Posts Tagged ‘Dr. Salim Ali’
அஞ்சல் தலையும் பறவைகளும்-30
காட்டுயிர்கள் மீதும், அவற்றின் வாழிடங்கள் மீதும் அக்கறை கொண்டவர் முன்னாள் பிரதம மந்திரியான இந்திராகாந்தி அவர்கள். பறவை நோக்கலில் ஆர்வம் கொண்டவர். அவரது தந்தையும், இந்தியாவின் முதல் பிரதமருமான பண்டித ஜவர்ஹலால் நேரு தேராதூன் சிறையில் இருந்து நைனித்தால் சிறையில் இருந்த இந்திரா காந்திக்கு, Dr.சாலீம் அலி எழுதிய “The Book of Indian Birds” எனும் நூலை அனுப்பியிருக்கிறார்.
Dr. சாலீம் அலியுடன் அவருக்கு இருந்த நட்பினாலும், அவருக்கு இயற்கையின் மீதிருந்த அக்கறையினாலும் இந்தியாவில் தற்போது உள்ள பரத்பூர், அமைதி பள்ளத்தாக்கு போன்ற பல வாழிடங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் தலையும் பறவைகளும்-12
இந்தியப் பறவையியலின் முன்னோடிகளில் ஒருவரான சாலீம் அலியின் உருவம் பொறிக்கப்பட்ட நினைவு அஞ்சல் தலை, முதல் நாள் உறை, சிறப்பு முத்திரை பற்றி விளக்கும் தி இந்து ஆங்கில நாளிதழில் வெளியான ஒரு கட்டுரை. இந்த அஞ்சல் தலை வெளியானது 11, நவம்பர் 1996இல். சாலீம் அலி நூற்றாண்டு பிறந்த நாளுக்காக வெளியிடப்பட்டது.
உற்றுக் கவனித்தால் இதில் இரண்டு அஞ்சல் தலையில் வெவ்வேறு படங்கள் இருப்பது தெரியும். முதல் வில்லையில் மஞ்சள் மூக்கு நாரைகளும் (இதன் விலை ரூ11) அதோடு சேர்ந்து ஒட்டிக்கொண்டிருக்கும் வில்லையில் சாலிம் அலியின் தலையும் பொறிக்கப்பட்டிருக்கும் (இதன் விலை ரூ.8). இது போன்ற அஞ்சல் தலைகளை se-tenant வகை என்பார்கள். பிரெஞ்சு மொழியில் இதற்கு “ஒட்டிக்கொண்டிருக்கும்” என்று பொருள்.
இந்த அஞ்சல் தலை என்னிடம் இல்லை. கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது ஒரு முறை, அஞ்சல் தலை கண்காட்சியில் ஒருவர் இதை விற்பனைக்காக வைத்திருந்தார். விலை அதிகம் சொன்னதால் என்னால் வாங்க முடியவில்லை.
இன்று சாலீம் அலியின் பிறந்த நாள்!