Posts Tagged ‘jungle crow’
அண்டங்காக்கையும் தவளைக்குஞ்சும்
ஜூலை மாதம். ஒரு மழைக்கால மதிய வேளை. மேற்குத் தொடர்ச்சி மலையின் உயரமான மலைப்பகுதி. இலேசான தூரல். நான் நின்று கொண்டிருந்த பாறை மழையில் நனைந்து, அடர்ந்த மேகத்தைக் கிழித்துக் கீழிறங்கிய இலேசான சூரிய ஒளிபட்டு பளபளத்தது. அந்தப் பாறை செங்குத்தாகக் கீழிறங்கியது. பள்ளத்தாக்கில் பல வித பச்சை நிறத்தில் மழைக்காட்டின் கூரை. மெல்ல வீசிய குளிர் காற்று மழைச்சாரலை தள்ளிக்கொண்டே இருந்தது. திடீரென மேகங்கள் விலகி, வானம் முற்றிலுமாக வெளுத்தது. மறைந்திருந்த சூரியன் வெளியே வந்து சுள்ளெனச் சுட்டது. தூரத்தில் மலை முகடுகளுக்கிடையே வெள்ளைவெளேரென அருவி கொட்டியது தெளிவாகத் தெரிந்தது. இது ஓரிரு நிமிடங்கள் தான். எங்கிருந்தோ வந்த வெண்மேகங்கள் அந்தப் பள்ளத்தாக்கு முழுவதையும் நிரப்பின. எதிரே என்ன இருக்கிறதென்பதே தெரியாமல் போனது.
தூரத்தில் ஏதோ ஒரு பறவை வெண்மேகங்களைக் கிழித்துக்கொண்டு பறந்து வந்தது. அது அண்டங்காக்கை. வெள்ளைப் பின்னனியில் கருப்பு நிற காகத்தை எளிதில் இனங்காண முடிந்தது. கண்ணெதிரே இருந்த பாறையின் கீழே இறங்கியது. மெல்ல மேலேறி நடந்து வந்தபோது முதலில் தலை மட்டும் தெரிந்தது. மேகங்கள் இலேசாக விலக ஆரம்பித்தன. காகம் மெல்ல பாறைக்கு மேலே வந்து நின்றது. பிறகு பள்ளத்தாக்கை நோக்கித் திரும்பி நின்று கா…கா… எனக் கரைந்தது. மெல்லிய மேகங்களால் திரையிடப்பட்ட பச்சைநிற மழைக் காட்டுக் கூரையின் பின்னனியில், இலேசான மழைத் தூரலில், அந்த கரிய அண்டங்காக்கையைப் பார்க்க மிக அழகாக இருந்தது. மழையில் நனைந்து கொண்டே கரைந்த அந்த காகத்தைப் பார்த்ததும் சிறு வயதில் காகத்தைப் பற்றி சொல்லி விளையாடும் விடுகதையொன்று நினைவுக்கு வந்தது. அது கரைந்த சற்று நிமிடத்திற்கெல்லாம் இன்னொரு அண்டங்காக்கையும் அங்கே வந்தமர்ந்தது.
பாறையின் மேல் மெல்லிய படலமாக மழை நீர் தவழ்ந்து ஓடிக்கொண்டிருந்தது. பாசி படராத அந்தப் பாறையில் நீரோட்டம் இருப்பதே தெரியவில்லை. பாறையின் மேல் ஆங்காங்கே சிறு சிறு கற்கள் சிதறிக்கிடந்தன. கொஞ்சம் உற்று கவனித்த போது பாறையின் சில இடங்களில் அவ்வப்போது சிறிய அசைவுகள் ஏற்படுவதை காணமுடிந்தது. அவை தவளைக்குஞ்சுகள் (தலைப்பிரட்டை). அந்தப் பாறையின் மேல் வால் நீண்ட பல தவளைக் குஞ்சுகள் தென்பட்டன. அருகில் சென்று பார்த்த போது முட்டை வடிவ உடலும் அதன் கீழே பின்னங்கால்கள் இரண்டும், நீண்ட வாலும் தெரிந்தது. முனை கூரான வால், உடலின் நீளத்தை விட மூன்று மடங்கு நீண்டிருந்தது. அவை அதிகம் நகர்வதில்லை. பாறையோடு பாறையாக ஒட்டிக்கொண்டிருந்தன. உருமறைத் தோற்றத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த தவளைக்குஞ்சு. தட்டையான உடலில், இரண்டு கண்கள் மட்டும் நீர் படலத்தின் மேலே துருத்திக் கொண்டிருந்தது. மொத்தத்தில் உருவில் பெரிய மனித விந்தணு போன்றதொரு வடிவம்.
காகங்கள் இரண்டும் பாறையின் சமமான பகுதியில் தத்தித் தத்தி வந்தன. எதையோ தேடுவது போலிருந்தது. ஒரு காகம் அங்கிருந்த சிறிய சப்பட்டைக் கல்லை திருப்பியது. அக்கல்லின் ஓரமாக ஒதுங்கியிருந்த வால் நீண்ட அந்தத் தவளைக் குஞ்சை தனது கூரிய அலகால் கொத்தி எடுத்து விழுங்கியது. சுமார் கால் மணிநேரம் அவை மும்முரமாக தவளைக் குஞ்சை தேடி எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தன. தேடுவதிலும் ஒரு நேர்த்தி இருந்தது. முதலில் அசையாமல் ஓரிடத்தில் இருந்தே நோட்டம் விட்டன. தவளைக் குஞ்சைக் கண்டால் அதனருகில் நடந்து சென்று தலையை ஒரு பக்கம் சாய்த்து தரையைப் பார்ப்பதும், பிறகு கொத்தித் தின்னுவதுமாக இருந்தன.
சட்டென அதில் ஒரு காகம் பள்ளத்தாக்கை நோக்கிப் பறந்து சென்றது. சிறிது நேரத்திற்குப் பிறகு முதலில் வந்த காகமும் அதைத் தொடர்ந்தது. இறக்கையை அகல விரித்து மேலும் கீழும் அடித்தவண்ணம் பறந்து சென்றது. பள்ளத்தாக்கில் பறந்து சென்றதால் அதன் மேற்புறத் தோற்றத்தைக் காணமுடிந்தது. சற்றே மேல்நோக்கி வளைந்த அதன் முதன்மைச் சிறகுகள் நம் கை விரல்களைப் போன்ற தோற்றத்தைத் தந்தது. இது போன்ற அமைப்பை பொதுவாக கழுகு வகை பறவைகளில் காணலாம். திட்டுத் திட்டாக கலைந்து செல்லும் பால் போன்ற மேகத்தினூடே கம்பீரமாகப் பறந்து சென்றது. அண்டங்காக்கையினை பல முறை பார்த்திருந்தாலும் கானகத்தின் பின்னனியில், தவழும் மேகங்களுக்கிடையில் பறந்து சென்ற அந்த எழிலார்ந்த காட்சி அதன் அழகை மேலும் கூட்டியது.
*********
புத்திசாலிப் பறவைகள்
காகங்கள் புத்திக் கூர்மையுடைய பறவைகள். தமது இரையை, உணவைப் பெறுவதற்காகக் கருவிகளைப் பயன்படுத்தும் (Tool using ability) திறன் வாய்ந்தவை. நாம் தெருவில் வீசியெறியும் மாமிசக் கழிவுகள், மீந்து போன உணவு முதல் பழங்கள், பூச்சிகள், தவளைகள், மற்றப் பறவைகளின் குஞ்சு, முட்டை எனப் பல வகையான உணவை உட்கொள்பவை.
இறந்து போன உயிரினங்களை உட்கொண்டு நமது சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுகின்றன. இதனாலேயே இவை இயற்கைத் துப்புரவாளர்களாக (Natural scavengers) கருதப்படுகின்றன. இந்தத் தகவமைப்பினாலேயே இவை மனித அடர்த்தி மிகுந்த நகரங்கள், காட்டுப் பகுதி எனப் பல இடங்களில் பரவிக் காணப்படுகின்றன.
நம்மில் கலந்தவை
காகங்கள் நம் வாழ்வோடும், பண்பாட்டோடும் கலந்த ஒரு பறவையினம். நம் வீட்டு வாசலில் காகம் கரைந்தால் விருந்தினர்கள் வருவார்கள் என்பது நம்பிக்கை. இதை “விருந்து வரக் கரைந்த காக்கை” எனும் குறுந்தொகை பாடலின் மூலமும் அறியலாம்.
இப்பாடலை இயற்றியது சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்களில் ஒருவரான காக்கை பாடினியார் நச்செள்ளையார். காகத்தைப் பற்றி பாடியதாலேயே அவர் இப்பெயரைப் பெற்றார். காகங்களை அழைத்து உணவிட்டு, பின் உணவருந்தும் பழக்கம் நம்மூரில் பலருக்கு உண்டு.
*********
காகங்கள் கோர்விடே (Corvidae Family) குடும்பத்தைச் சார்ந்தவை. இக்குடும்பத்தில் கோர்வஸ் பேரினத்தை (Corvus Genus) சேர்ந்த 12 வகை காகங்கள் இந்தியாவில் காணப்படுகின்றன. தமிழகத்தில் அண்டங்காக்கை (Large-billed Crow), காக்கை (House Crow) என இரண்டு வகைக் காகங்களைக் காணலாம்.
காகங்கள் இனத்தைச் சார்ந்த வால்காக்கையை (Rufous Treepie) மரங்கள் அடர்ந்த தமிழக நகர்ப்புறங்களிலும், ஊர்ப்புறங்களிலும், காட்டுப் பகுதிகளிலும் காணலாம்.
வெண் வால்காக்கை (White-bellied Treepie) மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், கிழக்கு மலைத் தொடரின் சில காட்டுப் பகுதிகளிலும் மட்டுமே தென்படும் ஓரிட வாழ்வி (Endemic species).
இமயமலைப் பகுதிகளில் தென்படும் காக்கை குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பறவைகள் சற்று வித்தியாசமான தோற்றம் கொண்டவை. Red-billed Chough எனும் செம்மூக்குக் காக்கையின் அலகும், காலும் சிவப்பு நிறத்திலிருக்கும், அல்பைன் காக்கையின் (Alpine or Yellow-billed Chough) அலகு மஞ்சள் நிறமாகவும், கால்கள் இளஞ்சிவப்பாகவும் இருக்கும்.
காகங்களை அவதானித்து அவற்றைப் பற்றிய பல சுவாரசியமான தகவல்களை 1905ல் டக்ளஸ் திவர் (Douglas Dewar) எனும் புகழ்பெற்ற பறவையியலாளர் ‘The Indian Crow’ என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூலை இலவசமாகக் கீழ்க்கண்ட உரலியிருந்து பெறலாம்: <https://archive.org/details/indiancrowhisboo00dewa>
*********
தி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 9th September 2014 அன்று வெளியான கட்டுரையின் முழுப் பதிப்பு. அக்கட்டுரையை இங்கே காணலாம். அதன் PDF ஐ இங்கே பெறலாம்.
கா..கா…கா…
காக்காவை நாம் காக்கா என்று அழைப்பதேன்? சிறு குழந்தை கூட சொல்லிவிடும், அது கா..கா என்று கத்துவதால். தெலுகில் காக்கி, ஹிந்தியில் கவ்வா, கன்னடத்தில் காகே என இது எழுப்பும் குரலை வைத்தே இந்தியாவின் பல மாநிலங்களில் இப்பறவைக்குப் பெயரிடப்பட்டுள்ளது.
காகத்தை முதன்முதலில் எனக்கு அறிமுகம் செய்து வைத்தது எனது அம்மாவாகத்தான் இருக்க வேண்டும். அமாவாசை தினங்களிலும், மற்ற விசேச நாட்களிலும் வடை, பாயாசத்துடன் சமைத்து ஒரு கவளம் சோற்றை கொல்லைப் புற மதில் சுவரின் மேல் வைத்து கா..கா..வென அழைத்து அவை சாப்பிட்ட பின்னரே எனக்கு உணவூட்டுவாள். கூப்பிட்ட கொஞ்ச நேரத்திலெல்லாம் காகங்கள் கூட்டமாக அங்கே பறந்து வந்து விடும்.
சிறு வயதில், நாள் காலை கண்விழித்து வீட்டினுள் இருந்தபடியே வாசலைப் பார்த்தபோது காகங்கள் பக்கவாட்டில் தலையைச் சாய்த்து தமது அலகால் அம்மா போட்ட கோலத்தை எடுத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தன. அரிசி மாவில் கோலம் போட்ட காலமது! கழுத்தில் சாம்பல் நிறத்திலுள்ளது காக்கா, முழுவதும் கருப்பாக இருப்பது அண்டங்காக்கா என காகங்களில் இரண்டு வகை இருப்பதை அறிந்து கொண்டது அப்போதுதான். அரிசி மாவு என அவற்றிற்கு எப்படித்தெரியும் என கேட்டபோது கோலத்தை மொய்க்கும் எறும்புகளைப் பார்த்து வந்திருக்கும் என அம்மா சொன்னாள். இப்படி நினைவுதெரிந்த காலம் முதல் என்னைப்போல பலருக்கும் காகங்கள் பரிச்சயமான பறவைகளில் ஒன்றாக இருக்கும்.
நாம் சாதாரணமாகப் பார்க்கும் காக்கை, அண்டங்காக்கையைத் தவிர இந்தியாவில் தோற்றத்தில் இவற்றை ஒத்துக் காணப்படும் ஐந்து காக்கை வகைகள் தென்படுகின்றன. இவையல்லாது, இமயமலைப்பகுதிகளில் தென்படும் இரண்டு வகை காகங்கள் நாம் பார்க்கும் அண்டங்காக்கையைப் போலவே இருந்தாலும் அவற்றில் ஒன்றிற்கு அலகின் நிறம் சிவப்பாகவும்(Red-billed Chough), மற்றொரு வகைக்கு அலகின் நிறம் மஞ்சளாகவும் இருக்கும் (Alpine Chough). நம்மூர் காகங்களையே பார்த்தவர்களுக்கு வண்ண அலகுடைய இவ்வகையான காகங்களைப் காணும் போது சற்று வியப்பாகத்தான் இருக்கும்.
காகங்களின் புத்திகூர்மையை நம்மில் பலர் பார்த்தறிந்திருப்போம். பஞ்சதந்திரக்கதையில் தாகத்தைத் தனித்துக்கொள்ள பானையின் அடியில் கிடக்கும் நீரின் மட்டத்தை உயர்த்த சிறு கற்களை போட்ட காகத்தைப்பற்றி பள்ளியில் படித்திருபோம். எல்லா அறிவையும் பெற்றிருக்கிறோமென்ற இறுமாப்புடன் இருக்கும் மனிதர்களாகிய நமக்கு, நம் இனத்தையல்லாத உயிரினங்கள் இயல்பாகச் செய்யும் ஒரு சில செயல்கள் நாம் செய்வதை ஒத்திருப்பது நம்மை வியக்க வைக்கும். கற்கால மனிதன் தீயூட்ட சிக்கிமுக்கிக் கற்களை ஒரு கருவியாகப் பயன்படுத்தினான். இப்படி கருவியை உருவாக்கவும் அதைப் பயன்படுத்துவதும், இவ்வுலகில் மனிதர்கள் அல்லாத உயிரினங்களில் காகமும் ஒன்று. நம் மூதாதயர்களான ஆப்பிரிக்காவிலுள்ள சிம்பன்சிகளையும், அமெரிக்காவில் தென்படும் கடல் நீர்நாயையும் (Sea Otter) மற்ற உதாரணங்களாகச் சொல்லலாம்.
கேலிடொனியன் காகம் (Caledonian crow) என்ற வகைக் காகம் காட்டில் விழுந்து கிடக்கும் பெரிய மரங்களின் இடுக்குகளில் இருக்கும் புழுக்களையும் பூச்சிகளையும் குச்சியை வைத்து பிடிக்கின்றன. கீழே கிடக்கும் குச்சிகளை தமது அலகால் பிடித்து மர இடுக்குகளில் குத்திக் குடையும் போது, அதனுள்ளே இருக்கும் புழுக்கள் எரிச்சலில் அக்குச்சியை தமது வாயுறுப்புகளால் கவ்வுகின்றன. உடனே இக்காகம் குச்சியை வெளியே எடுத்து அதில் மாட்டியுள்ள இரையை பிடித்துச் சாப்பிடுகின்றன. இரை மரத்தினுள் அமைந்திருக்கும் ஆழத்திற்கேற்ப குச்சியின் அளவையும் தேர்ந்தெடுக்கும் திறன்வாய்ந்தவை இக்காகங்கள்!
ஜப்பானில் இருக்கும் ஒரு வகையான அண்டங்காக்கைகள் அங்குள்ள ஒரு நகரத்தில் வாழ்க்கை நடத்துவதற்கான நெளிவு சுளிவுகளை நன்கு கற்றுத்தேர்ந்துவிட்டன. கொட்டைகளை உடைத்து அதனுள் இருக்கும் பருப்பை சாப்பிட இக்காகங்கள் நாம்மை ஆச்சர்யப்படவைக்கும் நூதன முறையை கையாள்கின்றன. வாகனங்கள் விரைந்து செல்லும் நகரத்தின் மையப்பகுதியில் உள்ள ஒரு சிக்னலின் மேலிருந்து தமது அலகால் கடித்து உடைக்க முடியாத கொட்டைகளை கீழே போடுகின்றன. வாகனங்களின் சக்கரத்தில் அரைபட்ட கொட்டைகளிலிருந்து பிறகு பருப்பினை எடுத்துச் சாப்பிடுகின்றன. அதுவும் எப்போது? பாதசாரிகள் நடந்துசெல்வதற்கான விளக்கு எறிந்தவுடனே தான். இல்லையெனில் வாகனங்களில் அடிபட நேரிடுமே! இந்த யோசனை எந்த காகத்திற்கு முதலில் தோன்றியதோ தெரியவில்லை, ஆனால் இது நடந்தது பத்து வருடங்களுக்கு முன். இன்று அப்பகுதியிலுள்ள எல்லா காகமும் ஒன்றைப்பார்த்து ஒன்று கற்றுக்கொண்டு இதே உத்தியை கையாள்கின்றன.
இந்தியாவில் பரவலாகக் காணப்படும் காகத்தின் தந்திர குணங்களையும், புத்திகூர்மைகளையும் பற்றி Douglas Dewar 1905ல் எழுதிய The Indian Crow எனும் புத்தகத்தில் விரிவாகக் காணலாம் (இப்புத்தகத்தை இலவசமாக இணையத்தில் தரவிரக்கம் செய்து கொள்ளலாம் – <https://archive.org/details/indiancrowhisboo00dewa>).
இந்தியாவின் புகழ்பெற்ற இயற்கையியலாளரான ம. கிருஷ்ணனும் காகங்களைப்பற்றி கட்டுரைகள் எழுதியுள்ளார். காகத்தைப் பற்றிக் கூறும் போது குயிலைப் பற்றி குறிப்பிடாமல் இருக்கமுடியாது. என்னதான் காகம் புத்திசாலியாக இருந்தாலும் குயில் தந்திரமாக அதை ஏமாற்றிவிடும். கோடை காலங்களில் காகங்கள் கூடு கட்டி முட்டையிடும் போது ஆண் குயில் அவற்றின் கூட்டினருகே சென்று அவற்றின் கவனத்தை ஈர்க்கும். உடல் முழுதும் கருப்பாக இருப்பது ஆண் குயில், அடர் பழுப்பு நிறத்தில் வெண் புள்ளிகளுடன் இருப்பது பெண் குயில்.
இந்த ஆண் குயில் காகத்தின் கூட்டினருகில் வருவதைக் காணப்பொறுக்காமல் அதை பறந்து சென்று விரட்டியடிக்கும். இவ்வேளையில் பெண் குயில் காகத்தின் கூட்டிற்குச் சென்று தனது முட்டையை இட்டு விடும். இதன் முட்டை காகத்தின் முட்டையின் நிறத்திலேயே இருப்பதால் காகத்திற்கு வித்தியாசம் தெரியாது. இது போதாதென்று காகத்தின் முட்டை பொறிப்பதற்கு முன்பாகவே குயிலின் முட்டை பொறிந்து குஞ்சு வெளியே வந்து விடும். இக்குஞ்சும் காகத்தின் குஞ்சை ஒத்திருப்பதால் காகமும் அதற்கு உணவளிக்க ஆரம்பித்துவிடும். காகமும் குயிலும் இவ்வாறு ஒன்றையொன்று சார்ந்தே பரிணமித்திருக்கின்றன. குயில்களின் இனிமையான குரலைக் கேட்டு மகிழ்ச்சியுறுவோர் காகத்திற்கு நன்றி சொல்லவேண்டும்.
காகம் மனிதர்களுக்கு பலவகையில் சேவை செய்யும் பறவை. வீட்டில் பொறி வைத்து எலியைக் கொன்று மண்ணில் புதைத்து சமாதியா கட்டுகிறோம்? தெருவிலோ, குப்பைத்தொட்டியில் தானே வீசி எறிகிறோம். இவற்றையெல்லாம் தின்று சுத்தம் செய்வது யார்? காகங்களே. புறவுலகின் பால் நாட்டமேற்பட இயற்கைக் கல்வியாளர்கள் குழந்தைகளுக்கும், பொது மக்களுக்கும் பெரும்பாலும் சொல்லிக்கொடுப்பது பறவை அவதானிப்பையே (Birdwatching). காகங்களைப் பார்ப்பதற்கும், அவற்றின் வித்தியாசமான செயல்களை உற்றுநோக்குவதற்கும், புகைப்படமெடுப்பதற்கும் நாம் செலவு செய்யவோ, எங்கும் பயனிக்கவோ அவசியமில்லை. ஒரு கவளம் சோறு போதும்!
******
காக்கை குருவி எங்கள் ஜாதி தொடர். எண் 1. புதிய தலைமுறை 12 ஜூன் 2012