Posts Tagged ‘roadkill’
வன உயிரின வார துவக்க விழா-2015, திருப்பூர் – சில பதிவுகள்
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் வாரம் இந்தியாவில் வன உயிரின வார விழாவாக கொண்டாடப்படுவது நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கும். இந்த ஆண்டு திருப்பூரில் 02-09-2015 அன்று, வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் நடந்த அதற்கான துவக்க விழாவிற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
வன உயிரின வார விழா கொண்டாட்டம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. ஒரு பெரிய அறையில் காட்டுயிர் பேணலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அரசு சாரா இயக்கங்களின் செயல் திட்டங்களை விவரிப்பதற்காகவும், ஆனைமலை, முதுமலை மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகங்களுக்காகவும் தனித்தனியாக அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. கோவையைச் சேர்ந்த ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் விளாக்கவுரைகளுடன் கூடிய காட்டுயிர் படக் கண்காட்சியும் அதே அறையில் வைக்கப்பட்டிருந்தது. மற்றொரு பெரிய கலையரங்கத்தின் மேடையில் கலை நிகழ்ச்சிகளும், சிறப்பாக பணிபுரியும் வனத்துறை அதிகாரிகளுக்கும், வன உயிரின வார போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குதலும் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
காலையில் அரங்கின் உள்ளே நுழைந்தவுடனே ஒரு வேதனையான நிகழ்வைப் பார்க்க நேர்ந்தது. வாசலில் ஒரு கூட்டம் எதையோ சூழ்ந்து, வேடிக்கைப் பார்த்துக்கொண்டும், போட்டோ எடுத்துக்கொண்டும் இருந்தது. உள்ளே எட்டிப் பார்த்தேன்; பெரிய கூண்டு தென்பட்டது. புலி வேடமணிந்த ஒருவர் அதனுள்ளே மண்டியிட்டு நடந்து சென்றவுடன் கூண்டின் கதவு பலத்த ஓசையுடன் மூடிக்கொண்டது. சுற்றி நின்றவர்கள் சிரித்தும், கைகொட்டியும் ஆர்ப்பரித்தனர். இத்தகைய செயல்பாடுகள், வனத்துறையினர் இது போன்ற வேலைகளை மட்டுமே செய்வார்கள் என்கிற ஒரு தவறான எண்ணத்தைத் தந்துவிடும்.
காட்டுயிர்களுக்கு மனிதனால் வரையறுக்கப்பட்ட எல்லைகள் கிடையாது, பல உயிரினங்கள் மனிதனின் செயல்களால் அழிந்தும், அற்றும் போய்க்கொண்டிருக்கின்றன, காட்டுயிர்களையும், அவற்றின் வாழிடங்களையும் பாதுகாப்பது நாம் அனைவரின் கடமை, இதற்காக பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன? திருட்டு வேட்டையில் ஈடுபடுவோரை பிடிக்க எப்படி பொதுமக்கள் வனத்துறைக்கு உதவி செய்யலாம் என்பதைப் பற்றியெல்லாம் படங்கள், திரைப்படங்கள், நாடகம் மூலமாக பார்வையாளர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இவை யாவும் புலி எப்படி கூண்டு வைத்து பிடிக்கப்படுகிறது என்று விளக்கிச் சொல்வதைக் காட்டிலும் மிகவும் அவசியமானதும், முக்கியமானதும் ஆகும்.
கலை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்த அரங்கிற்குள் சென்று பார்த்தேன். ஒலிபெருக்கியின் ஓசை காதைக் கிழித்தது, சற்று நேரத்திலேயே வெளியே வந்து விட்டேன். அரங்கின் பின் பக்கத்திற்குச் சென்ற போது பள்ளி மாணவ மாணவியர் புலி, மயில், மரம் என பலவித வேடங்களில் அவர்களது நிகழ்ச்சிகளுக்காக தயாராகிக் கொண்டிருந்தனர். மயில் வேடமனிந்தவர்கள் உண்மையான மயில் தோகையை அணிந்திருந்தனர். இவை எப்படி, எங்கிருந்து வந்தது என்பதை அவர்கள் அறிந்திருப்பார்களா?
அரங்குகள் நிறைந்த அறைக்குள் நுழைந்து பார்வையிட்டேன். வனத்துறை மற்றும் இயற்கை பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும் நண்பர்கள் பலரை ஒரே இடத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த அறையின் நடுவிலும் ஒரு சிறிய கூண்டையும், அதன் மேலே ஒரு பெரிய புலி பொம்மையையும் பார்வைக்கு வைத்திருந்தனர். என்ன சொல்ல வருகிறார்கள் என்பதே புரியவில்லை. அந்தப் பொம்மைப் புலியைச் சுற்றிக் கூட்டம் கூடுவதும் கலைவதுமாக இருந்தது. பெரும்பாலானோர் அந்த பொம்மைப் புலியை தொட்டுப் பார்த்துக் கொண்டும், அதனருகில் நின்று கைபேசியில் படமெடுத்துக் கொண்டும் இருந்தனர்.
ஒரு அரங்கில் சிறுத்தையை வலையை வைத்துப் பிடிக்கும் காட்சியைத் தொடர்ந்து ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர். பார்க்கப் பாவமாக இருந்தது. உயிரினங்கள் பிடிக்கப்படுவது போன்ற காட்சிகளை மட்டுமே தொடர்ந்து ஒளிபரப்பாமல், மனித காட்டுயிர் எதிர்கொள்ளலை சமாளித்தல் பற்றிய படங்களையும், இது போன்ற நிகழ்வுகளுக்கான காரணங்களை விளக்கும் காட்சிகளையும் சேர்த்து திரையிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
வனப்பகுதியை ஒட்டிய சில இடங்களில் எதிர்பாரா விதமாக மனிதர்கள் வசிக்கும் பகுதியில் நுழைந்து விட்ட காட்டுயிர்களை யாருக்கும் (அந்த உயிரினத்திற்கும், அங்குள்ள மனிதர்களுக்கும்) தொந்தரவு ஏற்படாத வண்ணம் பிடிப்பதும், விரட்டிவிடுவதும் சில வேளைகளில் அவசியமாகிறது. ஆனால் அவற்றை பிடிப்பதும், விரட்டுவதும் மட்டுமே மனித-காட்டுயிர் எதிர்கொள்ளலை சமாளிக்க நிரந்தரத் தீர்வாகிவிடாது. வனப்பகுதிகளின் அருகாமையில் வாழ்பவர்களுக்கு காட்டுயிர்களின் குணங்களையும், அவை குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் அடிக்கடி நடமாடாமல் இருக்க நாம் செய்ய வேண்டியவைகளையும் எடுத்துச் சொல்வது அவசியம். மனிதர்-சிறுத்தை எதிர்கொள்ளலை சமாளிக்க எடுக்க வேண்டிய சில செயல் முறைகளை இந்த விளக்கச் சுவரொட்டிகளில் காணலாம்.
வால்பாறையில் பல வழிகளில் மனிதர்-யானை எதிர்கொள்ளலை குறைக்க/சமாளிக்க பாடுபட்டுக் கொண்டிருக்கும் எனது நண்பர் முனைவர் ஆனந்தகுமாரின் செயல் திட்டங்களை விளக்கும் குறும்படத்தை இந்த விழாவில் திரையிடவும், ஒரு விளக்கச் சுவரொட்டியை அங்கே காட்சிக்கு வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேர மாறுதல்களால் அக்குறும்படம் திரையிடப்படவில்லை. வால்பாறையில் யானைகளும் மனிதர்களும் ஒத்திசைந்து வாழ வழிசெய்யும் முன்னறிவிப்பு முறைகளை விளக்க வனத்துறை தனியாக ஒரு அரங்கையே அமைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
யானை-மனிதர் எதிர்கொள்ளலை சமாளிக்கும் இந்த முக்கியமான திட்டத்தினைப் பற்றிய விளக்கச் சுவரொட்டியைக் கீழே காணலாம். திரையில் பெரிதாகப் பார்க்க அதன் மேலே சொடுக்கவும்.
புலிகள் காப்பக அரங்குகளில் பாடம்செய்யப்பட்ட சில காட்டுயிர்களை பார்வைக்கு வைத்திருந்தனர். முதுமலை புலிகள் காப்பகத்தின் அரங்கில் பார்த்த காட்சி என் மனதை கலக்கமடையச் செய்தது. பாடம்செய்யப்பட்ட சிறுத்தை, யானைக் குட்டி, அலங்கு இரண்டு கரடிக் குட்டி ஆகிய உயிரினங்களை வனச்சூழலில் இருக்குமாறு அமைத்திருந்தனர். தத்ரூபமாக காட்சியளிக்க இயற்கையான சூழலில் இருந்தே தாவரங்களை எடுத்து வந்து அங்கு அலங்காரப் படுத்தியிருந்தார்கள். அழகிய பெரணிச் செடிகள் (தகரை – Ferns), மரங்களில் படர்ந்திருக்கும் பாசிச் செடிகள் (Moss), மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் உயரமான பகுதிகளில் மட்டுமே தென்படும் மலைப்பூவரசு (Rhododendron), சேம்பு வகைச் செடி (Arisaema), தரையில் வளரும் ஆர்கிடு (Orchid) முதலிய தாவரங்களை பார்க்க முடிந்தது. இது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.
கோவையைச் சேர்ந்த ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் கானுயிர் படக்கண்காட்சி அருமையாக இருந்தது. வெறும் படங்களை மட்டுமே காட்சிக்கு வைக்காமல் விளாக்கவுரைகளையும் இடையிடையே வைத்திருந்தார்கள். வனப்பகுதியைப் பிளந்து அமைக்கப்படும் சாலைகளினால் காட்டுயிர்களுக்கு ஏற்படும் ஒரு முக்கியமான பாதிப்புகளில் ஒன்று அங்கே சீறி வரும் வாகனங்களில் அடிபட்டு சாலைப்பலியாதல் (Roadkill). அதைப்பற்றிய விளக்கப்படங்கள் வைக்கப்பட்டிருந்தது.
மேற்குத் தொடர்ச்சி மலை – நம் நதிகளின் தாய்மடி எனும் தலைப்பில் ஒரு நதி எப்படி உற்பத்தியாகும்? எனும் படங்களுடன் கூடிய விளக்கவுரை அருமை. தமிழகத்தில் தென்படும் வண்ணத்துப்பூச்சிகளின் படங்களும், குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மட்டுமே தென்படும் ஓரிடவாழ் வண்ணத்துப்பூச்சிகளின் (Endemic butterflies) படங்களையும் காட்சிக்கு வைத்திருந்தனர். படங்களில் ஆங்கிலப் பெயர் மட்டுமே இருந்தது. வண்ணத்துப்பூச்சிகளுக்கு இப்போது தமிழிலும் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது, அவற்றையும் இது போன்ற படங்களில் சேர்க்க வேண்டும். காண்க “வண்ணத்துப்பூச்சிகள் – அறிமுகக் கையேடு”.
தமிழகத்தில் காட்டு ஆராய்ச்சி, இயற்கைப் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபட்டுக்கொண்டுள்ள பல அரசு சாரா நிறுவனங்களின் (WWF-India, Zoo Outreach Organization, Wildlife & Nature Conservation Trust, SACON, Kenneth Anderson Nature Society, Traffic India, Keystone Foundation, Arulagam Trust, Nature Society of Tirupur.) அரங்குகள் பல இருந்தன.
பாறு கழுகுகளின் (Vultures – பிணந்தின்னிக் கழுகுகள்) பாதுகாப்பிற்காக பாடுபட்டு வருபவர்கள் அருளகம் அமைப்பைச் (Arulagam Trust) சேர்ந்தவர்கள். பாறு இனப் பறவைகள் பல அழிவின் விளிம்பில் இருக்கின்றன. ஒரு காலத்தில் வானமெங்கும் கூட்டம் கூட்டமாக பறந்து திரிந்த அவை, எண்ணிக்கையில் 99% அழிந்து போய்விட்டது. குறிப்பாக Gyps வகை பாறுகள். காரணம் Diclofenac எனும் கால்நடைகளுக்கான வலிநீக்கி மருந்து. உடல் வலிக்காக செலுத்தப்படும் இம்மருந்து அக்கால்நடை இறந்த பின்னும் அதன் உடலின் உள்ளுறுப்புகளில் தங்கி விடுகிறது. அதை உண்ணும் பாறுகளுக்கு அம்மருந்து நஞ்சாகிறது. ஆகவே தான் பாறுகள் எண்ணிக்கையில் குறைந்து பல இடங்களிலிருந்து அற்றும் போய்விட்டன. தற்போது Diclofenac இந்திய அரசால் தடை செய்யப்பட்டு விட்டது. எனினும் இந்த மருந்து இன்னும் புழக்கத்தில் தான் இருக்கிறது.
பாறு கழுகுகள் இறப்பதற்கான காரணம், Diclofenac மருந்தின் விளைவு, இயற்கையாக இறந்த உயிரினங்களை புதைக்காமல் இருத்தலின் நன்மை இவற்றையெல்லாம் மையக்கருத்தாக வைத்து ஒரு அருமையான பரமபத விளையாட்டை உருவாக்கியிருந்தனர் அருளகம் அமைப்பினர். பள்ளி மாணவர்கள் தாயக்கட்டைகளை உருட்டி விளையாட, ஒவ்வொரு நகர்விலும் பாறு கழுகின் பாதுகாப்பினைப் பற்றி அறிந்து கொள்ள ஏதோ ஒரு தகவல் அச்சிடப்பட்டிருந்தது. அதை அருளகம் அமைப்பினர் விளையாடுவோருக்கு விளக்கிக் கொண்டிருந்தனர். பார்வையாளர்களை ஈடுபடுத்தி, அவர்களாகவே ஒரு தகவலை அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் இது போன்ற விளையாட்டுகள் இவ்வகையான நிகழ்ச்சிகளில் பெருக வேண்டும்.
காட்டுயிர்களை திருட்டு வேட்டையாடி அவற்றின் பாகங்களை அல்லது அவற்றை உயிருடன் கடத்தப்படுவதைக் கண்கானித்து, அது பற்றிய தகவல்களை சேகரித்து இது போன்ற செயல்களை கட்டுப்படுத்த அரசுக்கு தகவல் அளித்து உதவும் ஒரு அரசு சாரா நிறுவனம் Traffic India. இவர்களது அரங்கில் அலங்கினைப் பற்றிய ஒரு விளக்கச் சுவரொட்டி வைத்திருந்தனர். அதைப் படிக்கப் படிக்க வேதனையாக இருந்தது. அலங்கின் செதில்களுக்காகவும், மாமிசத்திற்காகவும் 2008-2014 வரை குறைந்தபட்சம் 3000 வரை கொல்லப்பட்டு கடத்தப்பட்டிருக்கிறது. இது ஒரு தோராயமான மதிப்பீடு தான், உண்மையான எண்ணிக்கை இதை விட அதிகமாகத்தான் இருக்கும். மேலும் விவரங்களுக்கு இப்பக்கத்தை காண்க.
அரங்கின் வெளியே மதிய உணவிற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருந்தார்கள். உயர் அதிகாரிகளுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும் அரங்கின் உள்ளே மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உள்ளேயிருந்த பிளாஸ்டிக் தண்ணீர் குப்பியும், வெளியே கிடந்த ஐஸ்கிரீம் சாப்பிடத் தந்த பிளாஸ்டிக் தட்டும், காலையில் மாணவர்களால் ஏந்தப்பட்டு மதிய வேளையில் தரையில் போடப்பட்டிருந்த வாசக அட்டைகளும், எனது கண்ணை உறுத்தியது. “Say Goodbye To plastic” என்றது ஒரு வாசக அட்டை. அரசு விழாக்களில் இது போன்ற பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக தவிர்த்தால் நன்றாக இருக்கும்.
இதையெல்லாம் பார்த்துவிட்டு வெளியே வந்த போது எதிரே ஒருவர் பல பைகளை உடைய பச்சை உடையணிந்து, அச்சிறிய பைகளில் மரக்கன்றுகளை வைத்துக் கொண்டு வளாகத்தில் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார். அவரது உடையில் “மரம் நடுவீர்!”. “நட்ட மரத்தை பாதுகாத்திடுவீர்!” எனும் வாசகங்கள் அச்சடித்து ஒட்டப்பட்டிருந்தது. அவரது அருகில் சென்று அறிமுகம் செய்து கொண்டேன். என் பெயர் ‘மரம் அய்யப்பன்’ என்றார். மரத்தை தன் உடலில் மட்டுமல்ல பெயரிலும் தாங்கிக் கொண்டிருப்பவர். மரக்கன்றுகளின் பாரத்தைத் தாங்கிக் கொண்டு ஆடி அசைந்து நடந்து சென்றார். வேடிக்கையான தோற்றத்தில் இருந்த அவரை அனைவரும் திரும்பிப் பார்த்து புன்னகை புரிந்தனர். சிலர் அவரைத் தேடிச் சென்று பாராட்டினர்.
Wildlife Week Celebration என்பதைத்தான் வன உயிரின வாரவிழா என தமிழில் சொல்கிறோம். Wildlife எனும் ஆங்கிலச் சொல்லின் அர்த்தம் வனத்தில் இருக்கும் உயிரினங்களை மட்டுமே குறிப்பது அல்ல. நம் வீட்டின் உள்ளே இருக்கும் பல்லி, நாம் தெருவில் பார்க்கும் காகம், வீட்டுத் தோட்டத்தில் வளரும் புற்கள், அதில் இருக்கும் சிறிய பூச்சி இவையனைத்தும் கூட Wildlifeல் அடக்கம். வன உயிரின வாரவிழா எனும் பெயரை மாற்றி புறவுலகைப் போற்றும் வாரவிழா எனக் கொண்டாட வேண்டும். புறவுலகிற்கு ஏற்படும் பாதிப்புகளையும், அவற்றைத் தவிர்க்க நம்மால் செய்ய வேண்டியதையும், இயற்கை மற்றும் நமது பல்லுயிர் வளத்தினைப் பற்றி அறிந்து கொள்ளவும், அவற்றைப் போற்றவும் இது போன்ற நிகழ்ச்சிகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த ஒரு வார காலத்தில் பெற்ற படிப்பினையை வாழ்நாள் முழுவதும் அனைவரின் ஞாபகத்திலும் வைத்துக் கடைபிடிக்குமாறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டும். கிடைக்கும் இந்த வாய்ப்பை அரசுத் துறைகளும், அரசு சாரா நிறுவனங்களும் சரியான முறையில் பயன்படுத்துதல் அவசியம்.
——–
9 அக்டோபர் அன்று தி ஹிந்து தமிழ், சிந்தனைக்களம், வலைஞர் பக்கத்தில் “சரியாக நடக்கின்றனவா வன உயிரின வார விழாக்கள்? எனும் தலைப்பில் வெளியான கட்டுரையின் முழுவடிவம். அதன் உரலி இங்கே. அதன் PDF இங்கே.
இயற்கையை அழித்தா வளர்ச்சி?
கடந்த ஆகஸ்டு 2014 மற்றும் ஜனவரி 2015 நடந்த இரண்டே தேசிய காட்டுயிர் வாரியக் (National Board for Wildlife – NBWL) கலந்தாய்வுக் கூட்டங்களில், காட்டுயிர் சரணாலயங்களிலும் தேசிய பூங்கா பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் உள்ள சுமார் 2,300 ஹெக்டேர்கள் இயற்கையான வாழிடப் பகுதிகள், வளர்ச்சிப் பணிகளுக்காக எடுத்துக் கொள்வதற்காக ஆலோசனை செய்யப்பட்டது. சென்ற ஆண்டு செப்டம்பரிலிருந்து டிசம்பர் வரை நடந்த வன ஆலோசனை செயற்குழு (Forest Advisory Committee) கூட்டங்களில், சுமார் 3,300 ஹெக்டேர்கள் பரப்பு வனப்பகுதியை 28 வளர்ச்சித் திட்டங்களுக்காக எடுத்துக் கொள்ளவும் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்தக் கோரிக்கைகள்யாவும் சாலை, இரயில் பாதை மற்றும் மின் தொடர் கம்பிகள் அமைக்கும் திட்டங்களுக்காகவே. இத்திட்டங்களில் பல பெரும்பாலும் ஒப்புதலும் பெற்றுவிடும்.
சுரங்கப் பணிகளுக்காகவும், விவசாயத்திற்காகவும் திருத்தப்பட்டு, நீர்த்தேக்கங்களின் கீழ் அமிழ்ந்து வனப்பகுதிகள் காணாமல் போகும் இவ்வேளையில், பல்லாயிரம் கி.மீ நீளங்களில் இயற்கையான வாழிடங்களை ஊடுருவி அமைக்கப்படும் , நெடிய சாலை, கால்வாய், இரயில் பாதை, மின்கம்பித் தொடர் போன்ற நீள் கட்டமைப்புத் திட்டங்கள் (Linear infrastructure Projects) நமது வனங்களை அபாயத்திற்குள்ளாக்குகின்றன.
சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகமும் (Ministry of Environment, Forest and Climate Change), இது போன்ற திட்டங்களுக்கு ஆதரவாக அதன் வரைமுறைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்திக் கொண்டே கொண்டே இருக்கிறது. உதாரணமாக, இந்த அமைச்சகம், இது போன்ற திட்டங்களை செயல்படுத்தும் மத்திய நிறுவனத்திற்கு மரங்களை வெட்ட கொள்கையளவில் அனுமதி அளித்துள்ளது, அதாவது வனப்பாதுகாப்புச் சட்டம் 1980ன் கீழ் முதல் கட்ட ஒப்புதலை அளித்துள்ளது. இன்னும் எளிதாகச் சொல்ல வேண்டுமானால் இது போன்ற திட்டங்களுக்கு கோட்ட வன அலுவலரின் (Divisional Forest Officer) அனுமதி மட்டுமே போதும். இதனால் வளர்ச்சிப் பணிகளுக்காக வனப்பகுதிகளை கையகப்படுத்தும் வேளையில், எடுத்துக் கொள்ளப்படும் வனப்பரப்பப்பிற்கு சரிசமமான இடத்தை வேறெங்கிலும் கொடுத்து ஈடுகட்டி, காடு வளர்ப்புத் திட்டங்கள் தொடர்பான இரண்டாம் கட்ட ஒப்புதல்கள் எதையும் பெறத்தேவையில்லை.
இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பொருளாதார மேம்பாட்டிற்கும், துரிதமாக இடம்விட்டு இடம் செல்லவும், சரியான நேரத்தில் செய்ய வேண்டிய சேவைகளுக்கும் சாலைகளும், மின் தொடர் கம்பிகளும் துணைபுரியும் என்பதென்னவோ உண்மைதான். ஆனால், அதே வேளையில் அவை இயற்கையான வாழிடங்களுக்கும், கிராமப்புறத்தில் வாழும் பொதுமக்களுக்கும், பழங்குடியினருக்கும் பல்வேறு வகையில் ஊறு விளைவிக்கின்றன. வாழிடங்களை துண்டாடுகின்றன. வனப்பகுதியின் வழியே செல்லும் சாலைகள் அகலமாகிக் கொண்டே போவதும் வாகனப் பெருக்கமும் காட்டுயிர்கள் இடம்பெயர்விற்கு தடையாக உள்ளன. இதனால் பெரும்பாலான காட்டுயிர்கள் சாலைகளைக் கடந்து செல்வதை தவிர்க்கின்றன. பல காட்டுயிர்களுக்கு சாலைகள் கிட்டத்தட்ட வனப்பகுதியின் குறுக்கே கட்டப்பட்ட மிக உயரமான சுவரைப் போலவோ அல்லது வெட்டப்பட்ட ஆழமான அகழியைப் போலவோதான். சாலை விரிவாக்கத் திட்டங்களும், நான்கு வழிச்சாலைகளும் பல காட்டுயிர்களின் இயற்கையான வழித்தடங்களை வெகுவாக பாதிக்கின்றன. உதாரணமாக, மத்திய இந்தியாவில் உள்ள பெஞ்ச் மற்றும் கான்ஹா புலிகள் காப்பத்தின் குறுக்கே போடப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை 7 அங்குள்ள மிக முக்கியமான காட்டுயிர் வழித்தடத்தை ஊடுருவி செல்கிறது செல்கிறது.
சாலைகள், மலைப்பாங்கான பகுதிகளில் வனப்பகுதியின் சீரழிவிற்கும், நிலச்சரிவிற்கும், மண் அரிப்பிற்கும் காரணமாகின்றன. இதை இமயமலைப் பகுதிகளிலும், மேற்குத் தொடர்சி மலைப்பகுதிகளிலும் தினம் தோறும் காணலாம். சிதைக்கப்படாத வனப்பகுதியைக் காட்டிலும், செங்குத்தான மலைச்சரிவில் போடப்பட்டுள்ள சாலையினால் பல நூறு மடங்கு நிலச்சரிவும், மண் அரிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது என 2006ல் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மலைப்பாதையின் வழியே செல்லும் சாலையோரங்களில் உள்ள இயற்கையாக வளர்ந்திருக்கும் தாவரங்கள் சரிவில் இருக்கும் மண்ணை இறுக்கிப் பிடித்துக் கொள்ளவும், நிலச்சரிவினை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. ஆனால், சாலை இடும் பணிகள், ஓரிடத்தில் சுரண்டப்பட்ட மண், கப்பி முதலிய தேவையற்ற பொருட்களை சாலையோரங்களில் கொட்டிக் குவித்தல், இயற்கையாக வளர்ந்திருக்கும் சாலையோரத் தாவரங்களை வெட்டிச் சாய்த்தல், போன்ற அந்த நிலப்பகுதிக்கும், சூழலுக்கும் ஒவ்வாத வகையில் செய்யப்படும் போது, இயற்கையான சூழல் சீரழியவும், மண் அரிப்பு மென்மேலும் ஏற்படவும், களைச்செடிகள் பெருகவும் ஏதுவாகிறது.
இது மட்டுமல்ல, இலட்சக்கணக்கான காட்டுயிர்கள் சீறி வரும் வாகனங்களின் சக்கரங்களில் நசுங்கி உயிரிழக்கின்றன. சின்னஞ்சிறு பூச்சிகள், பல அரிய, உலகில் வேறெங்கிலும் தென்படாத தவளை மற்றும் ஊர்வன இனங்கள், பறவைகள், பெரிய காட்டுயிர்களான மான், சிறுத்தை, புலி ஏன் யானைகள் கூட சாலையில் அடிபட்டு உயிரிழந்து கொண்டிருப்பதை இந்தியாவில் நடத்தப்பட்ட பல ஆய்வுகள் மூலமாக அறியமுடிகிறது. இந்த சில ஆய்வு முடிவுகளின் படி இந்தியாவில் நாள் ஒன்றிற்கு, ஒரு கிலோ மீட்டர் தூரத்தில், சுமார் 10 உயிரினங்கள் மடிந்து போவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தொகை இன்னும் கூடுதலாகவே இருக்கக் கூடும். ஏனெனில், பதிவு செய்யப்படாமல் போன, சாலையில் உயிரிழந்த உயிரினங்களையும், வாகனத்தில் அடிபட்டு அதே இடத்தில் உயிரிழக்காமல் ஊனமாகவோ, சிறிது நாள் கழித்தோ, வேறிடத்திலோ இறந்து போனவற்றை நாம் அறிய முடியாத காரணத்தினால் அவை கணக்கில் வராது.
தினமும் எண்ணிலடங்கா காட்டுயிர்கள் மின்னோட்டமுள்ள கம்பிகளால் கொல்லப்படுகின்றன. திருட்டு வேட்டையர்கள் மின் கம்பிகளிலிருந்து திருட்டுத்தனமாக மின்சாரத்தை இழுத்து காண்டாமிருகம், மான்கள் என பல வகையான உயிரினங்களைக் கொல்கின்றனர். மின் கம்பிகளினூடே பறந்து செல்லும் போது எதிர்பாராவிதமாக பூநாரை (Flamingo), சாரஸ் பெருங்கொக்கு (Sarus Crane), பாறு கழுகுகள் (Vultures), கானல் மயில் (Great Indian Bustard) போன்ற பல வித பெரிய பறவையினங்கள் உயிரிழக்கின்றன. மின் வேலிகளால் யானைகளும் காட்டெருதுகளும் (Gaur) கூட மடிகின்றன. இரயில் தடங்களில் அரைபட்டும் பல உயிரினங்கள் தினமும் உயிரிழிக்கின்றன. எனினும் யானை முதலான பெரிய உயிரினங்கள் இவ்வாறு அடிபட்டுச் சாகும் போதுதான், இவை நமது கவனத்திற்கு வருகின்றன. இவ்வாறு தினமும் நடக்கும் காட்டுயிர் உயிரிழப்பு, நீள் கட்டமைப்புத் திட்டங்கள், காட்டுயிர்ப் பாதுகாப்பினை கவனத்தில் கொள்ளாமல் செயல்படுத்தப்படுவதையே காட்டுகிறது.
இந்த நீள் கட்டமைப்புத் திட்டங்களினால் ஏற்படும் பாதிப்பு அவற்றிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தைவிடவும் பன்மடங்கு அதிகம் என்பதே சோகமான உண்மை. சாலை, இரயில் தடம், மின் கம்பித் தொடர் இவற்றிற்காக அகற்றப்படும் பகுதியினால் இயற்கையான வாழிடத்திற்கு ஏற்படுத்தப்படும் பாதிப்பு அங்கு மட்டுமே இல்லாமல், அவ்வாழிடம் சிதைந்திருப்பதை அதன் ஓரங்களிலும், அதையும் தாண்டி அவ்வாழிடத்தினுள்ளே பல தூரம் வரையும் காண முடியும். இயற்கையான வாழிடத்தின் குறுக்கே செல்லும் ஒவ்வொரு கிலோ மீட்டர் சாலையும் குறைந்தது அதைச் சுற்றியுள்ள 10 ஹெக்டேர்கள் பரப்பிற்கு பாதிப்பினை ஏற்படுத்தும். கர்நாடகாவில் உள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் 2009ல் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் விளைவாகக வனத்தின் உட்பகுதியினை விட சாலையோரங்களில் மரங்கள் சாவது இரண்டரை மடங்கு அதிகம் என கண்டுபிடிக்கப்பட்டது. இது போலவே, காட்டுயிர்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் நடத்தைக்கு ஏற்படும் பாதிப்பு சாலையிலிருந்து வனத்தினுள் சுமார் 1 கீமீ துரத்திற்கு இருந்தது. சாலைகள் சூழியல் பொறியாகவும் (Ecological traps) விளங்குகிறது. அதாவது வனப்பகுதியில் உள்ள பாம்பு, ஓணான் முதலிய ஊர்வன இனங்கள் வெயில் காய (Basking) இயற்கையான பாறை, கட்டாந்தரையை விட்டு விட்டு சாலைக்கு வருகின்றன. (குளிர் இரத்தப் பிராணிகளான அவை உயிர்வாழ அவற்றின் உடலின் வெப்பநிலையை, சுற்றுப்புறத்துடன் சமநிலை செய்து கொள்ள வெயில் காய்வது இன்றியமையாதது). இந்தியாவில் சாலைகளினாலும், போக்குவரத்தினாலும் காட்டுயிர்களுக்கு ஏற்படும் விளைவுகளைப் பற்றி 2009ல் ஒரு விரிவான திறனாய்வு செய்யப்பட்டது. இதில் காட்டுயிர்களுக்கும், இயற்கையான வாழிடங்களுக்கும் ஏற்படும் நன்மைகளைவிட பாதகமான விளைவுகள் ஐந்து மடங்காக இருப்பது அறியப்பட்டது.
சாலைகளுக்காகவும், அவற்றை விரிவு படுத்தவும் மரங்கள் அகற்றப்படுவதால், மரவாழ் உயிரினங்களான மலையணில், குரங்குகள் யாவும் மரம் விட்டு மரம் தாவ முடியாமல் தரையின் கீழிறங்கி சாலையைக் கடக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. இதனால் இவை அவ்வழியே சீறி வரும் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் ஆபத்து அதிகமாகிறது. அதுபோலவே மின் தொடர் கம்பிகளுக்காக மரங்களை அகற்றும் போதும் மரவிதானப்பகுதியில் இடைவெளி ஏற்படுகிறது. இதனால் இவ்வுயிரினங்கள் மின்கம்பிகளை தவறுதலாக பற்றிக்கொண்டு இடம்பெயற முயற்சிக்கும் போது மின்சாரம் தாக்கியும் உயிரிழக்கின்றன.
சாலைகள், மின் தொடர் கம்பிகள், அகலமான கால்வாய்கள், இரயில் தடங்கள் போன்ற நீள் குறுக்கீடுகள் (linear intrusions) ஒன்றோ அதற்கு மேலோ ஒரு இயற்கையான நிலவமைப்பில் அமைக்கப்பட்டால் அவ்வாழிடத்திற்கும் அதில் வாழும் உயிரினங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் பன்மடங்காகிறது.
ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு எந்த அளவு நீள் கட்டமைப்புத் திட்டங்கள் அவசியமோ அது போலவே இன்றியமையாதது ஒரு நாட்டின் வனங்கள். அழித்துவிட்டால் மீண்டும் உருவாக்க அவை ஒன்றும் இயந்திரங்கள் அல்ல. தாவரங்கள், உயிரினங்கள், பழங்குடியினர்கள் என பல உயிர்கள் பொதிந்திருக்கும் ஓர் உயிர்ச்சூழல் அது.
நாட்டை முன்னேற்றப்பாதையில் எடுத்துச் செல்லவும், பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தவும் ஒரு அறிவார்ந்த சமூகம், வளர்ச்சித் திட்டங்களை சிறந்த தொழில்நுட்ப உதவியுடன் தான் எதிர்கொள்ளும். அவ்வேளையில், அத்திட்டங்களை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் விசாலப்பார்வையுடன் அத்திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். தற்போதைய அமைச்சகத்தின் ஆணையைப் போல் இது போன்ற திட்டங்களின் செயல்பாடுகளை கோட்ட வன அலுவலர் மட்டுமே நிர்ணயிக்கும் நிலை இருக்கக்கூடாது.
பொருளாதார ஆதாயத்திற்கு மட்டுமே ஆதரவளிக்காமல், நீள் கட்டமைப்புத் திட்டங்களால் ஏற்படும் சூழியல் பாதிப்புகளையும் நம்பத்தக்க, வெளிப்படையான விதத்திலும் அளவிடவும் அதன் நீண்ட கால பாதிப்புகளைச் சமாளிக்கவும் வேண்டும். இது போன்ற திட்டங்கள் பெரும்பாலும் பணம் கொழிக்கும் கான்ட்டிராக்ட்களையும், ஊழலையும் தான் உள்ளடக்கியிருக்கும்.
இதனால் திட்டத்தின் அளவிற்கே (சாலையாக இருப்பின் அதிக நீளமான, அகலமான சாலையே அதிக ஆதாயம் தரும்) முக்கியத்துவமளிக்கப்படுமே தவிர வேலையின் தரம், பயன் மற்றும் பாதுகாப்பு போன்றவை பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடும்.
உலகின் பல நாடுகளில் சாலை போன்ற நீள் கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்குவதற்கு முன் பொறியியலாளர்கள், சூழியலாளார்கள், பொருளாதார வல்லுனர்கள் என பல துறைகளைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்களும், வல்லுனர்களும் கலந்தாலோசித்த பின்னரே செயல்படுத்தப்படுகிறது. சாலைச்சூழியல் (Road Ecology) எனும் வளர்ந்து வரும் இத்துறையில் பல்துறை வல்லுனர்கள் பயன்முறை ஆய்வுகளை (applied research) மேற்கொண்டு இத்திட்டங்களால் ஏற்படும் பாதிப்புகளை ஆவணப்படுத்தியும், இயற்கையான சூழல் பெருமளவவில் பாதிப்படையா வண்ணம் தகுந்த மாற்று வழிகளையும், சரியான வடிவமைப்பையும், பரிந்துரைத்து வருகின்றனர்.
இந்தியாவில் 2011ல் அமைக்கப்பட்டிருந்த தேசிய காட்டுயிர் வாரியத்தின் நிலைக் குழு (Standing Committee) நீள் குறுக்கீடுகள் தொடர்பாக பின்பற்றவேண்டிய வரைவு நெறிமுறைகளையும், பின்னணித் தகவல்களையும் தயாரித்து அதன் முதல் பதிப்பை வெளியிட்டது (இங்கே காண்க). இந்தப் பதிப்பிலிருந்து ஒரு பகுதி டிசம்பர் 2014ல் துணை நிலைக்குழு (subcommittee) வெளியிட்ட பாதுகாக்கப்பட்ட இயற்கையான வாழிடங்களின் வழியே செல்லும் சாலைகளுக்கான நெறிமுறையாக ஆக்கப்பட்டது (இங்கே காண்க). இந்த ஆவணத்தின் முதன்மைக் கொள்கை இயற்கையான வாழிடங்களைப் தவிர்த்தலே. அதாவது, காட்டுயிர் பாதுகாப்புப் பகுதிகளையும், ஆபாயத்திற்குள்ளான இயற்கையான சூழலமைப்புகளையும், தேவையில்லாமல் நீள் குறுக்கீடுகளால் சீரழியாமல் பாதுகாப்பதோடு, காட்டுயிர் வழித்தடங்களை பாதிக்காமல் சாலைகளை சுற்று வழியில் அமைத்து, இயற்கையான வாழிடங்களின் விளிம்பில் இருக்கும் கிராமங்கள், சிற்றூர்களிடையே இணைப்பினை மேம்படுத்த மேம்படுத்துவதேயாகும்.
இது போன்ற, முக்கியமான சூழலில் குறுக்கே சாலைகள் அமைக்கப்படும் முன் காட்டுயிர்களின் நடமாட்டத்தில் ஏற்படும் இடர்பாடுகளை குறைக்க எங்கெங்கே மேம்பாலங்கள் (overpass), தரையடிப்பாதைகள், மதகுப்பாலங்கள் (underpass and culvert) அமைக்கலாம் என்பதற்கான ஆலோசனைகளை காட்டுயிர் ஆராய்ச்சியாளர்களிடமிருந்து பெறவேண்டும். அது போலவே சாலைகளில் ஏற்படும் காட்டுயிர்களின் உயிரிழப்பைக் குறைக்க தேவையான இடங்களில் வேகத்தடைகளும், போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதும் அவசியம்.
யானைகள் கடக்கும் பகுதிகளில் அகச்சிவப்புக் கதிர்களை வீசும் கருவிகளைப் பொருத்தி அவை வருவதை அறிந்து, இத்தகவலை இரயில் ஓட்டுனரின் கைபேசியில் குறுஞ்செய்தியாக அனுப்பும் தொழில்நுட்ப அமைப்பினை இரயில் தடங்களில் வைப்பதன் மூலம், அவை இரயிலில் அடிபட்டுச் சாவதைத் தடுக்க முடியும்.
மின்கம்பித் தொடர்களின் கட்டமைப்பில் சிறு மாறுதல் ஏற்படுத்துவதன் மூலம் அதாவது யானை போன்ற பெரிய உயிரினங்கள் கடக்கும் பகுதியில் உயரமாக வைப்பதனாலும், கானல் மயில், பாறு கழுகுகள் போன்ற பெரிய பறவைகளின் பார்வைக்குத் தெரியும் வகையில் அமைப்பதனாலும் அவை மின் கம்பிகளில் அடிபட்டு இறப்பதைத் தவிர்க்க முடியும். சாலையோரங்களில் வளர்ந்திருக்கும் இயல் தாவரங்களையும், மரங்களையும் வெட்டாமல் வைப்பதன் மூலம் உயிரினங்களின் இடம்பெயர்வுக்கு உதவுவது மட்டுமல்லாமல், அந்தத் தடத்தையும் அழகாக்கும்.
நீள் கட்டமைப்புகள் இயற்கையான சூழலின் மேல் கரிசனம் கொண்டு, அறிவியல் பூர்வமாகவும், சரியான வடிவமைப்புகளைக் கொண்டும் இருந்தால் பொருளாதார மேம்பாட்டிற்கும் உதவும், இயற்கையான வாழிடத்தையும் பாதுகாக்கும்.
———-
மார்ச் 19, 2015 தி ஹிந்து ஆங்கிலம் தினசரியில் வெளியான T. R. Shankar Raman எழுதிய “The long road to growth” கட்டுரையின் தமிழாக்கம். இக்கட்டுரையின் சுருக்கமான பதிப்பு “தி இந்து” தமிழ் தினசரியில் 18-04-2015அன்று வெளியானது. அதை இங்கே காணலாம்.
உண்டி கொடுத்தோம், உயிர் கொடுத்தோமா?
காரில் பயணம் செய்து கொண்டிருக்கிறீர்கள். மேற்குத் தொடர்ச்சி மலை அல்லது தமிழகத்தின் ஏதோ ஒரு காட்டுப் பாதையில் கார் வளைந்து நெளிந்து சென்றுகொண்டிருக்கிறது. மரத்தின் மேலும், சாலையின் ஓரத்திலும் நின்று கொண்டிருக்கும் குரங்குக் கூட்டம் சட்டென்று நம் கவனத்தை ஈர்க்கிறது. மரத்தில் இருக்கும் பூக்களையும், கனிகளையும் அவை அமைதியாகத் தின்று கொண்டிருக்கின்றன. அதை கண்டதும் நம்மையும் அறியாமல் முகத்தில் புன்னகை படர்கிறது.
சட்டென்று காரை நிறுத்தி கையில் இருக்கும் பிஸ்கட் பாக்கெட்டைப் பிரித்து, குரங்குக் கூட்டத்தை நோக்கி வீசி எறிகிறோம். அதுவரை மரத்தில் இருந்த பூக்களையும், கனிகளையும், பூச்சிகளையும் அமைதியாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்த குரங்குகள், விட்டெறியப்பட்ட பிஸ்கெட்டுகளை எடுத்துத் தின்ன ஆரம்பிக்கின்றன.
பிஸ்கெட்டை எடுத்துத் தின்பதில் அவற்றுக்கிடையே போட்டி ஏற்பட்டு, கோபத்தில் ஒன்றையொன்று கடித்துத் துரத்துகின்றன. அந்த இடத்தின் அமைதியும், மரத்தில் இயற்கையான உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அக்குரங்கு கூட்டத்தினிடையே நிலவிய அமைதியும் ஒரே நேரத்தில் குலைந்து போகின்றன. அவை அடித்துக்கொள்வதைப் பார்த்து நம் மனதில் குதூகலம். மற்றொருபுறம் பல குரங்குகளின் பசியைப் போக்கிய நிம்மதியுடன், அந்த இடத்தைவிட்டு அகல்கிறோம்.
நேர் முரண்கள்
போகும் வழியில் சாலையோரத்தில் “குரங்குகளுக்கு உணவு தர வேண்டாம்” எனக் கொட்டை எழுத்தில் வனத்துறை ஒரு போர்டை வைத்திருக்கிறது. அதை நாம் கவனிக்கவில்லை. உடன் வந்தவர் அதைப் பார்க்கிறார். ஆனால் அவருக்கு அது புரியவில்லை, ஏன் இப்படிச் சம்பந்தமில்லாமல் அறிவித்திருக்கிறார்கள் என்று.
நாம் இதுவரை உணராத விஷயம் ஒன்று இருக்கிறது. அவ்வப்போது சாலையில் வேகமாகச் சீறிச்செல்லும் வாகனங்களின் சக்கரங்களில் அரைபட்டு இதே குரங்குக் கூட்டத்தின் சில உறுப்பினர்கள் செத்து போனதும், நம்மைப் போன்ற மனிதர்களால்தான். இப்படி அந்தக் குரங்குகளின் இயல்பு வாழ்க்கை பல வகைகளில், மனிதர்களால் சீர்குலைக்கப்படுகிறது.
குழப்பமும் நோய்களும்
மற்றொரு புறம் குரங்குகளுக்கு உணவளிப்பது அவற்றின் உடல்நிலையைப் பாதிக்கும், அவற்றின் குடும்பத்தினுள் (குரங்குகள் கூட்டமாக, அதாவது குடும்பமாக வாழும் தன்மை கொண்டவை) குழப்பத்தையும், சண்டையையும் விளைவிக்கும். அவற்றின் சமூக வாழ்வு பாதிக்கப்படும். நாம் கொடுக்கும் உணவால் அவற்றுக்குப் பல நோய்கள் வரலாம். இயற்கையான சூழலில், இயற்கையான உணவைச் சாப்பிடுவதே குரங்குகளுக்கு நல்லது, அதைப் பார்த்து மகிழும் நமக்கும் நல்லது. குரங்குகளுக்கு உணவளிப்பதாலும், தின்பண்டங்களைக் கண்ட இடத்தில் வீசி எறிவதாலும், மூடி வைக்கப்படாத குப்பைத் தொட்டிகளாலும் தான் குரங்குகளால் நமக்குத் தொந்தரவு ஏற்படுகிறது.
யார் மீது தவறு?
குரங்குகளுக்கு ஒரு முறை நாம் சாப்பிடும் உணவைக் கொடுத்துப் பழகிவிட்டால், பல்வேறு சுவையூட்டிகள் சேர்க்கப்பட்ட அதே வகை உணவையே அவை மீண்டும் உண்ண விரும்புகின்றன. இதனால் காட்டுக்குள் சென்று உணவு தேடாமல் மனிதர்கள் வாழும் பகுதிகளிலும், சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் இடங்களிலுமே தங்கிவிடுகின்றன. ஊருக்குள் புகுந்து கோயில்களிலும், வீட்டிலும், கடைகளிலும் உள்ள தின்பண்டங்களை நமக்குத் தெரியாமலோ, நம் கைகளிலிருந்து பிடுங்கியோ எடுத்துச் செல்கின்றன. தெரிந்தோ, தெரியாமலோ நாம் செய்த தவறுகளால் குரங்குகளும் பாதிக்கப்பட்டு, சுற்றுலாத் தலங்களிலும் ஊருக்குள்ளும் நமக்குத் தொந்தரவு ஏற்படுத்தும் உயிரினங்களாக மாறுகின்றன. இப்படித் தொந்தரவு தரும் குரங்குகள் உருவாகக் காரணமாக இருப்பதே நாம்தான். ஆனால், தொந்தரவு அதிகரிக்க ஆரம்பித்தவுடன், அவற்றைக் கட்டுப்படுத்தும் பணியில் இறங்குகிறோம்.
கட்டுப்படுத்த வேண்டியது குரங்குகளை அல்ல, குரங்குகளுக்கு நன்மை செய்கிறோம் என்று தவறாக நம்பி அவற்றுக்கு உணவளிப்பவர்களையும், பொறுப்பற்ற சில சுற்றுலாப் பயணிகளின் நடவடிக்கைகளையும்தான்.
என்ன பிரச்சினை?
சில இடங்களில் தொந்தரவு செய்வதாகக் கருதப்படும் குரங்குக் கூட்டங்களைப் பிடித்து வேறு இடங்களுக்குச் சென்று விட்டுவிடும் பழக்கம், நம் நாட்டில் இருந்து வருகிறது. இதனால் பிரச்சினை தீர்வதில்லை. கொண்டு சென்று விடப்பட்ட புதிய இடத்துக்கு அருகிலுள்ள மனிதக் குடியிருப்புகளுக்கு மீண்டும் வந்து, அவை தொந்தரவு தரும். இதில் பிரச்சினைக்குக் காரணமாக இருக்கும் விஷயத்துக்கு முடிவு கட்டாமல், பிரச்சினையை ஓரிடத்திலிருந்து வேறோர் இடத்துக்கு மாற்ற மட்டுமே செய்கிறோம்.
இடமாற்றம் செய்வதற்காகக் குரங்குகளைப் பிடிக்கும்போது பலத்த காயம் ஏற்படவும், சில இறந்துபோகவும் நேரிடுகின்றது. ஒரு குரங்குக் கூட்டத்தை ஓரிடத்திலிருந்து பிடித்துச் சென்றுவிட்டால் அவை இருந்த இடத்தில், வேறோர் குரங்குக் கூட்டம், இடத்தைப் பிடித்துக்கொள்ளும். நகரத்தில் வெகுநாட்களாக வாழ்ந்து வரும் குரங்குக் கூட்டத்தைப் பிடித்து அருகிலுள்ள காட்டு பகுதியில் விடுவதால், அந்தக் குரங்குக் கூட்டத்தில் உள்ள நோய்கள் காட்டில் உள்ள உயிரினங்களுக்கும் பரவும் ஆபத்து உள்ளது. மேலும், காட்டுப்பகுதியில் ஏற்கெனவே வசித்துவரும் குரங்குகளுடன் இடத்தைப் பெறுவதற்காகச் சண்டை ஏற்பட்டுப் பல உயிரிழக்கவும் நேர்கிறது.
உணவளிக்காமல் இருப்பதே தீர்வு
நகரத்தில் வாழும் பெண் குரங்குகளுக்குக் கருத்தடை அறுவைசிகிச்சை செய்து அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைக்கும் முயற்சிகள் சில இடங்களில் நடந்துள்ளன. ஆனால் அதைச் செய்வதற்கு அதிகச் செலவும், தகுந்த பயிற்சி பெற்ற நிபுணர்களும் அவசியம். என்றாலும்கூட, இது நீண்ட காலத் தீர்வாகாது.
உங்களுக்குக் குரங்குகளைப் பார்க்கப் பிடிக்கும் என்றால், அவற்றைப் பார்த்து ரசியுங்கள். அவற்றுக்கு உணவளிக்க வேண்டாம். ஒருவேளை யாரேனும் அப்படி உணவளிப்பதைப் பார்த்தாலும் அதனால் ஏற்படும் தீமைகளை அவர்களிடம் பொறுமையாக எடுத்துச் சொல்லுங்கள். குரங்குகளைப் பொறுத்தவரை உண்டி கொடுப்பது, அவற்றுக்கு உயிர் கொடுப்பது ஆகாது.
*********
தி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 16th September 2014 அன்று வெளியான கட்டுரை. அக்கட்டுரையை இங்கே காணலாம். அதன் PDF ஐ இங்கே பெறலாம்.
யார் முகத்தில் முழித்ததோ நரி….
நரி முகத்தில் முழித்தால் நல்ல சகுனம், செய்யப்போகும் காரியம் நல்லபடியாக முடியும் என்பது தமிழ்நாட்டிலுள்ள பல மூடநம்பிக்கைகளில் ஒன்று. அது எப்படி நரி முகத்தில் முழிக்க முடியும்? இந்த வாக்கியம் எப்படி உருவாகியிருக்கமுடியும்? அது சாத்தியம் தானா என பலரிடம் கேட்டும் இதுவரை எனக்கு விடை கிடைக்கவில்லை. சமீபத்தில் நான் நரி ஊளையிடுவதைக் கேட்டது இந்த ஆண்டு (2012) ஜனவரி மாதம் பாண்டிச்சேரி பல்கலைக்கழக ஹாஸ்டலில் சில நாட்கள் தங்கியிருந்த போது தான். தானே புயல் தாக்கியிருந்த சமயமது. மின்னினைப்பு இல்லாத இரவில் நான் தங்கியிருந்த அறையில் வெகு அருகாமையிலிருந்து சுமார் 5 நிமிடங்களுக்கு மேல் ஒரு நரி ஊளையிட்டுக்கொண்டிருந்தது. நீண்ட நாட்கள் கழித்து கேட்ட அதன் குரல் என் காதில் தேனைப்போல பாய்ந்தது. ஏனெனில் இப்போதெல்லாம் நரிகளைக் காண்பதே அரிதாகிவிட்டது. கிராமங்களில் வசிப்பவர்களைக் கேட்டுப்பாருங்கள். ஒரு காலத்தில் இந்தியாவின் பல இடங்களிலும் பரவி காணப்பட்ட நரி பல இடங்களிலிருந்து அற்றுப்போயும், எண்ணிக்கையில் குறைந்தும் வருவது சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் வாயிலாக அறியமுடிகிறது.
நரி (Golden Jackal), குள்ளநரி (Indian fox), ஓநாய் (Indian Wolf), பாலைவனக் குள்ளநரி (Desert Fox), செந்நாய் (Wild dog or Dhole) யாவும் இந்தியாவில் தென்படும் நாய் இனத்தைச் சேர்ந்த விலங்குகள். இவற்றில் தமிழகத்தின் அடர்ந்த காடுகளில் செந்நாயும், புதர்க்காடுகளில் குள்ளநரியும் தென்படும். ஆனால் நரியோ வயல் வெளிகள் உள்ள கிராமங்கள், புதர்காடுகள், மலை மேலுள்ள புல்வெளிகள், அடர்ந்த காடுகள் என பல வகையான வாழிடங்களில் வசிக்கும். சில ஆண்டுகளுக்கு முன் கொல்கத்தா தாவரவியல் பூங்காவிற்குச் சென்றிருந்த போது அங்கு இரண்டு நரிகளை பகலிலேயே பார்த்து ஆச்சர்யமடைந்தேன். நகரத்தின் அருகாமையில் இருக்கும் அப்பூங்காவில் கொஞ்சம் அடர்த்தியாக மரங்கள் இருப்பதே அவை அங்கு வாழ ஏதுவாக இருக்கக்கூடும். நரி, பலதரப்பட்ட சூழலிலும் வாழ்வதற்குத் தகவமைத்துக் கொண்டதன் காரணம், குறிப்பிட்ட வகையான உணவை மட்டுமே உட்கொள்ளாமல் அனைத்துண்ணியாக இருப்பதே.
பருவ காலத்திற்குத் தகுந்தவாறு என்ன உணவு கிடைக்கிறதோ அவற்றை உட்கொண்டு வாழும். ஆயினும் அவற்றின் உணவில் பெரும்பகுதி எலிகள், முயல், பாம்பு, பல்லி, சிறு பறவைகள் போன்றவையும், இலந்தைப்பழங்கள், கலாக்காய், நாவற்பழம், சரக்கொன்றை பழங்கள் முதலியவற்றையும் சாப்பிடும். கிராமப்பகுதிகளின் அருகில் தென்படும் நரிகள் அங்குள்ள கோழிகளையும் அவ்வப்போது பிடித்துச்செல்லும். இதன் காரணமாகவே இவற்றை பிடித்து கொல்லப்படுவது உண்டு. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நிர்த்தனமங்களம் எனும் கிராமத்தில் இப்படிப் பிடிக்கப்பட்ட நரியினை பிடித்தவர்கள் சமைத்து சாப்பிட்டதற்கான குறிப்பு இயற்கையியல் இதழான Hornbill ல் (Jan-Mar 2011) ஒரு கட்டுரையில் உள்ளது. இப்படி உணவிற்காகவும், தோலுக்காகவும், வளர்ப்புப்பிராணிகளைக் கொன்று சாப்பிடுவதால் கண்ணி வைத்தும், விஷம் வைத்தும், வாகனங்களில் அடிபட்டும் நரிகள் பல இடங்களில் கொல்லப்படுகின்றது. இந்திய வனவிலங்குப் பாதுகாப்புச்சட்டம் 1972ன் படி நரியைக் கொல்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.
ஏப்ரல் 2008லிருந்து மே 2009 வரையில் மேற்குத்தொடர்ச்சிமலையின் தென் பகுதியில் உள்ள 394 வனச்சரகத்திற்கும் (Forest Range) ஆராச்சியாளர்கள் சென்று அங்கு பணிபுரியும் வனத்துறை அதிகாரிகளிடமும், வனத்தின் உள்ளேயோ, அதன் அருகாமையிலோ பலகாலமாக வாழும் கிராமத்தாரிடமும், பதினெட்டு வகையான மிருகங்களின் நிலையைப்பற்றி விசாரித்தனர். வேங்கைப்புலி, கரடி, சிறுத்தை, செந்நாய், நரி, யானை, காட்டெருது, கடம்பை மான், வரையாடு, காட்டுப்பன்றி, புள்ளிமான், கேளையாடு, சருகு மான், நீலகிரி கருமந்தி, வெள்ளை மந்தி, சோலைமந்தி (சிங்கவால் குரங்கு), நாட்டுக்குரங்கு, மலையணில் ஆகியவற்றின் தற்போதைய நிலையையும், 30 வருடங்களுக்கு முன் இருந்த நிலையையும் கேட்டறிந்தனர். பலகாலமாக இப்பகுதிகளில் வாழ்ந்தும், பணிபுரிந்தும் வந்த இவர்கள் அனைவரும் சொன்னதைக் கேட்டறிந்து முடிவுகளை கூர்ந்து ஆராய்ந்த விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் பல உண்மைகள் தெரிய வந்தது.
அழிவின் விளிம்பில் இருக்கும் வேங்கைப்புலி, யானை போன்ற விலங்குகள் பல இடங்களில் இருந்து மறைந்துபோனதும், இருக்குமிடங்களிலும் கூட இவ்விலங்குகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து போனது தெரியவந்தது. இதைவிட அதிர்ச்சியான உண்மை ஒருகாலத்தில் எங்கும் பரவியிருந்த நரி தற்போது பல இடங்களில் மாயமாய் மறைந்து போனது தான். இதைத்தொடர்ந்து நரிக்கென்றே பிரத்தியோகமான நாடு தழுவிய வலைத்தள கணக்கெடுப்பு ஒன்று 2011ல் ஜூலை ஆகஸ்டு மாதங்களில் நடத்தப்பட்டது. இதில் சுமார் 320 பேர் பங்கு கொண்டு இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் நரியைக் கண்டறிந்த 470 தகவல்கள் கிடைத்தது. பெரும்பாலான தகவல்கள் கர்நாடகா, உத்தரகாண்ட் மாநிலங்களிலிருந்துதான் கிடைத்தது. இந்த சர்வேயின் முலமாக நரியின் தற்போதைய நிலையையும், பரவலைலும், துல்லியமாக அறிய முடியாவிட்டாலும், முதனிலை முடிவுகள் நரிகள் இந்தியாவின் தென் மற்றும் கிழக்குப்பகுதிகளில் அருகி வருவதும், குஜராத், மத்தியப்பிரசேதத்தில் இதன் நிலை ஓரளவிற்கு நல்ல நிலையில் இருப்பதும் தெரிய வந்தது. வாழிட இழப்பே இவை குறைந்து போனதற்கான முக்கிய காரணமாக அறியப்பட்டது. அதாவது நகரமயமாதலும் ஒரு முக்கியக் காரணம்.
சரி, நரியைக் காப்பாற்றுவதால் என்ன பயன் என்கிறீர்களா? வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை முதலிய விலங்குகள் உணவுச் சங்கிலியின் மேல் நிலை இரைக்கொல்லிகளாக (Predators) அங்கம் வகிக்கின்றன. அவற்றிற்கு அடுத்தாற்போல் வருபவை நரி, குள்ள நரி போன்ற விலங்குகள். இவை பலதரப்பட்ட சிறிய விலங்குகளையும், பறவைகளையும் உணவாக்கி அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துகின்றன. பழங்களை உட்கொண்டு விதை பரவலுக்கும். வயற்புறங்களின் அருகாமையில் சுற்றித்திரியும் நரிகள் அங்குள்ள எலிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. நரி ஒரு அழகான விலங்கு. மனிதனின் தோழனான நாயை விரும்பும் நமக்கு நிச்சயமாக நரியையும் பிடித்தாக வேண்டும்.
பெருகிவரும் மக்கட்தொகைக்கு இடையில் அருகி வரும் பல உயிரினங்களில் நரியும் ஒன்று. நாம் நரி முகத்தில் முழிப்பது நமக்கு வேண்டுமானால் நல்ல சகுனமாக இருக்கலாம், ஆனால் அது நிச்சயமாக அந்த நரிக்கு இல்லை. அடுத்த முறை நீங்கள் நரி ஊளையிடுவதைக் கேட்டால் புண்ணியம் செய்ததாக நினைத்துக் கொள்ளுங்கள். அப்படியே நீங்கள் கேட்ட அல்லது நரியைப் பார்த்த நாள், இடம் முதலிய தகவல்களை நரியைப்பற்றி ஆராயும் உயிரியலாளர்களுக்கு இமெயில் (<mailto:jackal@conservation.in>) செய்ய முடிந்தால் புண்ணியமாகப் போகும்.
******
காக்கை குருவி எங்கள் ஜாதி தொடர். எண் 11. புதிய தலைமுறை 20 செப்டம்பர் 2012
முன்தோன்றி மூத்தவரே !
குரங்குகளின் கூட்டத்தை எப்போதாவது கூர்ந்து கவனித்ததுண்டா நீங்கள்? சற்று நேரம் அமர்ந்து அவை செய்வதைப் பார்த்துக்கொண்டிருந்தால் அவையும் நம்முடைய குணநலன்களை கொண்டிருப்பதைக் காண்பீர்கள். ஆனால் நமக்கும் அவற்றின் குணாதிசியங்கள் இருக்கிறதென்பதே உண்மை. வானரங்களின் வழித்தோன்றல்தானே நாம்! ஆகவே நம்மைப்போலவே குரங்குகள் இருக்கின்றன என்று சொல்வதைவிட குரங்களைப் போல் நாம் இருக்கிறோம் என்று சொல்வதே சரி. சமூக வாழ்க்கை, ஒருவர் செய்வதைப்பார்த்து மற்றவரும் அதையே பின்பற்றுதல், கற்றுக்கொள்ளுதல், சக குடும்பத்தாருக்கும் இனத்தாருக்கும் ஆபத்து நேரிடும் போது பரிதாபப்படுதல், காப்பாற்ற முற்படுதல், குழந்தைகளைப் பேணுதல் முதலிய பல காரியங்களில் நாமும் குரங்களைப் போலவே இருப்பதை அறிவோம்.
ஆனாலும் பரிணாம வளர்ச்சியடைந்த மனித இனம் பல வகையில் மூதாதயர்களின் குணங்களை இழந்து விட்டது. உதாரணமாக மரவாழ்க்கை. பெரும்பாலன குரங்கினங்கள் மரத்தின் மேல் வசிப்பவை. சில குரங்கு வகைகள் தரையில் வசிக்கும். எனினும் எல்லா குரங்குகளுமே நன்றாக மரமேறும். அவற்றின் கை கால்களில் உள்ள நீண்ட விரல்கள், நகங்கள் எல்லாவற்றிற்கும் மேலாக பின்னோக்கி வளையக்கூடிய கட்டைவிரல் ஆகிய தகவமைப்புகளே இவை மரக்கிளையை பிடித்து மிக நன்றாக மரமேற உதவுகிறது. முன்னோக்கி அமைந்துள்ள கண்கள் மரம்விட்டு மரம் தாவும்போது கிளைகளின் தூரத்தை கச்சிதமாக கணிக்க வகைசெய்கிறது. இதனாலேயே அவை தாவும் போது கீழே விழுவதில்லை.
குரங்கினங்களின் வாழ்க்கைமுறை அலாதியானது. சில குரங்கினங்கள் ஆண்-பெண் என சோடியாக வாழும். சில கூட்டமாக வாழும். இக்கூட்டத்தில் பல பெண் குரங்குகளும் அவற்றிற்கெல்லாம் ஒரு ஆண் குரங்கு தலைவனாகவும் இருக்கும். இக்கூட்டத்தில் பிறக்கும் பெண் குரங்கு முதிர்ச்சியடைந்த பின்னும் அவைகளுடன் சேர்ந்தே வாழும். ஆனால் ஆண் குரங்கு அவை பிறந்து முதிர்ச்சியடைந்த பின் அக்கூட்டத்தை விட்டு விலகிச்சென்றுவிடும். சில வேளைகளில் ஒரு கூட்டத்திலேயே பல ஆண் மற்றும் பெண் குரங்குகள் சேர்ந்தே வாழும். இது போன்ற கூட்டத்தில் பிறந்த ஆண் குரங்கு முதிர்ச்சியடைந்தவுடன், வயதான தலைவனை விட வலிமையாகவும் மற்ற குரங்குகளை அடக்கும் திறனுடையதாகவும் இருப்பின் அதுவே அக்கூட்டத்தின் தலைவனாகிவிடும். குரங்குகள் ஒன்றுடன் ஒன்று விளையாடவும், சண்டையிடவும், பின்னர் சமாதானமாகப் போகவும், மகிழ்வூட்டவும் ஏமாற்றவும் செய்கின்றன.
இந்தியாவில் உள்ள மனிதர்கள் அல்லாத குரங்கினங்களை (non-human primates) தேவாங்குகள், குரங்குகள், மந்திகள் அல்லது முசுக்குரங்குகள், வாலில்லா குரங்கு என நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். ஒரே ஒரு வாலில்லாக் குரங்கும் (வட-கிழக்கு இந்தியப்பகுதிகளில் மட்டும்) இரண்டு வகையான தேவாங்குகளும், எட்டு வகையான குரங்குகளும், ஐந்து வகையான மந்திகளும், இந்தியாவில் தென்படுகின்றன. தென்னகத்தில் தேவாங்கு, வெள்ளை மந்தி, கருமந்தி, நாட்டுக்குரங்கு, சிங்கவால் குரங்கு ஆகியவற்றைக் காணலாம்.
வாலில்லா மெலிந்த உடலுடன், இரவில் பார்க்க ஏதுவான மிகப்பெரிய கண்கள் கொண்டதே தேவாங்கு. இவை தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் பரவியுள்ளன. அடர்த்தியான புதர்கள் கூடிய இலையுதிர் காடுகளிலேயே அதிகம் காணப்படுகின்றன. இவை இரவாடிகள். மரத்தில் வாழும். இரவில் பூச்சிகளையும் பிடித்துண்ணும், சில சமயங்களில் பழங்களையும் மரச்சாறையும் கூட உட்கொள்ளும். இது மிகவும் மெதுவாக நகரும். பெரும்பாலும் தனித்தே வாழும். தேவாங்குகள் தமது சிறுநீரை மரக்கிளைகளில் தெளித்து தாம் வாழும் இடப்பரப்பின் எல்லையை குறிக்கும். பார்ப்பதற்கு சிறிய உருவில் சாதுவாக இருந்தாலும் அபாயமேற்படும்போது உரத்த குரலெழுப்பவும் தம்மை தற்காத்துக்கொள்ள கடிக்கவும் கூட செய்யும்.
முசுக்குரங்குகள் அல்லது மந்திகளில் இரு வகைகளை தென்னகத்தில் காணலாம். தலையில் கூம்பு வடிவில் அமைந்த உரோமம், கரிய முகம், நீண்டு வளைந்த வாலின் மூலம் வெள்ளை மந்தியை இனம்கண்டுகொள்ளலாம். இவற்றை காட்டுப்பகுதியிலும் சில நேரங்களில் நகர்புறங்களிலும் காணலாம். இவை பெரும்பாலும் தரையிலேயே திரியும். இவை இளந்தளிர்கள், காய்கள் மற்றும் விதைகளையே வெகுவாகச் சுவைத்துண்ணும். இலைகளை செரிப்பதற்காகவே பிரத்தியோகமான குடலை பெற்றுள்ளன. இதனாலேயே இவற்றின் வயிறு சற்று உப்பலாக காணப்படும். வெள்ளை மந்திக்கூட்டத்தில் ஒரு ஆணும் பல பெண்ணும் இருக்கும். இளவயது ஆண் மந்திகளை அக்கூட்டத்தின் தலைவன் (அதன் தகப்பன்) சண்டையிட்டு கூட்டத்தைவிட்டு விலகச்செய்யும். அவ்வாறு வெளியேற்றப்பட்ட இளவட்டங்கள் அனைத்தும் ஒன்றுகூடி வாழும். இவை நேரம் பார்த்து மற்ற கூட்டங்களின் தலைவனை வெளியேற்ற முயற்சிக்கும். அப்படி அவை ஒரு கூட்டத்தினை வேறொரு ஆண் மந்தியிடமிருந்து கைப்பற்றிவிடின், அக்கூட்டத்திலுள்ள பழைய தலைவனுக்குப் பிறந்த எல்லா குட்டிகளையும் கொன்றுவிடும்.
ஈர இலையுதிர் காடுகள், பசுமைமாறாக் காடுகள் மற்றும் அதனைச்சார்ந்த தோட்டங்களிலும் தென்படுவது கருமந்தி அல்லது நீலகிரி முசுக்குரங்கு. கரிய முகமும், உடல் முழுதும் கரிய உரோமங்களால் போர்த்தப்பட்டும் தலைமுழுவதும் வெளிர் பழுப்பு நிற உரோமமும் கொண்டது இது. இவை அதிக அளவில் இளந்தழைகளையெ விரும்பி உண்கின்றன. இது ஓரிட வாழ்வியாகும். அதாவது, உலகிலேயே கேரளா, தமிழகம், கர்நாடகாவிலுள்ள குடகுமலை பகுதிகளிலுள்ள மேற்குத்தொடர்ச்சிமலைப்பகுதியிலேயே காணப்படுகிறது. இவை மற்ற கூட்டத்திலுள்ள மந்திகளை எச்சரிக்கும் வகையில் அவ்வப்போது உரத்த குரழுப்பும். பெரும்பாலும் கூட்டத்தின் தலைவனே இவ்வாறு முழக்கமிடும்.
செம்முகக் குரங்கு அல்லது நாட்டுக்குரங்கை பார்த்திராதவர் இருக்க முடியாது. நாட்டுக்குரங்குகள் தீபகற்ப இந்தியாவில் மட்டுமே பரவியுள்ளது. கோயில்களிலும், சுற்றுலாத்தலங்களிலும், கிராமங்களிலும் ஏன் மிகப்பெரிய நகரங்களிலும் கூட இவற்றைக்காணலாம். இவை எல்லாவகையான காடுகளிலும் தென்படுகின்றன. மற்ற குரங்கினங்களைப் போலல்லாமல் ஒரு குறிப்பிட்ட வனப்பகுதியை மட்டும் சார்ந்திறாமல் எல்லா விதமான வாழிடங்களிலும் இவை வாழக்காரணம் இவற்றின் உணவுப் பழக்கமே. இலைகளை மட்டுமே புசிக்கும் மந்திகளைப் போலில்லாமல், தாவரங்களில் பல்வேறு பாகங்களையும், விதைகள், பழங்கள், புற்கள், காளான்கள்,பூச்சிகள், பறவைகளின் முட்டை போன்ற பலதரப்பட்ட உணவுவகைகளை சாப்பிடுவதால் இவைகளால் எல்லா இடங்களிலும் பரவியிருக்க முடிகிறது.
நாட்டுக்குரங்கு எங்கு வேண்டுமானலும் வாழும், ஆனால் சிங்கவால் குரங்கு அப்படி இல்லை. அவை வாழ தனித்தன்மை வாய்ந்த மழைகாடுகள் அல்லது சோலைக்காடுகள் தேவை. இங்குதான் ஆண்டு முழுவதும் அவற்றிற்கு தேவையான உணவு கிடைக்கும். ஒருகாலத்தில் சிங்கவால் குரங்குகள் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியெங்கும் பரவி இருந்தன. தோட்டப்பயிர்களுக்காக அவற்றின் வாழிடங்கள் அழிக்கப்பட்டதால் தற்போது மஹராஷ்டிரா மற்றும் கோவா பகுதிகளில் இவை முற்றிலுமாக அற்றுப்போய்விட்டது. எஞ்சியுள்ள இக்குரங்குகளின் எண்ணிக்கை தோட்டப்பயிர்கள் மற்றும் மனிதர்களால் சூழப்பட்ட காட்டுப்பகுதிகளிலேயே வாழ்கிறது. இச்சிறிய மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட குரங்குகளும் வெகுவாக வேட்டையாடப்படுகின்றன. மேற்குத்தொடர்ச்சி மலைபகுதிகளைத் தவிர உலகில் வேறெங்கும் இச்சிங்கவால் குரங்குகள் காணப்படுவது இல்லை. இங்கும் சுமார் 3500 முதல் 4000 சிங்கவால் குரங்குகளே இருப்பதாக அறியப்பட்டுள்ளது. இவை மிகவும் கூச்சசுபாவம் உள்ளவை. சில வேளைகளில் மனிதர்களை கண்ட மாத்திரத்தில் ஓடிச்சென்று விடும். தலையைச் சுற்றி பிடரியுடன், சிறிய வாலின் நுனியில் குஞ்சம் போன்ற அமைப்பை வைத்து நீண்ட வாலைக் கொண்ட கருமந்தியை இனம் பிரித்து அறியலாம். இதனாலேயெ ஆங்கிலத்தில் Lion-tailed Monkey என்று பெயர். இதன் தமிழாக்கமே சிங்கவால் குரங்கு, ஆனால் இதனை மலைவாழ் மக்கள் சோலைமந்தி என்றழைக்கின்றனர். சங்க இலக்கியங்களில் இது நரைமுகஊகம் என அறியப்படுகிறது.
வனத்தின் மேம்பாட்டில் வானரங்கள் முக்கியப் பங்கு வகிக்கிறன. பலவிதமான காட்டு மரங்களின் பழங்களை உண்டு அவற்றின் விதைபரவலுக்கு வழிவகுக்கின்றன. நாட்டுக்குரங்கினங்கள் தம் வாயில் உள்ள பை போன்ற அமைப்பில் பழங்களை சேர்த்து வைத்து இடம் விட்டு இடம் சென்று விதைகளை துப்புவதால் அவ்விதைளை வனத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பரப்புகிறது. அவை பல வகையான பூச்சி மற்றும் பறவைகளின் முட்டைகளை உட்கொண்டு அவற்றின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைக்கின்றன. மேலும் குரங்குகளே சிறுத்தை போன்ற பெரிய மாமிசஉண்ணிகளுக்கு உணவாகவும் பயன்படுகிறது. எனினும் குரங்கினங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருவது சோகமான ஒன்றாகும். இதற்கு முக்கியமாக இரண்டு காரணங்களை குறிப்பிடலாம் – வாழிடம் குறைதலும் திருட்டு வேட்டையும். இவற்றின் உடலுறுப்புகள் மருத்துவகுணம் வாய்ந்தவை என்ற மூட நம்பிக்கையினால் இவை திருட்டுத்தனமாக கொல்லப்படுகின்றன.
இவை அபாயத்திற்குள்ளாவதற்கான இன்னோரு காரணமும் உண்டு. அது நாம் அவற்றின் மேல் காட்டும் பரிவு! ஆம் சுற்றுலாத்தலங்களுக்குப் போகும் போது குரங்குகளைக் கண்டால் ஏதோ அவற்றிற்கு உதவி செய்வதாக நினைத்து நாம் சாப்பிடும் உணவுப்பண்டங்களை கொடுப்பதால் அவற்றிற்கு பலவித நோய்கள் வரும் வாய்ப்புகள் உள்ளது. வனப்பகுதிகளினூடே செல்லும் சாலைகளை அகலப்படுத்தும் போது, சாலையோர மரங்களை வெட்டுவதால் சாலையின் மேலே பெரிய இடைவெளி உருவாகிறது. இதனால் மரவாழ்விகளான இவை இடம்பெயர, சாலையைக் கடக்கும் போதும், சாலையோரத்தில் மிச்சமீதியுள்ள உணவினை விட்டெறிவதால், அதை எடுக்க வரும் போதும் விரைந்து வரும் வாகனங்களில் அடிபட்டு உயிர் துறக்கின்றன.
நாம் பரிவு காட்டுவதாக நினைத்து உணவூட்டி பழக்கப்படுத்திவிட்டோம். விளைவு? சில குரங்குகள் நம்மிடமிருந்தே உணவுவை பறிக்க முற்படுகின்றன. ஏன் தெரியுமா? இதற்கு குரங்குகளின் வாழ்க்கைமுறையைப் பற்றி கொஞ்சம் அறிந்திருக்க வேண்டும். ஒரு கூட்டத்தில் இருக்கும் எல்லா குரங்குகளும் சரிநிகர்சமானமாக இருப்பதில்லை. ஒன்றிற்கு ஒன்று கீழ்படிந்தே வாழ்கிறது. வயது குறைந்த குரங்கிற்கு உணவு கிடைத்தால் அக்கூட்டத்தின் தலைவனுக்கு பகிர்ந்தளித்தோ, விட்டுக்கொடுத்த பின்தான் சாப்பிடமுடியும். குரங்கியல் ஆய்வாளர்களின் (Primatologists) கூற்றின்படி நீங்கள் ஒரு குரங்கிற்கு உணவளிக்கும்போது அக்குரங்குற்கு நீங்கள் கீழ்ப்பணிந்தவராகிறீர்கள். அப்படித்தான் அக்குரங்கு நினைத்துக்கொள்ளும். பிறகு உணவு கொடுக்காத போது கோபமேற்பட்டு தாக்கவோ உங்களிடமுள்ள உணவினைப் பறிக்கவோ செய்கிறது. இதனாலேயெ இவை மனிதர்களுக்கு தொந்தரவு தரும் பிராணியாக கருதப்படுகிறது. மிகுந்த தொல்லைதரும் இக்குரங்குகளை ஒரு இடத்திலிருந்து பிடித்து மற்றொரு இடத்திற்கோ, அருகிலுள்ள வனப்பகுதிக்கோ கொண்டு விட்டுவிடுவதால் பிரச்சனையை தீர்க்க முடியாது. இதனால் இவற்றின் எண்ணிக்கை எதிர்காலத்தில் குறைந்து போகலாம். இவற்றிற்கு உணவளிப்பதையும், தேவையற்ற உணவுப்பதார்த்தங்களை வெளியே தூக்கி எறியாமல் இருப்பதனாலேயே இவற்றின் தொல்லையை கட்டுப்படுத்த முடியும்.
******
காக்கை குருவி எங்கள் ஜாதி தொடர். எண் 6. புதிய தலைமுறை 16 ஆகஸ்ட் 2012
இடைவெளியும் இடையூறும்
அன்னார்ந்து பார்த்துக் கிடந்தது அந்த அணில். சாலையின் நடுவில். அது சாதாரண அணிலல்ல, மேற்குத்தொடர்ச்சி மலையில் வாழும் மலையணில். வண்டியை விட்டு இறங்கி அருகில் சென்று பார்த்த போது அதன் முகத்திலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது, வயிற்றின் உள்ளிருந்து குடல் பகுதி வெளியே வந்து கிடந்த்து. சாலையைக் கடக்கும் போது ஏதோ ஒரு வாகனத்தில் அடிபட்டு பரிதாபமாக இறந்து போய் அதன் வெண்மஞ்சளான அடிப்பாகம் தெரிய அன்னார்ந்து பார்த்துக் கிடந்தது அந்த மலையணில். விபத்து ஏற்பட்டு சில மணி நேரங்களே ஆகியிருக்க வேண்டும். ஒரு கண்ணிலிருந்து இரத்தம் வழிந்தோடிக்கொண்டிருந்தது. அதன் காலிலுள்ள கூரிய நகங்கள் தாரிடப்பட்ட சாலைக்குப் பழக்கமானதல்ல. மரத்தின் கிளைகளைப் பற்றி ஏறுவதற்கும், இறங்குவதற்குமே ஏதுவானது.
அது சாலையைக் கடக்கும் போது நிச்சயமாக வேகமாகத்தான் போயிருக்க வேண்டும். அது தரையில் நடந்து நான் இதுவரை பார்த்த்தில்லை. எந்த வகையான வாகனத்தில் அடிபட்டது என்று புரியவில்லை. இருசக்கர வண்டியா? பேருந்து போன்ற வாகனமா? யூகிக்க முடியவில்லை. நிச்சயமாக சக்கரத்தினடியில் போகவில்லை. போயிருந்தால் உடல் முழுவதும் சிதைந்து தரையோடு தரையாக ஆகியிருக்கும். ஒருவேளை சாலையின் ஒருபுறத்திலிருந்து மறுபுறமுள்ள மரத்திற்கு தாவும் போது எதிரேயுள்ள கிளையைப்பற்ற முடியாமல் கீழே விழும் வேளையில் எதிர்பாராவிதமாக கடந்து செல்லும் வாகனத்தில் மோதி இறந்திருக்குமோ? அப்படி இருக்கவே முடியாது என்றே தோன்றியது. மரத்திற்கு மரம் மலையணில் தாவுவதை பலமுறை கண்டிருக்கிறேன். அவற்றிற்கு தெரியும், எவ்வளவு தூரம் தம்மால் தாவமுடியும் என்று. கிளைக்குக் கிளை தூரம் அதிகமாக இருப்பின் ஒரு முனையில் இருந்து சற்று நேரம் தாவி இறங்கவேண்டிய கிளைப்பகுதியை உற்று நோக்கும். நம்மில் சிலரைப்போல் அவை என்றுமே அகலக்கால் வைப்பதில்லை. முடியாது எனத்தோன்றினால் தாவ முடிந்த வேறோர் கிளைக்குச்சென்றுவிடும்.
விபத்து எப்படி நடந்திருந்தால் என்ன? இந்த அழகான மலையணில் இப்போது உயிரில்லாமல் பரிதாபமாக சாலையில் கிடந்தது. அதனருகில் சென்று அன்னாந்து பார்த்தபோது சுமார் 7-8 மீட்டர் அகல நீல வானம் தெரிந்தது. நீளமான சாலையின் மேலே இருபுறமும் பார்த்தேன். சாலையின் இருபுறமுள்ள மரங்களுக்கு இடையில் நீளவாக்கில் சுமார் 500 மீட்டர் நீல வானம் பளிச்சிட்டது. இந்த இடைவெளி மட்டும் இல்லாமலிருந்தால் இந்த மலையணிலுக்கு இந்த கதி ஏற்பட்டிருக்காது.
நம் வீட்டினருகில் தென்படும் முதுகில் மூன்று வரியுள்ள சிறிய அணிலை பார்த்துப் பழக்கப்பட்டவர்கள் மலையணிலை முதன்முதலில் பார்க்கும்போது நிச்சயமாக மலைத்துப் போவார்கள். காட்டில் மலையணில் துள்ளித்திரியும் காட்சி பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தும். உருவில் பெரிய இம்மலையணில்களின் உடலின் மொத்த நீளம் (தலையிலிருந்து வால்முனை வரை) சுமார் இரண்டு அடி. உரோமங்களடர்ந்த வால் மட்டுமே ஒரு அடிக்குக் குறையாமல் இருக்கும்.
இந்தியாவில் மூன்று வகையான மலையணில்கள் உள்ளன. இந்திய மலையணில், சாம்பல் நிற மலையணில் மற்றும் மலேய மலையணில். முதலிரண்டு மலையணில்களும் கங்கைநதிக்கு தெற்கேயுள்ள வனப்பகுதிகளில் தென்படுகின்றன. மலேய மலையணில் (Malayan Giant Squirrel Ratufa bicolor) இந்தியாவின் அஸ்ஸாம், சிக்கிம், அருனாசலப் பிரதேசம் முதலிய வடகிழக்கு மாநிலங்களில் பரவி காணப்படுகிறது. இதன் மேலுடல் கரும்பழுப்பாகவும் கீழே வெளிரிய நிறத்திலும் இருக்கும்.
இந்திய மலையணில் (Indian Giant Squirrel Ratufa indica) பசுமைமாறாக்காடுகளிலும், வறன்ட மற்றும் ஈர இலையுதிர்காடுகளிலும், இப்பகுதிகளை அடுத்த தோட்டங்களிலும் இம்மலையணில் தென்படும். தானியங்கி துப்பாக்கி முழக்கமிடும் ஓசையை ஒத்த இதன் உரத்த குரலின் மூலமும், இவை வசிக்கும் இடத்தைச்சுற்றிலும் மரத்தின் மேலுள்ள பெரிய கூடைபோன்ற கூடுகளை வைத்தும் இதனிருப்பிடத்தை அறியலாம். இவற்றின் மேல் பகுதி கருஞ்சிவப்பு நிRறaத்திலும், கீழ்ப்பகுதி வெளிறிய மஞ்சள் நிறத்திலும், வால் கரிய நிறமாகவும் இருக்கும். இம்மலையணிலை வெளில் என்று அகநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை மேற்கு மற்றும் கிழக்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், மத்திய இந்தியாவின் வனப்பகுதிகளிலும் தென்படுகிறன. இவற்றில் 7 உள்ளினங்கள் இடத்திற்கு இடம் உடல்நிறத்தில் சற்று மாறுபட்டு காணப்படும். உதாரணமாக நீலகிரிப் பகுதில் உள்ள இம்மலையணிலின் வால் முனை வெண்மையாகவும், ஆனமலைப் பகுதியிலுள்ளவவை கரிய நிற வாலுடனும் இருக்கும்.
சாம்பல் மலையணில் (Grizzled Giant Squirrel Ratufa macroura) அல்லது நரை மலையணில் அரிதானது. இம்மலையணிலை, வறண்ட இலையுதிர்காடுகள், ஆற்றோரக்காடுகள் மற்றும் பசுமைமாறா காடுகளில் காணலாம். இவை உருவில் இந்திய மலையணிலைப்போலிருந்தாலும் இதன் உடல் நிறம் சாம்பல் கலந்த பழுப்பாகும். கூச்சசுபாவம் உள்ள இவ்வணிலை இவற்றின் உரத்த குரலின் மூலம் கண்டுகொள்ளலாம். இந்தியாவில் இவை காணப்படும் இடங்கள் மிகக்குறைவே. மேற்குத்தொடர்ச்சிமலையின் கிழக்குப்பகுதியிலுள்ள சரிவில் சுமார் 10 இடங்களில் இவை காணப்படுகின்றன. இவற்றைப் பாதுகாப்பதற்கென்றே ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகில் சாம்பல் மலையணில் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக-கர்நாடக எல்லையிலுள்ள காவிரி சரணாலயம், பழனியை அடுத்த வனப்பகுதிகளிலும் இவை தென்படுகின்றன. இம்மலைணில்கள் மரத்திலுள்ள பழங்கள், விதைகள், பூக்கள், இலைகள், மரப்பட்டை, சிலவேளைகளில் பூச்சிகள், பறவைகளின் முட்டை போன்றவற்றை உணவாகக்கொள்கின்றன. பகலில் சஞ்சரிப்பவை இவை மரவாழ்விகள்.
காட்டில் அருகருகே உயர்ந்தோங்கி வளர்ந்துள்ள மரங்களின் உச்சியில், கிளைகளும் இலைகளும் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக அமைந்து ஒர் தனி அடுக்கை ஏற்படுத்தியிருக்கும். இப்பகுதி மரஉச்சி அல்லது விதானம் எனப்படும். இவ்விதானப்பகுதியில் தான் பலவிதமான உயிரினங்கள் வாழும். விதானவாழ் உயிரிகள் மரக்கிளைப் பற்றியும், மரத்துக்கு மரம் தாவிக்குதித்தும் இடம்விட்டு இடம் செல்லும். மரக்கிளைகள் ஒன்றோடொன்று இணைந்து நெருக்கமாக அமைந்திருப்பதால் விதானப்பகுதியும் ஒரு முக்கியமான வாழிடமாகிறது. உண்ண உணவு, பாதுகாப்பான, மறைவான உறைவிடம் இருப்பதால் இப்பகுதியில் வசிக்கும் விலங்குகள் தரைக்கு வருவது மிக அரிதே.
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்படும் இந்திய மலையணிலை மலபார் மலையணில் என்றும் அழைப்பர். இவற்றை இயற்கைச்சூழலில் கண்டு ரசிப்பதில் ஏற்படும் பரவசத்தை சொல்லிலடக்க முடியாது. இவை மரம் விட்டு மரம் தாவுவதே கண்கொள்ளாக்காட்சியாகும். பாம்புக்கழுகு அல்லது கருங்கழுகு விதானத்திற்குமேல் வட்டமிடும்போது அவற்றைக் கண்டவுடன் இவை உரத்த குரலெழுப்பி மற்ற விலங்குகளை எச்சரிக்கை செய்யும்.
மழைக்காடுகளில் உள்ள சில மரங்களில் மர உச்சியில் தான் கிளைத்து இருக்கும். அவ்வகையான நேடுந்துயர்ந்திருக்கும் மரங்களிலும் தமது கூரிய நகங்களின் உதவியால் செங்குத்தாக ஏறும் அதே லாவகத்துடன் தலைகீழாக இறங்கவும் செய்யும் (இதை கீழிருக்கும் youtube காட்சியைக் காணலாம்). இவை பொதுவாக குட்டி ஈனுவதற்கு இரண்டு கூடுகளைக் கட்டும். ஒருவேளை குட்டியிருக்கும் கூட்டினருகில் ஏதேனும் அபாயமேற்படின் தனது குட்டியை வாயில் கவ்விக்கொண்டு வேறோர் கூட்டிற்கு இடமாற்றம் செய்யும். மேற்குத்தொடர்ச்சி மலையில் மட்டுமெ தென்படும் அரிய பழுப்பு மரநாய் இரவில் சஞ்சரிக்கும் பண்புள்ளது. சில நேரங்களில் இவை பகலில் மலையணிலின் பழைய கூட்டில் உறங்குவதை கண்டிருக்கிறேன். மரஉச்சிப் பகுதியே மலையணில்களின் உலகம். அவை அங்குதான் பிறக்கின்றன, உணவு தேடுகின்றன, உறங்குகின்றன, தமது துணையைத்தேடி இனப்பெருக்கம் செய்கின்றன, வேறு விலங்குகளால் வேட்டையாடப்பட்டு இறக்கின்றன.
நான் பார்த்துக்கொண்டிருக்கிற இந்திய மலையணில் இறந்து போனது ஆழியாரிலிருந்து வால்பாறைக்குச் செல்லும் சாலையில். ஆனைமலை புலிகள் காப்பகத்தினூடே செல்லும் இச்சாலையில் பயனிக்கும் போதே பலவிதமான விலங்குகளைக் காணமுடியும். பல வேளைகளில் இதுபோன்ற வாகனத்தில் அடிபட்டு இறந்த விலங்குகளையும் காணமுடியும். பெருகி வரும் சுற்றுலாவினரினால் சமீபத்தில் இங்கு சீரான, அகலமான சாலைகள் அமைக்கப்பட்டது. நல்ல சாலைகள் அத்தியாவசியமானவைதான். ஆனால் தேசியப்பூங்காக்கள், வனவிலங்குச் சரணாலயங்களினூடே செல்லும் சாலைகள், மனிதர்களில் செளகர்யத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல், அக்காட்டுப்பகுதியின் தாவரங்கள், மரங்கள் மற்றும் அங்கு நடமாடும் விலங்குகளின் பாதுகாப்பை தலையாய கொள்கையாகக் கருத்தில் கொண்டு சாலைகளை அமைத்திட வேண்டும். காட்டுப்பகுதியில் செல்லும் சாலைகளை அகலப்படுத்துதல், கிட்டத்தட்ட ஒரு மதில் சுவரை காட்டின் குறுக்கே கட்டுவதற்குச் சமம். சாலையின் ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறத்திற்கு இடம்பெயர வனவிலங்குகளுக்கு எந்த ஒரு வகையில் இடையூறு ஏற்படாதவண்ணம் சாலைகளை அமைக்கவேண்டும். தகுந்த இடைவெளியில் வேகத்தடைகள் அமைக்கப்பட வேண்டும்.
சாலையோரத்திலுள்ள மரங்களை வெட்டிச்சாய்க்காமல் சாலையை அகலப்படுத்த முடியாது. இதனால் விதானத்தில் ஏற்படும் இடைவெளி மலையணில், சிங்கவால் குரங்கு, கருமந்தி, பழுப்பு மரநாய், தேவாங்கு போன்ற மரவாழ் விலங்குககளின் இடம்பெயர்விற்கு பேரிடராக அமையும். இதனாலேயே இவை தரையிலிரங்கும் நிர்பந்தத்திற்கு ஆளாகின்றன, பலவேளைகளில் சாலையைக்கடக்கும் போது வாகனங்களில் அடிபட்டு இறந்தும் போகின்றன. சாலைகளின் மேலே நீல வானம் முழுவதும் தெரியாமல் மரக்கிளைகள் இருபுறத்திலிருந்தும் ஒன்றோடொன்று உரசிகொண்டிருந்தால் அதுவே நல்ல சாலை. நிழலான சாலையில் பயனிக்க யாருக்குத்தான் பிடிக்காது. நிழலிருந்தால் சாலையோரங்களில் களைச்செடிகள் பெருகுவதும் வெகுவாகக் குறையும். இவ்வகையான சாலைகளைப்பெற சாலையோரத்தில் இருக்கும் காட்டுமரக்கன்றுகளையும் மற்ற சிறு செடிகளையும் அகற்றுதல் கூடாது. வாகனஓட்டுனர்கள் வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதைகளில் எதிரில் வாகனங்கள வருவதை அறிந்து கொள்ள, ஒரு சில இடங்களில் சாலையோரத் தாவரங்களை அகற்றுவது தவிர்க்க இயலாது. அங்கும் தேவையான அளவிற்கு மட்டுமே தாவரங்களை அகற்ற வேண்டும். தகரை (Ferns), காட்டுக்காசித்தும்பை (Impatiens) போன்ற அழகான சிறு செடிகளை அகற்றுவது தேவையில்லாதது. இவை தமது வேரினால் மண்ணை இறுகப்பிடித்து மண்ணரிப்பைத் தடுப்பதோடல்லாமல், சாலையோரங்களையும் அழகுபடுத்துகின்றன.
காட்டுப்பகுதியிலிருக்கும் சாலைகளை செப்பனிடும்போதோ, புதிதாகத் தயார் செய்யும் போதோ நெடுங்சாலைத்துறையுனரும், வனத்துறையினரும், காட்டுயிர் ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களும் இணைந்து ஆலோசனை செய்து செயல்படுதல் அவசியம். நம் வாகனத்தை காட்டுப்பகுதிக்குள் இட்டுச்செல்லும் முன், மனிதர்களாகிய நாம் அமைத்த சாலை நமக்கு மட்டும் இல்லை என்பதையும், அங்குள்ள வனவிலங்குகளுக்கும் தான் என்பதைkக் கருத்தில் கொண்டு கவனமாகச் சென்றால்தான் இதுபோன்ற உயிரிழப்பை வெகுவாகக் குறைக்க முடியும்.
29 ஜனவரி 2012 அன்று தினமணி (கொண்டாட்டம்) நாளிதழில் வெளியான கட்டுரை (PDF இங்கே). இக்கட்டுரைக்கான உரலி இதோ.