Posts Tagged ‘Blackbuck’
வல்லநாடு வெளிமான் சரணாலயம்
வல்லநாடு வெளிமான் சரணாலயம்
இரலை மானின (Antelope) வகையைச் சேர்ந்த வெளிமானுக்கான (Blackbuck) சரணாலயம் இது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிறீவைகுந்தம் தாலுக்காவில் 16.41 சதுர கி.மீ பரப்பில் அமைந்துள்ள இச்சரணாலயம் நிறுவப்பட்டது 1987ல். வாழிட இழப்பாலும், திருட்டு வேட்டையாலும் அபாயத்திற்குள்ளான வெளிமான்கள் இந்த இடத்தைத் தவிர தமிழகத்தில் கிண்டி தேசிய பூங்கா, சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கோடியக்கரை காட்டுயிர் சரணாலயம் ஆகிய இடங்களில் பாதுகாக்கப்படுகிறது.
வெளிமான்களைத் தவிர இச்சரணாலயத்தில் காட்டுப்பூனை, காட்டு முயல் (Black-naped Hare), அழுங்கு (Pangolin), முதலிய பாலுட்டிகளும், நூற்றுக்கும் மேற்பட்ட பறவை வகைகளும், பல வித ஊர்வனங்களும் தென்படுகின்றன. குடைசீத்த மரங்கள் (Acacia planifrons) கொண்ட இலையுதிர் மற்றும் புதர் காட்டு வகை வாழிடத்தைக் கொண்டது இச்சரணாலயம்.
—
மனோரமா இயர்புக் 2015 ல் “தமிழகத்தின் பாதுகாக்கப்பட்ட வாழிடங்கள்” எனும் தலைப்பில் (பக்கங்கள் 178-195) வெளியான நெடுங்கட்டுரையின் ஒரு பகுதி.
கோடியக்கரை காட்டுயிர்ச் சரணாலயம்
கோடியக்கரை காட்டுயிர்ச் சரணாலயம் (Point Calimere Wildlife Sanctuary)
நாகப்படினம் மாவட்டத்தில் அமைந்துள்ள கோடியக்கரை காட்டுயிர் சரணாலயம் 1967ல் வெளிமான்களின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்டது. இதன் மொத்தப் பரப்பு 17.26 சதுர கி.மீ. வெளிமான்களைத் தவிர, புள்ளிமான் (Spotted Deer), காட்டுப்பூனை, நரி, கீரி (Indian Grey Mongoose) முதலிய பாலுட்டிகளையும் இச்சரணாலயத்தில் காணலாம். இப்பகுதியின் கடலோர மணற்பாங்கான இடங்களில் பங்குனி ஆமைகளின் (Olive Ridley Turtle) முட்டையிடுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடற்பகுதியில் ஓங்கில்களையும் (Dolphins) அவ்வப்போது காணமுடியும். இச்சரணாலயத்தின் ஒரு பகுதியான வேதாரண்யம் சதுப்புநிலப்பகுதி சுமார் 48 கி.மீ. நீண்டு பரவியிருக்கிறது. முத்துப்பேட்டை-அதிராம்பட்டினம் பகுதியில் கடலோரமாக அலையாத்திக் காடுகள் பரவியுள்ளது. கோடியக்கரை சரணாலயமாக ஏற்படுத்தப்பட்ட இப்பகுதி 1988ம் ஆண்டு வேதாரண்யம் சதுப்புநிலப்பகுதியையும், தலைஞாயர் வனப்பகுதியையும் இணைத்து கோடியக்கரை காட்டுயிர் மற்றும் பறவைகள் சரணாலயமாக அறிவிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கோடியக்கரை ஆண்டுதோரும் வலசை வரும் பல இலட்சக்கணக்கான பறவைகளுக்கு புகலிடமளிக்கும் மிக முக்கியமான ஒரு பகுதியாகும். உப்பங்கழிகள் (Salt pans), சதுப்பு நிலங்கள் (Swamp), அலையாத்திக் காடுகள் (Mangrove Forest), புதர்க் காடுகள் (Dry thorn forest), கடலோரம், கழிமுகம் (Estuary), உவர்நீர்நிலைகள் (Brackish waterbodies), நன்னீர்நிலைகள் (Fresh water source) என பல விதமான வாழிடங்கள் இருப்பதால் பலதரப்பட்ட பறவை வகைகளைக் காணமுடிகிறது. சதுப்புநிலப்பகுதி, உப்பங்கழிகள் பகுதிகளில் மட்டுமே 110 வகையான நீர்ப்பறவைகள் இருப்பது பதிவாகியுள்ளது. இவற்றில் 34 வகை பறவைகள் உலகின் வட துருவத்திலிருந்து வலசை வருபவை. இதுவரை இந்தச் சரணாலயத்தில் 274 வகைப் பறவைகள் இருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரிய பூநாரை (Greater Flamingo), சிறிய பூநாரை (Lesser Flamingo), கூழக்கடா (Spot-billed Pelican), சங்குவளை நாரை (Painted Stork), பலவகையான உள்ளான்கள் (Waders), ஆலாக்கள் (Terns), கடற்காகங்கள் (Gulls), ஆகிய சில பறவையினங்களை இங்கே பொதுவாகக் காணலாம். அருகி வரும் பறவையினமான கரண்டிவாய் உள்ளான் (Spoon-billed Sandpiper) இங்கே 1996 வரை பார்க்கப்பட்டுள்ளது. இப்பகுதி பறவை பாதுகாப்பில் மிக முக்கியமான இடமாகவும் (Important Bird Area) அறிவிக்கப்பட்டுள்ளது. பண்ணாட்டளவில் முக்கியத்துவம் வாய்ந்த நீர்நிலைகளை குறிப்பாக நீர்வாழ் பறவைகளின் வாழிடங்களை அடையாளம் கண்டு அங்கீகரிப்பது ராம்சார் அமைப்பு (Ramsar Convention). இந்த அமைப்பில் அங்கத்தினராக உள்ள 157 நாடுகளில் இந்தியாவும் ஓன்று. இதுவரை இந்தியாவில் 25 இடங்களை இந்த அமைப்பு பாதுகாக்கப்பட வேண்டிய ராம்சார் ஒப்பந்தத்திற்குட்பட்ட இடமாக (Ramsar Site) அறிவித்திருக்கிறது. (ராம்சார் ஈரானில் உள்ள இடத்தைக் குறிக்கும், இங்குதான் முதன் முதலில் இந்த அமைப்பின் ஒப்பந்தக் கூட்டம் நடை பெற்றது) அவற்றில் ஒன்று கோடியக்கரை சரணாலயம். இது தமிழகத்தில் உள்ள ஒரே ராம்சார் இடம் என்பது குறிப்பிடத்தக்கது.
—
மனோரமா இயர்புக் 2015 ல் “தமிழகத்தின் பாதுகாக்கப்பட்ட வாழிடங்கள்” எனும் தலைப்பில் (பக்கங்கள் 178-195) வெளியான நெடுங்கட்டுரையின் ஒரு பகுதி.