்லாம் வாயைத் தைத்த பின்னரே படத்தில் நடிக்க விடுவார்கள். அதேபோல படத்திலும், சர்க்கஸிலும் வரும் யானைகளை அவை குட்டியாக இருக்கும் போதே பிடித்து வந்து, அடித்து, அங்குசத்தால் குத்திக் கொடுமைப்படுத்தியே அவர்கள் சொல்லுவதையெல்லாம் கேட்க வைப்பார்கள். இந்த உண்மையெல்லாம் தெரிந்ததனால் படங்களில் இவ்வுயிர்கள் வரும் காட்சிகளை என்னால் ரசிக்க முடிவதில்லை.
பெரிய விலங்குகள் மட்டுமல்ல, சின்னஞ்சிறு உயிரினங்களையும் வதைத்து எடுக்கப்பட்ட காட்சிகளையும் நான் ரசிப்பதில்லை. “மீரா” எனும் படத்தில் ஒரு பாடல் காட்சியில் பல வண்ணத்துப்பூச்சிகளை கதாநாயகி கையில் வைத்து விளையாடுவாள். அவற்றில் சில போலிகள் என்றாலும் நிச்சயமாக சில உயிருள்ள வண்ணத்துப்பூச்சிகள் என்பது உற்று நோக்கினால் தெரியும். “சத்யா” எனும் படத்தில் வரும் ஒரு பாடலில் கதாநாயகன் தட்டானைப் பிடித்து நாயகியின் மேல் விடுவது போன்ற காட்சி வரும். சமீபத்தில் வெளியான “இராவணன்” படத்தின் ஆரம்பக் காட்சிகளில் ஒரு தட்டானைக் காண்பிப்பார்கள். பிடித்து வைத்து படமெடுத்திருக்கிறார்கள் என்பது பார்த்தவுடனேயே தெரிந்து விட்டது.
சினிமாக்காரர்களின் வசீகரத்தினாலோ, பெரிய இடத்திலிருந்து வரும் சிபாரிசினால் ஏற்படும் நிர்பந்தத்தினாலோ வனத்துறையினர் வேறு வழியின்றி அனுமதி வழங்கி விடுவதால், பொதுமக்கள் கூட செல்ல அனுமதிக்கப்படாத பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் (core area) கூட ஒரு சில படக்காட்சிகளில் வந்து போகும். இந்தப்படங்களில் சில காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கும் விதத்தைப் பார்த்தவுடனேயே அந்தக்காட்சி எடுக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு எந்த அளவிற்கு பாதிப்பை உண்டாக்கும் என்பதை ஊகிக்க முடியும். என்னதான் நல்ல படமாகவும், பிடித்த நடிக, நடிகையர் இருந்தாலும், காட்டுயிர் வாழிடங்களின் சூழலை பாதிப்படையும் வண்ணம் இருப்பதைக் காணும் போது வேதனையாக இருக்கும். தூய்மையான காட்டுயிர் வாழிடங்களில் அதாவது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியிலோ, ஏரி, குளம் ஆறு போன்ற நீர்நிலைகளிலோ, பாலைவனங்களிலோ, பனிபடர்ந்த மலைப்பகுதிகளிலோ சினிமா ஷூட்டிங் நடத்தப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு நிச்சயமாக பாதிப்பு ஏற்படும். நாட்டுப்புறங்களிலும், கிராமங்களிலும், புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களான ஊட்டி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டால் அந்த இடங்களில் அப்படி ஒன்றும் பெரிய சுற்றுச்சூழல் பாதிப்படையாது என்றே தோன்றுகிறது. எனினும் இது எடுக்கப்படும் காட்சியைப் பொறுத்ததே. ஆனால் வனப்பகுதிகளிலும், நீர்நிலைகளிலும் எடுக்கப்படும் ஒரு சில காட்சிகளால் நிச்சயமாக அந்த இடங்களுக்கு பாதிப்பு இருக்கும். உதாரணமாக ஒரு பாடலில் 20 பேர் ஆடிப்பாடி, பளபளக்கும் (மட்கிப்போகாத) ஜிகினாத்தாளை தூக்கி விசிறி பறக்கவிட்டால் அது அந்த இடத்தை நிச்சயமாக மாசுறச்செய்யும். அதுபோலவே காட்டில் ஓடி ஒளிந்துகொள்ளும் வில்லனையோ, கதாநாயகனையோ பலபேர் தேடிச் செல்லுவது போல எடுக்கப்படும் காட்சிகள் அந்த இடத்தின் தூய்மையையும் அமைதியையும் நிலைகுலையச்செய்யும்.
சில படங்கள் ஆரம்பிக்கும் முன்பு, ”இந்த படத்தில் பறவைகளையோ, விலங்குகளையோ துன்புறுத்தப்படவில்லை” என்று அறிவிப்பார்கள். அதுபோலவே, “இந்தப்படம் எடுக்கப்பட்ட இடங்களில் அதன் சூழலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை” என்று சொல்லும் காலம் வரவேண்டும். அப்போதுதான் என் போன்றவர்கள் பேசாமல் படம் பார்த்து ரசிக்க முடியும்.
******
காக்கை குருவி எங்கள் ஜாதி தொடர். எண் 13. புதிய தலைமுறை 11 அக்டோபர் 2012