UYIRI

Nature writing in Tamil

Archive for July 2012

எறும்புகளின் அதிசய உலகம்

leave a comment »

இதுவரை எத்தனையோ முறை எறும்புகளை பார்த்திருந்தாலும் ஆவலோடும், அதிசயத்தோடும் அவற்றை உற்றுநோக்கத் தொடங்கியது சமீப காலமாகத்தான். அதற்குக் காரணம் நான் கண்ட ஒரு வித்தியாசமான காட்சி. காட்டின் ஓரிடத்தில் தையற்கார எறும்புகள் மரத்தில் ஏறிக்கொண்டிருந்த போது அவற்றை கேமரா மூலம் படமெடுத்துக் கொண்டிருந்தேன். இரு எறும்புகள் எதிரெதிரே சந்திக்கும்போது தங்களது உணர்நீட்சிகளைத் ஒற்றிவிட்டுக் கடந்து செல்வது, தம்மைவிட உருவத்தில் பெரிய பூச்சிகளை கூட்டமாகச் சேர்ந்து மெல்லமெல்ல கூட்டுக்கு நகர்த்திச் செல்வது, தங்களது முட்டைகளை கவ்வியவாறே தூக்கிச் செல்வது போன்ற வழக்கமான காட்சிகளைப் பார்த்ததுண்டு. ஆனால் அன்று நான் கண்ட காட்சி வியப்பில் ஆழ்த்தியது. ஒரு தையற்கார எறும்பு மற்றொரு தையற்கார எறும்பை தூக்கிச் சென்றது. ஒரு வேளை இறந்து போன எறும்பை அது தூக்கிச் செல்கிறதா என்ற சந்தேகத்துடன் உற்றுநோக்கியபோது, தூக்கிச் செல்லப்படும் எறும்பு தனது உணர்நீட்சியை எதிரில் வந்த எறும்புகளுடன் தட்டிய வண்ணம் சென்றது. இதுவரை இப்படி ஒரு காட்சியை பார்த்திராத எனது மனதில் இது ஆழமாகப் பதிந்தது.

_JEG4078_low

காட்டைவிட்டு ஊருக்குள் வந்தவுடன் Piotr Naskrecki எழுதிய The Smaller Majority என்ற பூச்சிகளைப் பற்றிய புகைப்பட புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தபோது நான் பார்த்த, புகைப்படமெடுத்த அதே காட்சி அந்தப் புத்தகத்திலும் இடம்பெற்றிருந்தது என்னை மேலும் வியப்பில் ஆழ்த்தியது. ஆர்வம் மேலோங்க எறும்புளைப் பற்றிய புத்தகங்களைப் படித்தபோது, நான் பார்த்த காட்சிக்கான விடை தெரிந்தது. அடிபட்டு நடக்க முடியாமல் போன ஓர் எறும்பை மற்றொரு எறும்பு கூட்டுக்கு தூக்கிக்கொண்டு சென்றிருக்கிறது.

இயற்கை ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும் நமக்கு புதிய சங்கதிகளை வழங்கிக் கொண்டே இருக்கிறது. நம்மில் சிலருக்கு ஒரு எறும்பு மற்றொரு எறும்பைத் தூக்கிச் செல்வது மிகச்சாதாரணமான காட்சி அல்லது செய்தியாக இருக்கலாம். ஆனால் இதுவே சிலருக்கு ஆச்சரியத்தையும், அது ஏன் அப்படிச் செய்கிறது என்ற புதிருக்கான விடையை அறிந்துகொள்ளும் ஆர்வத்தையும் தூண்டுகிறது. இந்த வகையான ஆர்வமும் ஆச்சர்யமும்தான் இயற்கையை நேசிக்கவும் பாதுகாக்கவும் வைக்கிறது.

_JEG4125_low

சிறு வயது முதல் நாம் சாதாரணமாகப் பார்த்து பழக்கப்பட்டவைதான் எறும்புகள். எறும்பால் கடிபட்டிருக்கிறோம், அதனால் ஏற்படும் எரிச்சலில், கடித்த எறும்பை உடனே நசுக்கிச் சாகடித்தும் இருக்கிறோம். உணவுப் பண்டங்களில் அவை ஏறிவிடாமலிருக்க எறும்பு மருந்து வாங்கி, அவை இருக்கும் இடங்களில் தூவி இருக்கிறோம். அதேவேளையில் தன் உருவத்தைவிட பன்மடங்கு பெரிதாக உள்ளவற்றை பற்களால் கடித்து எறும்புகள் தூக்கிச் செல்வதையும், படைவீரர்களைப் போல சாரைசாரையாக அவை நடந்து செல்லும் அழகையும் பார்த்தும் வியப்புற்றிருக்கிறோம்.

Photo: Thomas Vattakaven

Photo: Thomas Vattakaven

சிவப்பு நிற சிறிய நெருப்பெறும்பு, உருவத்தில் சற்று பெரிய கரிய கட்டெறும்பு, மரத்திலிருக்கும் வெளிர் சிகப்பு நிற சூவை எறும்பு, சிறிய பிள்ளையார் எறும்பு இவைதான் நமக்குத் தெரிந்த எறும்பு வகைகள். ஆனால் உலகில் 11,931 வகையான எறும்புகளும், இதில் 5.2 சதவிகிதம் வகைகள் இந்தியாவிலும் உள்ளன.

இந்த பூமிப் பந்தில் எறும்புகள் இல்லாத இடம் மிகக் குறைவு. எறும்புகள் சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றின. அண்டார்டிகா போன்ற துந்திர பிரதேசங்களைத் தவிர பூமியின் பல இடங்களில் எறும்புகள் பரவி காணப்படுகின்றன. ஆயினும் எறும்பு வகைகள் அதிகமாக இருப்பது பூமத்திய ரேகைக்கு அருகாமையிலுள்ள வெப்ப மண்டலப் பகுதிகளில்தான். இப்பகுதிகளில் உள்ள யானை, புலி, ஒட்டகச் சிவிங்கி இன்னும் பல தரைவாழ் விலங்குகள் அனைத்தையும் ஒரு தராசுத் தட்டில் வைத்து, மற்றொரு தட்டில் எறும்புகள் அனைத்தையும் வைத்தால், எறும்புகள் உள்ள தட்டுதான் எடை தாங்காமல் கீழே இறங்கும்! உருவத்தில் சிறியதாக இருந்தாலும். எண்ணிக்கையில் அபரிமிதமாக இருப்பவை எறும்பினங்கள்.

நம் வீடுகளில், தோட்டங்களில், காடுகளில் என எறும்புகள் எங்கெங்கும் வியாபித்துள்ளன. காட்டில் தரைப்பகுதியிலும், மரங்களிலும், மர விதானங்களிலும் வாழ்கின்றன. பெரும்பாலும் சர்க்கரை உள்ள பொருள்களை எறும்புகள் உணவாகக் கொண்டாலும், பல வேளைகளில் மற்ற சிறிய உயிரினங்களை வேட்டையாடவும், இறந்து போன உயிரினங்களையும், விதைகளையும், மற்ற தாவர உறுப்புகளையும் சாப்பிட்டு வாழ்கின்றன. எறும்புகள் உணவுச் சங்கிலியின் முக்கியமான அங்கம். பறவைகள், சில பாலுட்டிகளுக்கு எறும்பு ஒரு முக்கிய உணவாக இருக்கிறது.

சமூக வாழ்க்கை

எறும்புகள் கூட்டமாக ஒன்று சேர்ந்து வாழ்பவை. இவற்றின் சமூக வாழ்வு வியக்கத்தக்கது. ஒவ்வொரு எறும்புக் கூட்டமும் ஒன்றாகக் கூடி கூட்டைப் பராமரிப்பது, உணவு தேடுவது, முட்டையிடுவது, இனப்பெருக்கம் செய்வது, கூட்டை சுத்தம் செய்வது, எதிரிகளிடமிருந்து பாதுகாப்பது என வேலைகளை பகிர்ந்து கொள்கின்றன. அவை செய்யும் வேலையை வைத்து வேலைக்கார எறும்பு, இனப்பெருக்கம் செய்ய முடியாத பெண் எறும்பு, எதிரிகளிடகமிருந்து கூட்டை காக்கும் சிப்பாய் எறும்பு, முட்டையிடும்  பெண் எறும்பு அல்லது ராணி, இறக்கையுள்ள ஆண் எறும்பு என இனம் பிரிக்கலாம்.

Photo: Thomas Vattakaven

Photo: Thomas Vattakaven

நாம் வெளியில் காணும் எறும்புகள் அனைத்தும் வேலைக்கார எறும்புகள்தான். இவற்றில் சில உருவத்தில் வேறுபட்டு காணப்படும். உருவத்தை வைத்து அவை செய்யும் வேலைகளையும் அறிந்துகொள்ள முடியும். உருவத்தில் மிகச் சிறிய வேலைக்கார எறும்புகள் பெரும்பாலும் கூட்டைவிட்டு வெளியே வருவதில்லை. ராணிக்கு சேவை செய்வது, முட்டைகளையும், வேற்றிளரிகளையும் (லார்வா) பராமரிப்பதே இவற்றின் வேலை. ராணியை காண்பது அரிது. அது கூட்டுக்குள்ளேயே இருக்கும். அதேநேரம், இனப்பெருக்க காலங்களில் இறக்கையுள்ள ஆண் எறும்புகள் கூட்டைவிட்டு வெளியில் பறந்து செல்லும்போது பார்த்திருக்கலாம்.

 Photo: Thomas Vattakaven

Photo: Thomas Vattakaven

இனப்பெருக்கம் மற்றும் கூடமைத்தல்

நன்கு முதிர்ந்த எறும்புக் கூட்டம், இனப்பெருக்கம் செய்யும் திறனைக் கொண்ட இறக்கையுள்ள ராணி மற்றும் ஆண் எறும்புகளை வளர்க்கிறது. இவை முழு வளர்ச்சியடைந்தவுடன் புதிதாக தமக்கென ஒரு குடும்பத்தை அமைக்க வளர்ந்த கூட்டைவிட்டு வெகுதூரம் பறந்து செல்கின்றன. இதற்கு கலவிப் பறப்பு (Nuptial flight) என்று பெயர். அதேவேளையில் ஆண் எறும்பை கவர்வதற்காக ராணி எறும்பு ஒருவித இனஈர்ப்புச் சுரப்பை (Pheromone) தனது உடலிலிருந்து வெளியிடுகிறது. இது ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண் எறும்புகளைக் கவரும். இவை தமக்குள் சண்டையிட்டு, வலுவான ஆண் எறும்புகள் ராணியுடன் இணைசேர்கின்றன. இணைசேர்ந்த பின் ஆண் எறும்புகள் இறந்து போகின்றன.

எறும்பின் முட்டை வெள்ளை நிறத்தில், நீள்வட்ட வடிவத்தில் இருக்கும். வீடுகளில் அம்மியையோ அல்லது பெரிய பாத்திரத்தையோ நகர்த்தும்போது அவற்றின் கீழ் கருப்பு நிற பிள்ளையார் எறும்பு கூடமைத்து இருந்தால், வெள்ளை நிறத்தில் இருக்கும் முட்டைகளை வாயில் கவ்விக்கொண்டு அவை வேறு இடத்துக்குச் செல்வதை பார்த்திருக்கலாம்.

முட்டையிலிருந்து இரண்டு நாள்களில் வேற்றிளரி (லார்வா) வெளிவரும். இவற்றுக்கு ஊட்டச்சத்து மிகுந்த எச்சில் போன்ற திரவத்தை ஊட்டி ராணி வளர்க்கும். இவை கூட்டுப்புழுவாகி முழு வளர்ச்சியடைந்த வேலைக்கார எறும்பாக பிறக்கும். இதன்பின் ராணிக்கு எந்த வேலையும் வைக்காமல், அவை வெளியே சென்று உணவு தேட ஆரம்பிப்பது, கூட்டை பராமரிப்பது முதலான எல்லா வேலைகளையும் பகிர்ந்து செய்யத் தொடங்குகின்றன. ராணியின் ஒரே வேலை முட்டையிட்டு தனது குடும்பத்தை விரிவாக்குவது மட்டுமே.

வேலைக்கார எறும்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க மண்ணுக்கு அடியில் படிப்படியாக அவை கூட்டை விரிவுபடுத்தத் தொடங்குகின்றன. முட்டைகளை வைத்துப் பாதுகாக்க, அதிலிருந்து வரும் வேற்றிளரிகளையும், கூட்டுப்புழுக்களையும் வைக்க, உணவை சேமித்து வைக்க என தனித்தனி அறைகளை அவை உருவாக்குகின்றன. இவ்வாறு கூடு பெரிதான பிறகு சில ஆண்டுகளில் இனப்பெருக்கம் செய்யக்கூடிய இறக்கையுள்ள ஆணும், பெண்ணும் அக்கூட்டில் வளர்க்கப்பட்டு, முதிர்ச்சியடைந்த பின் அவை வெளியே பறந்து சென்று வேவ்வேறு இடங்களில் தங்களுக்கென ஒரு புதிய கூட்டை உருவாக்கிக் கொள்கின்றன.

தகவல் பரிமாற்றம்

நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ஒரு சில உணவுத் துகள்கள் கீழே சிந்திவிட்டால், சற்று நேரத்தில் அங்கு ஒரு எறும்புக் கூட்டம் வந்து சேர்வதைக் காணலாம். இது எப்படிச் சாத்தியமாகிறது? உணவு இருப்பதைப் பார்க்கும் ஓர் எறும்பு அத்துகளின் அருகில் வந்து தனது உணர்நீட்சிகளால் (Antenna) அதை தொட்டுப் பார்த்துவிட்டு, அங்கிருந்து செல்லும்போது தனது உடலின் பின்பகுதியிலிருந்து ஒருவித வேதிப்பொருளை தரையில் கோடு போல் தனது கூடு வரை ஆங்காங்கே இட்டுச் செல்கிறது. இதை மோப்பம் பிடிக்கும் மற்ற எறும்புகளும் அந்தத் தடத்தைப் பின்பற்றி உணவு இருக்குமிடத்தை அடைகின்றன. இந்தத் தடம் எப்போதும் வளைந்து வளைந்துதான் இருக்கும்.

_JEG4036_low

எறும்புகள் இயற்கையின் ஓர் முக்கிய அங்கம். அவை எங்கெங்கும் வியாபித்திருக்கின்றன. கட்டுரையின் தொடக்கத்தில் விவரித்த அந்த வித்தியாசமான காட்சியை பார்த்த பிறகு, போகும் இடங்களில் எல்லாம் தையற்கார எறும்புகளை தேடிக் கொண்டிருக்கிறேன். அவற்றின் செயல்பாடுகளைப் பார்த்து அதிசயிக்கிறேன். இப்படி பார்க்கும் போதோ, புகைப்படம் எடுக்கும் போதோ அவற்றை தொந்தரவு செய்வதில்லை. அப்படிச் செய்தால் அவை கடித்துவிடக் கூடுமே!

******

காக்கை குருவி எங்கள் ஜாதி தொடர். எண் 3. புதிய தலைமுறை 26 ஜூன் 2012

Written by P Jeganathan

July 28, 2012 at 6:17 pm

Posted in Insects

Tagged with ,

சிட்டுக்குருவி உங்கள் வீட்டுக்கு வருகிறதா?

leave a comment »

”சிறிய தானியம் போன்ற மூக்கு; சின்னக் கண்கள்; சின்னத் தலை; வெள்ளைக் கழுத்து; அழகிய மங்கல் வெண்மை நிறமுடைய பட்டுப் போர்த்த வயிறு; கருமையும் வெண்மையும் கலந்த சாம்பல் நிறத்தாலாகிய பட்டுப் போர்த்த முதுகு; சிறிய தோகை; துளித் துளிக் கால்கள்”.

சிட்டுக்குருவியை வர்ணிக்கும் இந்த வரிகள் யாருடையது என்றுத் தெரிகிறதா? மகாகவி பாரதியாருடையவை! வெள்ளைக் கழுத்து என்று சொல்லியிருப்பதால் அவர் பெட்டைக்குருவியைக் குறிப்பிடுகிறார் என்று தெரிகிறது. ஆண் சிட்டின் கழுத்தில் கருப்புத்திட்டு இருக்கும். பாரதியார் மட்டுமல்ல சங்க இலக்கியங்களும் சிட்டுக்குருவியைப் பற்றிப் பாடுகின்றன. குறுந்தொகையில் குறிப்பிடப்படும் ‘மனையுறை குரீஇ’ என்பது சிட்டுக்குருவியாகத்தான் இருக்கக் கூடும். குருவி என இன்று நாம் வழங்கும் வார்த்தை குரீஇ எனும் சொல்லில் இருந்துதான் வந்திருக்க வேண்டும்.

சிட்டுக்குருவிகளைப் பற்றி தமிழ் சினிமாப் பாடல்கள் பல உள்ளன. நீங்கள் கொஞ்சம் வயதானவராக இருந்தால் சட்டென உங்கள் நினைவுக்கு வருவது எம். எஸ். ராஜேஸ்வரி அவர்கள் பாடிய, ”சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?..”, புதிய பறவையில் வரும், “சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே..” போன்ற பாடலாகத்தானிருக்கும். என்னைப்போல் 70வதுகளில் பிறந்தவராக இருந்தால், முதல் மரியாதையில் வரும், ”ஏ குருவி..சிட்டுக்குருவி..” நினைவுக்கு வரக்கூடும். நான் பட்டியலிட்ட வரை சிட்டுக்குருவி என தொடங்கும் பாடல்கள் மட்டும் பத்து. ஒரு நாள் முழுதும் யோசித்து, பலரிடம் தொலைபேசியில் கேட்டு, இணையதளங்களில் தேடி மொத்தம் பதினெட்டு தமிழ்ச் சினிமா பாடல்களின் வரிகளில் சிட்டுக்குருவி இருப்பதை அறிந்தேன். (அப்பதிவை இங்கே காண்க)

_JEG5817_700

சிட்டுக்குருவியைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. மனிதர்கள் வாழும் பகுதியிலேயே வாழ்ந்து வரும் பறவையினம் இது. இப்படி நம் இலக்கியங்களிலும் அன்றாட வாழ்விலும், கலந்திருப்பவை சிட்டுக்குருவிகள். சில வருடங்களாகவே பத்திரிக்கைகளிலும் ஊடகங்களிலும் சிட்டுக்குருவிகள் அழிந்து வருகின்றன அவற்றை காப்பாற்ற வேண்டும் என்றெல்லாம் செய்திகள் வருவதைப் பார்த்திருக்கலாம். அவை குறைவதற்கான காரணங்கள் நகரமயமாதல், செல்போன் டவர்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு என்றெல்லாம் அச்செய்திகளில் சொல்லப்பட்டிருக்கும். இதெல்லாம் எந்த அளவிற்கு உண்மை? இந்தியாவில் சிட்டுக்குருவிகள் சில இடங்களிலிருந்து மறைந்து போயிருக்கலாம். சில இடங்களில் முன்பு இருந்ததைவிட எண்ணிக்கையில் தற்போது குறைந்தும் போயிருக்கலாம். ஆனால் அவற்றின் எண்ணிக்கையை துல்லியமாக அறியவும், ஏன் குறைந்து வருகிறது என்பதையும் அறிய பல வருட  களப்பணிகள் மேற்கொண்டும், தகுந்த அறிவியல் ஆராய்ச்சியின் முடிவிலும் தான் அறியமுடியும்.

பொதுவாக செய்திகளில் தெரிவிக்கப்படும் செல்போன் டவர் கதிர் வீச்சு போன்ற காரணங்களெல்லாம் ஐரோப்பிய நாடுகளில் நடத்தப்பட்ட பல வருட ஆராய்ச்சியின் முடிவு. அங்கும் கூட இதுவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும் என யூகித்தார்களே ஒழிய இதுதான் முக்கிய காரணம் என திட்டவட்டமாகச் சொல்லவில்லை. இங்கிலாந்தில் சிட்டுக்குருவிகள் அழியும் நிலையில் உள்ளன. அதற்கான காரணங்கள் பல. நகரங்களில் இருந்த தோட்டங்கள், புதர்ச்செடிகள் வெகுவாகக் குறைந்து போனது, அவை கூடமைக்க ஏதுவான இடங்கள் இல்லாமல் போனது, முட்டை பொரிக்கும் காலங்களில் புழு, பூச்சிகளின் தட்டுப்பாட்டினால் குஞ்சுகளுக்கு சரியான இரையில்லாமல் போவது போன்றவையே காரணமாக இருக்கலாம் எனச் சொல்லப்பட்டது. இவற்றில் எதாவது ஒன்று மட்டுமே இல்லாமல் இவையனைத்துமே காரணமாக இருக்கவும் கூடும் என்றறியப்பட்டது.

_JEG5894_700

மேலை நாடுகளில் ஓரு குறிப்பிட்ட இடத்திலிருந்து அவை மாயமாய் மறைந்து, எண்ணிக்கையில் குறைந்து விட்டன என்று சொன்ன போது அவர்களிடம் அதற்கு முன் அந்த இடத்தில் எத்தனை சிட்டுக்குருவிகள் இருந்தன என்ற தகவல் இருந்தது. அதாவது ஒவ்வொரு வருடமும் கணக்கெடுப்பு நடத்தியதால் முன்பிருந்ததை விட இப்போது குறைந்து விட்டன என துல்லியமாகச் சொல்ல முடிந்தது. அமெரிக்காவில் கிருஸ்துமஸ் தினத்தன்று அந்நாட்டின் நகரங்களின் பல பகுதிகளில் சுற்றித்திரியும் பறவைகளை கணக்கிடுவார்கள். இப்பணியில் பல தன்னார்வலர்கள் பங்குகொண்டு அவர்கள் பார்த்தவற்றை பதிவு செய்து விஞ்ஞானிகளிடம் அத்தகவலை பகிர்ந்து கொள்வார்கள். இதைப் போன்ற திட்டங்களை நம் நாட்டிலும் செயல்படுத்த வேண்டும். இத்திட்டங்கள் பறவைகளையும், அவற்றின் வாழிடங்களையும் பாதுகாக்கும் எண்ணத்தை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்த உதவும். பொதுமக்கள் அறிவியல் ஆராய்ச்சியில் பங்கு கொள்ளும் இத்திட்டங்களுக்கு மக்கள் அறிவியல் (Citizen Science) என்று பெயர்.

பறவைகள் நாம் வாழும் சூழலின் தன்மையை, நிலையை அறிய உதவும் ஒரு உயிரினம். அதாவது சூழியல் சுட்டிக்காட்டிகள். ஒரு சில வகைப் பறவைகள் ஓரிடத்திலிருந்து குறைந்தாலோ, அழிந்துவிட்டாலோ அவ்விடங்களின் நிலை சீரழிந்து வருகிறது என்பதற்கான அறிகுறியாகும். ஆகவே நம் வீட்டின் அருகிலுள்ள பறவைகளை அடையாளம் கண்டு அவ்வப்போது அவற்றின் எண்ணிக்கையைப் பற்றிய குறிப்புகளை சேகரித்து வைக்கலாம். பறவைகளின் மேல் மட்டுமல்லாமல் இயற்கையின் மீதான கரிசனத்தை இவ்வகையான செயல்கள் அதிகப்படுத்தும்.

 பெண் சிட்டுக்குருவியின் மண் குளியல் (Dust Bathing)

பெண் சிட்டுக்குருவியின் மண் குளியல் (Dust Bathing)

உங்கள் வீட்டினருகில் சிட்டுக்குருவிகள் வருகின்றனவா என கவனியுங்கள். வந்தால் கொஞ்ச நேரம் அவற்றை பார்த்து ரசித்துக் கொண்டேயிருங்கள். தினமும் அவற்றை உங்கள் வீட்டினருகில் வரவழைக்க வேண்டுமா? கப்பலோட்டிய தமிழன் சினிமா பாருங்கள். அதில் பாரதியார் ஒரு காட்சியில் செல்லம்மா கடன் வாங்கி வைத்திருந்த அரிசியை முற்றத்தில் சிட்டுக்குருவிகள் கொத்திச் சாப்பிடுவதற்காக இரைத்து விடுவார். இதைக்கண்டு கோபித்துக்கொள்ளும் செல்லம்மாவிடம் சிட்டுக்குருவிகளின் பசி தீர்த்ததை எண்ணிப் பெருமைப்பட்டு அப்பறவைகளைப் போல் கவலைப்படாமல் இருக்கச்சொல்லி, “விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச் சிட்டுக்குருவியினைப் போலே…” எனப் பாடுவர். அதைப்போல நீங்களும் சிட்டுக்குருவிகளுக்கு தினமும் கொஞ்சம் தானியங்களை வைக்கலாம். கூடவே ஒரு சிறிய பாத்திரத்தில் அவற்றின் தாகம் தீர்க்கத் தண்ணீரையும் வைக்கலாம்.

கூட்டில் பெண் சிட்டுக்குருவி. Photo: Tharangini Balasubramanian

கூட்டில் பெண் சிட்டுக்குருவி. Photo: Tharangini Balasubramanian

ஒரு சிறிய அட்டைப்பெட்டி இருந்தால் (ஷு வாங்கி வந்த பெட்டிகூட போதும்) அது பிரியாமலிருக்க இருபுறமும் பசையிட்டு ஒட்டி, சிட்டுக்குருவி நுழையும் அளவிற்கு ஓட்டை போட்டு வீட்டின் ஓரமாக உயரே தொங்கவிட்டால் சிட்டுக்குருவியின் குடும்பத்தையே உங்கள் வீட்டிற்கே கொண்டுவரலாம். அவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தால் நம் கவலை மறந்து, விட்டு விடுதலையாகி நிற்கலாம்!

******

காக்கை குருவி எங்கள் ஜாதி தொடர். எண் 2. புதிய தலைமுறை 19 ஜூன் 2012

Written by P Jeganathan

July 21, 2012 at 5:22 pm