UYIRI

Nature writing in Tamil

Posts Tagged ‘house crow

பறவைக் கீர்த்தனைகள்

leave a comment »

பறவைகள் மனித குலத்தை ஆதியில் இருந்தே வியக்க வைத்துக் கொண்டிருக்கின்றன. பறவைகளின் வாழ்வியலில் நம் அனைவரையுsம் பெரிதும் கவர்வது அவற்றின் பறக்கும் திறனும், இனிமையான குரலொலியுமே! பறவைகளின் கண்கவர் நிறங்களும், கூடுகட்டுதல், வலசை போதல் போன்ற சில வித்தியாசமான பண்புகளும் நம்மை வியக்க வைத்ததாலும், பறவைகளை சரியாக அவதானிக்கும் பழக்கமும், ஆர்வமும் இல்லாதவர்களையும் கூட ஈர்ப்பது அவற்றின் குரலொலி. மனித குலம் முதன்முதலில் இரசித்த இசை பறவைகளுடையதாகத்தான் இருக்க வேண்டும். அப்பொழுதிலிருந்தே பறவைகள், மனிதர்களின் எண்ணங்களையும், கற்பனைகளையும் ஆட்கொண்டு அவற்றைப் பற்றி இலங்கியங்களில், இசையில், நாட்டியங்களில், ஓவியங்களில், கவிதைகளில் என பல்வேறு கலை வடிவங்களில் பதிவு செய்ய தூண்டுகோலாய் இருந்திருக்கின்றன.

தமிழ் செவ்விலக்கியங்களில் குறிப்பாக, பாடல்களிலும் கவிதைகளிலும் செங்கால் நாரை, கானமயில், சிட்டுக்குருவி என பல பறவைகள் இடம் பெற்றிருக்கும். நாட்டுப்புறப் பாடல்களிலும், சிறுவர் பாடல்களிலும்கூட பல பறவைகள் இடம் பெற்றிருக்கும். ஆயினும் இவை யாவும் உவமைகளாகவோ, உருவகங்களாகவோ, சிறு குறிப்புகளாகவோ அல்லது மிஞ்சிப் போனால் ஓரிரு முழுப் பாடல்களாகவோ மட்டுமே இருக்கும். பறவைகளைப் பற்றி மட்டும், அல்லது ஒரு குறிப்பிட்ட வகைப் பறவையைப் பற்றி மட்டும் புகழ்பாடும் கவிதைகளும், பாடல்களும் அரிதே.

மாறாக ஆங்கிலத்தில் பறவைகளுக்காகவே எழுதப்பட்ட கவிதைகளைக் காணமுடிகிறது. எடுத்துக்காட்டாக, ஜான் கீட்ஸ் (John Keats) எழுதிய நைட்டிங்கேல் எனும் அழகாகப் பாடும் பறவையைப் பற்றிய “Ode to a Nightingale” எனும் கவிதை, வானம்பாடி குறித்த “To a Skylark” எனும் ஷெல்லியின் (P B Shelly) கவிதை. இன்னும் பல பறவைகளைப் பற்றிய கவிதைகளை Billy Collins தொகுத்த “Bright Wings” நூலிலும், Simon Armitage & Tim Dee தொகுத்த “The Poetry of Birds” நூலில் காணலாம்.

ஆங்கிலத்தில் இருக்கும் அளவிற்கு இல்லை என்றாலும், அண்மைய காலங்களில் தமிழிலும், செல்வமணி அரங்கநாதனின்மாட்டுவண்டியும், மகிழுந்தும்…”, (பொன்னுலகம் பதிப்பகம்), அவைநாயகனின் “காடுறை உலகம்” (ஓசை வெளியீடு), ம. இலெனின் தங்கப்பாவின் “உயிர்ப்பின் அதிர்வுகள்” (தமிழினி பதிப்பகம்) முதலிய நூல்களில் இயற்கை குறித்தும், பறவைகள் குறித்தும் பல கவிதைகளைக் காணலாம். பறவைகளை மட்டுமே கொண்ட கவிதைத் தொகுப்பு ஆசையின் “கொண்டலாத்தி” (க்ரியா வெளியீடு). இவை எனது கண்களில் பட்டவை, எனக்குத் தெரியாமல் வேறு சில நூல்களும் இருக்கக்கூடும்.

தமிழ் சினிமாப் பாடல்களில் சில இடங்களில் சில பறவைகளைப் பற்றிய குறிப்புகளும் வரும். சில காலத்திற்கு முன் சிட்டுக்குருவி எத்தனை சினிமாப் பாடல் வரிகளில் வருகிறது என கணக்கிட்டதில் சுமார் 20 பாடல்களை பட்டியலிடமுடிந்தது. ஆனாலும், முழுப்பாட்டும் அந்தப் பறவைக்காக இருக்கவில்லை. எதோ எதுகை மோனையாக அமைய வேண்டும் என்பதற்காகவே சிட்டு எனும் வார்த்தையை பயன்படுத்தி இருப்பார்கள். சிட்டுக்குப் பிறகு தொட்டு, பட்டு, மெட்டு போன்ற வார்த்தைகளையும், குருவிக்கு அடுத்ததாக அருவியும் இருக்கும்.

பறவைகள் பற்றிய கவிதைகள் இருந்தாலும் அவற்றை இசையமைத்துப் பாடலாகப் பாடியது தமிழில் இதுவரை இருந்ததாகத் தெரியவில்லை. அந்தப் பெரும் குறையை எழுத்தாளர் பெருமாள்முருகனும், கர்நாடக சங்கீதப் பாடகர்கள் சங்கீதா சிவக்குமாரும், T.M.கிருஷ்ணாவும், போக்கியிருக்கிறார்கள். எந்த ஒரு முன் உதாரணமும் இல்லாத இந்த அருமையான முன்னெடுப்பில் பாடல் பெற்ற பறவைகள், சிட்டுக்குருவி, ஆந்தை, காகம், பனங்காடை, குயில் ஆகிய பறவைகள். இந்தப் பாடல்கள் அனைத்தையும் T.M.கிருஷ்ணாவின் யூடியுப் சேனலில் கேட்டு மகிழலாம்.

பெருமாள் முருகனின் படைப்புகளில் இயற்கையை நுட்பமாக அவதானித்து எழுதப்பட்ட பல செய்திகளையும், குறிப்புகளையும், உயிரினங்களின் வட்டாரப் பெயர்களையும் காணலாம். தமிழில் பசுமை எழுத்தின் முன்னோடியான மா. கிருஷ்ணன், கலைக்களஞ்சியத்தில் எழுதிய பறவைகளைப் பற்றிய விளக்கங்களையும், வேடந்தாங்கல் பற்றிய குறுநூலையும் “பறவைகளும் வேடந்தாங்கலும்” எனும் நூலாகத் தொகுத்தவர். இப்போது பறவைக் கீர்த்தனைகள், என இயற்கையைப் பற்றிய விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்துவதை தொடர்ந்து செய்து வருகிறார். பறவைகளின் பண்புகளை உற்று நோக்கியும் அவற்றின் சரியான பெயரையும் தெரிந்த ஒருவர் இது போன்ற கீர்த்தனைகளை எழுதியது மகிழ்ச்சி அளிக்கிறது.

கீர்த்தனை என்றாலே கடவுள் சார்ந்தது எனும் எண்ணத்தை மாற்றி இயற்கைக்கும் எனதாக்கிய கர்நாடக சங்கீத பாடகர் தம்பதியரான சங்கீதா சிவக்குமார், T.M.கிருஷ்ணா, அவரது குழுவினரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். இசையைப் பற்றி குறிப்பாக கர்நாடக இசையைப் பற்றிய ஞானம் ஏதும் எனக்கு இல்லை. இருப்பினும் பறவைகளையும், இயற்கையின் கூறுகளையும் கொண்ட எந்த ஒரு கலைப்படைப்பும் இயற்கை ஆர்வலர்களை மிகவும் மகிழ்வுறச் செய்யும். குறிப்பாக இயற்கையின் விந்தைகளைப் பற்றியும், இயற்கையின் ஒரு அங்கமான பறவைகளின் பாதுகாப்பு குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் முனைந்திருக்கும் இயற்கை கல்வியாளர்களுக்கு இது போன்ற கலைப்படைப்புகள் உதவியாக இருக்கும்.

இயற்கையையும் பறவைகளையும் போற்றி, வர்ணித்து மட்டும் எழுதாமல் அவற்றிற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அவற்றைப் பாதுகாக்க நாம் அனைவரும் செய்யவேண்டியவை குறித்தும் பாடல்கள் அதிகம் வரவேண்டும். எண்ணூர் கழிமுகம் குறித்து T.M. கிருஷ்ணா பாடிய “புறம்போக்கு” பாடலைப் போல பறவைகளுக்கும் அவற்றின் வாழிடங்களுக்கு ஏற்படும் பல்வேறு பாதிப்புகள் குறித்தும் பாடல்கள் வரவேண்டும். பறவைகளோடு இல்லாமல், இயற்கையின் அங்கமான வண்ணத்துப்பூச்சி, தட்டான்கள், மரங்கள் என பல்வேறு உயிரினங்கள் குறித்தும் இது போன்ற பாடல்கள் வர வேண்டும். பெருமாள்முருகன் – T.M. கிருஷ்ணா தொகுப்பில் நீர், நிலம், காற்று, தீ, ஆகாயம் ஆகிய இயற்கையின் அங்கங்களைப் பற்றியும், பனை மரத்தைப் பற்றியும் கூட கீர்த்தனைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படைப்புகளை முன்னுதாரணமாகக் கொண்டு, கலைத்துறையில் இயற்கையின் பால், இயற்கை பாதுகாப்பின் பால் ஆர்வம் உள்ள அனைவரும் இது போன்ற பல முயற்சிகளில் ஈடுபடவேண்டும். இந்த வகையில் தீட்சிதா வெங்கடேசனும், அரிவரசும் பாடிய, அண்மையில் நாம் அனைவரையும் கவர்ந்த, மற்றுமொரு பாடல் “எஞ்சாயி, எஞ்சாமி”. இது போல இயற்கை சார்ந்த ராப் பாடல்கள், கானா பாடல்கள் எல்லாம் வர வேண்டும்.

இயற்கையின் விந்தைகளைக் குறித்தும், பாதுகாப்பு குறித்தும் ஆங்கிலத்தில் பதிப்பிக்கப்படும், புள்ளிவிவரங்களைக் கொண்ட ஆராய்ச்சி கட்டுரைகளைக் காட்டிலும், அவற்றைத் தழுவி தாய் மொழிகளில் எழுதப்படும் கட்டுரைகள் தான் பொதுமக்களை எளிதில் சென்றடையும். இது குறித்த விளக்கக் காணொளிகளும், ஆவணப்படங்களும், ஓவியங்களும், சிற்பங்களும், கேலிச்சித்திரங்களும் உதவும். இவற்றின் வரிசையில் இயற்கை பாதுகாப்பிற்கு இசையும் பேருதவி புரியும்.

கலையின் எல்லா வகைகளிலும், வடிவங்களிலும் இயற்கையைப் போற்றவும், பாதுகாக்கவும் படைப்புகள் பல வர படைக்கப்பட வேண்டும். அந்தந்த துறைசார் வல்லுனர்களின் கூட்டணிகள் பல உருவாக வேண்டும். இதற்கு பறவைக் கீர்த்தனைகள் ஒரு முன்னோடியாகத் திகழும் என நம்புவோம்.

—–

தி இந்து தமிழ் 30 May 2021 அன்று வெளியான கட்டுரையின் முழு வடிவம். அக்கட்டுரைக்கான உரலி இங்கே.

2017 – நினைவில் நிற்கும் சில தருணங்கள்

with 2 comments

கடந்த ஆண்டில் பார்த்த, ரசித்த நினைவில் நிற்கும் தருணங்கள் பல. அவற்றில் படங்களில் பதிவு செய்யப்பட்டவை சில. அவற்றில் சிலவற்றை (மாதத்திற்கு ஒன்றாக) இங்கே காணலாம். இந்த பூமிக்கும், அதிலுள்ள எல்லா உயிரினங்களுக்கும் இந்தப் புத்தாண்டு இனிதே அமைய வேண்டும்.


கா..கா…கா…

leave a comment »

காக்காவை நாம் காக்கா என்று அழைப்பதேன்? சிறு குழந்தை கூட சொல்லிவிடும், அது கா..கா என்று கத்துவதால். தெலுகில் காக்கி, ஹிந்தியில் கவ்வா, கன்னடத்தில் காகே என இது எழுப்பும் குரலை வைத்தே இந்தியாவின் பல மாநிலங்களில் இப்பறவைக்குப் பெயரிடப்பட்டுள்ளது.

காகம் அல்லது மணிக்காக்கா

காகம் அல்லது மணிக்காக்கா

காகத்தை முதன்முதலில் எனக்கு அறிமுகம் செய்து வைத்தது எனது அம்மாவாகத்தான் இருக்க வேண்டும். அமாவாசை தினங்களிலும், மற்ற விசேச நாட்களிலும் வடை, பாயாசத்துடன் சமைத்து ஒரு கவளம் சோற்றை கொல்லைப் புற மதில் சுவரின் மேல் வைத்து கா..கா..வென அழைத்து அவை சாப்பிட்ட பின்னரே எனக்கு உணவூட்டுவாள். கூப்பிட்ட கொஞ்ச நேரத்திலெல்லாம் காகங்கள் கூட்டமாக அங்கே பறந்து வந்து விடும்.

அண்டங்காக்கை

அண்டங்காக்கை

சிறு வயதில், நாள் காலை கண்விழித்து வீட்டினுள் இருந்தபடியே வாசலைப் பார்த்தபோது காகங்கள் பக்கவாட்டில் தலையைச் சாய்த்து தமது அலகால் அம்மா போட்ட கோலத்தை எடுத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தன. அரிசி மாவில் கோலம் போட்ட காலமது! கழுத்தில் சாம்பல் நிறத்திலுள்ளது காக்கா, முழுவதும் கருப்பாக இருப்பது அண்டங்காக்கா என காகங்களில் இரண்டு வகை இருப்பதை அறிந்து கொண்டது அப்போதுதான். அரிசி மாவு என அவற்றிற்கு எப்படித்தெரியும் என கேட்டபோது கோலத்தை மொய்க்கும் எறும்புகளைப் பார்த்து வந்திருக்கும் என அம்மா சொன்னாள். இப்படி நினைவுதெரிந்த காலம் முதல் என்னைப்போல பலருக்கும் காகங்கள் பரிச்சயமான பறவைகளில் ஒன்றாக இருக்கும்.

நாம் சாதாரணமாகப் பார்க்கும் காக்கை, அண்டங்காக்கையைத் தவிர இந்தியாவில் தோற்றத்தில் இவற்றை ஒத்துக் காணப்படும் ஐந்து காக்கை வகைகள் தென்படுகின்றன. இவையல்லாது, இமயமலைப்பகுதிகளில் தென்படும் இரண்டு வகை காகங்கள் நாம் பார்க்கும் அண்டங்காக்கையைப் போலவே இருந்தாலும் அவற்றில் ஒன்றிற்கு அலகின் நிறம் சிவப்பாகவும்(Red-billed Chough), மற்றொரு வகைக்கு அலகின் நிறம் மஞ்சளாகவும் இருக்கும் (Alpine Chough). நம்மூர் காகங்களையே பார்த்தவர்களுக்கு வண்ண அலகுடைய இவ்வகையான காகங்களைப் காணும் போது சற்று வியப்பாகத்தான் இருக்கும்.

செம்மூக்கு காகம் (Red-billed Chough)

செம்மூக்கு காகம் (Red-billed Chough) Photo: Vimal

மஞ்சள் மூக்கு  காகம் (Alpine Chough or Yellow-billed Chough). Photo: Arijit Banerjee.

மஞ்சள் மூக்கு காகம் (Alpine Chough or Yellow-billed Chough). Photo: Arijit Banerjee.

காகங்களின் புத்திகூர்மையை நம்மில் பலர் பார்த்தறிந்திருப்போம். பஞ்சதந்திரக்கதையில் தாகத்தைத் தனித்துக்கொள்ள பானையின் அடியில் கிடக்கும் நீரின் மட்டத்தை உயர்த்த சிறு கற்களை போட்ட காகத்தைப்பற்றி பள்ளியில் படித்திருபோம். எல்லா அறிவையும் பெற்றிருக்கிறோமென்ற இறுமாப்புடன் இருக்கும் மனிதர்களாகிய நமக்கு, நம் இனத்தையல்லாத உயிரினங்கள் இயல்பாகச் செய்யும் ஒரு சில செயல்கள் நாம் செய்வதை ஒத்திருப்பது நம்மை வியக்க வைக்கும். கற்கால மனிதன் தீயூட்ட சிக்கிமுக்கிக் கற்களை ஒரு கருவியாகப் பயன்படுத்தினான். இப்படி கருவியை உருவாக்கவும் அதைப் பயன்படுத்துவதும், இவ்வுலகில் மனிதர்கள் அல்லாத உயிரினங்களில் காகமும் ஒன்று. நம் மூதாதயர்களான ஆப்பிரிக்காவிலுள்ள சிம்பன்சிகளையும், அமெரிக்காவில் தென்படும் கடல் நீர்நாயையும் (Sea Otter) மற்ற உதாரணங்களாகச் சொல்லலாம்.

கேலிடொனியன் காகம் (Caledonian crow) என்ற வகைக் காகம் காட்டில் விழுந்து கிடக்கும் பெரிய மரங்களின் இடுக்குகளில் இருக்கும் புழுக்களையும் பூச்சிகளையும் குச்சியை வைத்து பிடிக்கின்றன. கீழே கிடக்கும் குச்சிகளை தமது அலகால் பிடித்து மர இடுக்குகளில் குத்திக் குடையும் போது, அதனுள்ளே இருக்கும் புழுக்கள் எரிச்சலில் அக்குச்சியை தமது வாயுறுப்புகளால் கவ்வுகின்றன. உடனே இக்காகம் குச்சியை வெளியே எடுத்து அதில் மாட்டியுள்ள இரையை பிடித்துச் சாப்பிடுகின்றன. இரை மரத்தினுள் அமைந்திருக்கும் ஆழத்திற்கேற்ப குச்சியின் அளவையும் தேர்ந்தெடுக்கும் திறன்வாய்ந்தவை இக்காகங்கள்!

Calidonian Crow: Photo copyright: Jolyon Troscianko

Caledonian Crow: Photo copyright: Jolyon Troscianko

ஜப்பானில் இருக்கும் ஒரு வகையான அண்டங்காக்கைகள் அங்குள்ள ஒரு நகரத்தில் வாழ்க்கை நடத்துவதற்கான நெளிவு சுளிவுகளை நன்கு கற்றுத்தேர்ந்துவிட்டன. கொட்டைகளை உடைத்து அதனுள் இருக்கும் பருப்பை சாப்பிட இக்காகங்கள் நாம்மை ஆச்சர்யப்படவைக்கும் நூதன முறையை கையாள்கின்றன. வாகனங்கள் விரைந்து செல்லும் நகரத்தின் மையப்பகுதியில் உள்ள ஒரு சிக்னலின் மேலிருந்து தமது அலகால் கடித்து உடைக்க முடியாத கொட்டைகளை கீழே போடுகின்றன. வாகனங்களின் சக்கரத்தில் அரைபட்ட கொட்டைகளிலிருந்து பிறகு பருப்பினை எடுத்துச் சாப்பிடுகின்றன. அதுவும் எப்போது? பாதசாரிகள் நடந்துசெல்வதற்கான விளக்கு எறிந்தவுடனே தான். இல்லையெனில் வாகனங்களில் அடிபட நேரிடுமே! இந்த யோசனை எந்த காகத்திற்கு முதலில் தோன்றியதோ தெரியவில்லை, ஆனால் இது நடந்தது பத்து வருடங்களுக்கு முன். இன்று அப்பகுதியிலுள்ள எல்லா காகமும் ஒன்றைப்பார்த்து ஒன்று கற்றுக்கொண்டு இதே உத்தியை கையாள்கின்றன.

இந்தியாவில் பரவலாகக் காணப்படும் காகத்தின் தந்திர குணங்களையும், புத்திகூர்மைகளையும் பற்றி Douglas Dewar 1905ல் எழுதிய The Indian Crow எனும் புத்தகத்தில் விரிவாகக் காணலாம் (இப்புத்தகத்தை இலவசமாக இணையத்தில் தரவிரக்கம் செய்து கொள்ளலாம் – <https://archive.org/details/indiancrowhisboo00dewa>).

இந்தியாவின் புகழ்பெற்ற இயற்கையியலாளரான ம. கிருஷ்ணனும் காகங்களைப்பற்றி கட்டுரைகள் எழுதியுள்ளார். காகத்தைப் பற்றிக் கூறும் போது குயிலைப் பற்றி குறிப்பிடாமல் இருக்கமுடியாது. என்னதான் காகம் புத்திசாலியாக இருந்தாலும் குயில் தந்திரமாக அதை ஏமாற்றிவிடும். கோடை காலங்களில் காகங்கள் கூடு கட்டி முட்டையிடும் போது ஆண் குயில் அவற்றின் கூட்டினருகே சென்று அவற்றின் கவனத்தை ஈர்க்கும். உடல் முழுதும் கருப்பாக இருப்பது ஆண் குயில், அடர் பழுப்பு நிறத்தில் வெண் புள்ளிகளுடன் இருப்பது பெண் குயில்.

ஆண் குயில் (இடது), பெண் குயில் (வலது) Illustation: Wikimedia Commons

ஆண் குயில் (இடது), பெண் குயில் (வலது) Illustration: Wikimedia Commons

இந்த ஆண் குயில் காகத்தின் கூட்டினருகில் வருவதைக் காணப்பொறுக்காமல் அதை பறந்து சென்று விரட்டியடிக்கும். இவ்வேளையில் பெண் குயில் காகத்தின் கூட்டிற்குச் சென்று தனது முட்டையை இட்டு விடும். இதன் முட்டை காகத்தின் முட்டையின் நிறத்திலேயே இருப்பதால் காகத்திற்கு வித்தியாசம் தெரியாது. இது போதாதென்று காகத்தின் முட்டை பொறிப்பதற்கு முன்பாகவே குயிலின் முட்டை பொறிந்து குஞ்சு வெளியே வந்து விடும். இக்குஞ்சும் காகத்தின் குஞ்சை ஒத்திருப்பதால் காகமும் அதற்கு உணவளிக்க ஆரம்பித்துவிடும். காகமும் குயிலும் இவ்வாறு ஒன்றையொன்று சார்ந்தே பரிணமித்திருக்கின்றன. குயில்களின் இனிமையான குரலைக் கேட்டு மகிழ்ச்சியுறுவோர் காகத்திற்கு நன்றி சொல்லவேண்டும். 

Asian_koel_brood_parasite_captions

Illustration: Wikimedia Commons

காகம் மனிதர்களுக்கு பலவகையில் சேவை செய்யும் பறவை. வீட்டில் பொறி வைத்து எலியைக் கொன்று மண்ணில் புதைத்து சமாதியா கட்டுகிறோம்? தெருவிலோ, குப்பைத்தொட்டியில் தானே வீசி எறிகிறோம். இவற்றையெல்லாம் தின்று சுத்தம் செய்வது யார்? காகங்களே. புறவுலகின் பால் நாட்டமேற்பட இயற்கைக் கல்வியாளர்கள் குழந்தைகளுக்கும், பொது மக்களுக்கும் பெரும்பாலும் சொல்லிக்கொடுப்பது பறவை அவதானிப்பையே (Birdwatching). காகங்களைப் பார்ப்பதற்கும், அவற்றின் வித்தியாசமான செயல்களை உற்றுநோக்குவதற்கும், புகைப்படமெடுப்பதற்கும் நாம் செலவு செய்யவோ, எங்கும் பயனிக்கவோ அவசியமில்லை. ஒரு கவளம் சோறு போதும்!

******

காக்கை குருவி எங்கள் ஜாதி தொடர். எண் 1. புதிய தலைமுறை 12 ஜூன் 2012

Written by P Jeganathan

June 14, 2012 at 3:57 pm